search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101907"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 20 ஓவர் போட்டியில் பும்ரா 50 விக்கெட்டை எடுத்துள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோற்றாலும் பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2-வது விக்கெட்டான பீட்டர் ஹேண்ட்ஸ் கோயை அவுட் செய்த போது 50-வது விக்கெட்டை தொட்டார். 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டை எடுத்த 2-வது இந்திய வீரர் பும்ரா ஆவார்.

    அஸ்வின் 47 போட்டியில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் எடுத்துள்ளார். இந்த தொடரில் அவர் அஸ்வினை முந்தி முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச அளவில் அப்ரிடி 98 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) 75 விக்கெட் கைப்பற்றி 6-வது இடத்தில் உள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட்டான சையத் முஸ்தாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். #Ashwin
    சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை சூரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபரஜித் ஆகியோர் இடம் பெறவில்லை. இதுகுறித்து தேர்வாளர் ஒருவர் கூறும்போது, ‘‘முரளி விஜய், அபினவ் முகுந்த், அபரஜித் ஆகியோர் தங்களது திறமைகளை நிரூபித்த வீரர்கள்.

    எனவே புதிய வீரர்களை களம் இறக்க விரும்புகிறோம். சுழற்பந்து வீச்சாளர் வருண் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை என்றார்.

    தமிழ்நாடு அணி வருமாறு:-

    அஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணைக்கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், நடராஜன், முகமது, கவுசிக், சாய்கிஷோர், முருகன் அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.
    தற்போது வெளிநாட்டு தொடருக்கான இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இருப்பார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #TeamIndia
    இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. அவருக்குப்பின் ஹர்பஜன் சிங் ஆதிக்கம் செலுத்தினார். அதன்பின் அஸ்வின் முதன்மை பந்து வீச்சாளராக இருந்தார். இங்கிலாந்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரில் மட்டுமே அஸ்வின் இடம்பிடித்தார். அதன்பின் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் அற்புதமாக பந்து வீச அஸ்வின் மற்றும் ஜடேஜாவை இந்திய அணி நிர்வாகம் தேடவில்லை.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற அஸ்வினின் பந்து வீச்சு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. அதன்பின் காயத்தால் கடைசி மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சிட்னி டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பிடித்தார்.

    அவர் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெடுக்கள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் வெளிநாட்டு தொடருக்கான இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்தான் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நடைமுறையில் இருப்பார்கள். ஏற்கனவே, குல்தீப் யாதவ் வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். ஆகவே, அவர் இந்திய அணியின் வெளிநாட்டு தொடருக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளராகியுள்ளார்.



    வரும் காலங்களில் நாங்கள் ஒரு சுழற்பந்து விச்சாளருடன் விளையாட முடிவு செய்தால், குல்தீப் யாதவை ஆடும் லெவன் அணியில் சேர்ப்போம். ஒவ்வொருவருக்கும் ஒரு நேரம் உண்டு. தற்போது குல்தீப் யாதவ் வெளிநாட்டு தொடருக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.

    சிட்னியில் அவர் பந்து வீசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கூட இதுபோன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் விளையாடலாம். சிட்னியில் அவர் பந்து வீசியதன் மூலம், எங்களின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராகியுள்ளார்’’என்றார்.
    இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரர் அஸ்வின், அவர் காயத்தை குணப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அஸ்வின் 86 ஓவர்கள் வீசி 6 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டிற்கு இந்திய அணி தயாராகும்போது, தனக்கு இடது பக்கம் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். அஸ்வின் இல்லாத காரணத்தினாலும், பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததாலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது.

    மெல்போர்னில் ஜடேஜா முன்னணி சுழற்பந்து வீச்சாளராக களம் இறங்கினார். நாளை தொடங்கும் சிட்னி டெஸ்டில் சுழற்பந்து முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால 13 பேர் கொண்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

    நாளை போட்டி தொடங்குவதற்கு முன்புதான் ஆடும் லெவன் அணியில் அஸ்வின் இடம்பிடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா மற்றும இங்கிலாந்து தொடரின்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட அதே காயம்தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. காயத்தை குணப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா தொடரின்போது எந்த காயத்தால் அவதிப்பட்டாரோ, அதே காயத்தால் தற்போது பாதிப்படைந்திருப்பது துரதிருஷ்டவசமானது. மற்றவர்களை விட அதிக அளவில் காயம் அடைந்துள்ளார். அதை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

    பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் அஸ்வினிடம் காயம் குறித்து பேசினார்கள். அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். டெஸ்ட் அணியில் முக்கிய பாங்காற்றக்கூடியவர். அவர் 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். டெஸ்ட் போட்டியில் அவரால் எங்களுக்கு அதிக அளவில் பங்களிப்பை அளிக்க முடியும்’’ என்றார்.
    வெளிநாட்டு தொடரின்போது காயத்திற்குள்ளாகும் அஸ்வினால் பந்து வீச்சில் அவரின் தனிச்சிறப்பை வெளிப்படுத்த முடியவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    2-வது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றதால் அஸ்வின், ஜடேஜா களம் இறங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அஸ்வின் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது. அவரது காயம் இன்னும் குணமடையாததால் இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டிலும் இடம் பெறவில்லை.

    இடது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடியவர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் அஸ்வின் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ச்சியாக காயம் அடைந்திருப்பது கங்குலிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் மொயீன் அலி 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற நிலையில், காயத்துடன் களம் இறங்கிய அஸ்வின், 37.1 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். காயத்தால் விளையாடியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தொடர்ச்சியாக அஸ்வின் காயம் அடைவது குறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போது எனக்கு அஸ்வின் காயம் குறித்து பெரும் கவலையாக உள்ளது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, தற்போது ஆஸ்திரேலியா போன்ற முக்கிய தொடரின்போது தொடர்ச்சியாக காயம் அடைந்துள்ளதால், அஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது.

    எதிரணியில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணிக்கு அஸ்வின் தேவைப்படுகிறார். ஆனால் காயத்தால் அவருடைய தனிச்சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அஸ்வினால் செயல்பட முடியவில்லை’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. #TeamIndia #AUSvIND
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த உற்சாகத்தில் உள்ள இந்திய வீரர்கள், 2வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

    முதல் போட்டியில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். அதேபோல் இந்த போட்டியிலும் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.



    இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 13 வீரர்கள் கொண்ட இந்த பட்டியலில் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்,ராகுல், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விகாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

    ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. #TeamIndia #AUSvIND
    அடிலெய்டு டெஸ்டில் நான்கு பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி 20 விக்கெட்டுக்களை சாய்த்தது பெருமையான விஷயம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்கி விளையாடி வருகிறது. 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதால், கேப்டன் விராட் கோலி இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரின்போது பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால் இந்திய அணி சொற்ப ரன்களில் வெற்றி வாய்ப்புகளை இழந்தது. இதனால் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 6-வது பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்தார்.

    இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, அஸ்வின் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியா விளையாடியது. பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத நிலையிலும், நேர்த்தியாக பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

    நான்கு பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 31 ரன்னில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

    வெற்றிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை காப்பது முக்கியமானது. நாங்கள் பேட் கம்மின்ஸை வீழ்த்திய பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. நான் ஐஸ் போன்று கூலாக இருப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் விளையாடும்போது அவர்கள் ஒரு தவறு செய்ய வேண்டும். அல்லது நாங்கள் ஒரேயொரு சிறந்த பந்து வீச வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. நான்கு பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தது மிகப்பெரிய பெருமையான விஷயம்.



    இந்த தொடரில் எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல நிலைமைக்கு உயர இது உதவியாக இருக்கும். புஜாரா மற்றும் ரகானே இந்த போட்டியை அருமையாக கொண்டு சென்றனர். நாங்கள் சிறந்த அணி. இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். இதேபோல் புஜாரா மற்றும் ரகானே இணைந்து விளையாடினார்கள், எங்களின் மிகவும் திடமான ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள்.

    மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கனும். பெர்த் டெஸ்டிற்கு செல்லும்போது இதுகுறித்து யோசிப்போம். முதல் போட்டியிலேயே 1-0 என முன்னிலைப் பெற்று தந்த பிறகு, அதை நான் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.
    ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் எடுத்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இந்தியா 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மார்ஷ் 60 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் 167 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை பேட்ஸ்மேன்களான பந்து வீச்சாளர்கள் களம் இறங்கிய தொடங்கினார்கள்.

    முதலாவதாக பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். இவர் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பெய்ன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெய்ன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 136 ரன்கள் தேவைப்பட்டது.


    கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விளாசிய காட்சி

    இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுக்கள் மட்டுமே தேவை என்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர். 8-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் இணைந்த ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஸ்டார்க் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் சேர்த்தார். ஸ்டார்க் ஆட்டமிழக்கும்போது 95 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த நேரத்தில் 9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஏற்கனவே இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் கடும் சவாலாக விளங்கி வரும் நிலையில், கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. இக்கட்டான நிலையில் கம்மின்ஸை வெளியேற்றினார் பும்ரா. அப்போதுதான் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. இருந்தாலும் இந்தியாவின் நெருக்கடி குறையவில்லை.

    கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. நாதன் லாயன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். ஹசில்வுட் திறமையான வகையில் சமாளிக்க, நாதன் லயன் இலக்கை நோக்கி ரன்களை விரட்ட தொடங்கினார்.


    ஹசில்வுட் ஆட்டமிழந்து சோகமாக திரும்பு காட்சி

    ஒரு கட்டத்தில் இஷாந்த சர்மா பந்தில் நாதன் லயன் எல்பிடபிள்யூ ஆக, நடுவர் நோ-பால் என்றதால், இந்திய வீரர்கள் விரக்தியடைந்தனர். ஸ்கோர் 54-ல் இருந்து 44, 34 என குறைந்து கொண்டே வந்தது. இதனால் ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இறுதியில் அஸ்வின் பந்தில் ஹசில்வுட் 43 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 291 ரன்னில் ஆல்அவுட் ஆகி, 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் (5), இஷாந்த் சர்மா (0), முகமது ஷமி (0), பும்ரா (0) ஆகியோர் 44 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்ஸ் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்ததோடு, நெருக்கடியும் அளித்துவிட்டனர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvAUS #AdelaideTest #ashwin
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14  ரன்களிலும் அவுட் ஆனார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் நாதன் லயன் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியதால், நேரம் செல்லச்செல்ல ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் மறுமுனையில் ஆடிய ஹாசில்வுட் 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.


    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    இந்த இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

    ஆஸ்திரேலியாவின் கடைசி 4 விக்கெட் 135 ரன்களை எடுத்து இந்தியாவை சற்று தடுமாற வைத்து விட்டது. இந்த டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த புஜாரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் முதல் இன்னிங்சில் 123 ரன்னும், 2-வது இன்னிங்சில் 70 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி 12-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதற்கு முன்பு 11 முறையும் முதல் டெஸ்டில் வென்றது இல்லை. தற்போது அந்த வரலாற்றை மாற்றி அடிலெய்டு டெஸ்டில் சாதனையுடன் வெற்றி பெற்று கணக்கை தொடங்கி இருக்கிறது.

    இந்த வெற்றி மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. #INDvAUS #AdelaideTest #ashwin
    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா நான்காவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இன்றைய 4-வது நாள் தேனீர் இடைவேளையின்போது பிஞ்ச் 11 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஹாரிஸ் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 44 ரன்னாக இருக்கும்போது ஹாரிஸ் (26) முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். கவாஜா 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 60 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா முதல் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.


    அஸ்வின் பந்தில் ஆரோன் பிஞ்ச் அவுட்டாகிய காட்சி

    4-வது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஸ்கோர் 84 ரன்னாக இருக்கும்போது ஷமி பந்தில் ஹேண்ட்ஸ்காம்ப் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் கவனமாக விளையாடியது. ஸ்கோர் மந்தமான நிலையில் உயர்ந்தாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்கவில்லை. ஆஸ்திரேலியா 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது.


    31 ரன்களுடன் களத்தில் நிற்கும் ஷேன் மார்ஷ்

    ஷேன் மார்ஷ் - டிராவிஸ் ஜோடி இன்று 12.1 ஓவர்கள் விளையாடி 20 ரன்கள் எடுத்துள்ளது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 219 ரன்கள் தேவை. கைவசம் 6 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளைய கடைசி நாளில் முதல் செசனில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்படும்.

    இந்தியா விரைவில் விக்கெட்டை கைப்பற்றினால் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி ஏற்படும். இதனால் அடிலெய்டு டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாதுகாப்பான (defensive batting) ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்ததில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 88 ஓவரில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    பெரும்பாலும் பாதுகாப்பு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் 2-வது நாளில் 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இஷாந்த் சர்மா 15 ஓவவர்கள் வீசி 6 மெய்டனுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 2.07 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    பும்ரா 20 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு 1.70 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    அஸ்வின் 33 ஓவர்கள் வீசி 50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 1.52 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷமி 16 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு 3.19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதுபோன்று பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடியது கிடையாது என்று சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தனது ட்வீட்டில் ‘‘இந்தியா இந்த சூழ்நிலையை அதிக அளவில் உருவாக்க வேண்டும். தங்களது பலத்தை விட்டுவிடக் கூடாது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் பாதுகாப்பு ஆட்டம் மனநிலையுடன் விளையாடினார்கள். இதற்கு முன் எனது அனுபவத்தில் அப்படி பார்த்தது கிடையாது. அஸ்வின் அபாரமாக பந்து வீசினார். தற்போது வரை அணி நல்ல நிலைமையில் இருக்க அவர்தான் காரணம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா நேற்றைய 250 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    ஹேண்ட்ஸ்காம்ப்

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

    5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா

    8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.


    கவாஜாவிற்கு எதிராக அப்பீல் கேட்கும் அஸ்வின், விராட் கோலி

    தற்போது வரை ஆஸ்திரேலியா 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் ஸ்டார்க் துணையுடன் இந்தியாவின் ஸ்கோரை எட்ட முயற்சி செய்வார்.
    ×