search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விவசாய கிணற்றில் கை, கால்களை உடைத்து சிறுமியை கொடூரமாக கொன்று வீசிய மர்ம நபர்கள்
    X

    விவசாய கிணற்றில் கை, கால்களை உடைத்து சிறுமியை கொடூரமாக கொன்று வீசிய 'மர்ம' நபர்கள்

    • சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவருக்கு சொந்தமாக காட்டாணி குளம் கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று பாலுசாமி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து பாலுசாமி கிணற்றில் பார்த்தபோது அங்குள்ள படியில் 13 முதல் 18 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு உடலின் மேலே கற்கள் வைக்கப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலுசாமி உடனே தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுமியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். சிறுமியின் வலது கை உடைக்கப்பட்டு இருந்தது. தலையில் கல்லால் தாக்கியதற்கான காயங்களும் காணப்பட்டதோடு ஆடைகளும் கலைந்திருந்தது. அவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

    தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுமி பிணமாக கிடந்த இடத்தில் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கை, கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்கம்பக்கத்தில் யாராவது சிறுமி மாயமாக உள்ளாரா? என்று முதல் கட்டமாக போலீசார் விசாரித்ததால் யாரும் இல்லை என்ற தகவலே கிடைத்தது.

    எனவே வெளி மாவட்டத்தில் இருந்து அந்த சிறுமியை கடத்தி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத கரும்பு தோட்டத்தில் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

    பாலியல் வன்கொடுமையில் சிறுமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு பிரச்சனையில் பழி வாங்கும் நோக்கில் சிறுமியை மர்ம நபர்கள் கொடூரமாக கொன்றார்களா? என்று தெரியவில்லை.

    மேலும் பாலியல் வன்கொடுமையின்போது சிறுமி தன்னை தற்காத்து கொள்ள முயன்றபோது மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியதில் சிறுமி காயம டைந்திருக்கலாம். பின்னர் மர்ம கும்பல் சிறுமியை கொலை செய்து தோட்டத்து கிணற்றில் உடலை வீசி விட்டு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காட்டாணிகுளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நள்ளிரவு 2 மணியளவில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணுடன் வந்து அங்கு தனது வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார். ஹெல்மெட் அணிந்து வந்த அந்த நபரின் உருவம் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இருந்தபோதிலும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும். சிவகங்கை பகுதியில் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×