search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teipirai Ashtami"

    • பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷம்.
    • பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

    பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்கலாம்.


    தீபம்

    சிறு வெள்ளைத் துணியில் மிளகை வைத்து அதை சிறிய முடிச்சாக கட்டி, அதை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் இட்டு பைரவர் முன்பாக தீபம் ஏற்றினால், எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம்.


    சந்தன காப்பு

    பைரவருக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் போன்றவற்றை சந்தனத்துடன் சேர்த்து தயார் செய்வார்கள். இந்த சந்தன காப்பை பைரவருக்கு சாத்தி வழிபட்டு வந்தால், தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு, பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.

    நைவேத்தியம்

    பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.


    மாலைகள்

    பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

    • பைரவரை வணங்க உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி.
    • காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு.

    சிவாலயங்கள் அனைத்திலும் கால பைரவருக்கு இடம் உண்டு. சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதாகவும், அதன் முதன்மையான வடிவம் இந்த பைரவர் என்றும் சொல்வார்கள்.

    சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்பவர்கள், அனைத்து தெய்வங்களை வழிபட்ட பின்னர், இறுதியாக கால பைரவரை வணங்காமல், அந்த ஆலய தரிசனம் முழுமை பெறாது. இவரை வழிபடுவதற்கு உகந்த தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் சொல்லப்படுகிறது.

    இந்த நாளில் இவரை வழிபாடு செய்தால், எதிரிகள் மீதான பயம் விலகுவதோடு, மன தைரியம் உண்டாகும் என்கிறார்கள்.

    காசி மாநகரில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு நடைபெறும்.

    காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழு பலனும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமானைப் போலவே, பைரவ மூர்த்திக்கும் 64 திருவடிவங்கள் உண்டு.

    கால பைரவர், எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது.

    பைரவரின் எட்டு வடிவங்கள்:

    அசிதாங்க பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் இவர். அன்னப் பறவையை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக, அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் இந்த பைரவர் அருள்செய்கிறார்.

    ருரு பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றம் இவருடையது. சிவபெருமானைப் போலவே, ரிஷபத்தை தனது வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் சுக்ரனின் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள். இந்த பைரவர், காசி மாநகரில் உள்ள அனுமன் காட்டில் வீற்றிருக்கிறார்.


    சண்ட பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தியின் மூன்றாவது வடிவம் இது. இவர் முருகப்பெருமானைப் போல மயிலை வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் செவ்வாய் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கவுமாரி தேவி விளங்குகிறாள். இந்த பைரவருக்கான சன்னிதி, காசி மாநகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் இருக்கிறது.


    குரோதன பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவதாக வைத்து போற்றப்படுபவர் இவர். மகாவிஷ்ணுவைப் போல கருடனை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் சனிக் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வழிபடுகின்றனா். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள். இந்த பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.


    உன்மத்த பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தியின் ஐந்தாவது தோற்றம் இவர். குதிரையை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் புதன் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பீம சண்டி கோவிலில் இந்த பைரவர் வீற்றிருக்கிறார்.


    கபால பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது இடம் இவருக்கு. அன்னத்தை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் சந்திர கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் இந்த பைரவரை தரிசனம் செய்யலாம்.


    பீஷன பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றம் இவர். அம்பாளைப் போல சிங்கத்தை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் கேது கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பலரும் தரிசனம் செய்கிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பூத பைரவ கோவிலில் இந்த பைரவர் வீற்றிருந்து அருள்செய்கிறார்.


    சம்ஹார பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தியில் எட்டாவது வடிவம் இவருடையது. நாயை வாகனமாக கொண்ட இவரைத்தான், நாம் ஆலயங்கள் பலவற்றிலும் பார்க்கிறோம். நவக்கிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனா்.

    இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள். இப்பைரவரை காசி மாநகரில் திரிலோசன சங்கம் கோவிலுக்குச் சென்றால் நாம் வழிபடலாம்.

    • ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
    • பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பிறகே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும். வகையில் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

    தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பிறகு பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.

    சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோவிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிவாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம்.

    பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரிடம் அணிந்துள்ளது. முதல்பூஜை சூரியனுக்கு. தினமும் இக்கோவிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு யூஜை செய்யப்பட்டு அதன்பிறகே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்

    சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் சூரியக்குடி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் சூரக்குடி என மருவியது.

    நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரில் நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்..

    பார்வதிதேவியின் தந்தை தட்சன். ஒரு யாகம் நடத்தினான் ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம் (பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார் அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார்.

    சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோச்சனம் தந்தார். இதன் அடிப்படையில் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

    பொதுவாக பைரவர் கையில் சூலத்துடன் காட்சி தருவார் ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.

    பரிகாரம்

    குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருக, மனகுழப்பம் நீங்கி அமைதி நிலவ இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    திறக்கும் நேரம் காலை 4 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணிவரை.

    விழாக்கள்

    பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர திருவிழா, மார்கழி ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குருபூஜை

    ×