search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு நிர்ணயிப்பது கடினம்- ரஷிய அதிபர் புதின் சொல்கிறார்
    X

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு நிர்ணயிப்பது கடினம்- ரஷிய அதிபர் புதின் சொல்கிறார்

    • ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
    • பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது.

    ரஷியாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ இல்லமான நோவோ-ஓகாரியோவோவில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். அவருடன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் இந்த அக்கறைக்கு ரஷியா நன்றியுடன் இருக்கிறது. மோடியை சந்திக்கும் போது இந்திய திரைப்படங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கலாம்.

    உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும். ரஷியாவை போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு தள்ளியது. ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும். போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம். உக்ரைன் ராணுவம், துல்லியமான ஆயுத விநியோக அமைப்புகளை சொந்தமாக கையாள முடியாது. சமாதான பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின் வாங்குகிறது.

    பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது. இதை பிரதமர் மோடி சரியாக தெரிவித்து உள்ளார். பிரிக்ஸ் அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. ரஷியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×