search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri accident"

    • மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
    • விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் மோதி ஊராட்சி மன்ற கவுன்சிலரின் கணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த பொதுமக்கள் 10 பஸ்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கலாவதி. இவர் போடிச்சிபள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    நண்பர்களான குமாரும், கணேசும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர்.

    ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கெலமங்கலம் கூட்ரோடு வழியாக வந்தபோது எதிரே ஓசூரில் இருந்து வந்த தனியார் நிறுவன வாகனம் ஒன்று அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தனியார் நிறுவனத்தின் வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே காயமடைந்த கணேசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி. சங்கர், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை தவிர்க்க மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அப்போது கிராம மக்கள் கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலையில் வேகத்தடை இல்லாததும், டாடா தனியார் கம்பெனி பேருந்துகள் அதிவேகமாக செல்வதும் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் இந்த கம்பெனி பஸ்கள் இதுபோன்று ஏராளமான விபத்துகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் மற்றும் ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் விபத்தில் சிக்கிய குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்

    முன்னதாக தனியார் நிறுவன வாகனங்களில் வந்த ஊழியர்களை போலீசார் பத்திரமாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கெலமங்கலம் கூட்ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போடிச்சிபள்ளி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    • விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
    • விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க அந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது காரின் பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

    இதனை சற்று எதிர்பாராத பின்னால் வந்த கிருஷ்ணகிரி -ஓசூர் செல்லும் அரசு பஸ் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

    இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களான அரசு பஸ் டிரைவர் திம்மராயன் (வயது50), கண்டக்டர் சிங்கமாதவன் (51), பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை கலா உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அருகேயுள்ள நடுபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் குமரேசன். இவரது மனைவி லோசிணி.

    இவர்கள் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டர் சைக்கிளில் நடுபட்டுவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    அப்போது குமரேசன் மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்தார். அவர்கள் சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் லோசிணி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். குமரேசன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து காயமடைந்த குமரேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவலறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த லோசிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் கண்முன்பே மனைவி இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.
    • விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பர்கூர்:

    சென்னையில் இருந்து நெகிழிப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கிநாயனப் பள்ளி பஸ் நிறுத்தம் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டு இருந்தபோது, அப்போது இந்த லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், ஈச்ச மர கீற்றுகளை பாரம் ஏற்றி சென்ற லாரியின் டிரைவர், வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த சரவணன் (வயது28), அதே பகுதியை சேர்ந்த கிளீனர் விசுவநாதன்(48) ஆகிய 2 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து விபத்தில் பலியான சரவணன், விசுவநாதன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பேருந்து ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.
    • விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    மத்தூர்:

    பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இந்த பேருந்து நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுனர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

    இதில் காயமடைந்த மல்லிகா (வயது57), இசைவாணி (33), வேலு (42), பேருந்து ஓட்டுனர் குப்புசாமி (46), மாயவன் (42) ஆகிய 5 பேரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • சென்னை பதிவு எண் கொண்ட காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த தீரன் சின்னமலை தனியார் பள்ளி அருகே பெங்களூருவில் இருந்து ஊத்தங்கரை நோக்கி நேற்று இரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த படதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த முரளி மகன் தீபன் என்பவர் மீது கார் மோதியது.

    இதில் தீபன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த காரில் 30 குட்கா மூட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உடனே குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னை பதிவு எண் கொண்ட அந்த காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.

    விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் (வயது58). இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் பதவி வகித்து வந்தார்.

    எண்ணகோள்புதூர் பகுதியைச் சேர்ந்தவரும், ஓ.பி.எஸ் அணியின் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சகாதேவன் (63).

    இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முன்பு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.

    இதில் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சகாதேவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ராஜாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காவேரிபட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த மிட்டஅள்ளி பாரத கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    இவரது மனைவி பாப்பாத்தி (44). இவர்களுக்கு சசிகலா, சரண்யா, செவ்வந்தி ஆகிய 3 மகள்களும், மணிகண்டன் (26) என்ற மகனும் உள்ளனர். இதில் 3 பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

    கடைசியாக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கு பெண் பார்ப்பதற்காக நேற்று மாலை பச்சையப்பனும், பாப்பாத்தியும் அவர்களது பேரன் தட்சன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் மணிகண்டனும், அவரது தங்கை சரண்யாவும் சென்றனர்.

    அப்போது கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டான் கொட்டாய் பிரிவு ரோடு அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து பச்சையப்பன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பச்சையப்பன், பாப்பாத்தி, தட்சன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே 3 பேரும் விபத்தில் காயமடைந்ததை கண்டு மணிகண்டனும், சரண்யாவும் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாப்பாத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக பச்சையப்பன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பனும் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கெலமங்கலம் அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகள் கூச்சலிட்டனர்.
    • சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்திலிருந்து பெங்களூருவுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். புறப்பட்டது முதலே பஸ்சின் டிரைவர் அதிவேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கெலமங்கலம் அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகள் கூச்சலிட்டனர்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதில் பஸ்சின் அடியில் சிக்கிய யசோதா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை, ஓசூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

    விபத்தில் சிக்கிய பஸ்சின் பின்சக்கரங்கள் தனியாக கழன்று ஓடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விபத்து குறித்து பஸ் ஓட்டுனரிடம் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெரிய ஜோதிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது47), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ் (50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை போச்சம்பள்ளிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்தேரிபட்டி என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாதேஸ், வெங்கடேஸ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

    சூளகிரி:

    ஓசூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு செல்ல முடிவு செய்த காந்தி நேற்று இரவு தனது மனைவி நவநீதா (40), குழந்தைகள் பிரதீபாஸ்ரீ, கோகுலன் ஆகியோருடன் வாடகை காரில் புறப்பட்டுள்ளனர்.

    காரை ஓசூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தினேஷ்(32) என்பவர் ஓட்டி சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பள்ளி என்ற இடத்தருகே சென்றபோது திடீரென கார் டயர் வெடித்தது.

    இதில் நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

    இதில் கார் டிரைவர் தினேஷ், காந்தியின் மனைவி நவநீதா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காந்தி மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இடிபாடுகளில் சிக்கிய காந்தி, பிரதீபாஸ்ரீ, கோகுலன் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜே.சி.பி.எந்திரம் விபத்தில் சிக்கிய காரை சாலையிலிருந்து அகற்றினர்.

    இந்த விபத்தால் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
    • விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்தவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அப்பு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தனுஷ் (வயது16). இவர் நேற்று இரவு இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவபாரத் (21) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தனுஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து சிவபாரத் மீண்டும் அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுயுகம் மற்றும் அவரது மனைவி கவுரம்மாள் ஆகியோர் மீது மோதினார். இதில் அந்த தம்பதிகள் காயமடைந்தனர். இதனால் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றபோது தனுஷின் உறவினர்கள் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தப்பட்டு இறந்த தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்தவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×