search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saptakannyar Worship"

    • திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது.
    • கோவில் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது.

    திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அற்புதமாகக் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.

    பொதுவாகவே, சிவாலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் பலவற்றிலும் சப்தமாதர்கள் சந்நிதி கொண்டிருப்பார்கள்.


    சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். ஆனால், இங்கே கிழக்கு நோக்கியபடி காட்சி தருவது சிறப்பு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    இந்த கோவிலை கவுமாரி அம்மன் கோவில் என்றும், நங்கையார் கோவில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்..

    கோவிலில் மதுரைவீரனும் சந்நிதி கொண்டி ருக்கிறார். ஊருக்கு காவல்தெய்வமாகவும் போற்றப்படுகிற இந்த ஆலயம், சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறது ஸ்தல வரலாறு.

    மணக்கால் நங்கையார் அம்மன் கோவிலுக்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகித்து போற்றுகின்றனர் ஊர்மக்கள். பிராகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்தபடி காட்சி தரும் கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

    கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும் என்கிறார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பமும் பிரிவினைகளும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்!


    தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு இந்த தலத்தில் வெகு பிரசித்தம். அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள்.

    இந்த பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

    மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்சனைகள் நீங்கவும், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கவும், பிரிந்த தம்பதி சேரவும் நங்கையார் அம்மனும் சப்தமாதர்களும் அருள்புரிகிறார்கள்.

    ×