search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிமணி"

    பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி? என்று காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி ‘மாலை மலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

    கே: முதன் முதலாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.

    ஆனால் தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.

    கே: அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத நீங்கள் எப்படி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டீர்கள்?

    ப: என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக்குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டார்.

    தி.மு.க-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.

    கே: பாராளுமன்றத்தில் முதன் முதலாக என்ன பேசப்போகிறீர்கள்?


    ப: என்ன பேசுவது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்றவற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பேன்.

    கே: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதே?

    ப: காங்கிரஸ் கட்சியின் தோல்வி வலி நிரம்பியது. இந்த தோல்வியானது கட்சியை பாதிக்கப்போவதில்லை. தனி மொழி, தனி கலாச்சாரம் போன்றவற்றை விரும்பும் மாநில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரசாரத்தின்போது ராகுல் காந்தி ஒற்றுமையையும், அன்பையும் விதைத்தார். ஆனால் அதற்கு பதிலாக மோடி பிரிவினையையும், வெறுப்பையும் விதைத்தார். இந்த தேசத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி மோடி வாய் திறக்கவில்லை. 2014-ல் மோடி வெற்றி பெற்றபோது அதை செய்வார், இதை செய்வார் என ஒரு கொண்டாட்டம் இருந்தது. ஆனால் இப்போது அதை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித இறுக்கமே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. அது சீட்டுகளாக மாறவில்லை. பிரதமர் மோடி கடந்த கால தவறுகளை திருத்தி கொள்வார் என எதிர்பார்க் கிறோம்.

    கே: தமிழகத்தில் மட்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எப்படி அமோக வெற்றியை பெற்றது?

    ப: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கடுமையாக உழைத்தார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டனர். மோடியின் அடக்குமுறையையும், எடப்பாடி பழனிசாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள். மோடியின் அடக்குமுறை கேரளாவிலும் எடுபடவில்லை.

    கே: 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தீர்களா?

    ப: நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தம்பி வி.செந்தில்பாலாஜி (தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) யும், நானும் அமர்ந்து பேசினோம். குழுக்கள் அமைத்து கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தனித்தேர்தல் அறிக்கை தயாரித்தோம். எதிர் வேட்பாளர் மூத்த அரசியல்வாதி பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரத்தை முன்னெடுத்தோம். அவர்கள் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம்.

    முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கணித்தோம். பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்தபோது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்.

    கே: ராகுல் காந்தியுடன் பேசினீர்களா?

    ப: பேசினேன், வாழ்த்து தெரிவித்தார். விரைவில் அவரை சந்திக்க உள்ளேன். பதவி ஏற்பு தேதி உறுதியாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இதில் பலர் பெயர் அடிபட்டாலும் ஜோதிமணி பெயர் பலமாக உச்சரிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உறுதியாக இருந்து அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். அவரின் நம்பிக்கை வீணாகாமல் காங்கிரஸ் வெற்றிக் கொடியை நிலைநாட்டியுள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்றது. கடைசியாக 1980-ல் காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் காங்கிரசை சேர்ந்த துரை செபாஸ்டியன் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 38 ஆண்டுகளாக காங்கிரசின் குரல் கரூரில் ஒலிக்கவில்லை. போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை.

    1980-களுக்கு பின்னர் நடந்த தேர்தல்களில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. கட்சிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி இருந்தது. இதற்கிடையே 1996-ல் நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனார்) சார்பில் நாட்ராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க.வுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

    பின்னர் 1998-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். இதில் நாட்ராயனுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 2009-ல் நடந்த தேர்தலில் மு.தம்பிதுரை வென்றார். பின்னர் 2014- தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெறும் 30,459 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார். இதிலும் மு. தம்பிதுரை கரூர் தொகுதியில் மீண்டும் 2-வது முறையாக வென்றார்.

    இந்த நிலையில் தற்போது 39 ஆண்டுகளுக்கு பின்னர் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.

    இதன் மூலம் தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஜோதிமணி முட்டுக்கட்டை போட்டுள்ளார். மேலும் கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கரூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அவர் 3,20,678 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 537 வாக்குகள் பெற்றிருந்தார்.

    அமமுக வேட்பாளர் தங்கவேல் 11 ஆயிரத்து531 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 18 ஆயிரத்து 756 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் .ஹரிஹரன் 7920 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    கரூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் 6,78,373 ஆண்கள், 7,08,196 பெண்கள் மற்றும் 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,86,636 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை, அரவக்குறிச்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தம்பிதுரை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் டாக்டர் ஹரிகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10,97,024 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். ஆண்கள் 5,32,760 பேரும், பெண்கள் 5,64,233 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேரும் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 79.11 சதவீதமாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் மற்றும் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் பணியில் இருந்தனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    ஜோதிமணி (காங்கிரஸ்)-35,110

    தம்பிதுரை (அ.தி.மு.க.)-15,447

    முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி முன்னிலையில் இருந்தார்.
    கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார். #congressjothimani #karurcollector

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் முடிந்ததும், கூடு தல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் மற்றும் க லெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் கரூர் தளவாபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கார்களில் சென்றனர்.

    அப்போது மையத்தின் வெளிப்புறத்திலேயே கார்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் நடந்தே உள்ளே சென்றனர். பின்னர் வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, அனைத்து நடவடிக்கைகளும் சி.சி..டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை நீண்ட நேரமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவு றுத்தலின் பேரில் பாதுகாப் பினை மேலும் பலப்படுத்தக் கூடிய நடவடிக்கை, எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்பட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடன் இருந்தனர்.

    அதிகாரி ஆய்வை தொடர்ந்து ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியில் என்னிடம் தேர்தலை நான் நிறுத்துவேன் என கூறும் அளவுக்கு மோசமான நிலை இருந்தது. மாவட்ட அதிகாரியே இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு குறைபாடுடன் இருப்பது ஆச்சரியம் இல்லை. வாக்கு எண்ணிக்கையை இவர்கள் தலைமையில் நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையை இந்த அதிகாரிகள் நடத்தினால் நியாயமாக இருக்காது.

    கலெக்டர் எங்கள் மீது கொடுத்த பொய் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். விசாரணையில் கலெக்டர் அளித்த புகாருக்கு ஆதாரமாக சிசி டிவி. புட்டேஜை அவர் காட்ட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    விரைவில் கலெக்டர் கூறியது மிகப்பொய் குற்றச்சாட்டு என்பதும், தேர்தல் அதிகாரி வழக்கத்தில் இல்லாத அளவில் ஒரு கலெக்டர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது கோர்ட்டில் நிரூபிக்கப்படும்.

    தேர்தல் கமி‌ஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகார் மீது உடனே அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தி யிருக்கின்றனர்.

    கலெக்டரும், எஸ்.பி.யும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கலெக்டரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார். #congressjothimani #karurcollector

    இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #senthilbalaji #jothimani

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளை 16-ந்தேதி நிறைவு பெறுகிறது. அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் பகுதியில் இறுதிக்கட்ட பிர சாரம் செய்ய அனுமதி கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் அ.தி.மு.க.வினர் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த உதவி தேர்தல் அதிகாரி சரவண மூர்த்தியிடம் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, தேர்தல் விதிமுறைப்படி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு, நாங்கள் குறிப்பிட்ட மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பிரசாரத்தை முடித்திட அனுமதி வழங்கியது முறை கேடானது என குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே அங்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அலுவலக வாயிற் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் வந்து, இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அ.தி.மு.க.- காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் இறுதி கட்ட பிரசாரத்திற்காக அளித்த தகவல் விவரங்கள், பிரசார அனுமதி வழங்கியதற்கான ஒப்புதல் விவரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.

    இதைத்தொடர்ந்து நாளை மாலை 4-6 மணியளவில் மனோகரா கார்னர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு முன்னதாக அதே இடத்தில் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, அதிகாரிகளிடம் இருந்து அதற்குரிய ஆணையை பெற்று கொண்டு ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்தனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவிக்கையில், 16-ந்தேதிக்கான பிரசார இடங்களுக்கு அனுமதி பெற 11-ந்தேதி தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. சார்பில் 10-ந்தேதியே விண்ணப்பித்திருக்கின்றனர். தேர்தல் பார்வையாளர் வந்து அ.தி.மு.க. சார்பில் நேரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு பிடித்தார் எனக்கூறினார்.

    செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி கட்ட பிரசாரத்திற்காக 15 இடங்களை தேர்வு செய்து கொடுத்திருந்தோம். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெறப்போகிறார். ஆகவே அவரது பிரசாரத்தை முடக்கும் நோக்கிலேயே இத்தகைய பித்தலாட்டத்தில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளும் துணை போயிருக்கின்றனர். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். தம்பிதுரையின் தோல்வி உறுதியாகிவிட்டது. அவர் டெபாசிட் இழப்பது உறுதி என்றார். #senthilbalaji #jothimani

    காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நிச்சயமாக விலைவாசி குறையும் என்று கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம் செய்தார். #Loksabhaelections2019 #SenthilBalaji
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கரூர் பெரியார்நகர், ஆண்டாங்ககோவில் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பெட்ரோல், டீசல் விலை 2 மடங்காக உயரும். மோடியும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியாக நாட்டை மாற்றி விடுவார்கள். ஆனால் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலையினை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்து கட்டுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தந்துள்ளார். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விலைவாசி குறையும்.

    இந்த தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக எம்.பி.யாக இருக்கும் மு.தம்பித்துரை தொகுதி மக்களின் பிரச்சனைக்காக ஒருபோதும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. நரேந்திர மோடியின் ஆட்சி மோசம் என விமர்சித்த மு.தம்பித்துரை மீண்டும் அவருக்கு வாக்குகேட்கிறார். இதனை சிந்தித்து பாருங்கள். இந்த தேர்தல் முடிந்தால் அடுத்த தேர்தலுக்குதான் உங்களை சந்திக்க வருவார். ஆகவே பாராளுமன்றத்தில் நமது குரலாக ஒலிக்க ஜோதி மணிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

    பிரசாரத்தின் போது மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட காங். தலைவர் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் பலர் உடனிருந்தனர். #Loksabhaelections2019 #SenthilBalaji
    ×