search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actor surya"

    • நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா.
    • கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 10- ந்தேதி திரைக்கு வர உள்ளது.

    தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

    வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான கங்குவா ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10- ந்தேதி திரைக்கு வர உள்ளது.

    இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அந்த படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

    சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். Dassault Falcon 2000 என்கிற இந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடி ரூபாய் ஆகும். என்ற தகவல் பரவி வந்தது.

    இந்த நிலையில் சூர்யா தரப்பில் இது முற்றிலும் வதந்தி என்றும், சூர்யா தனி விமானம் வாங்கி உள்ளார் என்ற எதிர்மறையான கருத்துகள் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள்.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கும் தலைவணங்குகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர்.
    • அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் சூர்யா பாராட்டினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சூர்யா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது. மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 500 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ் படங்களை தொடர்ந்து கூடிய விரைவில், இந்தி படங்களிலும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளராகவும் களமிறங்கிவிட்டார். இவர் தயாரிப்பில், அக்ஷய் குமார் நடிப்பில் 'சூரரை போற்று' படத்தின் ரீமேக்காக வெளியான சர்பராஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அதாவது ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என, கடந்த ஆண்டு சூர்யா எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, இப்போது இரத்த தானம் செய்துள்ளார்.

    நடிகர் சூர்யாவின் 49-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

    ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கிய நிலையில் அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    • அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும்.
    • இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை.

    நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

    விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

    கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள். இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்து விடுகிறது.

    டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

    அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

    அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

    சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை.

    இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்.!! என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, கள்ளச்சாராய விவகாரத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை! நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது
    • 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக வுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' வருகிற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்படும் தெரிகிறது.



    இதே போல வருகிற தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் கடந்த மாதம் அறிவித்தார். கண்டிப்பாக 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




    தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது.

    நடிகர் சூர்யாவின் மகன் தேவ், கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், பங்கேற்ற சூர்யாவின் மகன், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். மகன் தேவ்-ன் சண்டை காட்சியை நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் மொபைலில் வீடியோ எடுத்தனர்.

    இதில் மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மகன் தேவ்-ம் பிளாக் பெல்ட் பெற்றார்.

    • உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் டப்பிங் பணி.
    • படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா பாராட்டு.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

    உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் இதற்கான 'டப்பிங்' பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு 'டப்பிங்' பணியை தொடங்கினார்.

    மேலும், சமூகவலைதளத்தில் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ''டப்பிங்' பணியின்போது படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை பாராட்டினார். 

    'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றன. படம் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    அதேநேரம், 'கங்குவா' படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது.
    • கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற புதிய படத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ளார். இந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

    இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி.

    இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் பணிகளை நடிகர் சூர்யா நேரில் பார்வையிட்டார்.

    அதை தொடர்ந்து படக்குழுவை பாராட்டி நன்றி தெரிவித்தார். கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.

    • சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா

    முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து சத்யதேவ் சட்ட அகாடெமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சத்யதேவ் சட்ட அகாடெமியை உருவாக்கிய நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் சட்ட அகாடெமியைத் தொடங்கி வைத்தேன்.

    இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

    சட்டத்தொழிலும், மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!

    எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே நடிகர் சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.
    • தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். இவருக்கும், அவரைப் போலவே சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது திடீரென கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து பார்த்த போது நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை கூறிய சூர்யா அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார். மேலும் தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக கூறினார். திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.

    தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    வெளிப்படையாக அறிவித்து விட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கூறினார்.
    தஞ்சாவூர்:

    ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெய்பீம் திரைப்பட குழுவினரை கைது செய்யக்கோரி கடந்த 2-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அமைதியாக மக்கள் வாழ்ந்து வரும் தமிழகத்தில் வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதை முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வன்னியர் வாழும் கிராமங்களில் ஆண்களையும், பெண்களையும், இளைஞர்களையும் திரட்டி அக்னி குண்டத்தில் நடிகர் சூரியாவின் உருவ படம் எரிக்கப்படும்.

    அந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துபவர்களுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, அக்னி கும்பம் படம் பொறித்த அரை பவுன் டாலர் வழங்கப்படும்.

    அதேபோல் தஞ்சை மாவட்டத்திற்கு நடிகர் சூர்யா எப்போது வேண்டுமானாலும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு வரவேண்டும். அப்படி வந்தால் அவருக்கு ரூ.10 லட்சம் வரைவோலை பரிசு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நடிகர் சூர்யாவை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    ஈரோடு:

    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பா.ம.க சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவதூறுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் செயல்படுவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் மூர்த்தி, முருகேசன், பாலா, கோவிந்தன் உள்பட பலர் உடனிருந்தனர். 

    ×