search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato Theft"

    • மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது.
    • போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயங்கி வருகிறது.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் இங்கு தினமும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை நேரத்திலேயே இங்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர்.

    விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுக்கு விடிய, விடிய காய்கறிகள் கொண்டு வரப்பட்டு இறக்கிவைக்கப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சம் அடைந்து வருவதால் தங்கத்தை பாதுகாப்பது போல் வியாபாரிகள் தக்காளியை பாதுகாத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி பல இடங்களில் தேடிப்பார்த்தும் தக்காளியை காணவில்லை. விசாரணையில் யாரோ 75 கிலோ தக்காளியையும் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் தற்போது சிவகாமி (50) என்ற வியாபாரி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் பூத் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட 2 கிரேடு தக்காளியை வைத்து இருந்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது 50 கிலோ தக்காளியும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, இரவு நேரத்தில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ரோந்து வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

    செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் தொடரும் தக்காளி திருட்டால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×