search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100452"

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றப்படுவதற்காக சிவ கொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 5-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா, ஜூன் 12-ந் தேதி காலை தேரோட்டம், 14-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா தலைமையில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். #Thirunallar #SaneeswaraBhagavanTemple #Kumbabishekam
    காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.1 கோடி செலவில் கோவில் திருப்பணி நடந்தது. கோவிலில் வர்ணங்கள் பூசப்பட்டன. சிலைகள் புதுப்பிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து 802 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை 8-ம் காலயாக பூஜை நடைபெற்றது. யாக குண்டங்களில் இருந்து புனிதநீர் கலசங்களை கோபுரத்துக்கு எடுத்து சென்றனர்.

    காலை 9.18 மணிக்கு ராஜகோபுரம், தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவான், அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள 3 நிலை கோபுரங்களில் உள்ள அனைத்து கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 150 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.



    கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    விழாவையொட்டி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் சுற்றுப்புற வளாகங்களில் 125 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தியும், 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காரைக்காலுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.  #Thirunallar #SaneeswaraBhagavanTemple #Kumbabishekam
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேசுவரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்த யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து பஸ் போக்குவரத்தும் செய்யப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம்.
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றது. இதையொட்டி நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேஸ் வரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெறவுள்ளன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகம் குறித்து மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனீஸ்வரர் தனி சன்னதி கொண்ட தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இறுதிகட்ட பணிகளாக கோபுரங்களில் கலசங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    சனீஸ்வர பகவான் சன்னதியில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணிகளை நிறைவு செய்தல், விழாவிற்கு, வரும் பக்தர்கள் திருநள்ளாறு பகுதியில் உள்ள அனைத்து நிரந்தர, தற்காலிக கழிப்பறைகளை தயார் நிலைக்கு கொண்டு வருதல், மாவட்ட போக்குவரத்து துறை மூலம் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை உறுதி செய்துள்ளோம்.

    எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம். சனிப்பெயர்ச்சி விழாவின்போது செய்யப்பட்ட விரிவான வசதிகள் கும்பாபிஷேகம் விழாவிலும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வரும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி 8 கால யாகசாலை பூஜைகள் நடத்தும் வகையில் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5-ந் தேதி வாஸ்து சாந்தி பூஜையும், 6-ந் தேதி தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் ஆச்சார்ய ரஷாபந்தனம், அக்னி சங்ரகணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் யாகசாலை மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5-ம் கால யாகசாலை பூஜை, 10-ந் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மாலை 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜையும், காலை 9.10 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் மகாகும்பாபிஷேகமும் நடக்கிறது.
    சனியினால் ஏற்படும் பாதிப்புகள், சனி தசாபுத்தி பாதிப்புகள் நீங்க ‘நளபுராணம்’ மற்றும் சம்பந்தரின் இத்தல ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும் பதிகத்தை, ஒருமண்டலம் பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலம் வந்து வழிபட வேண்டும்.
    வியாசர் இயற்றிய மகாபாரதத்தின் வன பருவத்தில், சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனத்தில் இருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்ன பிரகஸ்தவ முனிவர், பாண்டவர்களுக்கு ‘நளபுராணம்’ என்னும் நளன்- தமயந்தி சரித்திரத்தை சொல்கிறார். இதிலிருந்து மகாபாரத காலத்திற்கு முந்தையது, நளன்- தமயந்தி சரித்திரம் என்பது புலனாகிறது.

    நிடத நாட்டை வீரசேனன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் நளன். ஒருநாள் நளன், அன்னப்பறவை ஒன்றைக் கண்டான். அவனது பேரழகைக் கண்ட அன்னப் பறவை, “மன்னா! உன் அழகுக்கு ஏற்புடையவள், விதர்ப்ப நாட்டை ஆண்டு வரும் வீமசேனனின் மகள் தமயந்தி தான். அவள் அழகும், பொலிவும், நால்வகை குணங்களும் கொண்டவள். உனக்காக அவளிடம் தூது சென்று வருகிறேன்' என்றது.

    இப்படி தமயந்தியின் குணநலன்களை, அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன், தமயந்தியின் மீது காதல் கொண்டான். அதே போல் நளனைப் பற்றி அன்னம் கூறுவதைக் கேட்டு, தமயந்தியும் நளன் மீது மையல் கொண்டாள்.

    இந்த நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுயம்வரத்திற்கு நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும் வந்தனர். அதே நேரத்தில் தமயந்தியின் அழகில் மயங்கிய இந்திரன் உள்ளிட்ட விண்ணுலக தேவர்களும் வந்திருந்தனர். நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை ஏற்கனவே அறிந்திருந்த தேவர்கள், அவளின் கண்ணுக்கு நளனாகவே காட்சி தந்தனர். தன் முன்பாக இத்தனை நளன் உருவம் இருப்பதை கண்டு தமயந்தி திகைத்துப் போனாள்.

    ‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று சிந்தித்தாள். ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதை அறிந்திருந்த தமயந்தி, உண்மையான நளனை கண்டறிந்து மணமாலை சூட்டினாள். அவர்களின் இனிமையான இல்லற வாழ்விற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

    இதற்கிடையில் நளன் மீது கோபம் கொண்ட தேவர்கள், சனி பகவானிடம், நளனை துன்புறுத்தும்படி கூறினர். அவரும் நளனை 7½ ஆண்டுகள் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி, நளன் தன் நாட்டை இழந்தான். மனைவியோடு காட்டிற்குச் சென்றான். அங்கிருந்து மனைவியையும் பிரிந்தான். அப்போது நளனை, கார்கோடகன் என்ற பாம்பு தீண்டியது. இதனால் அவனது உடல் கருப்பாகி, குள்ள உருவம் பெற்றான்.

    இதையடுத்து வாகுனன் என்ற பெயரோடு, அயோத்தி அரசனாக இருந்த ரிதுபன்னனிடம் தேரோட்டியாக சேர்ந்தான் நளன்.

    அப்போது தனக்கு சுயம்வரம் என்று அறிவித்தால், நளன் நிச்சயமாக திரும்பி வருவான் என்று தமயந்தி நினைத்தாள். அதன்படி தன் தந்தையிடம் கூறி சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாள். சுயம்வரத்திற்கு ரிதுபன்னன் சென்றான். அவனுக்கு தேரோட்டியாக நளனும் சென்றான். அவனைக் கண்டு கொண்ட தமயந்தி, அவனுக்கு மாலை அணிவித்தாள். பின்னர் கார்கோடகன் அளித்த ஆடையை நளனுக்கு போர்த்தியதில் அவன் சுய உரு பெற்றான். நளனும் தமயந்தியும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

    பின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டலின்படி, தர்ப்பைப் புற்கள் நிறைந்த வனத்திற்கு வந்தான் நளன். அங்கு தீர்த்தம் உண்டாக்கி நீராடி, சுயம்புவாக தோன்றிய தப்பைப் புற்கள் படிந்த தழும்புடன் காணப்பட்ட லிங்கத்திற்கு, குங்கிலிய தூபம் காட்டி வழிபட்டான். என்ன ஆச்சரியம் அதுவரை அவனைப் பிடித்திருந்த சனி தோஷம் நீங்கியது. அந்த இடம் தான் இப்போதைய திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஆகும். இத்தல ஈசனின் உடனுறை சக்தியாக ‘போகம் ஆர்த்த பூண்முலையாள்’ எனும் ‘பிராணாம்பிகை’ தெற்குப் பார்த்த வண்ணம் அருள்கிறாள்.

    இந்த ஆலயத்தின் கருவறைக்கு வலது புறம், உன்மத்த நடனம் புரியும் தியாக விடங்கர் சன்னிதி இருக்கிறது. அருகில் மரகத லிங்கம் உள்ளது. தியாகராஜருக்கு எதிரில் நந்தி நின்ற வண்ணமும், பிரகாரத்தில் சுந்தரர் சன்னிதியும் உள்ளது. இத்தல தியாக விடங்கர் சன்னிதி அருகில் பிற ஆறு விடங்கத் திருத்தல லிங்கங்கள் பலிபீடங்களுடன் அமைந்துள்ளன.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஈசனின் கருவறைக்குள் நுழைந்ததுமே, நளனைப் பிடித்திருந்த சனி தோஷம் முழுமையாக நீங்கிவிட்டது. அதனால் தான் அம்பாள் சன்னிதிக்கு அருகே, கட்டை கோபுரத்தின் வெளிச் சுவற்றின் மாடத்தில் சனி பகவானின் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி இங்கு கிடையாது. இங்கு சொர்ண கணபதி, நால்வர், வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான், ஆதிபுரீஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், ஆதிசேஷன், நாகலிங்கம், நாகர்கள், கலி நீங்கிய நளன், கஜலட்சுமி, மகாவிஷ்ணு, ஜுரதேவர், அறுபத்து மூவர், சப்தமாதர்கள், அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு நான்கு பைரவர்கள் அருள்கிறார்கள். மூன்று பைரவர்கள் ஒரே சன்னிதியிலும், ஒரு பைரவர் சூரியனுக்கு அருகிலும் உள்ளனர்.

    திருநள்ளாறு ஆலயத்தின் வட மேற்கில் நள தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி, உடுத்திக் குளித்த ஆடையை, அதற்கென குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அங்குள்ள நளனின் கலி தீர்த்த விநாயகர், பைரவர் சன்னிதியில் முறைப்படி வழிபடவும். பிறகு தர்ப்பாரண்யேஸ்வரர் கருவறையில் குங்குலிய தூபம் காட்டி, தீபம் ஏற்றி நறுமண மலர்கள் சாற்றி வழிபட வேண்டும். அதேபோல் அம்பாள் சன்னிதியில் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டு, சனி பகவானையும் தரிசிக்க வேண்டும். இதன் மூலம் கர்மவினைகள், கலி தோஷங்கள், பாவங்கள், கிரக தோஷங்கள் அகன்று நீண்ட ஆயுள், நற்புத்தி, செல்வம், ஆரோக்கியம் கிடைக்கும்.

    காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் திருநள்ளாறு அமைந்துள்ளது.

    துன்பம் நீக்கும் நள புராணம்

    தன்னால் மிகவும் துன்பப்பட்ட நளனிடம், சனி பகவான், “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். உடனே நளன், “சனீஸ்வரா! நான் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என் மனைவி பட்ட துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. அதுபோல வருங்காலத்தில் எனது கதையைப் படிப்பவர்களுக்கு உங்களால் எந்தவிதமான துன்பமும் நிகழக்கூடாது” என்று வரம் கேட்டான். சனி பகவானும் அப்படியே வரம் அளித்து அருளினார்.

    எனவே சனியினால் ஏற்படும் பாதிப்புகள், சனி தசாபுத்தி பாதிப்புகள் நீங்க ‘நளபுராணம்’ மற்றும் சம்பந்தரின் இத்தல ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும் பதிகத்தை, ஒருமண்டலம் பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலம் வந்து வழிபட வேண்டும்.

    இடையனுக்கு தனி சன்னிதி

    இடையன் ஒருவன், அரசன் ஆணைப்படி திருநள்ளாறு கோவிலுக்குப் பால் கொடுத்து வந்தான். கோவில் கணக்கன், அந்தப் பாலை தன் வீட்டுக்கு பயன்படுத்தியதோடு, பொய் கணக்கு எழுதி இடையனையும் அச்சுறுத்தி வந்தான். உண்மையறியாத மன்னன், இடையன் மேல் கோபம் கொண்டான். இடையனைக் காக்க நினைத்த ஈசன், தன்னுடைய திரிசூலத்தை ஏவினார். அது கணக்கனின் தலையை கொய்தது. இடையனுக்கு ஈசன் காட்சி தந்து அருள்புரிந்தார். கணக்கனை அழிக்க சூலம் வந்தபோது, ஆலய பலிபீடம் சற்று ஒதுங்கியது. இன்றும் ஆலயத்தின் பலிபீடம் விலகி இருப்பதைக் காணலாம். ஈசனின் அருளைப் பெற்ற இடையனுக்கு, கிழக்கு கோபுரம் அருகில் சன்னிதி உள்ளது. வாழ்வில் திக்கற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, இத்தல ஈசன் கவசமாய் இருந்து காப்பார்.

    அருள் செய்யும் தீர்த்தங்கள்

    பிரம்மன், சரஸ்வதி மற்றும் சரஸ்வதியின் வாகனமான அன்னப் பறவை மூவரும் இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி, ஈசனை வழிபட்டு பேறு பெற்றனர். அந்த தீர்த்தங்கள் முறையே பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் மற்றும் அன்ன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்ம தீர்த்தத்தில் மார்கழி மாதம் அதிகாலையில் நீராடி வழிபட்டால் தோஷங்கள், காக்கை வலிப்பு, குன்மம் முதலிய நோய்கள் நீங்கும். சரஸ்வதி தீர்த்தம் என்னும் வாணி தீர்த்தத்தில், தொடர்ந்து ஒரு மண்டலம் நீராடி வழிபட்டால் கல்வி, நற்குணம் கிட்டும். அன்ன தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் விலகும் என்று தலபுராணம் கூறுகிறது.

    ஓவியம் பேசும் வரலாறு

    மதுரையில் சமணர்களுடன், திருஞானசம்பந்தர் அனல் வாதம் செய்தார். அப்போது தாம் அருளிய பதிகங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளில், ஈசனை வேண்டி சம்பந்தர் கயிறு சாத்திப் பார்த்தார். அதில் திருநள்ளாற்றில் தாம் அருளிய ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனும் பதிகம் வந்தது. உடனே சம்பந்தர் ‘தளிர் இளவளர் ஒளி தனது எழில்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி, திருநள்ளாறு பதிக ஓலைச்சுவடியை நெருப்பில் இட்டார். அந்த ஓலைச்சுவடி எரிந்து போகாமல் அப்படியே பச்சையாக இருந்தது. சமணர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடி எரிந்து சாம்பலானது. ஆகவே தான் திருநள்ளாற்றுப் பதிகத்தைப் ‘பச்சைப் பதிகம்’ என்று போற்றுகிறார்கள். நளனின் வரலாறும், திருஞானசம்பந்தரின் பச்சைப் பதிகத்தின் வரலாறும், திருநள்ளாறு ஆலயத்தின் வெளிப்பிரகாரச் சுவற்றில் வண்ண ஓவியங்களாக இன்றும் காணப்படுகின்றன.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 11-ந் தேதி காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த் ராஜா செய்து வருகிறார்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி பூஜையும், நேற்று தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா நேற்று கும்பாபிஷேகத்திற்கு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது.

    இதனால் இன்று முதல் கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெற்கு வீதி, பஸ் நிறுத்தம், கடைவீதி உள்பட பல இடங்களில், சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் இந்த பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது பணம் வைத்து சூதாடிய திருநள்ளாறு கந்தபழனிவேல், குணா, ராஜா, மகேஷ், பிரதீப், தாமரை, உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 சீட்டுக்கட்டு மற்றும் ரூ.19 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உலக புகழ்பெற்றது. இக்கோவிலில் சனிபகவான் தனியாக சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். சனிதோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிகம்பத்தில் ஏற்றப்படும் சிவகொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    இந்த விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா, கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பிரம்மோற்சவத்தில், வருகிற 18-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லாக்கில் வீதி உலாவும், 25-ந் தேதி காலை தேரோட்டமும், 26-ந்தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதி உலாவும், 27-ந் தேதி தெப்ப உத்சவமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ×