search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake IAS officer"

    • கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார்.
    • பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெண் உள்பட 2 பேர் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானை சந்தித்த அந்த பெண், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், உத்தரபிரதேசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறினார். புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு, அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

    அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் போலி ஐ.ஏ.எஸ். என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பெண் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 44) என்பதும், உடந்தையாக வந்தவர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்(42) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிப்காட் போலீசார் மங்கையர்கரசி, ரூபிநாத் ஆகிய 2 பேர் மீதும் அரசு ஊழியர் போல் நடித்து அரசு ஊழியரை ஏமாற்றி பணி செய்ய வைத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ரூபிநாத்தை தூத்துக்குடி பேரூரணி சிறையிலும், மங்கையர்கரசியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

    இதனிடையே கைதான மங்கையர்கரசி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. மங்கையர்கரசியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து நெல்லைக்கு வந்துள்ளார்.

    இங்கு சிறிதுகாலம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தாழையூத்து பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வரும் ரூபிநாத், பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு மங்கையர்கரசி சென்றுள்ளார். அப்போது நான் உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டிருந்தேன்.

    துப்பாக்கி உரிமம் தொடர்பாக அளித்த மனுவை தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமியிடம் நான் ஐ.ஏ.எஸ். என்று சொல்லியும் துப்பாக்கி உரிமத்திற்கு ஒவ்வொரு ஆவணங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், உளவுப்பிரிவு போலீசாரிடம் மங்கையர்கரசி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதில் அவர் போலி ஐ.ஏ.எஸ். என தெரியவந்த நிலையில், நேற்று அவர் தூத்துக்குடியில் சிக்கிவிட்டார்.

    இதையடுத்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, இந்த சம்பவம் தொடர்பாக மங்கையர்கரசி மற்றும் ரூபிநாத் மீது ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார். ஒப்பந்தங்கள் எடுத்தல், பள்ளிக்கு சலுகைகள் பெற்றுக்கொள்ளுதல் என பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த நாவப்பன் (28) என்பவர் எனக்கு அறிமுகமானார்.

    அவர் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் சுழல்விளக்கு பொருத்திய சொகுசு காரில் வலம் வந்தார். தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறினார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். வேலைக்கு சேர்ந்ததாகவும், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

    தன்னால் அரசு துறைகளில் வேலை வாங்கி தர முடியும் என்று கூறினார். ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட தொகையை சொல்லி பணம் வசூலித்தார். நானும், எனது நண்பர்கள் 10 பேரும் அரசு வேலைக்காக ரூ.45 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம்.

    அவர் எங்களுக்கு வேலை எதுவும் வாங்கித்தராமல் ரூ.45 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

    போலீஸ் விசாரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்த நாவப்பன் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது தெரிய வந்தது. ஏராளமான பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை சுருட்டியிருப்பதும் கண்டறியப்பட்டது.

    போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்த நாவப்பன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவர் வலம் வந்த சுழல்விளக்கு பொருத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் தன்னைப் போன்ற இளைஞர்களோடு தவறான உறவு வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    திருமணமாகாத இவர் எம்.ஏ. பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இதுபோல் மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் தலைமை செயலகத்தில் தினமும் வலம்வருவார். அங்குள்ள அதிகாரிகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த புகைப்படங்களை ‘வாட்ஸ்- அப்’பில் அனுப்பி தன்னை ஒரு முக்கியபுள்ளி என்பதுபோல காட்டிக்கொண்டார்.

    கைதான நாவப்பன் மோசடி செய்த பணத்தில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். ஏராளமாக நிலங்களும் வாங்கிப்போட்டுள்ளார். மேலும் உல்லாச வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.

    நாவப்பன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். போலி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நடமாட்டம் சென்னையில் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட போலி ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். எனவே இதுபோன்ற போலி ஆசாமிகளிடம் பொதுமக்கள் ஏமாறவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
    ×