என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injure"

    மணமேல்குடி அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் டிரைவர் படுகாயமடைந்தார்.
    மணமேல்குடி:

    தூத்துக்குடியிலிருந்து, காரைக்காலுக்கு கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை முரளிதரன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது காரக்கோட்டை பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, குறுக்கே மாடு ஒன்று சென்றது. இதனால் மாடு மீது லாரி மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி, டிரைவர் முரளிதரன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்திற்குள்ளான லாரியில் இருந்த கிரானைட் கற்கள் அனைத்தும் மாற்று லாரி மூலம் காரைக் காலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ராயக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது கருக்கனஹள்ளி. இங்கிருந்து மின் கம்பங்களை ஏற்றிக் கொண்டு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பிள்ளாரி அக்ரஹாரம் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த டிராக்டர் பிள்ளாரி அக்ரஹாரம் பக்கமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கும்மனூர் அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்த முனியப்பன், பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த தனபால் (42), சிதம்பரம் (24), சென்னப்பன் (25), சைமன் (25), ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டிநாயக்கனஅள்ளியை சேர்ந்த சுரேஷ் (22), முகலூரை சேர்ந்த மூர்த்தி (25) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கங்கைகொண்டானில் மினி வேன் கவிழ்ந்ததால், 2 பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கயத்தாறு:

    மதுரையில் இருந்து மசாலா பாக்கெட் பண்டல் லோடு ஏற்றிய மினி வேன் நேற்று காலையில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தது. 9.30 மணியளவில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இசக்கி அம்மன் கோவில் அருகில் உள்ள வளைவில் நாற்கர சாலையில் வந்தபோது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    அப்போது மினி வேனின் பின்னால் அரசு விரைவு பஸ் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை நெல்லையை சேர்ந்த சுப்பையா (வயது 52) ஓட்டி வந்தார். மினி வேன் கவிழ்ந்ததை பார்த்ததும், டிரைவர் சுப்பையா பஸ்சை உடனே நிறுத்தினார்.



    அப்போது அந்த அரசு விரைவு பஸ்சின் பின்னால் மதுரையில் இருந்து நெல்லைக்கு மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் அமர்நாத் (48) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக பரமசிவம் (43) இருந்தார். அரசு விரைவு பஸ் திடீரென்று நின்றதும், டிரைவர் அமர்நாத் ஓட்டி வந்த பஸ்சை உடனே நிறுத்த முயன்றார். ஆனால் அரசு விரைவு பஸ்சின் பின்புறமாக அந்த பஸ் பயங்கரமாக மோதியது.

    இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்களை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்தது. அந்த காரை விருதுநகரை சேர்ந்த பாண்டி மகன் சுந்தர் (29) ஓட்டி வந்தார். அவர் விபத்துக்குள்ளான பஸ்களின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபுறமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறிய கார், நாற்கர சாலையோர தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு பாய்ந்து நின்றது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் மதுரையில் இருந்து வந்த பஸ்சின் டிரைவர் அமர்நாத், கண்டக்டர் பரமசிவம் மற்றும் அந்த பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த பழனிவேல், நவநீதகிருஷ்ணன், மோகன், கோவில்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும், கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 20 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மினி வேன், கார், அரசு விரைவு பஸ்சில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை வடலூரை சேர்ந்த ஜோதிவேல் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். கச்சிராபாளையத்தை சேர்ந்த சரவணன்(44) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பஸ் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் ஒருபுறமும், தனியார் பஸ்சின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்து உருக்குலைந்து காணப்பட்டது.



    இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்தவர்கள் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்தனர். இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மனைவி காதர்பீவி (34) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.

    மேலும் சாகுல் ஹமீது, அவரது மகள் ஆப்ரின் பாத்திமா(12) மற்றும் அவர்களுடன் பயணம் செய்த உறவினர்களான நஸ்ரின்பானு(28) அவரது குழந்தை ராஹிபா (2) மற்றும் ஷேக் பாதுஷா(45) அவரது மனைவி ஹசீனா பேகம் (38) ஆகியோரும், ராஜமன்னார்குடியைச் சேர்ந்த பொதியப்பன் மனைவி ஜெயலட்சுமி (38) சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சங்கரமூர்த்தி (48) திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி (38), தா.பழூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி (40) காட்டுமன்னார்குடி சம்பத் மகள் ராஜபிரியா (24), அவரது தங்கை அறிவுக்கரசி (19), அரசு பஸ் டிரைவர் ஜோதிவேல், கண்டக்டர் சரவணன், தனியார் பஸ் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த ராமமூர்த்தி (38) ஆகிய 15 பேரும் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த காதர்பீவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மீட்பு பணி முடிந்ததும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 15 பேரையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு, அவர்களிடம் நலம் விசாரித்தனர். விபத்தில் மனைவியை பறிகொடுத்த சாகுல் ஹமீதுக்கும் அவர்கள் ஆறுதல் கூறி விட்டு, விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து படுகாயமடைந்த 15 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர்.
    பனைக்குளம்:

    திருவண்ணாமலை மாவட்டம் போலூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.இந்த வேனை டிரைவர் சதீஷ் என்பவர் ஒட்டினார். நேற்று காலை மண்டபம் கடற்கரை பூங்கா அருகே வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசகாய சேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேனுக்குள் பழனி (வயது75), கலைச் செல்வி (35), சங்கரி (35), காயத்ரி (15) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மண்டபம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
    கூடலூரில் தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    கூடலூர்:

    ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன. இங்குள்ள மலைப்பாதைகளில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தி வருகின் றனர். மேலும் அதுகுறித்த விழிப்புணர்வு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகள் அதனை பின்பற்றுவது இல்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கூடலூர் நகரில் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சாலையின் நடுவில் கான்கிரீட் தடுப்புகளை போலீசார் அடுக்கி வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கோழிக்கோடுக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையத்தை கடந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி மற்றும் 14 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து போலீசார் காரை மீட்டனர். இதையடுத்து விபத்து குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருச்சி போலீசார் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குமரி மாவட்ட கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். குமரி கியூ பிராஞ்ச் போலீசார் இலங்கைத் தமிழர்கள், இலங்கை அகதிகள் உள்பட 13 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மீதான வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போதெல்லாம் 13 பேரும் திருச்சியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவது வழக்கம்.

    இதேபோல் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சீலன் என்ற குணசீலன், கோபிநாத், தயாகரன், குருவிந்தன், தர்ஷன், சத்தியசீலன், ராபின் பிரசாத், தயானந்தன், காந்தரூபன், பிரபாகரன், சுதர்சன், அய்யா என்ற அருள் இன்பத்தேவர், யோககுமார் ஆகிய 13 பேரும் போலீஸ் வேனில் திருச்சியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இவர்களின் பாதுகாப்புக்காக திருச்சி மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன், ஏட்டு பன்னீர்செல்வம், போலீஸ்காரர்கள் சங்கர், மோகன்தாஸ், எழில்குமார், சரத்குமார், ரீகன், சிவகுமார், பிரபாகரன் ஆகிய 10 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு அளித்து 13 பேரையும் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர்.

    நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பால வேலைகள் நடைபெறுவதால் இலங்கை அதிகள் வந்த வேன் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், பூதப்பாண்டி, இறச்சகுளம் வழியாக களியங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. மதியம் 12 மணி அளவில் இறச்சகுளத்துக்கும், அழகன்கோணம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வேன் சென்றபோது எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை சாலையோரமாக ஒதுக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலை ஓரத்தில் வயல்கள் அமைந்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த 10 போலீசாரும், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 13 பேரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாகரகோவில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பிரபாகரன் என்ற போலீஸ்காரர் ஆகிய 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். மற்ற 7 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

    அகதிகள் உள்ளிட்ட 13 பேரில் காந்தரூபன், யோககுமார், குருவிந்தன், அருள்இன்பதேவர், பிரபாகரன், சத்தியசீலன், தயாகரன், தயானந்தன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 5 பேர் லேசான காயம் அடைந்தனர். விபத்து நடந்த விவரம் இரணியல் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    பின்னர் குமரி மாவட்ட போலீஸ் பாதுகாப்புடன் மாற்று வாகனம் மூலமாக திருச்சி போலீசாரும், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 12 பேரும் நேற்று மாலை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் அருள் இன்பத்தேவர் மட்டும் சிகிச்சை முடிந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். 
    திருவாரூர் அருகே மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள எருக்காட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது40). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் ஆலத்தாங்குடியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவருடைய மனைவி செல்வி, செல்வேந்திரன் மகள் தீபிகா (3) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கமலாபுரத்தில் இருந்து கண்கொடுத்தவனிதம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலவாய் பண்ணைக்குளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நீலனூரை சேர்ந்த சுரேஷ் (32), ஆட்டோவில் பயணம் செய்த சிறுமி தீபிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீபிகா திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுரேசுக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கிருஷ்ணன் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    போலீஸ் ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் ஜீப்பில் நேற்று நள்ளிரவு மாதனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜீப்பை அருண்குமார் ஓட்டினார். மாதனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக போலீஸ் ஜீப் மீது மோதியது.

    இதில் சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடத்தை சேர்ந்தவர் விவேகானந்த் என்ற ஆனந்த் (வயது 32). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் மீண்டும் வெள்ளமடம் நோக்கி சென்றார். தேரேகால்புதூரில் திரும்பியபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், விவேகானந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. மற்றொரு மோட்டார் சைக்கிளில் பெருவிளையை சேர்ந்த 2 தொழிலாளர்கள் வந்தனர்.

    இந்த விபத்தில் 4 பேரும் ரோட்டில் விழுந்து காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இவர்களில் விவேகானந்த் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விவேகானந்த் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கபிஸ்தலம் அருகே தனியார் பள்ளி வேன், வயலில் கவிழ்ந்தது. இதில் 14 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
    கபிஸ்தலம் :

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே பாபநாசத்தில் ஒரு தனியார் கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த பள்ளி மாணவர்களை அழைத்து வர பள்ளி நிர்வாகம் சார்பில் வேன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை பட்டவர்த்தி கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள் 14 பேரை ஏற்றி கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்து தாறுமாறாக ஓடிய வேன் அந்த பகுதியில் இருந்த ஒரு வயலில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வேனில் இருந்த மாணவ-மாணவிகளை மீட்டனர்.

    இந்த விபத்தில் மாணவ-மாணவிகள் 14 பேரும் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 
    விக்கிரவாண்டி அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
    விக்கிரவாண்டி:

    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நெல்லை மாவட்டம் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மகேந்திரபிரபு(வயது 34) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நெல்லை கரிக்குளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ்(38) என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென வலதுபுற சாலையில் திரும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது.

    இதில் பஸ் டிரைவர் மகேந்திரபிரபு, கண்டக்டர் சுந்தர்ராஜ் மற்றும் பயணிகள் 3 பேர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்ராமன், கலியமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலத்த காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே விபத்துக்குள்ளான லாரி மற்றும் அரசு பஸ்சை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து பஸ் கண்டக்டர் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×