search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Useful spiritual information"

    இந்து சமய மக்கள் வழிபாடு செய்யும் சில முக்கியமான ஆன்மிக தகவல்களை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கற்பக விருட்சம்

    அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது, வெளிப்பட்ட பொருட்களில் இந்த கற்பக விருட்சம் என்ற மரமும் ஒன்று. இதனை கற்பகத் தரு, கல்ப தரு என்றும் அழைப்பார்கள். பாற்கடலில் இருந்து வெளிவந்த இதனை, தேவர்களின் தலைவனான தேவேந்திரன், தன்னுடைய இருப்பிடத்தில் கொண்டு போய் வைத்தான். இந்த மரத்தின் அடியில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ, நாம் எந்த ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தாலும் அது நமக்கு கிடைக்கும். அதே போல் கற்பக விருட்சத்தின் கீழ் நின்று நாம் நினைக்கும் அனைத்தும் நடந்தேறும். இது தேவலோகத்தில் இருப்பதாக புராணக் கதைகள் சொல்கின்றன.

    காசியபர்

    காசியபர் என்ற முனிவர் பிரம்ம தேவனின் சந்ததியில் வந்தவராவார். இவர் வேத காலத்து முனிவர் என்றும், அனைத்து உயிர்களையும் படைப்பதற்கு இவர் உதவியாக இருந்தார் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு 21 மனைவிகள் இருந்தார்கள். அவர்களுள் அதிதி முக்கியமானவர். காசியப முனிவரால் தான், தேவர்கள், கருடர்கள், நாகர்கள், அசுரர்கள் தோன்றினர் என்பதாகவும் புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

    ராம பாணத்தால் ஆசி

    கோயம்புத்தூர் காரமடையில் அரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவரின் சன்னிதியில் உள்ள ராம பாணத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் சன்னிதியில் பக்தர்களுக்கு சடாரியை தலையில் வைத்து ஆசி வழங்கு வார்கள். ஆனால் இந்த அரங்கநாதர் ஆலயத்தில் ராமரின் பாணத்தை தலையில் வைத்து ஆசி வழங்குகிறார்கள். இந்த பாணத்தில் ஆதிசேஷன் மற்றும் சுதர்சன சக்கரம் ஆகியோரது உருவங்கள் உள்ளன.

    சப்தஸ்வர ஆஞ்சநேயர்

    மயிலாடுதுறையில்உ ள்ள கோழிகுத்தி என்னும் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான வானமுட்டிப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. இந்த அனுமன் விக்கிரகத்தில் ஏழு இடங்களில் தட்டினால் சப்தஸ்வர ஓசை எழும்புகிறது. இதனால் இந்த ஆஞ்சநேயரை ‘சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள்.

    மும்மூர்த்தி தரிசனம்


    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவர் வைகாசி பிரம்மோற்ச வத்தின் போது அதிகாலையில் சிவபெருமானாகவும், மாலையில் பிரம்மனாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சி தருகின்றார். மற்ற தலங்களில் அபய கரத்துடன் திகழும் பெருமாள், இங்கே தானம் வாங்கிக்கொள்ளும் நிலையில் காணப்படுகிறார். அதாவது நமது கஷ்டங்களை எல்லாம் பெருமாளே ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    32 கரங்களுடன் வீரபத்திரர்

    கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே குட்டஹள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு பிரளய கால வீரபத்திரர் ஆலயம் இருக்கிறது. இந்த வீரபத்திரர் 32 கரங்களுடன் காணப்படுகிறார். இவர் சிவபெருமானுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம், விஷ்ணுவுக்குரிய சங்கு, சக்கரம் போன்றவற்றையும் தாங்கி, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரைப் போலவே, உற்சவ மூர்த்தியும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார்.

    தயிர் அன்னம்

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது திருமங்கலக்குடி திருத்தலம். இந்த ஆலயத்தில் பிராணநாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் தங்கள் சாபம் விலக, எருக்கம் இலையில் தயிர் அன்னம் படைத்து இத்தல இறைவனை வழிபாடு செய்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவே இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் அன்னத்தை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.
    ×