search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா ஆலை உரிமையாளர்"

    கோவை அருகே சட்டவிரோதமாக இயங்கிய குட்கா ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயின் வெளிநாடு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    கோவை:

    கோவை சூலூர் கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா ஆலையில் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து 650 கிலோ எடை கொண்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா மற்றும் குட்கா தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆலையில் இருந்து சட்ட விரோதமாக கடந்த 5 ஆண்டுகளாக குட்கா தயாரிக்கப்பட்டு, 4 மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

    இதுதொடர்பாக ஆலை மேலாளர் ரகுராம் மற்றும் வடமாநில ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    ஆலை உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின்(வயது 38) கூறிய நபர்களுக்கு மட்டும் குட்கா சப்ளை செய்யப்பட்டதாக மேலாளர் ரகுராம் கூறினார். இதைத்தொடர்ந்து அமித் ஜெயின் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு டெல்லி விரைந்தனர்.

    போலீஸ் தேடும் தகவல் அறிந்து அமித்ஜெயின் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டு தலைமறைவானார். தனிப்படை போலீசார் அமித்ஜெயினின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அமித்ஜெயினை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அமித்ஜெயின் வெளிநாடு சென்று விட்டதாக அவரது சகோதரர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளார். ஆனால் அமித்ஜெயின் எங்கு சென்றார் என்று எங்களுக்கு தெரியாது என அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

    எனவே அமித்ஜெயின் வெளிநாடு தப்பி சென்றது உண்மை தானா? அவ்வாறு சென்றிருந்தால் எந்த நாட்டில் பதுங்கி உள்ளார்? என்பதை கண்டு பிடிப்பதற்காக பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த விவரம் கிடைத்ததும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்ப போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதன் மூலம் அமித்ஜெயின் நாடு திரும்பினால் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அமித் ஜெயின் தரப்பில் முன்ஜா மீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


    ×