என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தம்பிதுரை"
சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும் பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளில் சி.பி.ஐ.யை ஏவி பிரச்சினை கொடுத்து வருகிறது.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது பா.ஜனதாவை ஒருவர் புரிந்து கொண்டார். இதேபோல் அவருடன் இருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வி.ல் எந்த ஒரு ஜனநாயக முடிவும் எடுப்பதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் பேசுவதாக இல்லை. மு.க.ஸ்டாலின் மற்ற கட்சிகளை பற்றி பேசுகிறார். மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்கிறார்.
பிரதமர் மோடி பட்ஜெட்டை ஒரு டிரெய்லர் என்றுதான் சொல்லி இருக்கிறார். சில நேரத்தில் டிரெய்லர் நன்றாக இருந்தாலும் படம் நன்றாக இருக்காது. இந்த பட்ஜெட்டை போல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் வரவில்லை. மாறாக தமிழகத்தின் உரிமைகள் தான் பறிபோய் இருக்கிறது.
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது அவர் சந்திக்க முடியாது என்று சொன்னது வேதனை அளிக்கிறது. பா.ஜனதா அ.தி.மு.கவிடம் நட்புகாட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் எப்படியாவது முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஊர் ஊராக சென்று ஊராட்சி கூட்டம் நடத்தி வருகிறார்.
இதனால் அவரது முதல்வர் கனவு நிறைவேறப் போவதில்லை. தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே.
சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்ற பலர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர்கள்தான் தற்போது தி.மு.க.வை வழிநடத்தி செல்கின்றனர். ஏனெனில் அந்த கட்சியில் அதுபோன்ற தலைவர்கள் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.
மேகதாது அணை விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து அவையை முடக்கினோம். ஆனால் எங்களுக்கு ஆதரவாக எந்தஒருகட்சியும் குரல் எழுப்பவில்லை.
தமிழக மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் பிரச்சினை போன்றவற்றுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மட்டுமே காவிரி பிரச்சினையை தீர்க்க முடியும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே அதிக இடங்களை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #parliamentelection #admk #mkstalin
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 95 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் தீர்வாகாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசும் தனது நிதி நிலை குறித்து தெளிவாக மக்களிடம் எடுத்து கூறியுள்ளது. எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் தேர்தலும் வர உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
முன்னதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் தேவை இல்லாதது. உயர்நீதிமன்ற வழிகாட்டலை மதித்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்புகிறோம். கோரிக்கைகளை முன்வைக்கட்டும், போராடட்டும். ஆனால் வேலை நிறுத்தம் தேவையில்லை. மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் கூட்டணி குறித்து முடிவெடுக்கவே அ.தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி அ.தி.மு.க. என எந்த இடத்திலும் அவர்களும் சொல்லவில்லை. அ.தி.மு.க.வும் கூறியதில்லை. நட்பின் அடிப்படையில் பல கோரிக்கைகளை பா.ஜ.க. அரசிடம் முன் வைத்தோம்.
குறிப்பாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகையான ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டோம். தரவில்லை. கஜா புயலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டோம். அதுவும் வந்தபாடில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி என முதல்வர் கூறியுள்ளார். பா.ஜ.க. ஏதாவது நல்லது செய்துள்ளதா?. இதுவரை செய்யவில்லை.
ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்குமா?. பா.ஜ.க. தமிழகத்தில் கட்சியை வளர்க்க திட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் திராவிடர்களின் கலாச்சாரத்தை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்காகவே மாணவர்கள் என்று வந்து விட்டால் கல்வி சீரழிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK
அரியலூர்:
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வில் கருணாநிதி தங்களது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு வந்ததால் அதனை எதிர்த்த எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து அண்ணாவை முன்னிலைப்படுத்தி தொடங்கிய கட்சி அ.தி.மு.க.,
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் , தமிழக முதல்வராக பதவியேற்க உறுதுணையாக இருந்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துரோகத்தை எதிர்த்து அன்று தொடங்கப்பட்ட இயக்கம். இன்றும் துரோகிகளை எதிர்த்து வெற்றி பெறும் இயக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு சுயேட்சை வேட்பாளரான நான் வெற்றிபெற்றது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதில், நமது வேட்பாளர் காமராஜை போட்டியிட வைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்த நேரத்தில், பயில்வான் தி.மு.க.வே தேர்தலை நிறுத்த பல வேலைகளை செய்தது. 10 தலைகளை கொண்ட ராவணன் போல, பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டே தி.மு.க., பயப்படுகிறது.
தம்பிதுரை பேச்சு எல்லாம் டூபாக்கூர். முன்பு எம்.பி.,க்களுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் வரும். ஆனால், தற்போது, மோடியிடம் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்றால் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசு போல பட படவென வெளியே வரும். என்னை மு.க.ஸ்டாலின் 20 ரூபாய் என கூறுகிறார். அவர் ஆர்.கே. நகரில் டெப்பாசீட் வாங்காததால் நான் ஸ்டாலினை டெபாசீட் ஸ்டாலின் என அழைப்பேன். கரூரில் தி.மு.க.வினருக்கு ஆள் இல்லாததால் நம்ம செந்தில் பாலாஜியை மாவட்ட செயலாளராக ஆக்கியுள்ளனர். அவரை பற்றி தான் நமக்கு தெரியுமா? இல்லையா?.திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.பரவாயில்லை. 3 மாதத்தில் தேர்தல் வரும் போது தெரியும் . வரும் ஏப்ரல் , மே மாதத்தில் நடைபெறவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.அமோக வெற்றி பெறும் .
தமிழக மக்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். எனவே கட்சியினர் மக்களை சந்தித்து 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்வது எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றும் செயலாகும். மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோஜியோ அமைப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி என கூறுவது கானல்நீராகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். எடப் பாடி பழனிச்சாமி சத்தமாக கூறினால் அது பொய்யாகத்தான் இருக்கும். மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலில் எடப்பாடி அரசு ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்காக அரசு பணத்தை செலவழித்துள்ளார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்றார். #dinakaran #bjp #edappadipalanisamy #parliamentelection
ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் சிலர் மீண்டும் வரவழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது பற்றி இன்று மாலை தெரியவரும். #JayaDeathProbe #ThambiDurai
திருச்சி:
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.
தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.
திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க. ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி பெற்றேன். இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.
கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபா சிட் கூட கிடைக்காது.தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு அனைத்து கட்சிகளுமே புதிய கட்சிகள் போல் தான் உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் வெளி மாநிலம் சென்று உள்ளார். உள்ளூரில் விலை போகாததால் வெளி மாநிலத்தில் மார்க்கெட்டிங் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது நாற்காலியை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் உள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? இந்த ஆட்சி ஏஜெண்ட் ஆட்சி. பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதை மக்கள் தூக்கி எறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்வது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தினகரன் பதில் அளித்து கூறியதா வது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்- அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்- அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.
எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார்.தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் ஆடுகிறார் என்றார். #ThambiDurai #TTVDhinakaran
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திண்டுக்கல் அருகே மாரம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது.
நிலுவைத் தொகை மற்றும் கஜா புயல் பாதிப்புகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்தின் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தமிழக உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருவதால் என் மீது பா.ஜ.க. அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் குறைகூறலாம். தமிழகத்தின் சமூக நீதியை காக்க 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவர மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை.
இதேபோல் தமிழக நலனுக்காக மக்களவையில் குரல் எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்கள் 34 பேர் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு எம்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டால் அந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய பிற கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்துவது வழக்கம். ஆனால் அ.திமு.க. எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்ய எந்தஒரு கட்சியினரும் ஆதரவு தரவில்லை. இதன் மூலம் தமிழகம் எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்பது தெரிய வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #MKStalin
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த பின் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கொடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் ஒரு புனையப்பட்ட நாடகம்.
தீர்ப்பு வருகிற நாளில் திசை திருப்பும் வகையில் அரசியல் சதிக்காக தவறான செய்தி மூலம் பிளாக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை.
பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது.
தமிழக முதலமைச்சர் மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே தி.மு.க.வின் கொள்கை.
அவரிடம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தம்பிதுரை பதில் அளிக்கும் போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென தி.மு.க. முயல்கிறது என்றார்.
மத்திய அரசுடன், மாநில அரசு என்ற முறையில் நல்ல உறவு உள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலியாக உள்ளது.
அ.தி.மு.க.வை நாங்கள் மேலும் வளர்க்க பாடுபடுகிறோம். பா.ஜ.க.வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.க.வை காலூன்ற வைக்க அ.தி.மு.க.வினர் சுமந்து செல்ல மாட்டோம்.
ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜனதாவா, ஆர்.எஸ்.எஸ்.சா, பத்திரிகையாளரா என எனக்கு தெரியாது. விளம்பரத்திற்காக அவர் பேசுகிறார்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க. செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் திரைப்படங்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னையில் உள்ள ஒரு சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியை திரையிடவில்லை என கூறி, அதற்கான டிக்கெட் முன்பதிவு பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று வந்த தவறான தகவலால் தான் நாங்கள் சிறப்பு காட்சி திரையிட்டோம் என சில இடங்களில் கூறியுள்ளனர். இருந்தாலும் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதற் கட்டமாக அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி சிறப்பு காட்சி ஒளிப்பரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைப்படி அனுமதி கேட்டால், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு பரிசீலனை செய்யும். அம்மா திரையரங்கம் என்பது மாநகராட்சிக்கு மட்டும் தான் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வருகிற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலிக்கும்.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய சொல்லியுள்ளோம். வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என உத்தரவு வழங்கி உள்ளோம். விரைவில் இவை அனைத்துக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
நல்ல திட்டங்களையும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களையும் தடுக்கின்றனர் என்பது தான் எதிர்க்கட்சியின் வேலை என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்துள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி தொடர்பாக தம்பிதுரை தெரிவித்தது அவரது சொந்த கருத்து. அவருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அதிகாரம் இல்லை. வருகிற 20-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவாகவும், தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவும் நெல்லையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.
தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாது. விசாரணை கமிசன் அறிக்கை வந்த பின்பு ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவரும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக அ.தி.மு.க. தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவையில் குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்ததால் போராடி வாரியம் அமைத்தோம். மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தொடர்ந்து போராடி கேட்டு வருகிறோம்.
மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகத்துக்கு சாதகமாக பா.ஜ.க. செயல்படுவதால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறோம். எனவே பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே தேர்தல் கூட்டணி என்பது கிடையாது. ஆட்சியில் மட்டுமே தொடர்பு உள்ளது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை ஆதரித்தும், எதிர்த்தும் வருகிறோம்.
மேலும் திராவிட கட்சிகளை ஊழல் கட்சிகள் என்றும், எடப்பாடி பழனிசாமியை செயல்படாத முதல்வர் என்றும் கூறிக்கொண்டே இருக்கிறார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது.
இதுவரை கூட்டணி குறித்து அ.தி.மு.க. யாரிடமும் பேசவில்லை. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம, துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நல்ல முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #Thambidurai
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-
மத்திய அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பொருளாதார இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. ரூ. 8 லட்சம் வருமானம் என்பது மாத வருமானம் ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்து பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும்.
இதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. 37 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து விட்டு இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தமிழகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பல தலைவர்கள் போராடினார்கள்.
ஜாதி வேற்றுமை நீங்க வேண்டும். மனிதன், மனிதனாக வாழ வேண்டும் என திராவிட கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறது. நாம் அனைவரும் சூத்திரர்கள் தான்.
சமத்துவத்தை கொண்டு வர பல போராட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளனர். பொருளாதாரம் என்பது தொடர்ந்து மாறுபடும். அதை நிர்ணயித்து இட ஒதுக்கீடு செய்தது தவறு.
மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் சில திட்டங்களை ஆதரித்துள்ளோம்.
தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை அமல்படுத்தினால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
ரபேல் விமானத்தை வாங்க முடிவு செய்தது காங்கிரஸ். அதனை வாங்கியது பாரதிய ஜனதா. ஊழலில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்