search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "production hall"

    • கருட விநாயகர் என 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடி என 5 வகையில் தயாராகி உள்ளது.
    • மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர்:

    வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக திருப்பூரில் சில இடங்களில் மும்முரமாக நடந்து வந்தது. சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளதையடுத்து அந்தந்த பகுதிகளுக்கு லாரிகள் , வாகனங்கள் மூலம் சிலைகள் அனுப்பப்பட்டு வருகிறது.வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில் அனுமன் தூக்கி செல்வது போல், ரத விநாயகர், சிம்மவாகனம் விநாயகர், யானை வாகனம், ஆஞ்சநேயர் விநாயகர், கருட விநாயகர் என 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடி என 5 வகையில் தயாராகி உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இதில் திருப்பூரில் 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளது.கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ளதால் பிரம்மாண்டமாக நடத்த இந்து முன்னணியினர் திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பூரில் செப்டம்பர் 3-ந் தேதி விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. மேலும் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்பில் இந்து முன்னணியினர் கொண்டாடுகின்றனர்.

    இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள இடங்கள், விஜர்சனம் ஊர்வலம் நடக்கும் ரோடு உள்ளிட்டவற்றை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சில நாட்களுக்கு முன் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து அமைப்புகளுக்கு பல்வேறு அறிவுரை தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பான முறையில் சிலைகளை வைக்க வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உட்பட முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் நடப்பதால் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக மற்ற மாவட்டத்தை சேர்ந்த போலீசாரை பணிக்கு அழைக்க உள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை உள்ளிட்டவை முடிவு செய்யப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.  

    ×