search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை"

    டெல்லி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. #Delhi Assembly
    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சிக்கு எதிராக பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், பஸ் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக விவாதிக்க உள்ளோம். மேலும், என்.ஆர்.சி பட்டியலை டெல்லியில் தயாரிக்கவும் வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.  

    இதற்கிடையே, டெல்லியில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் குரங்குகளை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
    பாராளுமன்றத்துக்கும் - சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார். #SimultaneousElections #Pandian

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி வலசில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.பின்னர் நிரூபர்களுக்கு தா.பாண்டியன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    தமிழகத்தில் எங்கோ பெய்த மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் இன்னும் பல நகரங்கள், கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.

    பல ஏழை விவசாயிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து நிலங்களை எடுத்து எட்டு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டம் தேவைதானா?. அரசு இந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பா.ஜனதா.தலைவர் அமித்ஷா தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலம் என்று சொல்லுவது அவர் கண்ணாடி முன்பு அவரே சொல்லி கொள்வது போல் உள்ளது. அவர் மகன் இரண்டு வருடத்தில் 16 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.

    செலவு சிக்கனம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடி உலகம் சுற்றும் செலவை குறைந்தாலே செலவை குறைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உடன் இருந்தார்.  #SimultaneousElections #Pandian

    கர்நாடக சட்டசபையில் 11 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில், முதல்மந்திரியாக குமாரசாமி பதவியேற்று நடைபெறும் முதல் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் இந்த மாதம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டாக சுமார் 2.18 கோடி ரூபாயை அறிவித்திருந்தார்.

    மேலும், விவசாயிகளின் சுமார் 40 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதையடுத்து, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், சுமார் 11 நாட்கள் நடைபெற்ற கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. மேலும், வரும் நவம்பர் மாதத்தில் அடுத்தகட்ட கூட்டத்தொடர் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KarnatakaAssembly
    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து தேசிய சட்ட ஆணையம் நேற்று 2-வது நாளாக கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
    புதுடெல்லி:

    ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு அறிய முடிவு செய்தது.

    இது தொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள சட்ட ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நேற்று 2-வது நாளாக சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்.பி. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தங்கள் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்தார்.

    இதுபற்றி பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விஷயத்தில் தி.மு.க.வின் நிலை என்ன? என்பது பற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு ஒரு கடிதம் தந்துள்ளார். அந்த கடிதத்தை நான் வழங்கி தி.மு.க.வின் நிலையை விளக்கினேன்.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை தி.மு.க. கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசை மத்திய அரசு எந்த நேரத்திலும் கலைக்கலாம் என்ற நிலை உள்ளது. சில வழக்குகளில் தீர்ப்பு மாறி வந்திருந்தாலும் கூட இந்த பிரிவை எந்த நேரத்திலும் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

    மேலும் மக்களவையும் தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கு முன்பு பல அரசுகள் கவிழ்ந்ததை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அப்படி மக்களவை கலைக்கப்பட்டால் எல்லா மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? என்றும் கேள்வி எழுகிறது. எனவே, இந்த முயற்சியால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

    இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

    இதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதிகளும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபற்றி அக்கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்குகொண்ட மூத்த தலைவர் ஆஷிஷ் கேதான் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானது என்றும், இது தொடர்பாக சட்ட ஆணையத்திடம் தங்கள் கட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 
    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் 7, 8-ந் தேதிகளில் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. #LawCommission #SimultaneousElections
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

    அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

    இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் ஆகும். இதுபோல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முன்பு ஒருமுறை சட்ட ஆணையம் கடிதம் எழுதியது. ஆனால், எந்த அரசியல் கட்சியும் அதற்கு பதில் அளிக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு சட்ட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.  #LawCommission #SimultaneousElections #Tamilnews
    கவர்னர் ஆய்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்காததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongWalkout
    சென்னை:

    கவர்னரின் ஆய்வுப் பணிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டே ஆய்வு நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தலைமைச் செயலாளரிடம் சொல்லிவிட்டுத் தான் ஆய்வு நடப்பதாக செய்தி வெளியானது.

    இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. அரசின் தலைமைச் செயலாளரிடம் சொல்லிவிட்டு ஆளுநர் ஆய்வுப் பணிக்கு செல்கிறதா இல்லையா? இது அரசுக்குத் தெரியுமா? என முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். ஆனால், முதலமைச்சர் பதில் ஏதும் அளிக்காமல் மவுனமான இருந்தார்.



    இதனால் அதிருப்தி அடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே காரணத்தை காட்டி காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongWalkout
    மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. #EdappadiPalaniswami #TNassembly
    சென்னை:

    மத்திய அரசு சமீபத்தில் புதிதாக அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வந்து மந்திரி சபையின் ஒப்புதலை பெற்றது.

    இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பிறகே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க கோரி சட்ட சபையில் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு, 2010-ம் ஆண்டு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டது. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் அண்டை மாநிலத்தில் இருக்கும் போது அதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த வரைவு மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என அம்மா, 29.7.2011 மற்றும் 17.3.2012 நாளிட்ட கடிதங்களின் வாயிலாக பிரதமரை கேட்டுக் கொண்டார்.

    எனினும், இந்த வரைவு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தின் நிலைக் குழுவின் கருத்து வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. அத்தருணத்தில், 3.8.2011 அன்று புதுடில்லியில் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் வேணுகோபாலும், நமது பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளும் நீர்வள ஆதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான கோகாய்யை நேரில் சந்தித்து அம்மா குறிப்பிட்ட மறுப்புக்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

    அம்மாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 2010-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட்டது.

    இருப்பினும், அணை பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பின்பற்றக் கூடிய ஒரு சட்டத்தை இயற்ற, மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஒரு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது.

    இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் கண்டறியப்பட்டது.

    அதில் குறிப்பாக, ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நதியின் குறுக்கே அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அந்தந்த மாநிலமே கட்டிக் கொள்வது குறித்து அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அந்த மாநிலத்திற்கே சொந்தமானது என்றும், அவை அம்மாநிலங்களாலேயே இயக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வரும் என்றும், இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை அளிக்க உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு உகந்ததாக இருக்குமா என தெரிய வில்லை.

    மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் ஒரு மாநிலம் வேறொரு மாநிலத்தில் கட்டிய அணைகள், அந்த அணையை கட்டிய மாநிலத்திற்கு சொந்தமானதாகும் மற்றும் அதனை இயக்குகின்ற மற்றும் பராமரிக்கக் கூடிய பொறுப்புகள் அம்மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும் என்பது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை மாநிலமான கேரளாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால்  தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும் மற்றும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இத்தகைய அணைகள் பற்றிய விவரம் குறித்து இந்த வரைவு மசோதாவில் இடம் பெறவில்லை.

    மத்திய அரசின் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைவு மசோதாவினால், இந்த 4 அணைகளை பராமரிப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

    உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணை பாதுகாப்புக் குழு ஆகிய அமைப்புகளினால் அணைகளை பராமரிப்பதில் ஏற்படும் இடையூறுகளில் தீர்வு காண இயலாது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் அணை பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இவை, மத்திய நீர்வளக் குழுமம் அவ்வப்போது அளித்துவரும் வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருகின்றன.

    மேலும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த பொறியாளர்கள், அணை பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அம்மா 11.9.2016 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில், இவ்வரைவு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களில் குறுக்கீடு செய்கிறது என்றும், மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, அண்டை மாநிலத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்றும், எனவே, இந்த மசோதா அவசரகதியில் பரிசீலிக்கப்பட கூடாது எனவும், அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 2016-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இம்மசோதாவிற்கு தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    2018-ம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

    இந்த வரைவு மசோதாவின் மீது மத்திய அரசு தமிழ்நாட்டின் கருத்தை கோரவில்லை. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாலும், குறிப்பாக, அண்டை மாநிலத்தில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகளான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கு பல்வேறு பிரச்சினைகள் இவ்வரைவு மசோதாவால் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது எனவும், அது வரையில் மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், நான் 15.6.2018 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன்.

    27.2.2006 மற்றும் 7.5.2014 ஆகிய நாளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு, அத்தீர்ப்புகளின்படி 21.11.2014 மற்றும் 7.12.2015 ஆகிய நாட்களில் முதற்கட்டமாக 142 அடி வரையில் அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டது.

    மேலும், மத்திய நீர் வளக் குழுமம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, தமிழ்நாடு அரசு, முல்லைப்பெரியாறு அணையின் முழு நீர்மட்ட அளவான 152 அடி வரையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இதன்பொருட்டு, தமிழ் நாடு அரசு செய்து முடிக்க வேண்டிய மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளைச் செய்வதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காமல், தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், தமிழ்நாடு அரசு இவ்விடையூறுகளை நீக்கி, பணிகளை விரைந்து செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை நிறைவேற்றுமானால், அணை பாதுகாப்பு என்ற போர்வையில், முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடையூறுகள் ஏற்படும்.

    மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று இசைவு அளித்துள்ள, 2018-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்கவும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றலாம் எனவும், அது வரையில் மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    “மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018 ஆம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாலும், குறிப்பாக, தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், அது வரையில், மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இம்மாமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”

    இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படி தங்கள் வாயிலாக இம்மாமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த தீர்மானத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். #EdappadiPalaniswami #TNassembly
    பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். #KadamburRaju #TNAssembly
    சென்னை:

    பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்தின் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.

    தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

    பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கு, பணியாற்றிய காலத்துக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டது. அந்த தொகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

    பத்திரிகையாளர் 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாகவும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சம் ஆகவும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் ஆகவும், 20 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் ஆகவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப நிதி உயர்த்தி வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்பசுவாமிக்கு நினைவுத்தூண் அமைக்கப்படும்.

    தியாகி சுப்பிரமணியசிவா கனவை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கப்படும்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

    திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள மாவீரன் பூலித்தேவன் மாளிகை சீரமைக்கப்படும்.

    பெரியார், அண்ணா நினைவகம் (ஈரோடு), ராஜாஜி இல்லம் (கிருஷ்ணகிரி), பிஷப் கால்டுவெல் இல்லம், (திருநெல்வேலி), தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் (நாகப்பட்டினம்), கோபால் நாயக்கர் மணிமண்டபம் (திண்டுக்கல்),



    காமராஜர் இல்லம் (விருதுநகர்), முத்து மண்டபம் (வேலூர்) மற்றும் காந்தி நினைவு மண்டபம் (கன்னியாகுமரி) ஆகிய 8 மாவட்ட நினைவகங்களில் மொத்தமுள்ள 110 பழைய புகைப்படங்கள் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படும்.

    அரசு பொருட்காட்சிகளில் நடத்தப்படும் விழிப்புணர்வு நாடகங்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

    முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பதிலுரையில் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி பீடம் ஏறிய பிறகு, ஒரு நாள், திரைப்பட விருதுகள் தொடர்பான ஒரு கோப்பை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டம் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது.

    வழக்கமாக விவரம் அறிந்து கொண்டு, கோப்பை தனது செயலாளரிடம் கொடுத்துவிட்டு போகச்சொல்வார். அன்றைக்கு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னை அறைக்கு உள்ளே அழைத்தார்.

    என்னிடமிருந்து கோப்பை பெற்றுக்கொண்ட ஜெயலலிதா, அதை பக்கத்திலிருந்த சிறிய மேஜை மீது வைத்துவிட்டு என்னை அழைத்து, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்புடன் கொண்டாட வேண்டும். ஏற்பாடுகளை உடனே ஆரம்பித்துவிடுங்கள் என்று சொன்னார்.

    ஜெயலலிதாவின் ஆன்மா மகிழும்படி, அவர் இருந்தால் எப்படி நடத்தியிருப்பாரோ அப்படி தமிழ்நாட்டில் இதுவரையில் எந்த தலைவருக்கும் இல்லாத வகையில், எம்.ஜி.ஆருக்கு அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பிரமாண்டமான அளவில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் விழா நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #KadamburRaju #TNAssembly
    தமிழகத்தில் நடப்பு ஆண்டில் சுகாதாரத்துறையால் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். #TNAssembly #TamilNaduCM
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உள்ள 985 துணை சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக, 82 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
     
    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனைத்து சிறப்பு துறைகளும் ஒரே அடுக்குமாடி கட்டடத்தில் செயல்படும் வகையில், தற்போது கட்டப்பட்டுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டடத்தில், 4-வது தளம் முதல் 6-வது தளம் வரை, மேலும் மூன்று தளங்கள் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள வெளி நோயாளிகள் பிரிவு கட்டடத்திலேயே அனைத்து துறைகளும் செயல்படும் விதத்தில், தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டடத்திற்கு மேல், 5வது தளம் முதல் 8 வது தளம் வரை, மேலும் நான்கு தளங்கள், 42 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திட, 30 கோடி ரூபாய் செலவில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

    மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக, “பிரேக்கி” தெரப்பியுடன் கூடிய “சி.டி.ஸ்டிமுலேட்டர்” மற்றும் “பங்க்கர்” கருவிகள் 22 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திட, “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் அவசர கால சிகிச்சை மையங்களுக்கு, நவீன மருத்துவக் கருவிகள், 21 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    காச நோயாளிகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 96 ஆயிரத்து 200 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் “மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்” ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    நடப்பாண்டில், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், மாணவியர் விடுதிகள் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ், 12 அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நடப்பாண்டில் எழும்பூர், பூவிருந்தவல்லி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, 17 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் அறிவித்துள்ளார். #TNAssembly #TamilNaduCM
    தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். #DMKwalkout #TamilNaduAssembly
    சென்னை:

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தி.மு.க. சார்பில், ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் ஆளுநர் மாளிகையோ எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஆளுநரின் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.



    இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. ஆளுநரின் ஆய்வு குறித்து பேசுவதற்கு சட்டசபையில் அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. ஆளுநர் குறித்து அவையில் பேசுவதற்கு அனுமதி இல்லை என அவை விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

    சபாநாயகரின் பதிலில் திருப்தி அடையாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். #DMKwalkout #TamilNaduAssembly
    கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களில் தோட்டக்கலை அறிவியல் பட்டயப் படிப்பு துவங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #HorticultureCourses
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் இயங்கி வரும் காய்கறி மகத்துவ மையத்திலும், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு நடப்புக் கல்வி ஆண்டில் துவங்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒவ்வொரு மையத்திலும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

    இவ்விரண்டு மையங்களிலும், மாணவர்கள் பயில்வதற்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் வசதிகளை உருவாக்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

    மாதவரத்தில் இயங்கி வரும் ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பு மையமும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, தோட்டக்கலைத் துறையின் மூலம் நடத்தப்படும்.

    வேளாண் சார்ந்த அனைத்து துறைகளின் விரிவாக்க சேவைகளையும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இதுவரை 146 வட்டாரங்களில் 219 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில், மேலும் 9 வட்டாரங்களில் இம்மையங்கள் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக “இரு நூற்றாண்டு பசுமைப் புல்வெளி” எனும் புதிய பூங்கா ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    மேலும், வருடந்தோறும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அரசு ரோஜாப் பூங்காவிற்கு வருகை புரிவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகனம் நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, நீலகிரி நகரத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். ஆக மொத்தம் 127 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்று நான் அறிவித்துள்ள இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாடு வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலும் செழிக்க வழிவகை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #HorticultureCourses
    சட்டசபையில் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றிய விவாதத்தின்போது சபாநாயகர் பேச அனுமதிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். #DMK #MKStalin #TNassembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நடிகர் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    மு.க.ஸ்டாலின்: முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சபாநாயகர்: நான் அரசிடம் இதுபற்றி விசாரித்தேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 20-ந்தேதி அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அதுபற்றி விவாதிக்க வேண்டாம்.

    ஸ்டாலின்: எஸ்.வி.சேகர் போலீஸ் துணையுடன் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.



    சபாநாயகர்: இது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாதது அல்ல. நீதிமன்ற நடவடிக்கையில் இருப்பதை நாம் இங்கு விவாதிப்பது சரியாக இருக்காது.

    ஸ்டாலின்: நீதிமன்ற நடவடிக்கை பற்றி நான் பேச விரும்பவில்லை, அதற்குள் போக விரும்பவில்லை. காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறேன்.

    சபாநாயகர்: நீதிமன்றத்திற்கு 20-ந்தேதி வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஸ்டாலின்: ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸ் ஏன் நிறைவேற்றவில்லை.

    சபாநாயகர்: நீங்கள் திரும்ப திரும்ப இதுபற்றி விவாதித்து வருகிறீர்கள். நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அவையில் இதை விவாதிப்பது சரியாக இருக்காது. 20-ந்தேதி வரை பொறுத்திருந்து அதன்பிறகு இதுபற்றி பேசலாம்.

    ஸ்டாலின்: போலீஸ் ஏன் அவரை கைது செய்யவில்லை என்பதைத்தான் கேட்கிறேன்.

    (சபாநாயகர் தொடர்ந்து அவருக்கு பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களை ஸ்டாலின் உட்கார வைத்தார்).

    சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தில் நீதிமன்றம் உத்தரவு கொடுக்கவில்லை என்றால் உங்களை பேச அனுமதித்து இருப்பேன்.

    ஸ்டாலின்:- இந்த வழக்கு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது. ஏன் அவரை இதுவரை கைது செய்யவில்லை. அவரை போலீஸ் கைது செய்யாததால்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தை இங்கு இப்போது பேச அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகிவிடுவோம். வேறு வி‌ஷயம் இருந்தால் பேசுங்கள் அனுமதிக்கிறேன். இந்த வி‌ஷயம் குறித்து விவாதிக்க வேண்டாம்.

    சபாநாயகர் பேச அனுமதி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து தி.மு.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த விவாதம் நடந்து கொண்டு இருந்தபோதும், தி.மு.க. வெளிநடப்பு செய்த போதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவையில் இருந்து விவாதங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பத்திரிகை துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய பெண் ஊழியர்களை தரங்கெட்ட வகையில் சில விமர்சனங்களை செய்திருக்கிறார். அதை முகநூலில் அவருடைய பெயரிலேயே பதிவு செய்திருக்கிறார்.

    இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மாநகர காவல் துறையை சந்தித்து கடந்த ஏப்ரல் 20-ந்தேதி அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.

    ஆனால் அதை எதிர்த்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என்று அவரது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது.

    அவர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால் அவரை இதுவரை கைது செய்யவில்லை. போலீஸ் பாதுகாவலுடன் சென்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட்டு இருக்கிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.

    ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. சபையில் இதுபற்றி பிரச்சினை கிளப்பியபோது இது நீதிமன்ற நடைமுறையில் இருப்பதாக கூறி சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #TNassembly #SVeShekar

    ×