என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priest"

    • திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
    • கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.

    ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

    கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

    கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
    • கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில், கோவில் வளாகத்தில் தலித் தம்பதியினரின் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..

    மார்ச் 5 ஆம் தேதி அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு அவர்களை சாதி ரீதியாக திட்டியுள்ளார். இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

    கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மணமகளின் தந்தை மார்ச் 12 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்ததுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக நாகராஜ் என்பவர் இருந்தார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பக்தர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

    நாகராஜ் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்ததுள்ளார். மேலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி, அதன் மூலமும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும்.
    • 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கிராமங்களில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வார் பேரவை, பூ கட்டுவர் பேரவையின் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட அமைப்பாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனை எந்த நிபந்தனையும் இன்றி மாதம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன், கருணாகரன், பிரபாகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோயில் பூசாரி பேரவை ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    • புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில், 49 வயதான பாதிரியார் ஒருவர், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதிரியாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
    • பெண்களை மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக ஸ்டான்லி குமார் (வயது 49) என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவர் மீது ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    போதகர் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அந்த பெண் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

    சர்ச்சுக்குள் அதிநவீன சுழலும் வீடியோ-ஆடியோ பதிவுகளுடன் கூடிய காமிராக்களை பொருத்தி உள்ளார். அதன் மூலம் சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து பல பெண்களின் புகைப்படத்தினை மார்பிங் செய்து வைத்துள்ளதாக மிரட்டி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோ க்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஸ்டான்லி குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆலயத்திற்கு வந்த பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது பெண்களை மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஸ்டான்லி குமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் ஆகும்.

    குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் போதகர் பாலியல் புகாரில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.
    • சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் புல்லெட்டி குரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இந்த கிராமத்தில் விஜயவாடாவை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தேவாலயம் நடத்தி வருகிறார். 17 வயது சிறுமி அடிக்கடி தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்று வந்தார்.

    சிறுமியிடம் நைசாக பேசிய பாதிரியார் பணம் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் வயிறு பெரியதாக தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பாதிரியாரிடம் கேட்டபோது சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    நிறை மாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி அமலாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என எண்ணிய பாதிரியார் பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

    இந்த விஷயம் குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவிக்ககூடாது என சிறுமியை மிரட்டி உள்ளார். குழந்தையை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை சிறுமியின் உறவினர்களுக்கும் மற்றும் பிரச்சனை நடத்தும் நபர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கும் கொடுத்தார்.

    இந்நிலையில் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து கலெக்டர் ஹிமான்ஷி சுக்லாவிடம் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க அமலாபுரம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    போலீசார் தலை மறைவாக உள்ள பாதிரியாரை தேடி வருகின்றனர்.

    • புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதாஸ். இவர் தற்போது இன்னாசியார்புரத்தில் உள்ள பாதிரியார்கள் ஓய்வு இல்லத்தில் தங்கி உள்ளார். இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மதுக்கடைகளை மூடுவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் இதுவரை மூடப்படவில்லை. மேலும் கூடுதலாக மதுக்கடைகளை திறந்துவிட்டனர்.

    புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் மதுக்கடைகள் மூடப்படவில்லை. மேலும் கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பொன்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதாக தெரிகிறது.

    அவ்வாறு அழைத்தால் பா.ஜ.க., அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி போன்ற அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி சார்புடையவர்களாக பொருளாகிவிடும். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதில் உறுதியாக இருந்தால் அப்படிப்பட்ட கிறிஸ்துவர்களை நம்புவதை விட பா.ஜ.க.வை நம்புவதே மேல் என முடிவு செய்து குருக்களிலேயே கொள்கை உறுதி கொண்ட நாங்கள் பொன்விழா நேரத்திலேயே அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக பாதிரியார் அமலதாஸ் கூறியதாவது:

    தூத்துக்குடி மறைமாவட்ட பொன் விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டும் அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை நான் எதிர்க்கிறேன்.

    கிறிஸ்தவ மதம் அனைவருக்கும் பொதுவானது. எனவே இந்த விழாவிற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
    • ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.

    கடந்த ஜனவரி மாதம் 80 வயது முதியவர் ராம் சரன் தாஸ் காணாமல் போன வழக்கில் போலீசார் ராம் சங்கர் தாஸ் மீது சில தினங்களுக்கு முன்பு தான் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம் சங்கர் தாஸ் இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.

    இதனால் ராம் சங்கர் தாஸ்-ஐ தேடிய போலீசார், அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது ராம் சங்கர் தாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    மேலும் தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ராம் சங்கர் தாஸ், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் கான்ஸ்டபில் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா கூறும் போது, "பூசாரி ராம் சங்கர் தாஸ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதை பழக்கம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் போலீசார் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்," என்று தெரிவித்தார்.

    மேலும், இரண்டு நாட்களாக விசாரணைக்கு ராம் சங்கர் தாஸ் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்குள் சென்றோம். அங்கு அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.

    • அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.
    • கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் சாய் கிருஷ்ணா ஷரூர்நகர் பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்சராவுக்கும் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதில், அப்சரா கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர், சாய் கிருஷ்ணாவின் வற்புறுத்தலால் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

    மேலும், அப்சரா சாய் கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுல்தான்பல்லி பகுதியில் உள்ள பசு கொட்டகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அங்கு, திருமணம் குறித்து அப்சரா பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை அடித்து தாக்கியுள்ளார். பின்னர், அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.

    தொடர்ந்து, சாய் கிருஷ்ணா அப்சராவை காணவில்லை என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் அப்சராவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து, கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர். பூசாரி செய்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
    • பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார்.

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப் பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே அவர்களை கைது செய்யவும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42) .இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பணியிலிருந்த அர்ச்சகர் ஞானசுந்தரம் மந்திரங்கள் கூறுவதற்காக மைக்கை கையில் எடுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஞானசுந்தரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×