search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "problem in flyover work"

    • பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.

    தாம்பரம்:

    சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று உள்ளன. இதனால் இங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகன போக்கு வரத்திற்கு முக்கியமான சாலையாக உள்ளது.

    தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் முக்கிய சந்திப்பு இடமாக உள்ள பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை துறையும், ரெயில்வே நிர்வாகமும் இணைந்து திட்டமிட்டது.

    அதன்படி பெருங்களத்தூர் ரெயில்நிலையத்தின் இரு பக்கங்களிலும் இருந்த, எல்.சி.32, எல்.சி.33 ரெயில்வே கேட்டுகளை, நிரந்தரமாக மூடிவிட்டு, அந்த இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக முதலில் கடந்த 2000-ம் ஆண்டில் ரூ.86 கோடி ஒதுக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்தன. நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த பணி ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது.

    பின்னர் கடந்த 2018-ம் ஆண்டில் மீண்டும் மேம்பாலப் பணி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.236 கோடியில் புதிதாக திட்டம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பெருங்களத்தூரில் முட்டை வடிவில் ரவுண்டானாவுடன் கூடிய பிரமாண்டமான மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த மேம்பாலம் பெருங்க ளத்தூர், பீர்க்கன்கரணை, சதானந்தபுரம், நெடுங்குன்றம், மற்றும் வண்டலூர், தாம்பரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

    செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கமாக, வண்டலூரில் இருந்து பீர்க்கன்கரணை ஏரிக்கரை வரையில், மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு அந்த பாதை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக மேம்பாலத்தின் மேற்குப் பகுதியான, ெரயில்வே பாதையை கடந்து, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்தூர் வழியாக, காமராஜ் நெடுஞ்சாலையில் இணையும், மேம்பால பணி தீவிரப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது. அந்த மேம்பாலப்பாதை கடந்த ஆண்டு(2023) ஜூன் மாதம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    மேம்பாலத்தின் 3-வது கட்டமான தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள மேம்பால பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் தாமதமானது.

    தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமான மேம்பால ப்பணியும் முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது. எனவே இந்த பாதை அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதத்தில் 2 வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பெருங்களத்தூர் மேம்பாலத்தில் கடைசியாக உள்ள 4-வது கட்டமான கிழக்குப் பகுதியில் இருந்து சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் அமைப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதில் வனத்துறை நிலம் குறுக்கிடுவதால், பணிகள் தாமதம் அடைந்துள்ளது.

    மேலும் அப்பகுதியில் உள்ள பெருங்களத்தூர் துணை மின் நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அந்தத் துணை மின் நிலையத்தை முழுமையாக இடமாற்றம் செய்தால் தான் மேம்பாலப்பணியை தொடர முடியும் என்ற சிக்கலும் ஏற்பட்டு உள்ளது.

    துணை மின்நிலை யத்திற்கான மாற்று இடம் அமைவதில் பிரச்சி னைகள் ஏற்பட்டு உள்ளதால் மேம்பால பணிகள் முடங்கிப் போய் நிற்கிறது.

    இப்போது புது பெருங்களத்தூர் நேதாஜி சாலையில், மின்வாரிய துணை மின் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிகிறது.

    இதைப்போல் மின்வாரிய அலுவலகத்தையும் முழுவதுமாக இடமாற்றம் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மின்வாரியத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பெருங்களத்தூர் துணை மின் நிலைய அலுவலகம் வருகிற 8 மாதத்திற்குள் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதன் பின்னர் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெருங்களத்தூர் மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, `பெருங்களத்தூர் மேம்பாலத்தின் இறுதிக்கட்டமான மேற்குப் பகுதியில் சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளை இணைக்கும் மேம்பால பணி, தற்காலிகமாக தடைப்பட்டு நிற்கிறது.

    வனத்துறை நிலம் குறுக்கீடு, துணை மின்நிலையம் இடமாற்றம் அதற்கு காரணமாக இருந்தது. அதில் துணை மின் நிலையம் இடமாற்றப் பணிகள், டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்கி விட்டது. துணை மின் நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இதைப்போல் வனத்துறையிடம் நிலம் பெறுவதில், மாநில மத்திய அரசுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து முடியும் நிலையில் உள்ளன. மேம்பால பணியை விரைந்து முடித்து முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    பொதுமக்கள் கூறும்போது, `பெருங்களத்தூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். மேம்பாலத்தின் 4 கட்ட பணிகளும் முடிந்து மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு முழுமையான பலன் கிடைக்கும்' என்றனர்.

    ×