search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்க்கை"

    இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது.
    இன்றைய சமுதாயத்தில் மனிதர்கள் பல வாழ்வியல் நெறிமுறைகளை இழந்துவிட்டனர். வாழ்க்கை என்பது ஒரு சிறந்த கலையாகும். அதனை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். மனித சமுதாயம் தன் வாழ்க்கைமுறை, நாகரிகம் ஆகியன சீர்குலையாமல் இருக்கவே நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் வகுத்தது. அது முதல் அந்நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றிய வாழ்க்கை முறையானது நிலைகொள்ளத் தொடங்கின. தமிழர்கள் கண்ட வாழ்வு நெறிகளும், நாகரிகமும் உலகத்தாருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வன ஆகும்.

    வாழ்வை நல்லமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டு மெனில் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். நம் தமிழ் மக்கள் கொண்ட உயரிய கொள்கையே “வாழ்; வாழவை” என்பதாகும். இக்கொள்கைகளைப் பின்பற்றுவதால் சமூகத்தில் குற்றங்கள் பல தானாகவே குறையும் என்பது உறுதி.

    கட்டுப்பாடுகள் மனிதனை நெறிப்படுத்தும் ஒரு வழிமுறையேயாகும். கட்டுப்பாடுகளை மனத்துள் கொண்டவர்கள் பண்புடையவர்களாகின்றனர். சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் மனித சமுதாயத்தைப் பண்படுத்தவே வகுக்கப்பட்டுள்ளன. நம் தமிழர்கள் மிகச் சிறப்பான வாழ்வு வாழ்ந்தவர்கள். தமிழர்களின் வாழ்வியலை ஆராய்ந்தால் கட்டுப்பாடுகளை அவர்கள் ஒருபோதும் சுமையாகக் கருதியதில்லை. சமுதாயத்தில் ஏமாற்றங்களும், வஞ்சங்களும் நிகழாது தடுக்க அக்கட்டுப்பாடுகளே மிகச்சிறந்த ஆயுதமாகத் திகழ்ந்தன. இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது.

    ஒழுக்கக்கேடு ஒரு கொடியநோய். சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் அந்நோயின் அறிகுறிகளே ஆகும். சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்குப் பொருளாதார வறுமையும் அறியாமை நிறைந்த மனமும் பெரும் காரணிகளாக அமைகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வது எளிது. ஆனால் உள்ளத்தில் படிந்துள்ள இருளை அகற்றுதல் அவ்வளவு எளிதன்று. எனவே, சமூகம் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் மதித்து வாழும் போது தான் மீண்டும் உயரிய சமுதாயம் துளிர்விடும். மன இருளும் நீங்கும்.

    ஒழுக்கமே நன்மைகளுக்கெல்லாம் அடிப்படை. இன்றைய சமுதாயம் ஒழுக்கநெறி தவறிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. மக்களுள் பலர் பணந்தேடும் நோக்கையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, எவ்வழியிலும் பணம் தேட எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை என்பது எப்படியும் வாழலாம் என்பதில் அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் தான் உள்ளது. நம் முன்னோர்கள் உயரிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்ததால்தான் தமிழ்ச் சமூக நாகரிகம் உலகத்திற்கே எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது. சமூகச் சீரழிவுகள் மாறவேண்டுமெனில் குழந்தைகளிடத்திலிருந்தே மாற்றங்களை விதைக்க வேண்டும்.



    இன்றைய சூழலில் சமுதாயத்தை மாற்ற மேடைப்பேச்சோ பல வகையான அறிவுரைக் கட்டுரைகளோ அவசியமில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்குதலே இன்றியமையாததாகும். அதுவே நாம் நாட்டிற்குச் செய்யும் முதற்கடமையுமாகும். நல்ல கல்வியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களிடத்து மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அறிவைப் பெருக்கி, இளம் உள்ளங்களில் நற்பண்புகள் என்னும் விதைகளைத் தூவி, அவர்களை வளர்த்தால் உறுதியாக நம் சமுதாயம் சீர்பெறும்.

    உணவு, உடை, பழக்க வழக்கங்கள், திருமணம் போன்ற விழாக்களின் நிகழ்முறைகள் போன்றவை அனைத்தும் தமிழர்களின் மரபுப்படி அர்த்தமுள்ளவை. நம் நாடு பல்வேறு தட்பவெப்ப நிலைக்கு உட்பட்டது. அந்நிலையில் உணவு, உடை போன்றவற்றையும் அந்நிலைக்கு ஏற்றவகையிலேயே அமைத்துள்ளனர். ஆனால் அதைத் தவிர்த்து உணவுப் பழக்க வழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ளும்போது அவை நம் தட்பவெப்பத்திற்கு ஏற்றதாக அமையாமல் பல நோய்களை ஏற்படுத்துகிறது.

    நாகரிகம் என்னும் பெயரில் இன்று உடையமைப்பில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடியும். உடுத்தும் உடையில் மருத்துவம் நிறைந்துள்ளது என அறிஞர்கள் கூறுவர். நம் தட்பவெட்பத்திற்குப் பருத்தியாடையே மிகச் சிறந்தது என்கின்றனர். ஆனால் இன்று அதை விடுத்து ஆணும், பெண்ணும் உடல் நலத்தைப் பாதிக்கும் வகையில் உடை உடுத்துவது நாகரிகச் சிதைவையே உணர்த்துகிறது.

    தமிழர்கள் தங்களின் தலை சிறந்த நாகரிகங்களை முற்றிலுமாக மறந்துவிடும் காலம் மிக அருகில் வந்துவிட்டது என்பதைத் தற்காலச் சூழலில் உணரமுடிகிறது. மொழியும், பண்பாடும் ஒவ்வொரு மனிதருக்கும் முகவரியாக அமைவன ஆகும். இவை இரண்டும் இல்லையெனில் மனிதன் அடையாளமின்றி முகவரி இல்லாத அனாதையாகிவிடுவான். தமிழர்களுக்கு அந்தநிலை வெகுதூரமில்லை.

    முனைவர் இரா.கீதா, பேராசிரியர், தனியார்கல்லூரி, காரைக்குடி.
    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்ப திரும்ப விடா முயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும். எந்தக் காரியமுமே தொடங்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடப்பதற்கு முன்பு விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றனர்.

    கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது. புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கை மண்அளவுதான் என்று புத்தகங்களை படிக்க படிக்க புரியும்.

    ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள். அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் புகழ் பெறுவதற்கு முன்பு எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளை தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், “வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான் அவசியம். நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்” என்கிறார்.

    ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே. தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு. ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே. இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.

    பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியே அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக மேடம் கியூரி, மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அகிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது. உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது.

    அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள். சாதனை படைத்தார்கள். இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது. திருவள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்று.

    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    * உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது.

    * யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

    * நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.

    * மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுங்கள்.

    * ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று நினைப்பதை விட, ‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்.

    * மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள். அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

    * நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்.

    * சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

    * பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று.

    * எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

    * உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள்….
    கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
    கோபத்தைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளும் இருக்கின்றன. கோபத்தை உள்ளுக்குள் போட்டு அடக்காதே. அதை கொட்டிவிடுவதுதான் நல்லது என்பார்கள். ஆனால், கோபத்தை உள்ளே அடக்குவது, வெளியே கொட்டுவது இரண்டுமே ஆபத்தானது. அதற்காக, யாரிடம் போய் கோபத்தில் வெடிக்கலாமென பார்த்துக்கொண்டிருக்க அவசியமில்லை. கோபத்தில் கொப்பளிக்காமலேயே உணர்ச்சிகளைத் தெரிவிக்க உங்களால் பழகிக்கொள்ளலாம்.

    இதேபோல் நான் எனக்குக்கீழ் இருப்பவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால் என்னை ஏறி மிதிப்பார்கள் என்ற நம்பிக்கையும் பலருக்கு உண்டு. கோபத்தை அடக்கி சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்வதற்கு மிகுந்த நெஞ்சுரம் தேவை. நீங்கள் அப்படி நடக்கும்போது அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக மதிப்பார்கள்.

    நான் கோபப்படவில்லையென்றாலும், ஒண்ணுமில்லாத விஷயத்துக்குக்கூட தேவையில்லாமல் வீண் வாக்குவாதம் செய்து நம்மை டென்ஷனாக்குவதற்கென்றே சிலர் இருக்கிறார்களே... அப்படி நம்மை சீண்டுகிறவர்களிடம் எப்படி கோபப்படாமல் நிதானமாக இருக்க முடியும்? இந்தக் கேள்வி நியாயமானதுதான். உங்கள் கோபம் சரியானதாக இருந்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் உண்மையில், கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடத்தில்தான் கோபத்தை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

    அடிக்கடி ‘மூட் அவுட்’ ஆவது உங்களது சுபாவமாக இருந்தால், இதுவரை உங்களுடைய கோபத்திற்கான பழியை அடுத்தவர் மீது சுமத்தியிருக்கலாம். அவர்கள்தான் என்னை கோபப்பட வைத்தார்கள் என்று உங்களுடைய உணர்ச்சிகளின் ரிமோட் கன்ட்ரோலை மற்றவர்களிடம் கொடுத்திருப்பீர்கள். இனி அந்த ரிமோட் கன்ட்ரோலை உங்கள் கைக்கு கொண்டுவந்துவிடுங்கள். அதற்கு முதலில், ‘நான்தான் ஆத்திரப்பட்டுவிட்டேன். இதற்கு முழுவதும் நான் மட்டும்தான் காரணம்’ என்று உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சூழலை கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும்.

    உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் சூழல் எது? அப்போது என்ன நடந்தது? கோபம் வரும்போது எப்படி நடந்துகொண்டீர்கள்? எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்? இவற்றையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டால், அடுத்த முறை அதேபோன்ற சூழல் வரும்போது அதை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்.

    யாராவது நம்மை கோபப்படுத்தினால் சட்டென்று யோசிக்காமல் எதையும் பேசாதீர்கள். நிதானமாக யோசித்துப் பிறகு பேசலாம். மூச்சை நன்றாக இழுத்துவிட்டோ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டோ பிறகு பேசலாம். அப்போது கோபம் அடங்கி நிதானமாக பேச முடியும்.

    ஏதாவது பிரச்னை வரும்போது உங்கள் பக்கத்திலிருந்து மட்டும் யோசித்திருப்பீர்கள். எதிரில் இருப்பவரின் சூழலையும் யோசிக்க வேண்டும். பிரச்னையை அவருடைய கோணத்திலிருந்து யோசித்து பார்க்கலாம். குறிப்பாக சின்ன விஷயமாக இருந்தால் பெரிசு பண்ண
    வேண்டாமே…

    எதிரில் இருப்பவர் என்ன பேசினால் நமக்கு கோபம் வரும்? எந்தச் சூழலில் எனக்கு கோபம் தலைக்கேற வாய்ப்புள்ளது? என்பதை முன்கூட்டி கணித்து விட்டால் அதற்கு எப்படி நாம் எதிர்வினையாற்றுவது என்பதை தீர்மானித்து வைத்துக் கொண்டால் பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம் அல்லது அந்த சூழல் வரும்போது, அங்கிருந்து நகர்ந்து விடலாம். அது சூழலின் தீவிரத்தன்மையை குறைத்துவிடும்.

    சில நேரங்களில் அலுவல் ரீதியான கோபத்தையோ, வயதில் மூத்தவரிடம் உண்டாகும் கோபத்தையோ வெளிக்காட்ட முடியாது. அதற்கு சிறந்த வழி. ஒரு பேப்பரில் அவரைத் திட்ட நினைப்பதையெல்லாம் எழுதி, அதை கிழித்தெறிந்து விடுங்கள். 
    சிரிப்பது போன்ற தோற்றமே சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.
    எல்லாரும் மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்புகிறார்கள்... ஆனால் மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியவில்லை.!

    மகிழ்ச்சியாக இருக்க ஏதோ ஒரு  பெரிய விஷயம் நடக்க வேண்டும் என்பதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தரவேண்டியதில்லை. அதை தேடி நீங்களும் போக வேண்டியதில்லை. ஏன் என்றால் அது உங்களிடமேதான் எப்போதும் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம்.
    மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

    மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் படியே சிரிப்பதுதான். முகத்தில் புன்னகை மலர்ந்தால் அகத்தில் மகிழ்ச்சி மலரும். அதற்காக குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. மெல்லியதாக ஒரு புன்னகை பூத்தாலே போதும். உங்கள் மனதில் மகிழ்ச்சி மலரும். உங்கள் மனத்திற்குள் மகிழ்ச்சியை சுரக்க செய்வது ஒரு ஹார்மோன்தான். அந்த மாமருந்துக்கு பெயர் என்ன தெரியுமா? எண்டோர்ஃபின்ஸ். இது வெளியே எங்கேயும் இல்லை. உங்களுக்குள்தான் இருக்கிறது.

    “நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்தாலே போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோனை சுரக்கும்படி பிட்யூட்டரி சுரப்பிற்கு மூளை கட்டளையிடும். அடுத்த சில நெடிகளில் எண்டோர்ஃபின்ஸ் சுரக்க, மனசுக்குள் மகிழ்ச்சியும் உடலில் புத்துணர்ச்சியும் தோன்றும். இந்த ஹார்மோன் எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா? நீங்கள் நகைச்சுவை உணர்வோடு இருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும் போது, உடலை நேராக நிமிர்த்தி யோகா செய்யும் போது, எந்தவொரு செயலையும் விரும்பி செய்யும் போது ஆகிய தருணங்களில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும்.

    அப்படியானால் இதற்கு எப்போதும்  இதுபோன்ற ஒரு செயலை செய்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும். அவ்வாறு செய்வது நல்லதுதான். ஆனால் முடியாத பட்சத்தில் இந்த எளிதான விசயத்தை செய்யலாம். அது என்னவென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பாசாங்கு அதாவது பாவனை செய்வதுதான்.

    பாசாங்கு செய்வதால் பலன் கிடைக்குமா?

    மகிழ்ச்சி குறித்து பாசாங்கு செய்யும் போது உங்கள் மனம் அதை நிஜம் என்பது நம்பி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தயார் என உங்கள் மூளைக்கு தகவல் வரும். உடனே எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.

    சோகத்தின் போது நம்மில் பலர் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விடுவார்கள். பிரச்சினைகளால் மனம் சங்கடப்படும் போது அல்லது கடந்த கால சோக சம்பவங்கள் எதையாவது நினைக்கும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் ஒரு கையால் கன்னத்தில் தாங்கி கொள்வீர்கள். இது எதனால் என்றால் துன்பத்தில் இருக்கும் தன்னை, தன் பிரச்சினைகளை யாராவது தாங்கிக் கொள்ள மாட்டார்களா? என்ற ஏக்கத்தின் வெளிபாடுதான் அது.

    அத்தகைய சமயங்களில் “கன்னத்தில் கை வைக்காதே... கப்பலா மூழ்கி விட்டது?” என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது ஏன் தெரியுமா?நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நாமேதான் தீர்க்க வேண்டும். அதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கக்கூடாது. பிறர் தீர்த்து வைப்பார் என்று எண்ணினால் துன்பத்தில் நாம் மூழ்கி போவோம்.

    நம்முடைய உடல் அசைவுகள் மற்றும்  மனநிலைகளை  மூளை உற்று கவனித்து அதற்குரிய சுரபிகளை சுரக்க செய்கிறது. கன்னத்தில் கை வைத்தபடியே கொஞ்சம் சிரிக்க முயன்று பாருங்கள். கண்களில் டன் டனாக சோகம் வழியுமே தவிர உள்ளத்தில் உற்சாகம் பிறக்காது. கன்னத்தை தாங்கி கொண்டிருக்கும் கையை சட்டென எடுத்து விட்டு உங்கள் உதட்டை புன்னகைப்பது போல் செய்யுங்கள். அவ்வளவுதான். உங்கள் சோகம் காணாமல் போய் விடும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மூளைக்கு செய்தி போகும். மூளை அதை அதிகப்படுத்துவதற்காக எண்டோர்ஃபின்ஸ் ஹார்மோனை சுரக்க செய்யும். உடனே உண்மையான உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் தொற்றிக்கொள்ளும்.

    சிரிப்பது போன்ற தோற்றமே இப்படி சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.

    Email:fajila@hotmil.com
    வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.
    இன்றைய தனிமனித உறவு நிலைகள், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றில் ஏற்படும் பல சிக்கல்கள், வன்முறைகள், கலவரங்கள், உயிர்ப்பலிகள் போன்றவற்றிற்கான மூல காரணம் பழிவாங்கும் உணர்ச்சியாகும். தனக்கு தீமை செய்த ஒருவனை, தனக்கு அவமரியாதை ஏற்பட காரணமான ஒரு மனிதனை, பாதிக்கப்பட்டவன் எவ்வாறேனும் பழிவாங்க துடிக்கிறான். இதன் விளைவு தான் சமூகத் தீமைகள் மற்றும் வன்முறைகளின் பெருக்கம். இவற்றை தவிர்க்கவும் வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.

    அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியதில், நரம்புக் கோளாறு, கோபம் முதலிய குறைபாடுடையவர்கள் தாம் பழிவாங்கும் பண்புடையவர்களாக இருக்கின்றனர். மன்னிக்கும் பண்புடையவர்கள் மகிழ்ச்சியும், உடல் நலமும் உடையவர்களாக வாழ்கின்றனர் என்ற முடிவு வெளிப்பட்டுள்ளது. மன்னிக்கும் மாண்புடைய மனிதர்களின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் முதலியன சிறந்த முறையில் இயங்குகின்றன என்ற உண்மையும் வெளிப்பட்டது.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரட் லஸ்கின் பல்லாண்டுகள் செய்த ஆய்வின் முடிவில், மன்னிக்கும் பண்பு ஒருவரின் உடல் நலத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது என்று கண்டறிந்தார். அரசியல், சமய ரீதியான முரண்பாடுகளினால் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளிடையே பேராசிரியர் பிரட் லஸ்கின் நடத்திய ஆய்வில் வியத்தகு முடிவுகளைக் கண்டறிந்தார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிக்கும் பண்பின் தேவையை நன்கு உணர்த்திய பின்னர், காலப்போக்கில் அவர்கள் மனநிலைகளில் கோபம், பதற்றம் ஆகியவை குறைந்து, அவர்களிடம் நம்பிக்கை பண்பு துளிர்த்ததையும் மன அழுத்தம், அதன் விளைவான நோய்களின்றி அவர்கள் வாழ்ந்ததையும் பிரட் லஸ்கின் சான்றுகளுடன் வெளியுலகிற்கு உணர்த்தினார். எனவே மன்னிக்கும் மாண்பு எவரிடம் இருக்கிறதோ அவர் நோயின்றி, மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதை இந்நூற்றாண்டின் ஆய்வுகள் விளக்குகின்றன.

    வாழ்வியல் அறங்களைச் சிறப்பாக எடுத்துரைத்த வள்ளுவர் மன்னிப்பின் மாண்பினைப் பல குறட்பாக்களில் விளக்குகிறார். தீமை செய்த ஒருவனை தண்டிப்பதால் மனத்தில் ஒரு வகை நிறைவு, மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மைதான்; ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே நாளில் முடிந்து விடும். தண்டிக்கப்பட்டவன் மீண்டும் ஏதாவது தீமை செய்து விடுவானோ என்ற அச்சம் அதன் பின்னர் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்; அதற்கு மாறாக, தீமை செய்தவனை மன்னித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியும் புகழும், நிலைத்திருக்கும் என்ற கருத்து தோன்றும்படி,

    “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
    பொன்றும் துணையும் புகழ்”

    என்ற குறட்பாவினைத் தந்திருக்கிறார் வள்ளுவர். ஒருவரை மன்னிப்பது இயலாமையின் குறியீடு அல்ல; அது வீரம், தகுதியின் குறியீடாகும். உலகம் சீராக தடையின்றி இயங்குவதற்கு தேவையான அறக்கருத்துகளைக் கூறும் ஒரு கலித்தொகைப் பாடலில், “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்று கூறப்படுகிறது. பொறுமை, மன்னித்தல் போன்ற பண்புகள் வலிமையுடையவரிடம் காணப்பட்டால், அது பண்புகளிலெல்லாம் மேம்பட்ட சிறந்த பண்பாகிறது என்று நாலடியார் கூறுகிறது.

    “ஒறுக்கும் மதுகை உரணுடை யாளன்
    பொறுக்கும் பொறையே பொறை”

    என்பது நாலடியார் கூறும் கருத்து.

    மன்னிப்பின் மாண்பினைச் சிலப்பதிகாரம் நன்கு உணர்த்துகிறது. தன்னைப் பிரிந்து மாதவியின் இல்லம் சென்று தங்கியிருந்து திரும்பிய கணவன் கோவலன் தன் செயல் பற்றிய குற்றவுணர்வினால் வருந்தும் போது, கண்ணகி எந்த விதமான கோபத்தையும் முகத்தில் காட்டாமல், தன் காற்சிலம்புகளை எடுத்துச் “சிலம்புள கொண்ம்” என்று கூறுகிறாள். இந்த மன்னிப்பினால் கோவலன் மனம் மேலும் துன்புற்று, பண்பட்டு இழந்த பொருள்களை மீட்க வேண்டும் என்ற உந்துதல் பெறுகிறான். மன்னிப்பினால் கண்ணகியின் மாண்பும் உணர்கிறது; கோவலனும் தன் மனத்தை நல்வழியை நோக்கித் திருப்புகிறான்.

    கம்பராமாயணத்தின் இறுதிப்பகுதியில் மன்னிப்பின் சிறப்பு கூறப்படுகிறது. போர்கள் முடிந்த பின் சீதை அக்கினிப்பிரவேசம் செய்து மீண்ட பின் தசரதன் விண்ணுலகினின்று தோன்றி, சீதையிடம், ராமன் மீது சீற்றம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். சீதையின் தூய்மையையும், சிறப்பினையும் உலகிற்கு காட்டவே ராமன், சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யத் தூண்டினான் என்று கூறி, “கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்” என்று தசரதன் சீதையிடம் வேண்டுகிறான். தான் நாடும் மணிமுடியும் துறக்க காரணமாக இருந்த கைகேயியை மன்னித்து அருளும்படி தசரதனிடம் ராமன் கேட்கிறான். இது ராமனின் மன்னிக்கும் பண்பு; இதைக் கேட்டு உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் “வாய்திறந்து அழுது ஆர்த்தன” என்று கம்பர் குறிப்பிடுகிறார். மன்னிக்கும் பண்பின் உயர்வினை குறிக்கும் குறியீடாக ராமன் திகழ்கின்றான்.

    சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியில், கண்ணகி தெய்வ வடிவில் தோன்றி, ‘தன் கணவன் பாண்டிய மன்னனால் கொலையுண்டது விதி வசம்; மன்னன் மீது ஏதும் குற்றமில்லை’ என்று மன்னித்து விடுகிறாள். “தென்னவன் தீதிலன் தேவர் கோன் தன் கோயில் நல்விருந்தாயினான்; நான் அவன்றன் மகள்” என்று கூறுகிறாள். மன்னிக்கும் பண்பின் மாண்பு இது. தவறுகள் நடப்பது உலகத்தின் இயல்பு; எனினும் தவறுகளையும், அவற்றின் விளைவுகளையும் மனத்தில் பூட்டிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அது சமூக இயக்கத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தினைத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறது.

    டாக்டர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
    தனி வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
    தனி வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வீட்டை பூட்டிவிட்டு சில வாரங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படலாம். அந்த நிலையில் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

    * வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் இடும் பழக்கம் கொண்டவர்கள் ஊரில் இல்லாத சமயத்தில், தினமும் அந்த பணியை செய்வதற்கு நன்றாக அறிமுகம் உள்ளவர்களை அமர்த்துவதே பாதுகாப்பானது. அவரையே வீட்டில் உள்ள செடிகளுக்கு, தினமும் தண்ணீர் விடச்சொல்லலாம்.

    * நியூஸ் பேப்பர், தபால், கொரியர் ஆகியவற்றை வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் அல்லது அறிமுகமான கடைகளில் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

    * வீட்டில் போர்டிகோ, பால்கனி, பின்பக்கம் ஆகிய வீட்டை சுற்றிலும் உள்ள பகுதிகள், வீட்டிற்கு உட்புறம் ஆகியவற்றில் சிறிய மின் விளக்குகளை நீங்கள் திரும்பி வரும்வரை ஒளிரும்படி செய்வதும் பாதுகாப்பானது.

    * வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், வண்ண மீன்கள் போன்றவற்றை பிரயாணம் செல்வதற்கு ஒரு வாரம் முன்னதாகவே அருகில் உள்ள Pet Shelter ஒன்றில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்வது நல்லது.

    * வாட்டர் ஹீட்டர், தொலைக்காட்சி, நீரேற்றும் மோட்டர், கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய், கேஸ் சிலிண்டர், வாஷிங் மிஷின், வாட்டர் லைன், ஏர் கண்டிஷனர், மைக்ரோவேவ் ஓவன், அயர்ன் பாக்ஸ், டிஷ் வாஷர், வாக்குவம் கிளனர் ஆகியவற்றின் மின்சார இணைப்புகளை துண்டித்திருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

    * பிரிட்ஜ் மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை காலி செய்து, சுத்தமாக துடைத்து உலர வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றிற்கான கவர்கள் இருந்தால் மூடி வைப்பது நல்லது.

    * கதவு, ஜன்னல்களை அடைத்து, ஸ்கிரீன்களை முழுவதுமாக இழுத்து விடப்படுவதுடன், குளியலறை வெண்டிலேட்டர்கள் கச்சிதமாக அடைக்கப்படுவது அவசியம். அவசியத்துக்கு ஏற்ப கதவுகளை கூடுதல் பூட்டுகள் கொண்டு பூட்டி வைக்கலாம்.

    * கூடுதல் முன்னெச்சரிக்கையாக கதவுகள், ஜன்னல், இரும்பு கேட் ஆகியவற்றில் திறந்தால் ஒலி எழுப்பும் அலாரங்களை பொருத்தலாம். வீட்டில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள்ள பழைய பதிவுகளை தக்க விதத்தில் சேமித்த பின்னர் அவை காட்சிகளை பதிவு செய்யும் நிலையில் ‘ஆன்’ செய்வது முக்கியம்.

    * சில அவசரமான சூழ்நிலைகளில் வீட்டை திறக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதன் அடிப்படையில் நன்றாக அறிமுகம் ஆன பக்கத்து வீட்டில் உள்ளவர் அல்லது அருகாமையில் உள்ளவர்களிடம் வெளி கேட் மற்றும் பிரதான நுழைவாசல் ஆகியவற்றின் கூடுதல் சாவியை கொடுத்து வைக்கலாம். 
    வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.
    மனபலம் நிறைந்த பெண்களால் மட்டுமே வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும். மனபலம் என்பது இன்னொருவரிடம் இருந்து பெறப்படும் விஷயம் அல்ல, ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் தானே அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவம் என்பது பொருள் பொதிந்த வார்த்தையாகும், வாழ்க்கையில் ஒருவருக்கு வெற்றியை விட தோல்விகளே அதிக அனுபவத்தைத் தரும். வெற்றியில் கிடைக்கும் அனுபவம் எல்லைக்கு உட்பட்டது, ஆனால் தோல்வியில் கிடைக்கும் அனுபவங்கள் எல்லை இல்லாதது. அதனால் தோல்விகளை கண்டு ஒருபோதும் துவண்டுவிடாதீர்கள்.

    பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகள்:

    நிறைய புத்தகங்களைப் படியுங்கள். சாதனையாளர் களின் சுய சரிதைகளை படித்து அவர்கள் கடந்து சென்ற பாதைகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்களையும், தோல்விகளையும் சந்திக்கும்போதெல்லாம், ‘நாம் கஷ்டங்களை சந்திப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்’ என்று நினைத்தால் மனம் சோர்ந்து போகும். மாறாக அந்த மாதிரியான நேரங்களில், ‘நாம் வாழப் பிறந்திருக்கிறோம். நிச்சயம் வெற்றியடைவோம்’ என்ற தன்னம்பிக்கையை மனதில் அதிகரிக்கச் செய்யவேண்டும்.

    நீங்கள் எந்த துறையில் இறங்கினாலும் உங்களுக்கு அதைப்பற்றிய அடிப்படை அறிவு தேவை. அதனை கல்வி மூலமும், பக்குவம் மூலமும் பெற்றிடுங்கள். கல்வியும், பக்குவமும், பண்பான செயல்பாடுகளும் உங்கள் மனோபலத்தை அதிகரிக்கச்செய்யும்.

    குறைகள் இல்லாத பெண்கள் இல்லை. வெற்றியடைந்த எல்லா பெண்களுமே, குறை என்ற அந்த சுமையையும் சுமந்துகொண்டுதான் வெற்றியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். குறைகளை முடிந்த அளவு நிவர்த்திசெய்யுங்கள். அதன் மூலம் சுமைகள் குறைந்து, வெற்றிக்கான உங்கள் பயணம் சுகமானதாக மாறும்.

    குறைகள் எல்லா பெண்களிடமும் இருப்பதுபோல் நிறைகளும் எல்லா பெண்களிடமும் இருக்கின்றன. அந்த நிறைகளை அடையாளங்காணவேண்டும். அவைகளை மேம்படுத்தவேண்டும். மேம்படுத்தும் அந்த பயணத்தில் தொடக்கத்தில் சிலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து முயற்சித்தால் தயக்கம் அகலும். மனோபலம் மேம்படும்.

    பெண்கள் ஒருபோதும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. பொது இடங்களில் நிற்கவும் பொதுமக்களிடம் பேசவும் தயங்குகிறவர்கள் மனோபலம் இல்லாதவர்கள். அத்தகைய குறைகள் உங்களை குடத்தில் இட்ட விளக்காய் மாற்றிவிடும். அதனால் உங்களுக்குரிய அங்கீகாரத்தைப்பெற எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள். அது அன்பானதாகவும், எல்லைகொண்டதாகவும், அர்த்தமிக்கதாகவும் இருக்கவேண்டும்.

    பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற எண்ணம் தவறு. இன்றைய சமுதாயத்தில் பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. எல்லா துறைகளிலும் அவர்களால் சிறந்துவிளங்கமுடியும். ‘நானும் ஒரு பெண். என்னாலும் பிரகாசிக்கமுடியும்’ என அடிக்கடி உங்கள் மனதிடமே சொல்லிக் கொள்ளுங்கள். மனோபலம் அதிகரிக்கும்.

    உங்கள் மனோபலத்தை சிதைப்பது மனநெருக்கடிதான், அந்த மன நெருக்கடியை களைந்து மனோபலத்தை பெருக்க முதலில், எந்த நேரம் உங்களுக்கு அதிக மன நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கணியுங்கள், அந்த நேரத்தில் குறைந்தது 15 நிமிடம் அமைதியாக நடந்தால் மனநெருக்கடி நீங்கும். தினமும் குறைந்தது 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். அந்த நேரத்தில் வேறு சிந்தனைகள் எதுவும் இல்லாமல் மனது அமைதியாகும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ செலவிட வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி வையுங்கள். அன்று முழுக்க உங்கள் மனதில் சந்தோஷம் பொங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

    உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு அவசியம் தேவை. அது இசை கேட்பதற்காகவோ, நடனம் ஆடுவதாகவோ, அல்லது பார்ப்பதாகவோ, ஓவியம் வரைவதற்காகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டு அருகில் பூஞ்செடிகள் வைத்து பராமரியுங்கள். வளர்ப்பு பிராணிகளிடமும் அன்பு செலுத்துங்கள். மனநெருக்கடிகளில் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டால் மனம் அமைதிபெறும். அப்போது சிந்தனையும், செயல்திறனும் நன்றாக இருக்கும். புதிய நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மனோபலத்தை அதிகரிக்கும்.
    எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். நம் எண்ணங்களில் எவையெல்லாம் நீந்துகின்றனவோ அவைகளே வாழ்க்கையில் நடக்கும்.
    நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே என்கிறார் அறிஞர் ஆலன் கோஹென்.

    அது எப்படி நடக்கும். விளக்கமாக கூறுங்களேன்...

    ஒரு விஷயம் உண்மை என்பதோ பொய் என்பதோ நீங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை, காதால் கேட்பதில் இல்லை. தீர விசாரிப்பதில்தான் இருக்கிறது.
    விசாரணை என்றால் வேறு யாரிடமும் அல்ல. உங்களிடம்தான்... அதாவது உங்கள் ஆழ் மனதிடம். உங்கள் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை பொறுத்துதான் நீங்கள் காணும் விசயம் அமைகிறது.

    என்ன குழப்பமாக இருக்கிறதா? உங்களை சுற்றிலும் இருந்து நீங்கள் அறிந்தும் அறியாத நிலையிலும் ஒரு நிமிடத்திற்கு 400 மில்லியன் தகவல் துணுக்குகள் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்பூலங்கள் மூலமாக உங்களை வந்தடைகிறது. இதில் வெறும் 2000 தகவல்களை மட்டுமே உங்கள் மனதால் கிரகிக்க முடியும். சுற்றிலும் இருந்து செய்திகள் வந்து விழுந்தாலும் உங்கள் மனதுக்குள் இருக்கும் தகவல் வடிகட்டி அவற்றை எல்லாம் பல வகைகளில் பிரித்து வடிகட்டி உங்களுக்குள் அனுப்புகிறது.

    உங்களுக்கு எதில் விருப்பமும் ஈடுபாடும் இருக்கிறதோ, உங்கள் கவனம் எதை நோக்கி செல்லுகிறதோ, உங்கள் மனம் எதை ஈர்க்கிறதோ என்பதை பொறுத்து அத்தகைய செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். அதனால்தான் ஒரு விஷயம் குறித்து எல்லோரும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூறுகிறார்கள்.

    உதாரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு பலதரப்பட்ட மக்களும் வருகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே பொருளை வாங்குவதில்லை. கணவன்-மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் சென்றாலும் ஒவ்வொருவருடைய தேவையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனமும் தன்னை சுற்றி வரும் செய்திகளில் தனக்கு பரிச்சயமானதை, விருப்பமானதை மட்டும் வடிகட்டி எடுக்குக்கொள்ளும்.

    இதில் மனம் எப்படி செயல்படுகிறது?

    நீக்குதல், விலக்குதல், பொதுமைப் படுத்துதல் ஆகிய மூன்று விதங்களில் மனம் தகவல்களை வடிகட்டுகிறது. முதலில் நீக்குதல் என்பதை பார்ப்போம். உங்கள் சிந்தனை நேர்மறையாக இருந்தால் உங்களை சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் நேர் மறையானவற்றை மட்டும் தனக்குள் ஈர்க்கும். உங்கள் சிந்தனை எதிர்மறையாக இருந்தால் அத்தகைய எதிர்மறையான செய்திகளை மட்டுமே கவரும்.

    உதாரணமாக ஒருவர் உங்களை புகழ்ந்து பாராட்டினால் உங்களுக்கு நேர்மறை எண்ணம் இருந்தால் அதை நினைத்து மகிழும். எதிர்மறை எண்ணம் இருந்தால் இவர் நம்மை புகழ்வது போல் இகழ்கிறாரோ என்று நினைத்து மனம் அங்கலாய்க்கும். அடுத்து விலகுதல், இது உங் களை சுற்றி என்ன நடந் தாலும் இவர்கள் இப்படிதான் சொன்னார்கள், இது இப்படித்தான் நடந்தது என்று நினைக்கும் உங்கள் மனம் அதை தான் விரும்பவது போல் மாற்றி எடுத்துக்கொள்ளும்.

    நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மேல் அதிகாரியிடம் 2 நாட்கள் லீவு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் அவசியம் லீவு வேணுமா? என்று கேட்கிறார். அந்த சமயத்தில் நீங்கள் நேர்மறை சிந்தனையுடன் இருந்தால் உங்கள் மனம் லீவு தருவார், ஆனால் விளக்கம் கேட்கிறாரே என்று எண்ண வைக்கும். எதிர்மறை எண்ணத்துடன் இருந்தால் லீவு தரமாட்டார் என்று நினைத்து வருந்தச் செய்யும்.

    எனவே நேர்மறை சிந்தனை கொண்டிருந்தால் எந்த சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் மனம் சாதகமான செய்திகளை மட்டுமே தனக்குள் எடுத்துக்கொள்ளும். அது எப்படி சொல்லப்பட்டாலும் தனக்கு ஏற்ப நேர்மறையாக மாற்றிக் கொள்ளும். நேர்மறையான நல்ல எண்ணங்கள் கொண்டவர்களையே தன்னிடம் ஈர்க்கும்.

    அதுவே எதிர்மறை சிந்தனை கொண்டிருந்தால் நல்லதே நடந்தாலும் அதனை எதிர்மறை விஷயமாக எண்ண வைக்கும். எதிர்மறையான மனிதர்களையும் செயல்களையுமே தன்பால் ஈர்க்கும். அவர்கள் மனம் அவ்வாறே செயல்படும். அதனால்தான் இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். சூழ்நிலையை கையாளும் விதத் தில்தான் உங்கள் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. நல்லவற்றை நினைத்தால் நல்லதே நடக்கும். எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தால் எதிலும் அதிருப்தியே நிலவும்.

    அடுத்து பொதுமைப்படுத்துதல் குறித்து பார்ப்போம். உங்கள் வாழ்க் கையில் எதிர்மறையான விஷயங்கள் தொடர்ந்து ஒரிரு முறை நிகழ்ந்து விட்டால் அதன் பிறகு உங்கள் மனம் இனி எப்போதும் அப்படியே தான் நடக்கும் என்று நினைத்து வருத்தப்படும். இதனால் அடுத்து எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஒத்துழைக்காமல் முரண்டு செய்யும். உங்கள் மனம் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பொதுமைப் படுத்தி பார்ப்பதால் உண்டாகும் பிரச்சினை இது.

    எனவே அடுத்த முறை உங்கள் மனம் “ஏன் எனக்கு மட்டும் எப்போதும் இப்படி நடக்கிறது-?” என வருந்தும் போது, நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து “எப்போதுமேவா இப்படி நடக்கிறது?” என்ற எதிர் கேள்வியை அதனிடம் கேளுங்கள். அவ்வளவுதான். உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற்ற தருணங்களும் நினைவுக்கு வரும். எப்போதும் தோல்வியே தொடரவில்லை. பல முறை வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பது புரியும்.
    இப்படி பகுப்பாய்வு செய்தால் மனதுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். அடுத்த முயற்சிக்கு உங்கள் மனம் தயாராகும். பிறகு என்ன? தொட்டக் காரியம் எல்லாம் வெற்றிதான்.

    பொதுவாக அனைவரது மனமும் பாராட்டை, தட்டிக்கொடுத்தலை விரும்பும். அதே சமயம் பிறரது குறைகளை கண்டுபிடிப்பதே பாராட்டை பெறுவதற்கான எளிய வழி என்று நினைப்பதால் மனம் குறைகளையே ஈர்க்கிறது. அதுவே மற்றவர்களை மனம் விட்டு பாராட்டும் போது அவர்கள் மனம் மகிழும். அதோடு உங்கள் மனதும் அதனை ஈர்த்து உங்களை மகிழ் விக்கும்.

    உங்கள் மனம் நேர்மறை சிந்தனை உடையதாக இருந்தால் நீங்கள் எதை பார்த்தாலும் அதிலிருக்கும் நல்லவை மட்டுமே உங்கள் கண்களுக்கு தென்படும். நீங்கள் எதை கேட்டாலும் அதிலுள்ள நல்லவை மட்டுமே உங்கள் செவியில் நுழைந்து மனதில் புகும். எனவே நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்து இருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள். நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம்.

    Email:fajila@hotmil.com
    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
    ‘திருமணம் செய்துகொண்டால் அழகு போய்விடும். ஆற்றலும் குறைந்துவிடும். சுதந்திரம் பறிபோய், சாதிக்கும் துடிப்பும் மங்கிவிடும்’ என்று திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள் சொல்வதுண்டு. அவர்களுக்கு சவால்விடும் விதத்தில் அழகைப் பேணி, ஆற்றலை மேம்படுத்தி, துடிப்போடு சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், திருமணமான பெண்கள். மேடைகளில் அரங்கேறும் அவர்களது திறமைகளை பார்த்து, திருமணமாகாத பெண்களே ஆச்சரியப்பட்டு அசந்து போகிறார்கள்.

    ‘திருமணம் ஒருபோதும் பெண்களின் திறமைக்கு தடையில்லை’ என்பதை நிரூபிக்க களம் அமைத்துத் தருகிறது, ‘மிஸஸ் சென்னை’ எனப்படும் திருமதி சென்னை திறன்மிகு போட்டி.

    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. குழந்தையை வளர்ப்பது என்பது நமக்கு கடினமான வேலையில்லை. நமது குழந்தை எப்படி வளரவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே நாம் வாழ்ந்து காட்டவேண்டும்.

    திருமணமான பெண்கள் தாய்மையடைந்து பிரசவித்ததும் இயல்பாகவே அவர்களது உடல் எடை அதிகரித்து விடுகிறது. அதை சுட்டிக்காட்டிதான், திருமணத்திற்கு பின்பு பெண்களின் அழகு குலைந்துவிடுவதாக சொல்கிறார்கள். தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளை செய்துவந்தால், உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

    மணமான பெண்கள் இப்போது உடல்வலுவோடுதான் இருக்கிறார்கள். ஆனால் செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும் மனஅழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சியளி்க்கிறார்கள். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் சிந்தனை, செயல் எல்லாவற்றிலுமே மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உருவாகும். 40 வயதுகளில் நிற்கும் அம்மாக்கள் அனைவருமே உடல் நலத்தோடு, மனநலத்தையும் பாதுகாத்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கான முயற்சிகளை பெண்கள் முழுமனதோடு மேற்கொள்ளவேண்டும்.

    மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் உயிரோட்டமான புன்னகை இருந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்கவேண்டும். மனநிறைவு பெறவேண்டுமானால் இருப்பதைக் கொண்டு திருப்தியடையவேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணால், அவளது குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். மகிழ்ச்சியும், மனதில் கருணையும் இருந்தால், நம்மால் பேரழகியாக வலம்வர முடியும்.

    உங்களது எதிரி முன்பு துவண்டு போய் அவர் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை நீங்களே ஏற்படுத்திதாராதீர்கள். 'சிரிப்பு' என்ற ஒற்றை ஆயுதம் உங்கள் எதிரியை வீழ்த்துவதற்கு போதுமானது..
    சிரிப்பு எவ்வளவு பெரிய அற்புதம் என்று என்றாவது ஒரு நாள் உணர்ந்ததுண்டா. சிரிப்பு வலிமையை வெல்வதற்கான ஆயதம். புன்னகை செய்வது அனைவராலும் முடியும். ஆனால் சிரிப்பது ஒரு சிலரால் மட்டும் தான் முடியும்.

    நம் வாழ்வில் நாம் செய்யும் பெரிய தவறே ஒரு விஷயத்தை பற்றி தீர சிந்தித்து அந்த நேரம் அனைத்தையும் இழப்பதே. அது நம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக பாதிப்பையே தரக்கூடியது.

    பிரச்சனை வாழ்வில் வருவதும் போவதுமாகத் தான் இருக்கும். அதற்காக சிரிப்பதை மறந்தால் மன நிம்மதியை இழக்க நேரிடும்.

    வாய்விட்டு சிரிப்பது என்பது ஒரு மிகப்பெரிய மருந்து. எவ்வளவு விலை கொடுத்தாலும் அவை வாங்க இயலாத ஒன்று. நம்மில் தோன்றி நம்மிடமே முடிவது சிரிப்பல்ல. பிறரை துன்பத்தில் இருந்து விளக்கி அவர்கள் கண்ணில் இருந்து நீர் வரும் அளவிற்கு சிரிக்க வையுங்கள். நம்மை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துவதை விட பெரிய சந்தோஷம் ஏதேனும் இருக்குமா?

    எந்த ஒரு உறவாக இருந்தாலும் பிரச்சனை வருவது இயல்பு தான். அதற்காக பிரச்சனை ஏற்படும் போது பலி சொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள். தேவையற்ற வாக்குவாதம் வீணான சங்கடத்தை ஏற்படுத்தும். உறவை விட வாக்குவாதம் பெரிதல்ல.



    பலர் வீட்டுக்கு வந்தால் முகத்தில் மகிழ்ச்சி என்பதை தேடினாலும் அவர்களிடமிருந்து கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அவர்கள் நண்பர்கள் சூழ் இடத்தில் மகிழ்ச்சி, சிரிப்பு ததும்பி ஓடும். அதே, சிரிப்பு வீட்டிலும் பூத்தால் உறவின் கெட்டிகாரர் நீங்கள் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை!

    உங்களது எதிரி முன்பு துவண்டு போய் அவர் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை நீங்களே ஏற்படுத்திதாராதீர்கள். 'சிரிப்பு' என்ற ஒற்றை ஆயுதம் உங்கள் எதிரியை வீழ்த்துவதற்கு போதுமானது..

    தோல்வி அடையும் போது நிதானம் அவசியம். கோபம் சந்தோஷங்களை வீழ்த்தும், உறவை பிறிக்கும், தனிமையை நிலைநாட்டும்.

    'சிரிப்பு' என்ற ஒற்றை ஆயுதம் இவை அனைத்தையும் தகர்த்து எரியும்.
    இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.
    * வீட்டின் வரவேற்பறையைக் கண்டு உங்கள் உறவினர், தோழிகள் வியக்கிறார்களா? அல்லது முகம் சுழிக்கிறார்களா?

    * மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கைத்தேட உங்களுக்கு எத்தனை நிமிடம் பிடிக்கிறது?

    * தேவையான பொருளை உடனே தேடி எடுக்க முடியவில்லையா? வைத்த இடம் தெரியவில்லையா?

    * வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிரம்பவில்லை என்று வருத்தம் அடைகிறீர்களா?

    எல்லாவற்றுக்கும் ஒரே வழி அழகாக அடுக்கிவைப்பதுதான். ஆம்... வீட்டில் உள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதன் மூலம் ஆனந்தம் அடையலாம். செல்வம் செழிக்க வைக்கலாம். நிம்மதியைக் கொண்டு வரலாம். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

    வீட்டை அழகுற வடிவமைத்து கட்டுவது பொறியாளரின் வேலையாக இருக்கலாம். ஆனால் அழகுடன் வைத்துக் கொள்வது நாம்தான். வரவேற்பறை அலமாரி முதல் படுக்கை அறை பரண் வரை எல்லாவற்றையும் தேவைக்கேற்ப அழகுபடுத்தி பயன்படுத்துவது ஒரு கலை.

    வரவேற்பறை அலமாரியை அழகிய பொம்மைகள் கொண்டுதான் அலங்கரிக்க வேண்டும் என்பதில்லை. புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தாலே போதும். இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆனால் வீடுகளில் பொருட்கள், அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பது, மூலை முடுக்குகளில் எல்லாம் அழுக்கும், வேண்டாத பொருட்களும் அடைந்து கிடப்பது, பிள்ளைகள் ஓடி விளையாடும் இடத்தில் பூச்சிகள் ஓடி விளையாடுவது, ஆங்காங்கே ஒட்டடை தோன்றுவது போன்ற வீடுகளில் நிம்மதிக்கு பஞ்சம் ஏற்படும். செல்வமும் தங்காது என்ற கருத்து உண்டு.

    அடுக்கிவைக்கும் கலைக்கு ஜப்பானில் மதிப்பு அதிகம். அதை அவர்கள் ‘5 -எஸ் ஒழுங்குமுறை’ என்கிறார்கள். அங்கே பள்ளிகள், வீடுகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் இந்த 5-எஸ் ஒழுங்குமுறையை கட்டாய மாக கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் அந்த நாட்டின் பெயருக்கும், புகழுக்கும் காரணம். அதன் வளர்ச்சியும் வியக்கும் விதத்தில் இருக்கிறது.

    ‘5-எஸ்’ என்பது, பொருட்களுக்கு ஏற்ற இடம் ஒதுக்குதல்- தேவையற்றதை களைதல்- குறைகளை நிவர்த்திசெய்தல்- உற்பத்தியை பெருக்குதல்- வளர்ச்சியை அதிகரித்தல் என்பதாகும். இதை வீடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். செல்போனில் இருந்து அதை தொடங்குவோம். நமது அடிப்படைத் தேவையான செல்போனை எங்கே வைக்கிறோம்? உங்கள் சட்டைப்பையிலா, பேண்ட் பையிலா? அல்லது கைப்பையிலா எங்கே இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கைப்பையில்கூட செல் போனுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

    குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்த ரெயின்கோட், மப்ளர் குல்லா அடுத்த குளிர்காலம் வரும்போது எங்கே கிடக்கிறதென்று தெரியாது அல்லது பத்திரப்படுத்தாததால் பாசாணம் பிடித்தும், நைந்தும் போயிருக்கும். அதுபோலவே எமெர்ஜென்சி விளக்கு, டார்ச் விளக்கு, கொசுமட்டை எல்லாம் தேவையான நேரத்தில் எடுக்கும்போது (சார்ஜ் ஏற்றாமல் வைத்திருப்பதால்) வீணாகிப் போயிருக்கும். இதுபோல அவசரத் தேவைக்கு, எப்போதோ தேவைப்படும் என்று வாங்கி வைத்த பொருட்கள் பல பராமரிப்பின்றி வீணாகப் போகவும், காணாமல்போகவும் கூடும். இவையெல்லாம் உங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.



    முதலில் எதை எங்கே வைக்க வேண்டும், எதை முன்னே வைக்க வேண்டும், எதைப் பின்னே வைக்க வேண்டும், எதை உயரத்தில் வைக்க வேண்டும், எதை கீழே வைக்க வேண்டும். மூலையில் எதை வைக்க வேண்டும், மூட்டைக்குள் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய் வதுதான் இந்த அடுக்கி வைத்தல் முறையின் முதல் படி.

    அதன்படி பொருட்களின் நீளம், உயரம், அகலத்திற்கு ஏற்பவும், பயன்பாட்டைப் பொருத்தும் அதை அடுக்கத் தீர்மானிக்க வேண்டும். தினசரி பயன்படுத்தும் பொருட்களை கைவாக்கிலும், குறைவாக பயன் படுத்தும் பொருட்களை அருகிலும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை உயரத்திலும் அல்லது அடியிலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தும் பொருட்களை சேமிப்பு அறையில் அல்லது பரணிலும் பத்திரப்படுத்த வேண்டும்.

    உடையாத பொருட்களை மட்டுமே ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.

    ஊசி, பாசி, நூல், பசை, டேப் என்று ஒவ்வொரு சின்னப் பொருட்களும் நமக்கு அவசியமானவைதான். ஆனால் அவற்றை தேவைக்கேற்ப பிரித்து தனித்தனி பெட்டியில் போட்டு அடைத்து வைத்து, அடுக்கி யும் வைத்துவிட வேண்டும். இவற்றைத் தேடித் தீர்ப்பதில்தான் உங்கள் நேரம் வீணாவதுடன், எரிச்சலும் தொற்றிக் கொள்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

    கத்தரிக்கோல், கத்தி, சுத்தி போன்ற கருவிகளையும் தனியே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அவற்றை மூட்டைகட்டி மூலையில் போடுவதைவிட ஒரு ஆணி அடித்த ஸ்டாண்டில் வைத்துப் பராமரித்தால், அவை தொலைந்துபோவதைத் தடுக்கலாம். அவசியமான நேரத்தில் உடனடியாக எடுத்து பயன் படுத்தவும் செய்யலாம்.

    எடை அதிகமான பொருட்களை உயரத்தில் வைக்கக்கூடாது. அது கையாளுவதற்கு சிரமத்தைத் தருவதுடன், கவனக்குறைவாக செயல்பட்டால் உடையவும், காயம் ஏற்படுத்தவும் கூடும்.

    மருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைக்க வேண்டும். அவற்றை கண்பார்வையில் வைத்து கெட்டுப்போகும் முன் பயன்படுத்தவும், குழந்தைகளுக்கும் அதன் ஆபத்தை உணர்த்தவும் வேண்டும்.

    பொருட்களை அடுக்கி வைக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்து காகிதம் அல்லது பிளாஸ்டிக் விரிப்பு விரித்துவிட்டு அடுக்கி வைக்கலாம். இது எளிதில் தூசுபடிவதைத் தடுக்கும்.

    பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது மட்டுமல்லாமல், மற்ற இடத்தில் வைக்காமல் இருப்பதையும் வழக்கமாக்கவேண்டும். காணாமல்போன பல பொருட்களை நிறைய வீடுகளில் மேஜை டிராயர் எனும் புதையல் கிடங்கில் இருந்துதான் தோண்டி எடுக்கிறார்கள். அல்லது அலமாரியை அலசி ஆராய்கிறார்கள். அடுக்கி வைத்தால் இதற்கு அவசியமில்லை.

    இப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பதால் வீடே அழகாக மாறிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு பொருளைத் தேடுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் போதுமென்றால் உங்களுக்கு வீணான எரிச்சல் வரப்போவதில்லை. அதுவே பெரிய நிம்மதியைக் கொண்டு வரும். ஒருபொருளை எடுக்கும்போது அது அடுத்த பொருளை தள்ளிவிடத் தேவையில்லை என்றால் உங்களுக்கு பணம் மிச்சமாகும், சேதம் குறையும். பயன் படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தினால் இடம் மிச்சமாகும், குப்பையால் உண்டாகும் சீரழிவும், ஆரோக்கிய குறைபாடும், அதனால் ஏற்படும் வீண் பணச் செலவும் தடுக்கப்படும்.

    எல்லாம் சரிதான், “அடுக்கி வைப்பது என் ஒருத்தியால் ஆகுமா?” என்று இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் கேட்கலாம். உங்களுக்கு சில வார்த்தை. சிறு குழந்தைகள்தான் சில நேரங்களில் சேட்டை செய்வார்கள். மற்றபடி அவர்கள் உங்கள் வார்ப்பு போலவே வளர்ந்து வருவார்கள். சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், வளர்ந்த பிள்ளைகள் எளிதில் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.
    ×