search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மனித உரிமை கூட்டமைப்பு"

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NCHRO
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த மக்களைத் தமிழகக் காவல்துறை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வன்மையாகக் கண்டிக்கின்றது.

    இம்மாதிரித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை விதிகள் மற்றும் நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த பின்னரே தாங்கள் சுடத் தொடங்கியதாக இப்போது காவல்துறை சொல்கிறது. ஆனால் மூன்றடுக்குப் பாதுகாப்பில் இருந்த ஆட்சியர் அலுவலகத்துக்குள் எப்படி ஊர்வலத்தில் வந்த சிலர் கையில் எரிபொருள்களுடன் நுழைந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

    மே 22 அன்று நடந்த அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறை அந்தச் சூழலைத் தவறாகக் கையாண்டதன் விளைவு மட்டுமே என நாங்கள் கருதவில்லை. இது முன்னதாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே இவ்வாறான கார்ப்பரேட் முயற்சிகளை எதிர்க்கும் மக்களுக்கு, அவர்களின் போராட்டங்கள் இனி இப்படித்தான் எதிர்கொள்ளப்படும் என ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் இது.

    இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கப் பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதி விசாரணை ஆணையம் ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தை நாங்கள் நம்பவில்லை.

    உரிய விதிகளைக் கடை பிடிக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால் அந்தக் காவல்துறையினர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்.

    மாவட்ட காவல்துறைத் தலைவர் மற்றும் ஆட்சியரை இப்போது அரசு இடம் மாற்றியுள்ளது. அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைசார் விசாரணை தொடங்க வேண்டும். அப்பாவி மக்கள் பலர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

    துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்குப் பொருத்தமான, நிரந்தரமான அரசுப் பணி அளிக்க வேண்டும். குண்டடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவமனையில் அவர்களுக்காகும் மொத்தச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NCHRO
    ×