search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Astrapureeswarar Temple"

    • அர்ச்சுனன் தவம் இருந்த தலங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
    • ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும்.

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே அமைந்திருக்கிறது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிற்றூரான, ஆனூர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட மிகப்பழமையான, சவுந்தரநாயகி அம்பாள் உடனாய அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    பல்லவ மன்னனான கம்பவர்மன், பாத்திவேந்திராதிவர்மன், முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கச்சோழன், இரண்டாம் ராஜராஜன் போன்ற பல மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.


    இத்தலமானது கல்வெட்டுக் களஞ்சியமாக காட்சி தருகிறது. ஆனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில், இவ்வூரின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஆனூரின் வடகிழக்கு மூலையில் கிழக்கு திசை நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. கோவிலின் முன்பு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. மதில் சுவர் மற்றும் ராஜகோபுரம் இன்றி நுழைவு வாசல் மட்டும் இருக்கிறது.

    நுழைவு வாசலின் முன்பு திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ள கல்தூணைக் காண முடிகிறது. கோவிலுக்குள் நுழைந்ததும் நுழைவு வாசலின் இருபுறமும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன.

    உள்ளே பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளன. இத்தலம் முன்மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு காட்சி தருகிறது.

    முன்மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி சவுந்தரநாயகி அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். கருவறையின் முன்பு புடைப்புச் சிற்ப நிலையில் துவாரபாலகர்கள் அமைந்துள்ளனர்.


    நுழைவு வாசலின் பக்கவாட்டு சுவரில் ருத்திராட்ச மாலைகளை அணிந்த சிவனடியாரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தில் அமைந்த கருவறைக்குள், 'அஸ்திரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் தாங்கி சிவலிங்க வடிவில் சிவபெருமான் அருளாட்சி செய்து வருகிறார்.

    சிவபெருமானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக, அர்ச்சுனன் தவம் இருந்த தலங்களில் ஒன்றாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது. அர்ச்சுனனுக்கு, சிவபெருமான் அஸ்திரம் வழங்கிய தலம் இது என்பதால் இவ்வாலய இறைவன் 'அஸ்திரபுரீஸ்வரர்' என்ற பெயரைப் பெற்றுள்ளார்.


    கருவறை கோட்டத்துச் சிற்பங்களாக ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    விஷ்ணு துர்க்கைக்கு எதிரில் உள்ள ஒரு சன்னிதியில், சண்டிகேஸ்வரர் வலது திருக்கரத்தில் மழுவைத் தாங்கியும், இடது காலை மடக்கி வலது காலை குத்திட்டு அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது வேறெங்கும் காணக்கிடைக்காத தொன்மையான அமைப்பாகும்.


    இத்தலத்தின் சுற்றுப் பிரகாரத்தில் மகா கணபதி சன்னிதியும், வள்ளி- தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னிதியும், பைரவர் சன்னிதியும் இருக்கின்றன.

    மதில் சுற்றுச்சுவரில் ஸ்ரீசங்கீத விநாயகர் மற்றும் ஜேஷ்டாதேவியின் அரியவகை புடைப்புச் சிற்பங்களைக் காணமுடிகிறது.


    சோழர்களின் காலத்தில் படையெடுப்பிற்குச் செல்லும் முன்பாக, ஆயுதங்களை ஜேஷ்டாதேவியின் முன்பு வைத்து வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தலத்தில் மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி முதலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை தினங்களில் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஒரு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயமானது, தினமும் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். பிரதோஷ நாட்களில் மட்டும் மாலை வேளைகளில் கோவில் நடை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து பொன்விளைந்தகளத்தூர் செல்லும் வழியில் ஆனூர் கிராமம் அமைந்துள்ளது. டி4, டி12, 129சி ஆகிய தடம் எண்ணுள்ள அரசுப் பேருந்துகள் ஆனூருக்குச் செல்கின்றன.

    ×