search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னார்குடி பட்டாசு கிடங்கு"

    மன்னார்குடியில் நாட்டுவெடி தயாரிப்பு நிறுவன பட்டாசு கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் சிதறி பலியாகினர். #MannargudiFiraAccident
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மன்னை நகர் பாமினி ஆற்றங்கரையோரம் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அவர் பட்டாசுகளை தயாரித்து வருகிறார். இங்கு திருவிழாவிற்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கும் பணி நாள்தோறும் நடந்து வருகிறது. இதில் அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பங்குனி திருவிழா, தேர்தலையொட்டி தற்போது நாட்டு வெடிகள், பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

    இன்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் கிடங்கிற்கு வேலைக்காக தொழிலாளர்கள் வந்து பட்டாசுகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கிருந்த பட்டாசுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதைக் கண்ட பட்டாசு தயாரித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கிடங்கை விட்டு வெளியே ஓடிவர முயன்றனர்.

    இந்த வெடிச்சத்தம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிர்வை ஏற்படுத்தியது.

    ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் வெடித்து நாலாபுறமும் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த வெடி விபத்தில் பட்டாசு கிடங்கு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. பயங்கர வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பட்டாசு கிடங்கை நோக்கி வேகமாக ஓடிவந்தனர்.

    அப்போது 3 பேர் உடல் சிதறி உருக்குலைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 2 பேர் கை, கால்கள் சிதைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    பட்டாசு குடோனில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்களா? என்று தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

    பட்டாசு குடோன் பகுதிக்கு திரண்டு வந்த கிராம மக்கள்.

    இந்த பட்டாசு தீவிபத்தில் இறந்த 5 பேரும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் என கூறப்படுகிறது. அவர்கள் சேட்டு, , பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கிடங்கு முறையான அனுமதி பெற்று தான் இயங்கி வந்ததா? உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நகர பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டு 5 பேர் பலியான சம்பவம் இன்று காலை மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MannargudiFiraAccident
    ×