search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்
    X

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்

    • நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த காசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன்.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களை சிறை பிடித்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். மீனவர்களை மீட்டுத்தரக்கோரி மீனவ பஞ்சாயத்தார் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், காரைக்கால் கீழக்காசக்குடி மேட்டை சேர்ந்த வைத்தியநாதன் படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்த போது, கீழ்காசாக்குடியை சேர்ந்த இளையராஜா (33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன் (31), தர்ம சாமி (48), மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்குடியை சேர்ந்த வீரா (28), தினேஷ் (28), தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (37), ஜெகதீஸ்வரன் (27), விக்னேஷ் (22), சந்திஸ்குமார் (23), நாயகர்குப்பத்தை சேர்ந்த பாக்கியராஜ் (23) ஆகிய 12 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மீனவர்களை விரைவில் விடுவிக்க இலங்கை அரசுடன் வெளியுறவுத்துறை மந்திரி பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். .

    Next Story
    ×