search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac Manager Arrested In Villupuram"

    விழுப்புரத்தில் பணியிட மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 54). இவர் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் விழுப்புரத்தில் உள்ள வி.ஏ.ஓ. நகரில் தனியாக வசித்து வந்தார்.

    திண்டிவனம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (40). இவர் சாரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.

    இவர் தனது சொந்த கிராமமான தழுதாளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தன்னை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் மேலாளர் சிவசாமியிடம் கூறினார்.

    அதற்கு, சிவசாமி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதை கேட்ட ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் விழுப்புரம் லஞ்சம்-ஊழல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதனி டம் புகார் செய்தார்.

    இதையடுத்து ராமமூர்த்தியிடம் ரசாயனம் கலந்த ரூ.10 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். அந்த பணத்தை வாங்கி கொண்டு விழுப்புரம் வி.ஏ.ஓ. நகரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் சிவசாமி வீட்டுக்கு ராமமூர்த்தி சென்றார்.

    அங்கிருந்த சிவசாமியிடம் அந்த 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவசாமியை கையும்-களவு மாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு டாஸ்மாக் மேலாளராக இருந்த ஒருவரும் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவருக்குப்பதில் மேலாளராக வந்த சிவசாமியும் லஞ்சம் வாங்கி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×