என் மலர்
நீங்கள் தேடியது "Drugs"
- "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் புதிய போதைப்பொருள்.
- மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து மீள முடியாது.
தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் பகுதிகளில் சாக்லேட் வடிவில் புதுவகை போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

"ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளி கூடங்களின் அருகில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டு அது வேகமாக பரவி வருகிறது.
வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த போதைப் பொருளில் மெத்த பெட்டமின் போதைப் பொருள் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ட்ராபெரி வாசனையுடன் கூடிய இந்த வகை சாக்லேட் போதைப் பொருள் மாணவப் பருவத்தில் இருந்தே மாணவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் பள்ளிக்கூடங்களில் அருகில் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்த போதைப் பொருளை மிட்டாய் என்று நினைத்து மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து அவர்கள் மீள முடியாது என்கிற எச்சரிக்கை தகவலும் வெளியாகி உள்ளது.
இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் இந்த போதைப் பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களில் அருகில் அறிமுகமில்லாத நபர்கள் எந்தவித சாக்லேட்டுகளை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
எனவே உஷாராக செயல்பட்டு போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
- கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட் பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சடடவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
அவர்கள் மட்டுமின்றி தற்போது பள்ளி மாணவர்களும் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக கிடைக்கிறது.
தொடக்கப்பள்ளி வகுப் பறைகளை கூட போதை பொருட்கள் எளிதில் சென்றடைவதால் குழந்தை கள் போதை பழக்கத்தில் சிக்கி வரும் அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியாகியிருக்கிறது.
கேரளாவில் குழந்தைகள் போதை பழக்கத்திற்கு உள்ளாவது குறித்து கோட்டயத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஆலோசகர் அலீஷா சனிஷ் வேதனையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எங்களின் மையத்தில் மறுவாழ்வு பெற்ற 210-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இரண்டாம் வகுப்பிலேயே 70 சதவீதம் பேர் போதை பழக்கத்திற்கு உள்ளானது தெரியவந்தது.
இந்த மையத்தில் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட போராடுகிறார்கள்.
எங்கள் மையத்திற்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் மழலையர் பள்ளியில் படிக்கும் போதே ஹாஷிஸ் எண்ணையை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறான். கிளர்ச்சி அல்லது விரக்தி காரணமாக அந்த சிறுவன் அதனை பயன்படுத்தத் தொடங்க வில்லை.
தன்னை விட பெரிய குழந்தைகள் பயன்படுத்தியதை பார்த்து, தானும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த விரும்பி இருக்கிறார். பின்பு அதனை பயன்படுத்தியிருக்கிறார். அது கொடுத்த உணர்வு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் அதனை பயன்படுத்தியிருக்கிறார்.
இப்படித்தான் பல குழந்தைகள், சிலர் பயன்படுத்துவதை பார்த்து ஆர்வம் காரணமாக தாங்களும் பயன்படுத்தி போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்வத்தின் காரணமாக போதை பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை போன்று போதைப் பொருள் வாசனை பிடித்து அடிமையாகுபவர்களும் இருக்கிறார்கள். கோட்டயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் சம்பவத் தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்திருக் கிறான்.
அப்போது அவனின் மீது வித்தியாசமான வாசனை வந்ததை அவனது தந்தை கண்டுபிடித்தார். அந்த வாசனையை மறைக்க அந்த சிறுவன் 'மா' இலைகளை தின்றபடி இருந்திருக்கிறார். இந்த வித்தியாசமான பழக்கத்தை சிறுவனின் பெற்றோர் கவனித்தனர். அவனது செயல்பாடு மற்றும் பேச்சில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததையும் பார்த்தனர்.
ஒரு நாள் அந்த சிறுவன் தனது இளைய சகோதரருடன் சண்டையிட்டார். அப்போது தனது சகோதரனின் மீது அந்த சிறுவன் கத்திரிக்கோலை வேகமாக வீசினார். அந்த கத்திரிக்கோல் அங்கிருந்த டி.வி. மீது விழுந்தது. டி.வி.யின் ஸ்கிரீன் உடைந்தது. சிறுவனின் அந்த ஆக்ரோஷ செயலை பார்த்த பெற்றோர் பீதியடைந்தனர்.
இதையடுத்து அந்த சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். சிறுவனின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு போதை பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து விடுபட அவனுக்கு சிகிச்சை பெற செய்திருக்கின்றனர்.
போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறுவர்கள் மூர்க்கத்தனமாக மாறி விடுவதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாக ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பயன்பாடு ஒருவருக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்று திருவனந்தபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் டிபின்தாஸ் கூறியிருப்பதாவது:-
எம்.டி.எம்.ஏ. போன்ற போதை பொருட்கள் பயன்பாடு கடந்த ஆண்டில் கஞ்சாவை முந்தியுள்ளது. இது ஒருவரது உணர்வை மட்டும் மாற்றாது. அவரது தன்னிலையை அழிக்கிறது.
கடந்த ஆண்டில் எங்களின் மையத்தில் 36 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தோம். மேலும் போதை பழக்கத்ததால் புற்று நோயாளிகளாகிய 47 பேருக்கு சிகிச்சையும் அளித்தோம்.
18 முதல் 22 வயதுடைய 116 இளைஞர்கள் உள்நோயா ளியாகவும், 80 பேர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர். மொத்தமாக கடந்த ஆண்டு எங்களிடம் 530 பேர் நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆவர்.
பலர் தங்களது இளைமை காலங்களில் போதை பழக்கத்திற்க அடிமையானவர்கள். மேலும் பலர் பள்ளி படிப்பு காலத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்கள் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாத நிலைக்கு சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் பிரான்சிஸ் மூத்தேடன், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற பள்ளி மாணவிகளும் வரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாணவிகள் அதிரப்பள்ளி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பள்ளி நேரத்தில் செல்கின்றனர். தங்களின் நண்பர்களுடன் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். பின்னர் மாலையில் வீட்டுக்கு வழக்கம்போல் திரும்பி வந்து விடுகின்றனர்.
திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. அதுபோன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அனைவருமே போதை பழக்கத்திற்கு சென்று விடுவதில்லை. சிலர் அந்த பழக்கத்திற்கு தள்ளப்படு கிறார்கள்.
முதலில் போதைப் பொருளை இலவசமாக கொடுக்கிறார்கள். அதன்பிறகு விலைக்கு வாங்க வைக்கிறார்கள். போதைப் பொருள் விற்பனைக்கு பள்ளி மாணவிகள் இழுக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆகவதற்கு முன்னதாகவே கடத்தல்காரர்களாக மாறி விடுகிறார்கள். இது ஒரு தீய சுழற்சி.
போதைப்பொருள் பயன்பாடு ஆரம்ப காலத்தில் ஒருவரின் மூளை வளர்ச்சியை நிரந்தரமாக மாற்றும். ஒரு குழந்தைக்கு மரபணு பாதிப்பு இருந்தால் 18 வயதுக்கு பிறகு போதை பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாது. அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் போதை பழக்கத்துக்கு அடிமையாகலாம். மேலும் அவர்களுக்கு மனநல கோளாறுகளும் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
பள்ளி குழந்தைகள் தொடக்கக்கல்வி படிக்கும் போதே, போதை பழக்கத்தில் சிக்குவது பற்றி வெளியாகியிருக்கும் தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
- முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.
குஜராத் மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அமித் சவ்தா பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். குஜராத் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் இறங்கும் மையமாகியுள்ளது என்றார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
ரசாயனங்களுடன் சாராயம் விற்கப்படுவதால் இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் காரணமாக மாநிலம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் தாராளமாக விற்கப்படுகின்றன. தண்டனை வழங்கப்படுவதில் குறைபாடு மற்றும் சில நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளாலும் இது ஏற்படுகிறது.
குஜராத் போதைப் பொருட்கள் இறங்கும் மையமாகிவிட்டது. துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தயாரித்ததாக பல மருந்து நிறுவனங்களும் பிடிபட்டுள்ளன. குஜராத் போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது என்பதை இது காட்டுகிறது.
டீக்கடைகள் மற்றும் தெருவோர உணவு கூடங்களில் கூட போதைப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன. சமீபத்தில் சூரத்தில் ஒரு பாஜக தலைவர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
சமூக விரோத சக்திகள் பட்டியலை தயார் செய்ய குஜராத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதற்குப்பதிலாக உள்துறை நேர்மையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்ய வெண்டும் வேண்டும்.
இவ்வாறு அமித் சவ்தா விமர்சனம் செய்தார்.
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார்.
- போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரசேரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வசதி படைத்தவர் போன்று காட்டிக் கொண்டதால் அப்துல் கபூருடன் அந்த மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்தி பல இடங்களுக்கு மாணவியை அப்துல் கபூர் அழைத்துச் சென்றுள்ளார்.
ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் அந்த மாணவி போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். அதனை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அப்துல்கபூர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த நேரத்தில் மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்திருக்கிறார். மாணவி பிளஸ்-1 படித்த கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டுகளாக அப்துல் கபூரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபடி இருந்திருக்கிறார்.
இந்தநிலையில் போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது தன்னை வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
மேலும் தன்னை அந்த வாலிபர் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்திருப்பதாகவும் கூறினார். அதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி கோட்டக்கல் போலீஸ் நியைத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்தனர்.
மாணவிக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்த அப்துல் கபூர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் கபூரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.
- 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியது.
- ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.
சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

மேலும் காயமடைந்த 11 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 18 சக்கர டிரக் வாகன ஓட்டுநர் சாலமன் அரயா என்ற 37 வயது நபரை ஆஸ்டின் போலீசார் கைது செய்தனர்.
போதையில் அவர் வாகனம் ஒட்டியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குவதற்கான மருந்துகள்.
- செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கால்நடைகளுக்கு செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கீழவெளி கிராமம், அட்டக்குளம் பகுதி மற்றும் சாந்தபுத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சங்கர் தலைமை வகித்தார். வசந்த்குமார் பட்டேல், டாக்டர். வி.மனோகரன் முன்னிலை வகித்தனர்.
சுபம் வித்யாமந்திர் பள்ளி தாளாளர் ஜி.சுதேஷ் ஜெயின் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மயிலாடுதுறை கால்நடை பராமரிப்புத் துறையை சார்ந்த 3 கால்நடை உதவி மருத்துவர், 2 கால்நடை ஆய்வாளர், 4 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், டாக்டர். ராமபிரபா தலைமையில் மருத்துவக் குழு கலந்து கொண்டனர்.
இதில் 50-க்கும் மேற்ப ட்ட பசு மாடுகளை உரிமையா ளர்கள் அழைத்து வந்தனர்.
இம் முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் குடல் புழு நீக்குவதற்கான மருந்துகள், சத்தூட்ட மருந்துகள், செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மேலும் இலவசமாக அனைத்து மருந்துகளும் கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சுடர் எஸ்.கல்யாணசுந்தரம், சுசீந்திரன், சோலை, சி.பி.பிரசாந்த், சுபம் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஜி.அன்பழகன், உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன், 30-க்கும் மேற்பட்ட தன்னார்வ நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், கால்நடை உரிமையாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டி னை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் எஸ்.முரளிதரன் செய்திருந்தார்.
- சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள்
- சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன.
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்டன.
இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறை அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிறபோது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.
விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.
புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.
முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.
இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.
இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூக குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.
போதை பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
மனநல ஆலோசகர் சங்கமித்திரை:- சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி புரிய வைக்க வேண்டும்.
கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும். பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.
மாதவரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை சூடாமணி:- அந்த கால சினிமா காட்சிகளும், பாடல் வரிகளும் நல்ல சிந்தனைகளையும், கருத்துகளையும் புகட்டின. ஆனால் இந்த கால சினிமா காட்சிகள், மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்து செல்வது போன்று இருக்கிறது.
சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன. தங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் திரையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, வில்லன்களை அடித்து உதைப்பது, அரிவாளை தூக்குவது என செய்யும் செயல்களை மாணவர்கள் சிலர் அப்படியே கடைபிடிக்கிறார்கள். இது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்.
எனவே திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதற்கு நடிகர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகள், சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுமதி:- நாங்கள் எங்களது ஆசிரியர்கள், ஆசிரியைகளை மதித்தோம். அவர்களது அறிவுரைகளைக் காது கொடுத்துக்கேட்டோம். அவர்கள் சொல்படி நடந்தோம். இதனால் நாங்கள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம்.
ஆனால் தற்போது உள்ள மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் சொற்பேச்சைக் கேட்பது இல்லை. மதிக்காமல் அவமரியாதை செய்கிறார்கள். சீருடையில் மாணவர்கள், மாணவிகள் மது அருந்துவது கலாசார சீரழிவு. இந்த வீடியோ பதிவுகளை பார்க்கிற போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
ஏழை-எளிய பெற்றோர்கள் நம் பிள்ளை நம்மைப்போன்று கஷ்டப்பட கூடாது. நன்கு படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதை மாணவர்கள் உணர்ந்து நல்லொழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்வில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமலிங்கம்:- தமிழகத்தில் போதைப்பழக்கம் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை பொறுத்தமட்டில் தமிழனாக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி சாக்லெட் போன்ற வடிவில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனை மாணவர்கள் சர்வ சாதாரணமாக பகிர்ந்து கொள்கின்றனர். போதைப்பொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சொல்லி வருகின்ற அதே வேளையில் எப்படி போதை பொருட்கள் மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. டாஸ்மாக் கடைகளில் யார் வேண்டுமானாலும் மது வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது, ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே மதுபானம் வழங்குவது, டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது போன்ற கடுமையான விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன்:- இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.
- மாணவர்களிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும் போது, 'மாவட்டத்தில் தாலுகா வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம்' என்றார்.
இதில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார், நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார், சேர்மன் ரவி கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 -ம் கல்வியாண்டில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.
- சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான்.
- போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம்.
- தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது. அப்படி இருந்தும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியவில்லையே.
நாளைய எதிர்காலம் என்று நம்பும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கைகளிலும் போதை பொருட்கள் விளையாடுகிறதே!
சில குறிப்பிட்டவகை மாத்திரைகள் போதை தருகிறது என்று கூறி அதுபோன்ற மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து அதை பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
இதுபோன்ற சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக பணத்தேவை ஏற்படும் கல்லூரி மாணவர்களிடம் நெருங்கி பழகி, அவர்களுக்கு மது, கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அவற்றுக்கு அடிமையாகும் அப்பாவி மாணவர்களை, தங்களது போதைப்பொருள் வியாபார முகவர்களாக மாற்றி விடுகிறது இந்த கும்பல்.
இதுபோன்ற மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களிடமும் தங்களது போதை பொருட்களை விற்க தொடங்குகிறார்கள். இதற்காக மாணவர்கள் மத்தியில் தனியாக வாட்ஸ்-அப் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பல வாட்ஸ்-அப் குழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
போலீசார் நடவடிக்கை எடுக்கும்போது அதில் அப்பாவி மாணவர்களும், சிலரும்தான் கைதாகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சமூக விரோத கும்பல் தப்பி விடுகிறது. போலீசாரும் கிடைத்தவர்களை கைது செய்துவிட்டு, அத்துடன் வேறு பணிகளுக்கு சென்று விடுகிறார்கள்.
கல்லூரி நிர்வாகங்களும் தங்களது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, போதை என்னும் படுகுழியில் வீழ்ந்து விடாது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் சில மாணவர்களால் அந்த கல்வி நிறுவனங்களுக்கும் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே கல்வி நிறுவனங்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அதுபோல போதைப்பொருட்கள் ஒழிப்பில் பெற்றோர்களும் இதில் பெரும் பங்கெடுக்க வேண்டும். போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம். எனவே தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
அவர்கள் பாதை மாறுவதுபோல் இருந்தால், அவர்களிடம் அன்பாய் பேசி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.
சில நிமிட போலியான இன்பத்துக்கு, பொன்னான வாழ்வை, உயிரை இழக்க வேண்டாம்.
- மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது.
- மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது.
ஒரு கட்டிடத்தின் அடித்தளம் வலுவாக இருந்தால் அந்த கட்டிடமும் வலுவானதாக இருக்கும். பலவீனமான அடித்தளம் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை பாதித்துவிடும். அதேபோல் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் மாணவப் பருவமே அவர்களுடைய எதிர்காலத்துக்கான அடித்தளம். அந்த அடித்தளம் நன்றாக அமைந்தால் அந்த மாணவன் வருங்காலத்தில் தன்னுடைய முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும்.
ஆனால் சமீபகாலமாக மாணவர் சமுதாயத்தை பேராபத்து சூழ்ந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. படிக்கிற காலத்திலேயே போதைப்பழக்க வழக்கங்களில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கிற பள்ளி மாணவர்களின் பைகளை சோதித்தால் போதை வஸ்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது மேலும் ஒரு படி மேலே போய் மாணவர்கள் சிலர் போதை மாத்திரைகளை உட்கொள்ளவும், போதை ஊசிகளை செலுத்தி கொள்ளவும் தொடங்கியுள்ளனர்.
மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது. பெற்றோர்கள் இதை உணர்ந்து தங்களது பிள்ளைகளை தற்காக்க விழித்து கொள்ள வேண்டிய காலம் இது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கருமண்டபம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்றதாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, உறையூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போதைமாத்திரை விற்ற அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இந்த சமூகவிரோத கும்பல் கல்லூரி மாணவர்களை இலக்காக வைத்து தங்களது வியாபார சந்தையை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரியில் படிக்கும் ஏதாவது ஒரு மாணவனிடம் நட்பை வளர்த்து கொண்டு அந்த மாணவன் மூலமாக மற்ற மாணவர்களிடம் போதைமாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள். அதற்கான பணத்தை ஆன்லைன் மூலமாக ஒரு குறிப்பட்ட எண்ணுக்கு செலுத்தியபிறகு தான் போதைமாத்திரைகள் அந்த மாணவர்களுக்கு சென்று சேரும்.
ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடுகிறது. ஒருகாலகட்டத்தில் படிக்கிற வயதில் சிகரெட் புகைத்தாலே, மதுகுடித்தாலே மிகப்பெரிய தவறு என்று இருந்த காலம் மாறி, தற்போது போதைமாத்திரை, போதை ஊசி என சர்வ சாதாரணமாக மாணவ சமுதாயத்துக்குள் உட்புகுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை ஒரு கும்பல் பாழ்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாவும் தலையெடுப்பார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.
இத்தகைய சூழலிலும் பெற்றோருக்கு அஞ்சி, ஆசிரிய பெருமக்களுக்கு அஞ்சி படிப்பில் கவனம் செலுத்தி போட்டி மிகுந்த உலகில் சாதிக்க துடிக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மாணவர்களையும் தீய நண்பர்களின் சகவாசம் கெடுத்துவிடுகிறது. மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது. பணத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற சமூகவிரோத கும்பல்களை பொறி வைத்து பிடித்து காவல்துறையினர் தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சுய ஒழுக்கம்
சவுராஷ்டிராதெருவை சேர்ந்த வக்கீல் சுதர்சன்:-
ஒவ்வொரு தனிமனித ஒழுக்கம் என்பது தற்போது உள்ள இளையதலைமுறையினரிடம் கெட்டுப்போய் கிடக்கிறது. போதை மாத்திரைகளை விற்கும் தனிப்பட்ட நபர்களின் சுயலாபத்துக்காக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகிறது. கல்லூரிகளில் நடக்கும் ஆண்டுவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மாணவர்களிடையே போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படித்து, சமூகத்தில் பெரிய அந்தஸ்துக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் மாணவர்களோ பிறந்தநாள் கொண்டாட்டம் என சில தீய நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வ நம்பிக்கையுடன்கூடிய தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பெற்றோர்களுக்கு கவனம் தேவை
எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சமூகஆர்வலர் குமார்:-
முதலில் பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆசிரியர்களும், போலீசாரும் பார்த்து கொள்வார்கள் என்றால் நமக்கான பொறுப்பு என்ன? என்பதை பெற்றோர் உணர வேண்டும். ஒரு மாணவன் தவறான பாதையில் செல்வதற்கு பெற்றோரின் கவனக்குறைவே முக்கிய காரணம். ஒவ்வொரு மாணவனின் பின்னாலும் தனித்தனி போலீஸ் வர முடியாது. பிள்ளைகள் வளர, வளர பெற்றோர், தம்பி, தங்கை பாசம், குடும்ப உறவுகளை மறந்து, கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கை என யோசிக்க தொடங்குகிறார்கள். தீயநண்பர்களுடன் சேர்ந்து அருவருப்பான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பீடி புகைப்பதையே பயந்து, பயந்து செய்து வந்தாா்கள். இப்போது அதையும் தாண்டி போதை மாத்திரை, போதை ஊசி என எந்தெந்த வகையில் எல்லாம் போதை கிடைக்கிறதோ? அதை தேடி சென்று விடுகிறார்கள். பெற்றோர் தட்டிக்கேட்டால் அவர்களை தாக்கும் அளவுக்கு போதை கண்ணை மறைத்துவிடுகிறது.
விளையாட்டின் தனித்தன்மை
முன்னாள் சர்வதேச தடகளவீரர் அண்ணாவி:-
பிள்ளைகளை விளையாட வைத்தால் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டுவிடுவார்கள். விளையாட்டு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர் எப்போதும் தன்னை உடல்ரீதியாக தகுதியாக வைத்து கொள்வார். அது தான் விளையாட்டின் தனித்தன்மை. ஆனால் இப்பேதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட, மதிப்பெண்கள் மீது தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தற்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒரு சில மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து மீண்டும் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டி உள்ளது. தற்போது போதை சாக்லேட் அதிகமாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. மாணவர்கள் விஷயத்தில் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டை ஊக்குவித்தால் போதைப்பழக்கத்தில் இருந்து நிறைய இளைஞர்களை காப்பாற்ற முடியும்.
தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்
திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) ஸ்ரீதேவி:-
போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க அரசு உத்தரவின்பேரில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திடீர் சோதனைகளை நடத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாரத்தான், வாகன பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம். இது தவிர, பள்ளிகளில் மாணவர்களிடம் போதைப்பழக்கம் குறித்த நடவடிக்கை தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த பள்ளிகளில் கமிட்டி ஆரம்பித்து போலீசாருடன் கலந்து ஆலோசிக்கவும் கூறி உள்ளோம்.
போதை மாத்திரைகள் விற்பனை குறித்து தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம். போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தனிப்படை போலீசார் அந்த கும்பலை பிடிக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் மாணவர்களிடம் இதுபோன்ற தீய பழக்கங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க பெற்றோரும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகம் இணைத்து ஒத்துழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.