என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல்"
வாடிப்பட்டி:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச்செல்பவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு வராவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அறிவிப்பை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாசில்தார் மலர்விழி தலைமையில் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் இறங்கினர். வாடிப்பட்டி சந்தை பாலம் அருகே கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த பஸ்சில் பயணம் செய்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகைதீன்அப்பாஸ் (வயது39) ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 450 வைத்திருந்தார். அதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்தனர்.
எலுமிச்சை வியாபாரியான நான் கோவையில் பணம் வசூல் செய்து வருகிறேன் என்று அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவர் கூறியதை ஏற்கவில்லை. உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.
புதுடெல்லி:
தேர்தல் வந்தாலே கூடவே பணப்பட்டுவாடாவும் வந்து விடும். எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கும் சில அரசியல் கட்சி பிரமுகர்கள், அதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது காலம், காலமாக வழக்கத்தில் உள்ளது. தேர்தல் முடிவையே இது மாற்றி விடுவதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
என்றாலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வது தொடர்ந்த படிதான் உள்ளது. அதோடு தேர்தல் பணப்பட்டு வாடா அதிகரித்தப்படியும் இருக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டு வாடாவுக்காக கொண்ட செல்லப்பட்ட ரூ. 100 கோடி சிக்கியது. 2014-ம் ஆண்டு இந்த தொகை ரூ. 313 கோடியாக உயர்ந்தது,
இந்த தடவை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பணப் பட்டுவாடா பல நூறு கோடியை எட்டி விடும் நிலை உள்ளது. அந்த பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி குழுக்கள் மூலம் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் பயனாக ரொக்கப் பணம் கட்டு கட்டாக பிடிபட்டு வருகிறது. உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டது. மறுநாள் (திங்கட்கிழமை) முதல் நாடு முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
கடந்த 4 நாட்களில் நாடு முழுவதும் வாகன சோதனையில் சுமார் ரூ.40 கோடி சிக்கியுள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் ரூ.29 கோடி பிடிபட்டது. தமிழ்நாட்டில் ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரொக்கப் பணம் தவிர தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனைகளில் 13.57 கிலோ தங்கமும் 31.5 கிலோ வெள்ளியும் பிடிபட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 70 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாட்னா:
நடிகரும், பா.ஜனதா அதிருப்தி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மோடி ஒருமுறை கூட நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று ஒரு கேள்விக்குகூட பதில் அளிக்க வில்லை. இதனால் தனது நிறை, குறைகளை அவரால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
இப்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனிவரும் நாட்களில் மோடி நிருபர்களை சந்திக்க நேரிடும். அதற்காக இப்போது இருந்தே ஒத்திகை பார்த்து எப்படி நடிக்க வேண்டும் என்று உங்களை (மோடி) நீங்களே இயக்கி தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
நான் அறிந்த வரையில் ஜனநாயக உலகில் தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட கேள்வி-பதில்களை எதிர்கொள்ளாத பிரதமர் என்ற மோசமான வரலாறை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள்.
மோடி தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள இதுவே மிகச் சரியான சிறந்த தருணம் ஆகும். எனவே மாற்று அரசு ஏற்படுவதற்கு முன்பு புதிதாக நல்ல தலைமை பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 150-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை அவசரமாக ஒரே மாதத்தில் அறிவித்தீர்கள். இதை மேலோட்டமாக காணும் போது தேர்தல் நடத்தை விதிகளுக்குட் பட்டதாகவே இருக்கும்.
ஆனால் உண்மையில் இது மிக தாமதமாகவும், மிக குறைந்த அளவில் நடத்தப்படும் ஒரு மொத்த வியாபாரத்துக்கு இணையான செயலாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ShatrughanSinha #PMModi
ராமநாதபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கும் கட்சிகள்தான் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி காணாமல் போய் விடும். சட்டசபை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் முறைகேடு இல்லாமல் நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. முறைகேடு இல்லாமல் தேர்தலைநடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சினையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை கைது செய்ததோடு வழக்கை முடித்துவிடக் கூடாது.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #Balakrishnan
17-வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதுரை சித்திரை திருவிழாவின் தேரோட்டம் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேபோல் தேனி தொகுதியிலும் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மாவட்ட கலெக்டர், பல்லவி பல்தேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கையில், மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் ஏப்ரல் 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுகிறது.
இதற்காக முதல் நாளே தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும். 2 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். இரு மாநில எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளதால் பிரச்சினையை தவிர்க்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே தேனி பாராளுமன்ற தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சித்ரா பவுர்ணமி விழா 19-ந் தேதிதான் நடக்கிறது. அதற்கு முதல் நாளான 18-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்து விடும். எனவே அதற்கும் தேர்தலை தள்ளி வைப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தபோதும் அனைத்து கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #Theniconstituency
சென்னை:
தமிழக சட்டசபையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.
திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பி ரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம், ஓசூர் ஆகியவையே அந்த 21 தொகுதிகளாகும்.
இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாக சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று எந்த கோர்ட்டும் தேர்தல் ஆணையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாதது மக்கள் விரோத நடவடிக்கை என்று தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் இதில் உரிய முடிவு எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களை சுமூகமாக நடத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. பிரதிநிதிகள் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் 3 தொகுதி இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதற்கு பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “3 தொகுதிகளின் தேர்தல் பற்றி கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் இடைத்தேர்தலை நடத்த இயலவில்லை. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்தி விடலாம்” என்றார்.
இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து தன்னை எம்.எல்.ஏ. ஆக அறிவிக்க கோரி சரவணன் புதிய மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு காரணமாகவே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்ததும், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சரவணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று சரவணன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இதுபோல அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் தேர்தல் வழக்குகளையும் திரும்பப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. #ElectionCommissioner #Byelection
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ம.தி.மு.க. நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ. 55 லட்சமும், நாமக்கல் மாவட்டம் சார்பில் ரூ. 10 லட்சமும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது.பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது-
பாராளுமன்றம் மற்றும் 21 சட்ட சபை தொகுதிகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். கடந்த 2004-ம் ஆண்டு தி.மு.க. அணி 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோ அது போல் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள மத்திய அரசானது அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள எத்தகைய தவறான முறைகளையும் கையாள வாய்ப்பு உள்ளது.
போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றில் பணம் கொண்டு செல்ல அதிகார வர்க்கம் திட்டமிட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அணியினர் ஒரு ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்வார்கள்.
நீட் தேர்வு விவகாரம், உயர் மின்னழுத்த கோபுரம், முல்லை பெரியாறு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது.
முதன்மை மாநிலமாக செழித்து வளர்ந்துள்ள தமிழகத்தை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராணுவத்தினரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். அபிநந்தனை நினைத்து பெருமைப்படுகிறோம்.ஆனால் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீதான சந்தேகம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் கவர்னரும், தமிழக அரசும் இதுவரை முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 130 இடங்களை மட்டுமே பாரதிய ஜனதா பெறும். மாநில அரசுகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.கருணாநிதியை மருத்துவமனைக்கு சென்று பார்க்க விரும்பிய விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் பார்க்க அனுமதிக்கவில்லை என பிரேமலதா கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமானம் உள்ளவர். அவர் அவ்வாறு நடந்து இருக்க மாட்டார்.
அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.பத்திரிகையாளர்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஒருமையில் பேசியிருப்பது தவறானது. இவ்வாறு பேசுவது முறையல்ல. இதனை அவர் தவிர்க்க வேண்டும்.
கட்சி நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநகர செயலாளர் சிவபாலன், மாவட்ட துணை செயலாளர் முத்து ரத்தினம், பல்லடம் நகர செயலாளர பாலு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், பொங்கலூர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vaiko
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என உள்ளது. அதே நேரத்தில் இரு குழந்தைகள் உள்ளவர்கள் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர்கள் பதவி இழக்க நேரிடும் எனவும் அச்சட்டத்தில் உள்ளது.
அரசு வேலைவாய்ப்பு, அரசாங்க நிதியுதவி மற்றும் மானியங்களுக்கும் இந்த அளவுகோலை வைக்க வேண்டும். மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தேர்தல்களில் நிற்க தடை விதிப்பதுடன், அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #SCdismisses #twochildnorm #fieldcandidates #SCdismissespil
சென்னை:
அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காத்து நின்று, மாநிலத்தின் முதல்வராக ஏழைகளின் நலனையும் தமிழகத்தின் நல்வாழ்வையும், திராவிட இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதிக் கொள்கையையும் காப்பாற்றியதோடு, உலகத் தலைவர்கள் வியந்த தலைவராக, பேராளுமையாக, சாதனைகளின் சிகரமாகத் திகழ்ந்தவர் நம் அம்மா. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க.வை அமர வைத்து வரலாற்றுச் சாதனை புரிந்தவர்.
மத்திய அரசின் பல்வேறு தமிழக விரோத திட்டங்களை அம்மா அனுமதிக்க மறுத்ததற்கு அத்திட்டங்கள் தமிழக மக்களின் நல்வாழ்வை நாசமாக்கும். தமிழகத்தை உருக்குலைத்து விடும். டெல்லிக்கு மட்டுமே பலனே தவிர, தமிழகத்திற்கு பலன் ஏதும் இல்லை என்ற காரணத்தினால்தான்.
அம்மா எதிர்த்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் சுதந்திரமாக நுழைந்து தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. கடுமையாக பாதிக்கப்பட்டு போராடி வரும் மக்களுக்கு ஆறுதலாகவும், அருமருந்தாகவும் இருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
நயவஞ்சகம் கொண்டோருக்கும், துரோகம் புரிந்தோருக்கும், தீய சக்திகளுக்கும் நாம் முடிவுரை தீட்டிடுவோம்.
புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் அவர் கொண்ட கொள்கைகளையும் கண்ட கனவுகளையும் நிறைவேற்றிட வீர சபதம் ஏற்போம். கைகோர்த்து நிற்கும் சுயநலவாதிகளை, தேர்தல் களத்தில் எதிர் கொண்டு வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்