search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டை வலி"

    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாக தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவை வந்து போகும். பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பி-ஹுமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத்தன்மை கால் மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு காரணமாகி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.

    நோயின் அறிகுறியாக தொண்டையில் வலி இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டையில் வெளிப்பொருள் அடைத்து கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி உடல் தளர்ந்து போகும். கை, கால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும். மேல் சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது.

    இதற்கு சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி ஆரம்ப கட்டத்திலேயே தொண்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நவீன தொண்டை என்டாஸ்கோப்பி பரிசோதனை மூலம் சிகிச்சை பெற்று குணம் அடையலாம். மூக்கு தண்டு வளைதல் இருந்தால் அதனை என்டாஸ்கோப்பி மூலமாக சரி செய்ய முடியும். சைனஸ் நோய் இருந்தால் அதனை நிரந்தரமாக சரி செய்யலாம். சளி பிடிக்கின்ற உணவு வகைகளை தவிர்த்து முக்கு, தொண்டை, வாய், பற்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.

    இந்த நோயினை ரத்தபரிசோதனை மூலமாக எளிதில் கண்டறியலாம். குறிப்பாக தொண்டையில் இருந்து சிறிது சளியை எடுத்து அதனை கல்சர் டெஸ்டிங் என்று சொல்லப்படுகிற கிருமி ஆய்வு செய்வதன் மூலமாகவும், ஏ.எஸ்.ஓ. டிட்ரி என்று சொல்லப்படுகிற ரத்த பரிசோதனை மூலமாகவும் தற்போதைய அதிநவீன ஆய்வுக்கூட நோய் எதிர்ப்பு திறன் ஆய்வுகள் மூலமாகவும் எளிதில் கண்டறிய முடியும்.

    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் சைனஸ் அறுவை சிகிச்சை அல்லது டான்சில் அறுவை சிகிச்சை மூலமாகவோ தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். தொண்டையை பாதுகாக்க 10 வழிமுறைகளை பார்க்கலாம்.
    1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.

    2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும்  மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    3 .அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

    4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.

    5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும்.  இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.



    6. வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

    7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை.  உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும்.  மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

    8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.

    9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.

    10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம்.  பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது.  ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

    ×