என் மலர்
நீங்கள் தேடியது "arudra darshan"
- இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இசை, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாசப்பர்வத வாகன நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வந்த போது பேரம்பலம் திருக்கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.
மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவரும் நிகழ்ச்சியும், சுவாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகியும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள்.
அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரதி வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும். அதன் பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வருவார்கள்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.
- தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும்.
- நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ந்தேதியன்று உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதரால் கொடியேற்றி துவக்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி விதியுலா மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைற்றது. இதனை ஒட்டி இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதி வந்தடைந்தது.
சுமார் 8 மணி அளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்ட சுவாமிகள் ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகர், விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கீழரத வீதியிலிருந்து புறப்பட்ட இத்தேர் முறையே தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி வழியாக வலம் வரும்.
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம், தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடை பெறுவதால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.
முன்னதாக தேரோடும் வீதிகளில் திரளான பெண்கள் சாலைகளை சுத்தம் செய்து கோலமிடுவதும், சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பதிகங்களை, மேளதாளம் முழங்க பாடி வருவதும் ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.
விழாவிற்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சிதம்பரம் நகராட்சி சார்பில் சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 6 மணி அளவில் தேர் நிலையான கீழரதவீதி வந்தடையும். அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடக்கவுள்ள நிலையில், நாளை அதிகாலை இரண்டு மணி முதல் ஆறு மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும், நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை மாலை சுமார் 4 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சி தர்கள் செய்து வருகின்றனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு உகந்த மார்கழி மாதத்திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு்க்கான விழா இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி நாளை (6-ந் தேதி) அதிகாலை வரை நடைபெறும். அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.
மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும்தான், பஞ்ச உலோகத்தினால் ஆன பஞ்சசபைக்குரிய 5 உற்சவர்கள் உள்ளனர். பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திர சபை என பஞ்ச சபைக்கும் இத்திருக்கோவிலில் தனித்தனியாக உற்சவர்கள் உள்ளனர்.
ஆருத்ரா விழாவையொட்டி நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பலக்கோல நடராஜர்), சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரது உற்சவ மூர்த்திகள் 6-கால் பீடத்திலும், இதர 4 சபைகளுக்கான நடராஜர், சிவகாமி அம்மன் உற்சவர்கள் 100 கால் மண்டபம் என இரு இடங்களில், இந்த விழாவில் இன்று இரவில் எழுந்தருள்கிறார்கள்.
அப்போது பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.
நாளை, காலை பஞ்ச சபைக்குரிய 5 உற்சவ நடராஜரும், சிவகாமி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.
அபிஷேகத்திற்கான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வழங்க விரும்பினால், இன்று இரவு 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் கொடுக்கலாம் என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நாளை அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறுகிறது.
- இன்று இரவு 9 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது.
- 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் சிவபெருமான் திருநடனமாடிய 5 திருச்சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.
காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து பாடிய தலமாகவும் விளங்குகிறது.
மார்கழி மாதம் திருவா திரை நட்சத்திரத்தில் இக்கோவிலில் ஆருத்ரா விழா விமரிசையாக நடைபெறும். நடராஜ பெருமானின் 6 அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தலத்தில் நடராஜரின் திருமேனியில் விளாம்பழம் சார்த்தப்பட்டு அதன்மீது சிவப்பு வண்ணத்தில் உள்ள மாதுளை முத்துக்கள் சார்த்தப்படும்.
அதை பார்க்கும்போது நடராஜர் மீது ரத்தின கற்கள் பதித்திருப்பதுபோல் இருக்கும். ரத்தின சபாபதி பெருமானுக்கு இரவு 9 மணிக்கு அபிஷேகம் தொடங்கி அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.
ஆருத்ரா வைபவத்தில் நடராஜர் மும்முறை தனி வலம் வருவது அனுக்கிரக தரிசனம் எனப்படும். அந்த தருணத்தில் வானத்தில் கருடன் வட்டமிடும் என்பது ஐதீகம். பின்னர் ராஜகோபுர பிரகாரத்தை வலம் வந்து ஆருத்ரா மண்டபத்தின் அருகே தனது ரத்தின சபையை பார்த்தவாறு நிற்பார்.
தீபாராதனையை ஏற்றுக் கொண்டு பிறகு ஆலமர பிரகார வலம் மீண்டும் ஆருத்ரா மண்டபத்துக்கு வந்து எதிரே திருக்கண்ணாவுக்கு முன்பாக உள்ள நந்தி தேவரை பார்த்தவாறு ரத்தின சபைக்கு செல்வார். அங்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெறும்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் அகிய 5 தொழில்களை நடராஜ பெருமான் புரிவதை இந்த ஆருத்ரா தரிசனம் கொண்டுள்ளது. நடராஜர் ஆருத்ரா மண்டபத் தில் எழுந்தருள்வது படைத்தலை குறிக்கும். ஒவ்வொரு அபிஷேகத் திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தந்த அபிஷே கத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய பலனை கொடுப் பது நம்மை காத்தலை குறிக்கும். நடராஜர் கோபுர தரிசனம் முடிந்து திருக்கண் அறிந்த விநாயகர் ஆலயம் சென்று தீபாராதனையை ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி அழித்தலை குறிக்கும். அதாவது பக்தர்களின் பாவங்கள் மற்றும் துன்பங்களை அழிக்கிறார்.
ஆருத்ரா தினத்தன்று ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் பாவங்களை இறைவன் பஸ்மமாக்குகிறார். பஸ்மமாக்கிய பொருளே மையாகிறது. அந்த மையையே திருச்சாந்து பிரசாதமாக தருகிறார்கள்.
இறைவனின் திருவருளை நாடி வரும் பக்தர்களின் பாவங்களை 'வெள்ளை சாத்துபடி' என்னும் வைபவத்தின் மூலம் நீக்கி அவர்களை வெள்ளை மனதுடன் திகழ வைக்கிறார். இதுவே மறைத்தல் ஆகும். திருவீதி உலா முடிந்து முஞ்சிகேஸ்வர தரிசனம் ஆகும்போது அனுக்கிரகம் தருவதே அருளல் ஆகும். அனுக்கிரக தரிசனத்தின் போது பக்தர்கள் வேண்டுவதை அளித்து அருள்பாலிக்கிறார்.
திருவாலங்காடு வடாரண் யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா இன்று நடக்கிறது. ஆருத்ரா விழாவையொட்டி கோவிலில் உள்ள தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் இன்று இரவு 9 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது.
இந்த சிறப்பு அபிஷேகம் பால், தேன், வில்வப்பொடி, வாழை, பலா, பூக்கள் உள்ளிட்ட 41 வகை பொருட்களால் விடிய விடிய நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து நாளை (6-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
- சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும்.
- இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
திருவாதிரை அன்று, நடராஜ பெருமானுக்கு களி நைவேத்தியமாக படைக்கப்படும். 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது முன்னோர் வாக்கு. இறைவனுக்கு களி படைப்பதற்கான கதை ஒன்றும் உள்ளது. முன் காலத்தில் சேந்தன் என்ற சிவபக்தர் இருந்தார். விறகு வெட்டி கிடைக்கும் சிறிய வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தார். இருப்பினும் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகே, அவர் உணவருந்துவார். ஒரு நாள் கடும் மழை பெய்தது.
அதனால் விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் விறகுகளை விற்க முடியாமல் வருவாய் பாதிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சேந்தன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வருகை தந்தார். அவருக்கு எப்படி உணவளிப்பது என்று சேந்தன் கவலைகொண்டார். அவரது மனைவி, வீட்டில் அரிசி மாவும், சிறிது வெல்லமும் இருப்பதாகவும், அதைக் கொண்டு அடியாருக்கு களி செய்து கொடுக்கலாம் என்று கூறினார். அதன்படியே சிவனடியாருக்கு களியை உணவாக படைத்தனர்.
அதை உண்ட சிவனடியார் மகிழ்வுடன் புறப்பட்டார். அதற்கு மறுநாள் திருவாதிரையாகும். நடராஜரை தரிசிக்க, சேந்தனும் அவரது மனைவியும் சிதம்பரம் சென்றனர். அங்கு சிவபெருமானின் வாய்ப் பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக்கொண்டிருந்தது. தன் வீட்டிற்கு வந்து களி சாப்பிட்டது ஈசன் என்று அறிந்ததும் சேந்தனும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதை அறிந்த ஊர் மக்களும், சேந்தனின் பக்திக்கு தலை வணங்கினர். அன்று முதல் திருவாதிரை அன்று இறைவனுக்கு நைவேத்தியமாக களி படைக்கும் வழக்கம் வந்தது.
சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாதவராக போற்றப்படுகிறார். ஆனால் அவருக்குரிய நட்சத்திரமாக 'திருவாதிரை' இருக்கிறது. பகவத் கீதையில், 'மாதங்களில் நான் மார்கழி' என்று கூறும் கிருஷ்ணர், 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரையாக இருக்கிறேன்' என்கிறார். தெய்வங்களை வழிபடுவதற்கான மாதமாக கருதப்படும் இந்த மார்கழியில்தான், திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனமும் வருகிறது. இந்த ஆருத்ரா தரிசனம், நடராஜ பெருமானுக்கு உகந்த வழிபாட்டு தினமாகும். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோவில், திருவாரூர் தியாகராஜ பெருமான் ஆலயங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணு, திடீரென்று "ஆகா.. அற்புதம்" என்று சத்தம் போட்டு கூறினார். அவர் அப்படி பரவசம் அடைந்ததற்கான காரணம் என்ன என்று, மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்திருந்த மகாலட்சுமிக்கும், மகாவிஷ்ணுவை தாங்கியபடி இருந்த ஆதிசேஷனுக்கும் புரியவில்லை. அவர்கள் இருவரும், திருமாலின் பரவச நிலைக்கு என்ன காரணம் என்பதுபற்றி அவரிடமே கேட்டனர். அதற்கு மகாவிஷ்ணு, "திருவாதிரை நாளான இன்று, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை ஞானக் கண்ணால் பார்த்தேன். அதுதான் என் பரவசத்திற்கு காரணம்" என்றார்.
ஈசனின் ஆனந்தத் தாண்டவம் பற்றி திருமால் சொல்லச் செல்ல, ஆதிசேஷனின் உடல் சிலிர்த்தது. அவருக்கும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் உருவானது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, "ஆதிசேஷா.. உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். பூலோகத்தில் பிறந்து ஈசனை நினைத்து தவம் இருந்தால், உனக்கு அந்த ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும், போய் வா" என்று அருளினார்.
அதன்படியே ஆதிசேஷன், பூமியில் பதஞ்சலி முனிவராக பிறந்தார். இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்பு தோற்றமும் கொண்டவராக, அவரது உருவம் இருந்தது. பலகாலம் பூமியில் தவம் இருந்ததன் பலனாக, பதஞ்சலி முனிவருக்கு சிதம்பரம் ஆலயத்தில் இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவருக்கு சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது பதஞ்சலி முனிவர், "இறைவா.. இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி, அவர்கள் முக்தியடைய வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே, ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.
விரதம் இருக்கும் முறை
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர். அதில் ஆடி முதல் மார்கழி வரையான தட்சிணாயன புண்ணியகாலத்தின் கடைசி மாதமாக இருப்பது, மார்கழி. இந்த மாதம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். அதாவது அவர்களின் பிரம்ம முகூர்த்த நேரம் என்றும் இந்த மாதத்தை சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர நாளில்தான், திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, சிவநாமம் உச்சரித்து உடல் முழுவதும் திருநீறு தரிக்க வேண்டும்.
பின்னர் சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும். காலையில் ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து இறைவனுக்கு திருவாதிரை களி படைத்து, அதை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். பகலில் உணவருந்தக் கூடாது. அன்று முழுவதும் சிவபுராணம் எனப்படும் திருவாசக பாடல்கள், தேவாரம் போன்றவற்றை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
திருவாதிரை விரதத்தை மார்கழி திருவாதிரையில் தான் அனைவரும் கடைப்பிடிப்பர். ஆனால் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு, வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பெரும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர்.
- ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெண்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக தாமிர சபை மண்டபத்தில் நேற்று இரவு சுவாமி எழுந்தருளிய நிலையில், அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது.
இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். தொடர்ந்து அதிகாலையில் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதானை காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
- நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது.
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை கோவில். உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமை உடைய இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி உள்ளனர். இங்கு நடராஜருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது. இந்த நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான ஒரே மரகத கல்லினால் ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.
வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தன காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம். இதன்படி நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை 7.45 மணிக்கு நடராஜர் கோவில் நடைதிறக்கப்பட்டு 8மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி தைலம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது ஆபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் தவிர வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். ரூ.10, 50, 100, 200 கட்டண தரிசன வரிசைகளில் ஏராளமான நின்று சென்று தரிசனம் செய்ததை காணமுடிந்தது.
விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையிலான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். காலை சந்தனக்காப்பு களைந்தது முதல் இரவு மீண்டும் சந்தனகாப்பு பூசும் வரை பக்தர்கள் வரிசையில் நின்று அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவின் நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது. இதையடுத்து நடராஜருக்கு பல்வேறு ஆராதனைகள் நடத்தப்படும்.
- இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
- மாலை 4 மணியளவில் நடராஜ சுவாமிகள் நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரானது நேற்று மாலை 6 மணியளவில் கீழரத வீதியில் உள்ள தேர் நிலைக்கு வந்தடைந்தது.
அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களின் விண்ணதிரும் பக்தி கோஷங்களுடன் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடந்தது. நள்ளிரவு 2 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு இன்று மதியம் 2 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் சிவனடியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜரின் அருளை பெறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.
தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
விழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், வர்த்தகர்கள் என பலரும் அன்னதானம் செய்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்காக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- இன்று அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம் தாண்டவ தீபாராதனை நடந்தது.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் அனைத்து சிவாலயங்களிலும் திருவாதிரை திருவிழாவானது, மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக, சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, நெல்லை தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை என 5 சபைகளிலும் ஆருத்ரா தரிசனம் மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பழங்கால பாரம்பரியத்தை பறைசாற்றும் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா வானது கடந்த மாதம் 28 -ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தொடர்ந்து, 8-ம் திருநாளான கடந்த 4-ந்தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
10-ம் திருநாளான இன்று அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம் தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் நடராஜபெருமானின் 5 சபைகளில் ஒன்றாக கருதப்படும் குற்றாலநாத சுவாமி கோவில் சித்திர சபையில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை கண்டு மனம் மகிழ்ந்து பக்தி பரவசத்துடன் கடவுளை வணங்கி சென்றனர்.
- சிவன் கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
- அனைத்து நடராஜர்களுக்கும் ஒரே இடத்தில் மகா ஆரத்தி காட்டப்பட்டது.
மார்கழி மாதம் பவுர்ணமி யோடு, திருவாதிரை நட்சத் திரம் கூடி வரும் நாளன்று 'திருவாதிரை' திருவிழா 'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபடும் நாள் ஆகும்.
அந்த வகையில் சிவன் கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. சென்னையில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
திருவாதிரை விழாவையொட்டி சிவன் அடையாறு சேவா சங்கம் சார்பில் 'திருவாதிரை நவ நடராஜர் சந்திப்பு' நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. சென்னை மண்ணடி முத்தியால்பேட்டை லிங்க செட்டி தெரு மல்லிகேஸ்வரர் கோவில் எதிரில் இந்த திருவாதிரை சந்திப்பு விழா நடந்தது.
இதில் 9 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் உற்சவர் ஒரே இடத்தில் சந்தித்தனர்.
மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், சென்னை காளி காம்பாள் கோவில், மூக்கர் செல்லமுத்து பிரசன்ன விநாயகர் கோவில், செங்கழுநீர் பிள்ளையார் கோவில், மண்ணடி செல்வ விநாயகர் கோவில், முத்துக்குமாரசாமி கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், சண்முக செல்வ விநாயகர் கோவில் ஆகிய 9 கோவில்களில் உள்ள நடரா ஜர் உற்சவர் இங்கு கொண்டு வரப்பட்டு அனைவரும் சாலையின் நான்கு பக்கங்களிலும் நின்றனர்.
இந்த அனைத்து நடராஜர்களுக்கும் ஒரே இடத்தில் மகா ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது வேதபாராயணம் மற்றும் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடந்தது. மேலும் திருவாசகமும் பாடப்பட்டது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகள் முழு வதும் நடராஜர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நாளை (7-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடராஜ பெருமான் ஆருத்ரா உள் உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை நடராஜர் மற்றும் தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை தியாகராஜர் அறைக்கட்டு மாடவீதி புறப்பாடு, 18 திருநடனம் நடைபெறுகிறது.
கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீசுவரர் கோவிலில் நேற்று இரவு 10 மணிக்கு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சாமி புறப்பாடு மற்றும் மாட வீதி உலா நடந்தது.
வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நடராஜர்-சிவகாம சுந்தரி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. காலையில் அஷ்டோத்ர அர்ச்சனை, மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று மாலை நடராஜர் சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ் பாஞ்சலி நடைபெறுகிறது.
மேலும் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
- அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.
- உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.
இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.
அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதை தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
இதனை முன்னிட்டு இன்று காலை சாமி சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் மாட வீதியில் சாமி ஊர்வலம் நடைபெறும்.
தொடர்ந்து 10ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 6.15 மணிக்கு அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி கொடுப்பார். தொடர்ந்து இரவு திருவூடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
- இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
- 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
ஆருத்ரா தரிசன விழா சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து முருகன் சன்னதி அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. நள்ளிரவு 12.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், அம்மாப்பேட்டை சுப்பிரமணியர், மேச்சேரி பசுபதீசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர் .பெண்களுக்கு திருமஞ்சன கயிறு வழங்கப்பட்டது. பஞ்சமூர்த்திகள் விழாவும் நடந்தது.
நாமக்கலில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நடராஜருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டு துறையூர் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பிரசாதம் கோவில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதயொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.