search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெம்போ டிரைவர் படுகொலை"

    கள்ளக்காதல் விவகாரத்தில் டெம்போ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இருளப்பபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரெகு (வயது 31). டெம்போ டிரைவர். இவர் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ரெகுவுக்கும், அபிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அபிஷா, கணவரை பிரிந்து குளச்சலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். குழந்தைகளுடன் அவர் அங்கேயே தங்கியுள்ளார். ரெகு, தனது தாயார் எழிலரசியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் ரெகு வெளியே சென்று விட்டு வருவதாக தாயாரிடம் கூறி விட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் எழிலரசியும், உறவினர்களும் பல இடங்களில் ரெகுவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்று காலை ரெகு, அதே பகுதியில் ரோட்டோரம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மார்பு உள்ளிட்ட பகுதியில் பலமாக கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. இரவில் 2-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ரெகுவை விரட்டி, விரட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    ரெகுவை துரத்திய அவர்கள் முதலில் பைப் கம்பியால் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ரெகு சிறிது தூரம் ஓடி உள்ளார். அதன்பிறகே கொலையாளிகள் ரெகுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். ரெகு, தப்ப முயன்றதற்கான தடயங்கள் அந்த பகுதியில் காணப்பட்டன.

    ரெகு கொலை குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் டி.எஸ்.பி. இளங்கோவன், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரெகு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெகுவை கொன்றவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். கள்ளக்காதல் விவகாரத்தில் ரெகு கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    ரெகுவின் தாயார் எழிலரசி அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேரின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் தான் தனது மகனை கொன்றிருக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தனது மருமகளுடன் அந்த 2 பேருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்டதால் ரெகுவை அவர்கள் 2 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளதாகவும் கூறினார். எழிலரசி கூறிய தகவல்கள் உண்மைதானா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எழிலரசி குறிப்பிட்ட 2 பேரையும் தேடி போலீசார் அவர்களது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் மாயமாகி இருந்தனர். இதனால் அவர்களின் மனைவிகளை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் இருளப்பபுரம் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×