search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basavaraj Bommai"

    • கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.
    • 2023 நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு :

    ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் அவர் ராகவேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மந்திராலயத்தில் வைத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. பசவராஜ் பொம்மையே இன்னும் 8 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலையும் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதியில் இருந்து நான் உள்பட அனைத்து தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பெங்களூருவுக்கு வந்த அமித்ஷா, சட்டசபை தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது.

    சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்கும்படி பா.ஜனதா மேலிடத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயேந்திரா வெற்றி பெறுவார். பா.ஜனதா பற்றியும், தலைவர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வருகிற 21-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • பா.ஜனதாவில் 3-வது முதல்-மந்திரி நியமிக்கப்படும் காலம் கூடி வந்துள்ளது.
    • கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா மீதான ஊழல் புகார்கள், பணி நியமன முறைகேடுகள், 40 சதவீத கமிஷன் புகார் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சமீபத்தில் பா.ஜனதா நிர்வாகி பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார்.

    இதனால் பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகள் அரசுக்கு எதிராக தங்களின் கருத்துகளை கூறி வருகிறார்கள். பலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பா.ஜனதா மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவுக்கு வந்து சென்ற பிறகு பா.ஜனதாவில் மேக மூட்டமான சூழல் காணப்படுகிறது. பா.ஜனதாவில் 3-வது முதல்-மந்திரி நியமிக்கப்படும் காலம் கூடி வந்துள்ளது. பசவராஜ் பொம்மையின் ஆட்டம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அமித்ஷா வந்து சென்றது குறித்து எந்த மந்திரியும் வாய் திறக்காமல் இருப்பதே இதற்கு சாட்சி.

    பசவராஜ் பொம்மைக்கும், பா.ஜனதாவினருக்கும் போலி ரூபாய் நோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் என்ன தொடர்பு உள்ளது?. சமூக விரோதிகள், பிட்காயின் முறைகேடு செய்பவர்கள், 40 சதவீத கமிஷன்காரர்கள், பணி நியமன முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் கைப்பாவையாக பசவராஜ் பொம்மை செயல்படுகிறாரா?. முதல்-மந்திரி நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள இந்த தவறு செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவாக நிற்கிறீர்களா?.

    பசவராஜ் பொம்மை ஆட்சி அதிகாரத்தை விட்டு கீழே இறங்கும் நேரம் நெருங்கிவிட்டது போல் தெரிகிறது. முதல்-மந்திரி மாற்றத்திற்கு காரணம் என்ன?. முதல்-மந்திரியின் தோல்விகளா? அல்லது பா.ஜனதாவின் உட்கட்சி மோதலா?. கர்நாடகத்தில் மழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு 3-வது முதல்-மந்திரியை தேடும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு காங்கிரஸ் கட்சி அதில் குறிப்பிட்டுள்ளது.

    • வருகிற 13-ந் தேதி முதலே தேசிய கொடி ஏற்றுவதை தொடங்க வேண்டும்.
    • வீடுகளில் 13-ந் தேதி கொடி ஏற்றினால் அதை 15-ந் தேதி வரை பறக்க அனுமதிக்கலாம்.

    பெங்களூரு :

    'ஹர் கர் திரங்கா' தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தனது வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

    ஹர் கர் திரங்கா இயக்கத்தின்படி வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தேசபக்தி உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். இதை அர்த்தப்பூர்வமாக நடத்த வேண்டும். கர்நாடகத்தில் 1 கோடி வீடுகள் மீது தேசிய கொடி ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தேசிய கொடி விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வருகிற 13-ந் தேதி முதலே தேசிய கொடி ஏற்றுவதை தொடங்க வேண்டும். இதன் மூலம் சுதந்திர தின பவள விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டும். அரசு கட்டிடங்களில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்களும் காலையில் தேசிய கொடியை ஏற்றி மாலையில் இறக்க வேண்டும். வீடுகளில் 13-ந் தேதி கொடி ஏற்றினால் அதை 15-ந் தேதி வரை பறக்க அனுமதிக்கலாம்.

    தலைமை செயலாளர் மீண்டும் ஒருமுறை காணொலி மூலம் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி உாிய உத்தரவை பிறப்பிப்பார். வெள்ளையனே வெளியேறு (க்விட் இந்தியா) போராட்டத்தின் நினைவாக வருகிற 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சந்தித்து அதிகாரிகள் கவுரவிக்க வேண்டும். மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகளும் அதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துகணிப்புகள் தெரிவித்தன.
    • மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய பா.ஜனதா திட்டம்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்போம் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கருத்துகணிப்புகளில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிவித்திருந்தது. மேலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துகணிப்புகள் தெரிவித்தன.

    இது பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வளர்ச்சி பணிகளிலும், கட்சியை வளர்க்கும் பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தும்படி அமித்ஷா உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய பா.ஜனதா மேலிட தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    அதன்படி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையையும், மாநில தலைவர் நளின்குமார் கட்டீலையும் மாற்ற பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருப்பதால் மந்திரிசபையையும் மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற, 15-ந் தேதி சுதந்திர தினத்திற்கு பின்பு முதல்-மந்திரி, மாநில தலைவர் மாற்றப்படுவதுடன், மந்திரிசபையும் மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறுவது போல் செயல்படுகிறார்.
    • கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தட்சிண கன்னடாவில் சமீப காலமாக நடைபெற்று வரும் கொலைகளுக்கும், சங்பரிவார் அமைப்புகளின் உள் விவகாரங்களுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதையும் மனதில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும். கொலையான பிரவீன் நெட்டார் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மந்திாி சுனில்குமார் ஆகியோருக்கு எதிராக அங்கு இருந்தவர்கள் பொங்கி எழுந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கான காரணத்தையும் போலீசார் கண்டறிய வேண்டும்.

    நளின்குமார் கட்டீல் கார் டிரைவராக பிரவீன் நெட்டார் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த பணியை அவர் கைவிட்டுள்ளார். அவர் நளின்குமார் கட்டீலை விட்டு விலகி சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தினால் கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய முடியும். இந்துக்கள் இறந்தால் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம்கள் இறந்தால் இந்துக்கள் மீதும் சந்தேகப்படுவது வழக்கமாகிவிட்டது.

    இதே நோக்கத்தில் விசாரணை நடத்தினால் கொலைக்கான உண்மை காரணம் மூடி மறைக்கப்பட்டுவிடும். கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஏதாவது அமைப்புகள் சட்ட விரோதமாக செயல்பட்டால் அவற்றை தடை செய்யவும் திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் பின்தங்கிய சாதி அதிலும் பில்லவ சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே மத பிரச்சினையில் பலியாகி வருகிறார்களே ஏன்?.

    பசவராஜ் பொம்மை பா.ஜனதா தொண்டர்களுக்கு மட்டும் முதல்-மந்திரியா? அல்லது ஒட்டுமொத்த 6 கோடி கன்னடர்களுக்கு முதல்-மந்திரியா? என்பதை கூற வேண்டும். பிரவீன் நெட்டார் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய முதல்-மந்திரி மசூத் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாதது ஏன்?. பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறுவது போல் செயல்படுகிறார்.

    இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

    • இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்.
    • தட்சிண கன்னடா பகுதியில் பாஜகவினர் போராட்டம்

    தட்சிண கன்னடா:

    கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெல்லாரே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதி பாஜகவினர் சாலை மறியல் உள்ளிடட் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில்,பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிரவீன் நெட்டாரு படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமது டுவிட்டர் பதிவில் பொம்மை குறிப்பிட்டுள்ளார். கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    • கர்நாடகத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளின் சிரமத்திற்கு நாம் தலை வணங்கி அவர்களை கவுரவிக்க வேண்டும்.

    மண்டியா:

    மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுனில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்க நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வந்தார். அவர் கே.ஆர்.பேட்டை டவுன் புரசபை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் கே.ஆர்.பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். நீர்ப்பாசன திட்டங்கள், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்பும் திட்டம், சாலைகள் சீரமைக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதற்காக மொத்தம் ரூ.467 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விழாவில் பேசியதாவது-

    ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வினியோகிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அவரது கனவை நனவாக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கர்நாடகத்திலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மண்டியாவில் 3 தாலுகாவிற்கு உட்பட்ட வீடுகளில் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். மண்டியா மாவட்டத்தின் நீர் ஆதாரமாக காவிரி, ஹேமாவதி ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் இருந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை மண்டியா மாவட்ட மக்கள் பெற்று வருகிறார்கள்.

    விவசாயிகளின் சிரமத்திற்கு நாம் தலை வணங்கி அவர்களை கவுரவிக்க வேண்டும். விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். மைசுகர் சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். மேலும் விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மண்டியா மாவட்டத்தில் பி.யூ. மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார். விழாவில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், நாராயணகவுடா, கோபாலய்யா, ஆர்.அசோக், கோட்டா சீனிவாசபூஜாரி, மாவட்ட கலெக்டர் அஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.
    • இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது.

    மைசூரு:

    கர்நாடகத்தில் உள்ள அணைகளில் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் மைசூருவில் உள்ள கபினி அணைகள் முக்கியமானவை. குடகு மாவட்டம் மற்றும் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இந்த இரு அணைகளின் நீர் தான் காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழ்நாடு-கர்நாடகம் இடையே பகிர்ந்து வரப்படுகிறது.

    இந்த நிலையில் இரு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணைகளுக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை தீவிரம் அடைந்ததால் அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீதம் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், நீர்மட்டம் உயர்ந்ததாலும் அணைகளின் பாதுகாப்பு கருதி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டது. கே.ஆர்.எஸ். அணையில் திறந்த நீர் காவிரியில் பாய்ந்தோடியது.

    இரு ஆறுகளும் மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா அருகே கூடலுசங்கமாவில் இணைந்து அகன்ற காவிரியாக சாம்ராஜ்நகர் வழியாக தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் ஒனேக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு பாய்ந்தோடுகிறது. இரு அணைகளில் இருந்தும் அதிகபட்சமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையும், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டி நிரம்பின.

    நடப்பு ஆண்டில் ஜூலை 2-வது வாரத்திலேயே இரு அணைகளும் நிரம்பிவிட்டன. 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை காலத்தில் இரு அணைகளும் ஜூலையில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அணைகள் நிரம்பியதை தொடர்ந்து வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அணைகளில் முதல்-மந்திரி பாகினா பூஜை சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு அணைகள் நிரம்பியதை தொடர்ந்து நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இரு அணைகளிலும் பாகினா பூஜை நிறைவேற்றினார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டரில் மைசூரு சென்றார். அங்கிருந்து அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்றார். மேலும் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து சாமுண்டிஅம்மனுக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    பின்னர் அங்கிருந்து காரில் அவர் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா எலச்சினஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு சென்றார். அங்கு வருணபகவானுக்கு சிறப்பு பூஜை செய்த பசவராஜ்பொம்மை, பாகினா பூஜை செய்து வழிபட்டார். அதாவது, ஒரு முறத்தில் நவதானியங்கள், துணி, மஞ்சள், வளையல், பூ, குங்குமம், பழங்கள், தேங்காய், வெற்றிலை,பாக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து மற்றொரு முறத்தால் மூடி அதனை அணை நீரில் விடுவதே பாகினா என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு நவதானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய முறத்தை பசவராஜ்பொம்மை அணை நீரில் விட்டு வழிபட்டார்.

    அங்கு பூஜையை முடித்த அவர் காரில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். அங்கும் அவர் அணை நிரம்பியதால் வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் பாகினா பூஜையை அவர் நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சிகளின் போது முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையுடன், அவரது மனைவி சென்னம்மா, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மைசூரு கலெக்டர் பகாதி கவுதம், மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, கலெக்டர் அஸ்வதி மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக கபினி அணையில் பூஜை முடித்த பிறகு பசவராஜ்பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. வட கர்நாடகத்தில் கிருஷ்ணா கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்கர்நாடகத்தில் காவிரி, கபிலா, ஹேமாவதி, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, துங்கப்பத்ரா உள்ளிட்ட அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளனர். இதனால் வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து, அணைகளில் பூஜை செலுத்துகிறேன். சாமுண்டீஸ்வரி வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தேன். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன்.

    இந்த ஆண்டு மாநிலத்தில் நீர்பிரச்சினை வராது. விவசாயிகளுக்கு அனுகூலம் ஆகும் வகையில் பாசன கால்வாய்களை தூர்வாரி, விளை நிலங்களுக்கு தடையின்றி பாசன நீர் சுலபமாக செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வளர்ச்சி அடைய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.

    கபினி அணையின் முன் பகுதியில் இருக்கும் காலியான இடத்தில் அழகான பூங்கா அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சார்பில் இந்த பூங்காவை அமைப்பதா அல்லது தனியார் கட்டுப்பாட்டில் இந்த பூங்காவை அமைப்பதா என ஆலோசித்து வருகிறோம். இந்த இடத்தை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    கர்நாடக மாநிலத்திலேயே மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்.டி. கோட்டை தாலுகா மிகவும் பின்தங்கிய, வளர்ச்சி காணாமல் இருக்கும் தாலுகாவாக உள்ளது என பெயர் இருக்கிறது. அதை மாற்றுவதற்காக இந்த தாலுகாவை வளர்ச்சி அடைய வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டியாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தீர்ப்பு வெளியானதும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். அதன் பிறகு திட்ட பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டத்தால் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். இந்த திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசன திட்டங்களால் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும்.

    ங்கள் அரசு விவசாயிகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது. மண்டியா பகுதியின் வளர்ச்சிக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அர்ப்பணிப்பு மனநிலையுடன் பணியாற்றினால் நம்மை மக்கள் நினைவில் வைத்து கொள்வார்கள்.

    மண்டியா சர்க்கரை ஆலையில் உற்பத்தி பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கப்படும். இதற்கு தேவையான செலவுக்கு அரசே நிதி ஒதுக்கும். இதனால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். தற்போது பெய்து வரும் மழையால் கர்நாடகத்தில் முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் கலாசாரத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய காவிரி ஆற்றை நாம் பயன்படுத்தி கொள்வது நமது கடமை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    மேகதாது அணை, கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது. இந்த அணை ரூ.9 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடகம், மத்திய அரசு மற்றும் மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுமதி கேட்டு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்டும் முடிவில் தீவிரமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவோ, மாற்றியமைக்கவோ பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை.
    • ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷாவை பசவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால் மந்திரிசபையில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்ப வேண்டும் என்று மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் சட்டசபை தேர்தலையொட்டி மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக, மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பலமுறை டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.

    ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவோ, மாற்றியமைக்கவோ பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தல், கர்நாடக மேல்-சபை தேர்தலை காரணம் காட்டி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து கர்நாடக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி இருந்தார்.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 20-ந்தேதி பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த சர்வதேச யோகா தினவிழாவிலும் பிரதமர் கலந்து கொண்டார். இதையடுத்து, கர்நாடக பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்திருந்தனர். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகம் வந்து சென்றிருப்பதால், பா.ஜனதாவில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்ற மறுநாளே(அதாவது நேற்று) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை டெல்லிக்கு உடனடியாக வரும்படி பா.ஜனதா மேலிட தலைவர்கள் திடீர் அழைப்பு விடுத்துள்ளனர். பா.ஜனதா தலைவர்களின் அழைப்பை ஏற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(வியாழக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

    அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பது குறித்து ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே பலமுறை மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பலமுறை டெல்லிக்கு சென்று வந்திருந்தாலும், அதற்கான அனுமதியை பா.ஜனதா மேலிடம் வழங்கவில்லை. தற்போது மேலிட தலைவர்களே அழைப்பு விடுத்திருப்பதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலும், இந்த முறை மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் மந்திரிசபையை மாற்றியமைக்கப்பட்டால் மூத்த மந்திரிகள், அடிக்கடி சர்ச்சை மற்றும் பிற முறைகேடுகளில் சிக்கியவர்கள் நீக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பா.ஜனதா மேலிட தலைவர்களுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடத்தும் ஆலோசனையை மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
    பெங்களூரு :

    தென்ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அது இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது அதிகவேகமாக பரவக்கூடிய தன்மையை கொண்டதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களால் இங்கு கொரோனா பரவல் அதிகரிப்பது மேல்நோட்டமாக தெரியவந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் துணை மருத்துவ பணியாளர்களால் தொற்று பரவுகிறது. அதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், மைசூரு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனால் கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவுகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் இதுவரை அந்த புதிய வகை கொரோனா பரவவில்லை.

    தார்வார், மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அந்த விடுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தார்வார் எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மைசூருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புதிய வகை கொரோனா பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா உள்பட 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ‘பூஸ்டர்' டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்குமாறு கேட்டு இருக்கிறோம். வணிக வளாகம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் அரசு-தனியார் அலுவலகங்களில் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

    கடந்த 16 நாட்களில் கேரளாவில் இருந்து கர்நாடகம் வந்த மாணவர்களை மீண்டும் ஒரு முறை கொேரானா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிப்பது குறித்து வரும் நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    மேல்-சபை தேர்தல் பிரசாரத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றும்படி அறிவுறுத்தி உள்ளேன்.

    மாநிலத்தில் தற்போது 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாநிலத்தில் இதுவரை 91 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    மகான்களின் தியாகத்தை அடிப்படையாக கொண்டு, நாம் நவீன உலகத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செல்லும்போது, நமது பழமையை மறக்கக்கூடாது.
    பெங்களூரு :

    உலக புத்த மத சங்கம் மற்றும் நாகசேனா புத்த விஹார் ஆகியவை சார்பில் 72-வது அரசியல் அமைப்பு சட்ட தினத்தையொட்டி தேசிய புத்த மத மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    புத்தர் எனக்கு பிடித்தமானவர். புத்தர், பசவண்ணர், அம்பேத்கர், மகாவீர் போன்றவர்கள் பெரிய சாதனையாளர்கள். காலம் அவர்களை அழைத்து சென்றுவிட்டது. அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் புத்தர் சிலையை நிறுவியுள்ளன. அமைதி, சாதனை மிக முக்கியம். தியாக வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

    அத்தகைய மகான்களின் தியாகத்தை அடிப்படையாக கொண்டு, நாம் நவீன உலகத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செல்லும்போது, நமது பழமையை மறக்கக்கூடாது. அரசியல் சாசனத்தை பாதுகாப்போம். வாழ்க்கையை கட்டமைப்போம். நாட்டை வளர்ப்போம் என்று சபதம் எடுத்துக்கொள்வோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது, பிட்காயின் முறைகேடு போன்றவற்றால் பா.ஜனதாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ‘‘முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை மாற்றும் பேச்சுக்கே இல்லை. அவர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார்’’ என்றார்.
    ×