search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Homes"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.
    • இன்னும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகரில் பொதுவாக குறுகிய சாலைகளும், 3 அடிக்கும் குறைவான தெருக்களும் அதிகம் உள்ளன. அத்தகைய இடங்களில் உள்ள பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இயற்கைச் சீற்றங்களினால் இடிந்து விழும் சூழ்நிலையில் அவற்றை இடித்துவிட்டு புதிய கடைகள், வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி தருவதில்லை. மின் இணைப்பும் தருவதில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

    புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.

    எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு கேட்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வலியுறுத்தியும் கிடைக்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து, 18.11.2022 அன்று நகர்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநர், நாகர்கோவிலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர், நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர், இதுமற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    அவ்வாறு உறுதி அளிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்னரும், மேல் நடவடிக்கை ஏதும் இல்லை.

    இதுபற்றி சட்டமன்றக் கூட்டத் தொடரில் 11.4.2023 அன்று, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரான, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    அப்போது பதில் அளித்துப் பேசிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். உறுதி அளித்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை.

    எனவே, நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ள திட்ட அனுமதி பிரச்சினைகளை சரிசெய்து, உடனடியாக கட்டிட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க விரிவான அரசாணையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த அரசாணை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கும் பொருந்தும் படியான உத்தரவாக வெளியிட்டு ஒரு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×