என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rise"

    • வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
    • மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

    வெள்ளக்கோயில்:

    வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

    அங்கு இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 46, செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 42, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
    • தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமத்தியைச் சேர்ந்த துரையன் கூறியதாவது:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் பகுதியில் தயார் செய்யப்படும் பொரிக்கு, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.பொரி தயாரிப்பதற்கான கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் வாங்கி வந்து பின் அதை ஊறவைத்து அரிசியாக எடுத்து பெரி தயார் செய்து வந்தோம்.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகளே நேரடியாக அரிசியாக கொண்டு வந்து பொரி தயாரிக்கும் எங்களிடம் விற்பனை செய்கின்றனர். அந்த அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் நாங்கள் பொரி தயார் செய்து வருகிறோம்.

    கடந்த ஆண்டு 50 கிலோ கொண்ட பொரி தயாரிக்கும் அரிசி சிப்பம் ஒன்று ரூ.1750 க்கு வாங்கி வந்தோம். ஆனால் தற்போது 50 கிலோ கொண்ட சிப்பம் அரிசி ரூ.2500 க்கு வாங்கி வருகிறோம். இதன் காரணமாக கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது.தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பொரி அனுப்பப்படுகிறது.ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரமத்தி வேலூர் பகுதியில், பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது.

    • புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. மேலும் சேலம், ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, கொளத்தூர், வீரபாண்டி, தாரமங்கலம், காடையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தினசரி சந்தைகள் உள்ளன.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆகிறது. இதே போல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த சந்தைகளுக்கு ஊட்டி, ஓசூர், கொடைக்கானல், கர்நாடகா உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து தினமும் கேரட் லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக கேரட் லோடு வரத்து சரிந்துள்ளது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம், திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக அன்றாட சமையல், ஜூஸ், அல்வா உள்ளிட்டவைகளுக்கு கேரட் பயன்படுத்துவதால் அதன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களில் கேரட் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    உழவர் சந்தைகளில் கடந்த ஜூலை மாதம் கிலோ 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்ற முதல் ரக ஊட்டி கேரட் ஆகஸ்டு மாதம் 80 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் 120 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற சந்தைகள், சில்லரை காய்கறி கடைகளில் இதை விட அதிக விலைக்கு கேரட் விற்கப்படுகிறது.

    • அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.
    • பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் வர்த்தகா் சங்கத்தினர் நேற்று காலை முதல் மாலை வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    கோட்டூரில் அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கோட்டூரில் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டும்.

    மின்கட்டண உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோட்டூரில் திருவாரூர் ரோடு, மன்னார்குடி ரோடு, திருத்துறைப்பூண்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதனால் காலை நேரத்தில் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டூர் கடைவீதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

    • அரிசி ஏற்றுமதியில் உலகளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.
    • உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.

    நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாசுமதி அல்லாத அரிசிகளின் (புழுங்கல் அரிசி தவிர) ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உணவு செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறுகையில், உடைந்த அரிசி ஏற்றுமதியில் முற்றிலும் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த தானியங்கள் கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனால் கலப்பு திட்டத்துக்கும் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எனவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • பூக்கள் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளத
    • கரூரில் வரத்து குறைவு

    கரூர்:

    கரூரில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக, அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டாலும் அதற்கு அடுத்த படியாக சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், பூக்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் வாங்கல், மாயனூர், லாலாப்பேட்டைஉள்ளிட்ட காவிரி ஆற்று பகுதிகளில் மல்லிகை சாகுபடி பூ அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் விளையும் பூக்கள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் விடப் படுகிறது. இதில் பூ வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பூக்களின் வரத்து குறைவாலும், திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி குண்டு மல்லி கிலோ 2,000 ரூபாய்க்கும்,சம்பங்கி 250 ரூபாய்க்கும், அரளி 280 ரூபாய்க்கும், ரோஜா 280 ரூபாய்க்கும், முல்லைப் பூ, 1,500 ரூபாய்க்கும், செவ்வந்திப்பூ 280 கனகாம் பரம், 1,500 ரூபாய்க்கும் விற்பனையானது.

    • ராமநாதபுரத்தில் பூக்களின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது. மதுரை, புதுக்கோட்டை சந்தைகளில் இருந்து மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்கி வந்து சந்தையில் விற்கின்றனர்.

    இதன் காரணமாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, தொடர்ந்து முகூர்த்த நாட்கள் எதிரொலியாக பூக்களின் விலை வழக்கமான விலையை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விநாயகா் சதுா்த்திக்கான பூக்கள் வாங்கத் தயக்கம் காட்டினா்.

    மேலும் வழக்கமான அளவை விட குறைவாக பூக்களை மக்கள் வாங்கிச் சென்றனர். இதனால் பூ விற்பனை குறைந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பூக்கட்டும் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு மல்லிகை ரூ.400-க்கு விற்றது ரூ.1600-க்கும், 300-க்குவிற்ற ரோஜா ரூ.800, ரூ.400-க்கு விற்ற முல்லை ரூ.1700, செவ்வந்தி ரூ.150ல் இருந்து ரூ.750 என விலை அதிகரித்துஉள்ளது. ரூ.10-க்கு விற்ற கதம்பம் மூழம் ரூ.20-க்கு விற்கின்றனர். அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    • மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர்.
    • விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ளது.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    குவிந்த மக்கள்

    இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக வ.உ.சி. மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். இதனை வாங்க சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள்மற்றும் பொது மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

    தொடர்ந்து போட்டி, போட்டு பூக்களைஅதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 1000 ரூபாயாக உயர்ந்தது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன் விலை விவரம் வருமாறு:-

    முல்லை ஒரு கிலோ 600, ஜாதிமல்லி 280, காக்காட்டான் 400, கலர் காக்காட்டான் 360, சம்பங்கி 140, அரளி 260, மஞ்சள் அரளி, செவ்வரளி 300, நந்தியாவட்டம் 250 ரூபாய்க்கும் விற்பனையானது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் மார்க்கெட்டுகளில் ஆரஞ்சு பழங்கள் விலை 240 ரூபாக உயர்ந்துள்ளது.
    • இந்த ஆரஞ்சு பழங்கள் கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த பழங்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஆரஞ்சு பழங்களின் விலை சமீப காலமாக அதிக அளவில் உயர்ந்து ள்ளது. நாட்டு ஆரஞ்சு பழங்களின் சீசன் முடிந்துள்ள நிலையில் அதன் வரத்து இல்லாததால் அனைத்து கடைகளிலும் கமலா ஆரஞ்சு பழங்கள் தான் விற்பனைக்கு வைக்க ப்பட்டுள்ளன.

    இந்த ஆரஞ்சு பழங்கள் கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்ப டுகிறது. இதனால் பொது மக்கள் விலையை கேட்டு விட்டு அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாத வர்களுக்கு கூட ஆரஞ்சு பழங்கள் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆப்பிள் ஒரு கிலோ ரூ.200, மாதுளை 120, திராட்சை நீலம் 100, பச்சை 120, சப்போட்டா 30, பேரிக்காய் 120, கொய்யா 40, பப்பாளி 30 ரூபாய்க்கும் விற்பனை யாகிறது.

    • பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 100-க்கும் மேற்ப்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் தலைமை வகித்தார்.

    இதில் மாவட்ட பொது செயலாளர் அன்பு வீரமணி, நகர தலைவர்கள் எழிலரசன், சதீஸ், வட்டார தலைவர்கள் வடுகநாதன், சங்கரவடிவேல், பாஸ்கர், ஆர்டிஜ பிரிவு தலைவர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் தியாகராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேன், ஸ்டீபன், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ரோஜர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அஜித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்ப்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர்.

    • பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கும் ஏலம் போனது.

    தற்போது ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.500-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.600-க்கு விற்பனையானது. ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கபிலர்மலை சுற்று வட்டார பகுதி உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளான அண்ணா நகர், பொன்மலர்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பாளையம், பாகம் பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குறும்பலமகாதேவி, சிறு நல்லிக்கோவில்,தி. கவுண்டம் பாளையம் ,திடுமல், இருக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ரூ.2,400வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் வெல்லங்களை நன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,200 -க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250 விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×