search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Ayukta police"

    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களில் 11 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

    அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 56 இடங்களில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு மாநகராட்சியில் கெங்கேரி மண்டலத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து வரும் பசவராஜ் மாகி வீட்டிலும் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது.

    மேலும் பெங்களூரு, கலபுரகியில் உள்ள பசவராஜ் மாகிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. அவரது வீடுகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம் சிக்கியது.

    மேலும் அவருக்கு பெங்களூருவில் 5 வீடுகளும், கலபுரகியில் தனது பெயர் மற்றும் சகோதரி பெயரில் 5 வீடுகள் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. இதுதவிர பசவராஜ் மாகியின் தாய் பெயரில் 50 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது.

    பெங்களூரு வடக்கு தாலுகா தாசனபுரா கிராம பஞ்சாயத்து செயலாளர் ஜெகதீசுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள வீட்டிலும் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி பணம், வாகனங்கள், நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    மேலும் மண்டியாவில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் சிவராஜ், அவரது உறவினர் வீட்டிலும், மைசூரு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக இருந்து வரும் மகேஷ், பெலகாவி மாவட்டத்தில் நிர்மிதி மையத்தின் திட்டமிடுதல் அதிகாரி சேகரகவுடா, ராமநகர் மாவட்டம் ஆரோஹள்ளி தாசில்தார் விஜியண்ணா, பெலகாவி மாவட்ட பஞ்சாயத்து உதவி என்ஜினீயர் மகாதேவ் பன்னூர், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித் துறை என்ஜினீயர் ஜெகதீஷ் ஆகியோரின், வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தாவணகெரே மாவட்டத்தில் தொழில்துறை என்ஜினீயராக பணியாற்றி வரும் உமேஷ், அதே மாவட்டத்தில் மின்வாரிய என்ஜினீயராக இருந்து வரும் பிரபாகர், சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு என்ஜினீயரான ரவீந்திராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தி, தங்க நகைகள், பொருட்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றி எடுத்துs சென்றுள்ளனர்.

    லோக் ஆயுக்தா போலீசார் சோதனைக்கு உள்ளான 11 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    11 அதிகாரிகள் வீடுகளில் இருந்தும் ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீசார் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலம் முழுவதும் 11 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வங்கி லாக்கர் களிலும் பணம், நகை பதுக்கி வைத்திருந்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பல்வேறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 11 அதிகாரிகள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கர்நாடகாவில் வால்மீகி மாநகராட்சி ஊழல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிகாரிகள் வீடுகளில் இருந்து கோடிக் கணக்கான சொத்துக்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×