என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire Department"

    • அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது.
    • ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் இருந்து கயிறு மூலமாக ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    • பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி கர்நாடகா அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே இன்று மதியம் வந்தபோது தேசிய நெடுஞ்சாலை குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடக்க முயன்றனர்.

    அப்போது கர்நாடகா அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் மோதியதால் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 2 பேரும் உடல் கருகி இறந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சும் தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறினர். பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.

    இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்து சீரமைத்தனர்.

    இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.எஸ். 4 கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி 66 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.
    • பாளை தீயணைப்பு நிலைய வளாகத்தில் இன்று தீயணைப்பு வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.

     நெல்லை:

    நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் மாவட்ட அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ். 4 கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில் மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் அதில் பலியாகினர். இவர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி உயிர்நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பாளை தீயணைப்பு நிலைய வளாகத்தில் இன்று தீயணைப்பு வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். இதையொட்டி, மும்பையில் பலியான 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக நினைவு ஸ்தூபி அமை க்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தமிழக வீரர்கள் 33 போ் உட்பட வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் அனைத்து தீயணைப்பு வீரர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா உட்பட தீயணைப்பு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
    • வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது.

    வெள்ளகோவில் :

    தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில், நாட்ராய சாமி கோவில் வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவில் செயல் அலுவலர் திலகவதி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் முன்பு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான , எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழ ந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. சமையல் முடிந்தவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கேஸ் பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடி விட வேண்டும்.

    வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்க கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக் கூடாது. பொதுமக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தித் துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்பநிலையில் அணைக்க தீதடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காண்பிக்கப்படும் என வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

    • தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
    • டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ரெயில்வே என்ஜினியர்கள் பயன்படுத்தும் சிறப்பு ரெயில் ஒன்று பெட்டா ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    7-வது பிளாட்பாரத்தின் முடிவில் லூப் லைனில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று இரவு 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென புகை வந்தது.

    ரெயில் பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஏலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் ரெயில் பெட்டி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் டீசல் நிரப்பப்பட்ட 10 டிரம்கள், பேட்டரிகள், மின் ஒயர்கள், தண்டவாள பராமரிப்பு பணிக்கான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் டீசல் டிரம்களில் தீப்பிடித்து எரியவில்லை. டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    அதிக வெப்பம் காரணமாக ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டு இருந்த ஒயர்கள் கருகி ஒன்றுடன் ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் குற்றச்சாட்டு
    • கால தாமதத்தால் பல நிறுவனங்கள் புதுவை மாநிலத்தை விட்டு வெளி யேறும் நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆபத்தில் இருக்கும் குடிமக்களை மீட்க எப்போதும் தயாராக தீயணைப்பு துறை இருக்க வேண்டும்.

    இந்நிலை மாறி மக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் துறையாக மாறி வருகிறது. கட்டிடங்களுக்கு அனுமதி தரும் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சுயநலமாக செயல்படுகின்றனர். தொழில் தொடங்க அனைத்து துறை அனுமதி கொடுத்தாலும் தீயணைப்பு துறை இழுத்தடிக்கிறது.

    கால தாமதத்தால் பல நிறுவனங்கள் புதுவை மாநிலத்தை விட்டு வெளி யேறும் நிலை உள்ளது.

    பல கட்டிடங்கள் கட்டப்பட்டு அனுமதி வழங்கப்படாததால் திறக்கப்படாமல் உள்ளது. கட்டிட அளவை மீறி உபகரணங்கள், அவர்கள் கூறும் நிறுவனத்தில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.

    கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்து தீயணைப்பு துறையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நட வடிக்கை எடுக்கா விட்டால் தீயணைப்பு துறை முன்பு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • 62 பணியிடங்களை நிரப்ப கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • காலி பணியிடங்களில் ஒரு பெண் எஸ்.ஐ, ஒரு பெண் நிலைய அதிகாரி, 16 பெண் தீயணைப்பு வீராங்கணைகள் என 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 62 பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் சாய்சரவணக்குமார் அறிவித்தார்.

    இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்புக்கு அனுமதியளித்து உள்ளார். தலைமை செயலர், துறை செயலர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    தீயணைப்பு துறையில் காலி பணியிடங்களில் ஒரு பெண் எஸ்.ஐ, ஒரு பெண் நிலைய அதிகாரி, 16 பெண் தீயணைப்பு வீராங்கணைகள் என 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் முதல் முறையாக பெண்களுக்கு தீயணைப்பு துறையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான கோப்பு நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகும்.

    • அரசமரம் ஏரி நீர்நிலை பகுதியில் பொதுமக்கள் குளிப்பது துணிகள் துவைப்பது மாணவர்கள் நீர்நிலை பகுதிக்கு செல்ல கூடாது
    • வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டூர்:

    ஜலகண்டாபுரத்தில் பருவமழை பெய்து வருவதால் ஜலகண்டாபுரம் ஏரியில் நங்கவள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் அரசமரம் ஏரி நீர்நிலை பகுதியில் பொதுமக்கள் குளிப்பது துணிகள் துவைப்பது மாணவர்கள் நீர்நிலை பகுதிக்கு செல்ல கூடாது என்றும் நீர்நிலையில் தவறி விழுந்தவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார்.
    • உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.

    இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    • நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
    • கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் வீரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிறகு, தீயணைப்பு பணியாளர்களால் வெள்ள அபாய பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, தீப்பற்றிய இடத்தில் இருந்து மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் காட்டு தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், அபாய வெள்ள பேரிடர் காலத்தில் எவ்வாறு தத்துரூபமாக காப்பாற்ற வேண்டும் என்று செயல்முறை விளக்கமாக பயிற்சியளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தீயணைப்பு மாவட்ட அலுவலர், திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன், திருப்பூர் மாவட்ட தீயணைப்பு பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவச் செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, மதுகார்த்திக், செர்லின், தினேஷ்கண்ணன், சபரிவாசன் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார்
    • சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த சின்ன பொன்னம்பூண்டி யை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார். அதை பொதுமக்களுக்கு தெரிவிக்க பொதுமக்கள் செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று ராமசாமி யின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.

    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர் இதில் கிராம மக்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் நிலையை எழுத்தர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

    ×