search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea level"

    • 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும்
    • 1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது.

    கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் அபாயம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) ஆய்வு செய்தது.

    கடல் மட்டம் உயருவதால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் ஆகிய 15 நகரங்கள் பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடல் மட்டம் உயர்வதால் 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சென்னையில் உள்ள அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல், மைலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் நினைவு சின்னம், பள்ளிக்கரணை ஈரநிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் கடல் மட்ட உயர்வு காரணமாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

    2040 ஆம் ஆண்டில் சென்னையின் 7.29% பகுதி (86.6 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2060 ஆம் ஆண்டில் 9.65% பகுதி (114.31 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2100 ஆம் ஆண்டில் 16.9% (207.04 சதுர கிமீ) பகுதி கடலில் மூழ்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரம் சென்னை ஆகும். மேலும், சென்னை உலகில் 35 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.

    1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சென்னை நகரின் கடல் மட்டம் 0.66 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    2040 ஆம் ஆண்டுக்குள் தூத்துக்குடியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

    2100 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் 74.7 செ.மீ வரை கடல்மட்டம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக மும்பை நகரில் கடந்த 30 ஆண்டுகளில் கடல் மட்டம் 44.4 மி.மீ வரை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மும்பை நகரின் கடல் மட்டம் 3.1 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
    • 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    ×