search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumer Cooperative"

    திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். #DengueFever
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் சுகாதார குழுவினர் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் , பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று டெங்கு ஆய்வு நடத்தி வருகிறார். இதில் சுகாதாரமற்ற முறையிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருக்கும் வீடு- கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நகரில் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு ஆய்வு மேற்கொண்டார்.

    திருவாரூர் மேலவடம்போக்கித் தெரு, தென்றல் நகர், காகித காரத்தெரு உள்ளிட்ட நகர்புற பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது மேலவடம்போக்கித் தெருவில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ 35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இதேபோல் நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ. 15 ஆயிரம் அபராதமும் கலெக்டர் விதித்து உத்தரவிட்டார்.

    இதுபற்றி கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க 24 மணி நேரமும் சுகாதார துறையினர், மருத்துவ குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DengueFever
    ×