search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய பணியிடமாற்றல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்
    X

    புதிய பணியிடமாற்றல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்

    • கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    காரைக்காலில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களை மீண்டும் சொந்த பிராந்தியமான புதுவைக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதனிடையே, அரசின் கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டது. இதற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    புதிய இடமாற்றல் கொள்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் ஒன்று கூடினர். அப்போது பணியிட மாறுதல் விவகாரத்தில் சம்மேளனமும், கூட்டமைப்பும் இணைந்து, கூட்டாக போராட்டக்குழுவை உருவாக்கி போராடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கோரிமேட்டில் உள்ள அப்பாபைத்தியசாமி கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி அங்கு இல்லை.

    இதனால் போலீசார் அவர்களை காத்திருக்கும்படி கூறினர். அவர்கள் வீட்டின் முன் முற்றுகையிட்டு காத்திருந்தனர். விழா முடிந்து வந்த முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    அப்போது அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் தான் இடமாற்றம் செய்ய வேண்டும், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை நியமித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதற்கு முதலமைச்சர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேசும்படி கூறினார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் நாளை கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளனர்.

    Next Story
    ×