என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deportation"

    • பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்

    கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் மசூதிகளில் ஜும்மா தொழுகையைத் தடுக்க முயன்றதாகக் பாஜக அரசையும், தலைவர்களையும் AIMIM கட்சி தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீமன் ஓவைசி கடுமையாக சாடினார்.

    ஒரு கூட்டத்தில் பேசியிருந்த ஓவைசி, "சிலர் உங்களுக்கு இவ்வளவு பயமாக இருந்தால், நீங்கள் தொழுகை செய்ய வேண்டாம், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    எங்கள் மசூதிகளை மூடியதைப் போல, எங்களை நாங்களும் மூடிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல. ஒரு முதலமைச்சர் (யோகி ஆதித்யநாத்) ஜும்மா தொழுகையை வீட்டிலும் நிறைவேற்றலாம் என்று கூறினார். நாங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல அவர் யார்? என்று பேசியிருந்தார்.

    உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்ட வட்ட அதிகாரி அனுஜ் சவுத்ரி, ஹோலி வண்ணங்களால் சங்கடப்படுபவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியதை ஓவைசி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் ஒவைசி கருத்துக்கள் குறித்து பேசிய தெலுங்கானா பாஜகவை சேர்ந்த கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங், அசாதுதீன் ஓவைசி அரசியல் ஆதாயங்களுக்காக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது, தெலுங்கானாவில் தனது கட்சி(பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஓவைசி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார். ஓவைசிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறிய ராஜா சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியை நாடு கடத்துவோம் - தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

    தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி நாடுகடத்தப்படுவர் என பாஜக எம்எல்ஏ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    • கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.
    • வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்

    புதுடெல்லி:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

    2018ம் வருடம் கனடாவிற்குள் நுழைந்த தாங்கள் அனைவரும், படிப்பையும் முடித்து, நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நேரத்தில், கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    நாங்கள் முதலில் சேருவதற்காக வந்த கல்லூரியில் இடமில்லாததால், அதே பல்கலைக்கழகத்தின் வேறு கல்லூரிகளில் முகவர்கள் இடம் மாற்றி தந்ததாகவும், 3-4 வருடங்கள் கடந்த பின்னர், பட்டப்படிப்பும் முடிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமந்தீப் சிங் எனும் மாணவர் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    சேமிப்பு அனைத்தையும் செலவிட்டு கனடாவில் கல்வி பயில வந்ததாகவும், இந்த அறிவிப்பு பல மாணவ-மாணவியரின் மனநலத்தையும் பாதித்திருப்பதாகவும், ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும், இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு கனடா அரசுடன் பேச வேண்டும் என்றும் லவ்ப்ரீத் சிங் எனும் மற்றொரு மாணவர் தெரிவித்தார்.

    மாணவர்கள் கனடா செல்வதற்காக வீடு, நிலங்களை விற்று, நிறைய பொருட்செலவு செய்துள்ளனர் என்றும் அவர்கள் மிகப் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தலையீட்டை கோரியிருப்பதாகவும் பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் தெரிவித்தார்.

    ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுமார் 700 மாணவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் உடனடியாக தலையிட்டு, கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளுடன் இவ்விஷயத்தை எழுப்பி துரிதமாக தீர்வு காண வேண்டும் என தாலிவால் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே இப்பிரச்சனையில் கனடாவிலுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசியபோது, மாணவர்களின் நாடு கடத்தலை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ட்ரூடோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதுதான் அரசின் நோக்கமே தவிர, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களை பழி வாங்குவதல்ல என கூறியுள்ளார்.

    இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் அரசும் கேட்டுக்கொண்டுள்ளது

    • அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது
    • ​​​​அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

    அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவரது கடந்த 2016-20 ஆட்சிக் காலத்தை போலவே தற்போதும் அதிரடி முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.

    அந்த வகையில் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்ட டிரம்ப் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் புலம்பெயர்ந்து அங்கு குடியேறியுள்ள பல நாட்டவரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

     

    இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களையும் கண்டறிந்து திருப்பி பெறுவதாக இந்திய அரசு டொனால்டு டிரம்பின் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது என புளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி மற்றும் ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது என்றும் நாடு கடத்தப்பட உள்ள அவர்களை இந்திய அரசு சரிபார்த்து திரும்பப்பெறும் என்று கூறப்படுகிறது.

    திங்களன்று தனது பதவியேற்பின்போது, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

     

    நாட்டிற்குள் நிகழும் அனைத்து சட்டவிரோத நுழைவுகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், தனது நிர்வாகம் மில்லியன் கணக்கான குற்றப்பின்னணி கொண்ட வெளிநாட்டினரை அவர்கள் வந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பத் தொடங்கும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

    • சி-17 ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது.
    • கைவிலங்கிடப்பட்டு ஆடைகளை களைந்து பரிசோதிக்கப்பட்ட்டார்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாட்டவரை நாடுகடத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்காவில் சுமார் 18,000 சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    அவர்களை நாடுகடத்தும் பணியில் அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக இந்திய அரசு தெரிவித்தது. அடுத்த வாரம் அமெரிக்கா சென்றுடிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளாதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் முதற்கட்டமாக 205 பேரை அந்நாடு, சி-17 ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது. அவர்கள் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

    விமானத்தில் வரும் இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில் அவர்களின் கைவிலங்கிடப்பட்டு நிலையில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. விமானத்தில் அமர்ந்துள்ளவர்கள் கை மற்றும் கால்களின் விலங்கிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளன. சமூக வலைதளங்கலில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.



     


    இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும்போது இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு துன்புறுத்தப்படுவது வருத்தமளிக்கின்றன.

    2013 டிசம்பரில் இந்திய பெண் அதிகாரி தேவ்யானி கோப்ரகடே [விசா முறைகேடு தொடர்பான பிரச்சனையில்] அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்டு ஆடைகளை களைந்து பரிசோதிக்கப்பட்டபோது அப்போதிருந்த ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கடும் எதிர்வினை ஆற்றியது.

    ராகுல் காந்தி, மீரா குமார், சுசில் குமார் உள்ளிட்ட தலைவர்கள் அந்த சமயம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிகாரிகள் குழுவை சந்திக்க மறுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவை வன்மையாக கண்டித்தார். அமெரிக்க வெளியுறவு துறைக்கு அளித்து வந்த சலுகைகளை ரத்து செய்தார். அமெரிக்க வெளியுறவு செயலர் அதன்பின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

    ஆனால் தற்போது இந்தியர்கள் நடத்தப்பட்ட விதம் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். முன்னதாக பிரேசில் நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டவர்களையும் இவ்வாறு கைவிலங்கிட்டு தண்ணீர் கொடுக்காமல் துன்புறுத்தியதாக அந்நாடும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே!
    • எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தியவர்களை மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?

    அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது.

    ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.

    இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ?

    இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!

    இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

    அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்... கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கொலம்பியா - பனாமா எல்லையில் 'டேரியன் கேப்' எனும் சதுப்பு நிலக் காடு அமைந்துள்ளது.
    • 'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதைகள் மிகவும் குறுகியது,

    ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்களை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

    அவ்வாறு இந்தியாவைச் சேர்ந்த 18,000 இந்தியர்களை அமெரிக்கா கண்டறிந்துள்ளது. முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்டோரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்கா நாடுகடத்தியது. அவர்கள் பஞ்சாப் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களின் கை கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    உலக வல்லரசான அமெரிக்காவில் பிழைப்பதற்காக பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் அந்நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.

    இந்தியாவைச் சேர்ந்தவர்களும் சிறந்த வாழ்க்கையை தேடி இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்கா செல்கின்றனர். அதற்கு அவர்கள் பயணிக்கும் பாதை மிகவும் ஆபத்தானது. பல நாடுகளை கடந்த பின்னரே அமெரிக்காவை அடைய முடியும். குறிப்பாக கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காட்டை அவர்கள் கடக்க வேண்டும்.

    இவ்வாறு சட்டவிரோதமாக எல்லைகளைக் கடக்கும் எந்த ஒரு பாதையும் 'டாங்கி ரூட்' [donkey route] என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை பஞ்சாபி மொழியில் இருந்து மருவிய ஒன்று. இந்த பாதையில் மக்களை காசு வாங்கிக்கொண்டு அழைத்துச் செல்ல முகவர்கள் செயல்படுகின்றனர்.

    அமெரிக்காவிற்கோ அல்லது வேறு ஐரோப்பிய நாட்டிற்கோ நுழைய விரும்பும் இந்தியர்கள், சட்டப்பூர்வ வழியால் அவ்வாறு செய்ய முடியாத நிலையில், மற்ற நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய உதவும் இந்த முகவர்களுக்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள்.

    இந்தியக் குடிமக்களுக்கு, கயானா, பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றுலா விசா எளிதாக கிடைக்கும். அதன்பின் இந்த பாதை வழியாக இந்தியர்கள் பெரும்பாலும் கொலம்பியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பனாமாவுடன் ஒப்பிடும்போது, கொலம்பியா, அமெரிக்க எல்லைக்கு அருகில் உள்ளது.

    கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காடு, கரடு முரடான நிலப்பரப்பு, மாறுபட்ட தட்பவெப்பம், சிறுத்தைகள், பாம்புகள், ஏராளமான விஷ பூச்சிகள், வழிப்பறி கொள்ளையர்கள், உள்ளூர் ரவுடிகள் என பல்வேறு ஆபத்துக்களை உள்ளடக்கியது. 

    97 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த அடர்ந்த காட்டுப்பகுதியின் ஆபத்துகள் அனைத்திலுமிருந்து உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொண்டு தப்பித்து, எட்டு முதல் பத்து நாட்களில் கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவை அடைவார்கள்.

    கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவிலிருந்து, இந்தியர்கள் குவாத்தமாலா வழியாக மெக்சிகோவின் தெற்கு எல்லையை அடைகிறார்கள். இங்கிருந்து, அவர்கள் மெக்சிகோவிற்குள் நுழைந்து பின்னர் அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள்.

    கடந்து செல்லும் நாடுகளில் அரசியல் சூழ்நிலை, வானிலை, மனித கடத்தல் மற்றும் பிற குற்ற வழிகளைக் கருத்தில் கொண்டு, 'டாங்கி ரூட்' வழியாக அமெரிக்காவை அடைய இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லைப் பகுதிகளுக்கு அருகில் பல சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதை மிகவும் குறுகியது, இருண்டது, பூச்சிகள், பாம்புகள் நிரம்பியது. இது மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸை அமெரிக்க மாகாணமான டெக்சாஸின் எல் பாசோவுடன் இணைக்கிறது.

    இதைப் பயன்படுத்த கார்டெல்களுக்கு 6,000 டாலர்கள்(ரூ.5.25 லட்சத்திற்கு மேல்) கொடுக்க வேண்டும். கார்டெலுக்குப் பணத்தைச் செலுத்தியவுடன், பயணிப்பவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படுகிறது. இது மெக்சிகோவில் உள்ள பிற கார்டெல்கள் மற்றும் போலீஸ் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது. இதன்மூலம் அவர்கள் அமெரிக்காவிற்குள் எளிதாக நுழைய முடியும்.  

    • அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • 298 நபர்களைப் பற்றிய விவரங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமா குடியேறிய இந்தியர்களில் முதற்கட்டமாக 104 பேர் நாடு திரும்பினர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இதுவரை 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படுவோர் பட்டியலில் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

    அதன்படி, அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதில், 298 நபர்களைப் பற்றிய விவரங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
    • 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லண்டன்:

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் 104 இந்தியர்கள் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் அமெரிக்காவை போல இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கி லாந்தில் உள்ள இந்திய ஓட்டல்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்க ளில் சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள இந்தி யர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

    ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக உள் துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் கூறும் போது, கடந்த ஜனவரி மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 609 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகங்கள், கபேக்கள், புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில்தான் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி இறுதி வரை சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான சோதனைகள் அதிகரித்துள்ளது என்றார்.

    இந்த நிலையில் சுமார் 19 ஆயிரம் வெளிநாட்டு குற்றவாளிகள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படும் வீடியோவை இங்கிலாந்து அரசு முதன் முறையாக வெளியிட்டுள்ளது.

    • "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் வெள்ளை மாளிகை வீடியோ வெளியிட்டுள்ளது.
    • எலான் மஸ்க் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.

    டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் மூன்று கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் அண்மையில் நாடு கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு சங்கிலி மற்றும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகை ASMR வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

    "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் 40 வினாடி வீடியோவை வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அறிக்கைப்படி சியாட்டில் நகரில் இருந்து புறப்படும் அந்த விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

    வீடியோவில், அதிகாரிகள், நாடுகடத்தப்படுபவர்களை சங்கிலியால் பிணைப்பது, அவர்கள் (கைதிகள்) காலில் பிணைந்த சங்கிலிகளுடன் விமானத்தில் ஏறுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்கா பிறநாட்டவரை கீழ்தரமாக நடத்தும் இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது. இதற்கிடையே உலக பணக்காரரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க், தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.

    ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்தியதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. #UN #Rohingya
    ஜெனீவா:

    இந்தியாவில் சட்டவிரோதமாக சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுக்களிடம் கேட்டுகொண்டிருந்தது. சமீபத்தில், முதல் கட்டமாக 7 பேர் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர்.

    மணிப்பூரில் உள்ள மொரே எல்லையில், மியான்மர் நாட்டு அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் 7 பேரையும் ஒப்படைத்தனர். இந்தியா வந்த ரோஹிங்யாக்கள் நாடு கடத்தப்படுவது, இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தாங்கள் மியான்மருக்கு சென்றால் இனப்படுகொலைக்கு ஆளாவோம் என்பதால் தங்களை நாடு கடத்தக்கூடாது என 7 பேர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது.
    இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு அசாமில் சட்ட விரோதமாக குடியேறினர். இவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்து சிலிசார் சிறையில் அடைத்து இருந்தனர். இவர்களை நாடு கடத்த உள்ளூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா 7 ரோஹிங்யாக்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக ராணுவம் ஏற்கனவே கொடூரமான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இப்போது அங்கு செல்பவர்களும் அதே நிலைதான் நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இந்தியா நடவடிக்கையை எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. 

    மியான்மருக்கு நாடு கடத்தப்பட்ட 7 பேரின் பாதுகாப்பு குறித்து அதீத கவலைக்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகள் தங்களுடைய எச்சரிக்கைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ஐ.நா. சபை கவலையை தெரிவித்துள்ளது.
    ×