search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102158"

    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. #Homeopathy #LokSabha
    புதுடெல்லி:

    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இது தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதன் மீதான விவாதத்துக்கு மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் பதில் அளித்து பேசுகையில், “இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி தொடங்கியவர்கள், புதிய ஓமியோபதி படிப்புகளை தொடங்கியவர்கள், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியவர்கள், ஓராண்டுக்குள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால், அவர்கள் அளிக்கும் பட்டம், அங்கீகரிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தார். #Homeopathy #LokSabha #tamilnews 
    படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுரை கூறியுள்ளார்.

    சேதராப்பட்டு:

    புதுவை ஆலங்குப்பத்தில் கால்பந்து விளையாட்டில் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் தினமும் அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ஆலங்குப்பத்துக்கு சென்றார்.

    அங்கு கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரோட்டரி சங்கம் வழங்கிய கால்பந்து விளையாட்டு உபகரணங்களை கவர்னர் கிரண்பேடி வீரர்களுக்கு வழங்கினார்.

    மேலும் வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய கவர்னர் கிரண்பேடி அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    பின்னர் விளையாட்டு வீரர்கள் மத்தியில் கிரண்பேடி பேசியதாவது:-

    படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும், இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம். இன்று அரசியல்வாதிகள், அரசு பதவிகளில் உள்ளவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு அவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம். வருகிற ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை கால்பந்து தினமாக கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    எனவே, நகரம் மற்றும் கிராமங்களில் மாணவர்கள் கால்பந்து ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது கவர்னருடன் வந்த கலெக்டர் அபித்ஜித் சிங், படிக்கும் போது விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். அப்போது தான் தேர்வில் குறைந்தமதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தாலும் தோல்வியை சகஜமாக எடுத்து கொள்ள முடியும் என்றார்.

    சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம். அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது.
    முன்பு தொலைக்காட்சிகள் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நேரத்தை விரயமாக்கும் சாதனமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு “முட்டாள் பெட்டி” என்ற பெயருண்டு. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடக் கூடியதாக இருந்தது தொலைக்காட்சிகள்.

    இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.

    அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.

    ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.



    ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.

    இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்! 
    பெற்றோராக (அ) மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
    என்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங் நடக்க உள்ளது. விரைவில் கல்லூரிகளும் திறக்க உள்ளன. கல்விக்கான செலவுகள் நெஞ்சை அடைக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பெற்றோருக்கு யோசனையைத் தருகிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் மனநிலைக்கு நீங்கள் மாறிக் கொண்டிருக்கலாம்.

    பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?..

    வட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    வட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா? வட்டி எகிறுமா? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    அரசு வங்கியா? : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.

    அரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.



    மாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.

    கடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.

    இலவசம் உண்டா? : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.

    கடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.

    தேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்! 
    திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இன்று பிள்ளைகளின் கல்விச் செலவுகள் ஒவ்வொரு குடும்பத்தின் முக்கியச் செலவினங்களில் ஒன்றாக ஆகியிருக்கின்றன. மே மாதத்தில் கல்விச் செலவு களைச் சமாளிக்க பல நடுத்தரக் குடும்பங்கள் தடுமாறித்தான் எழ வேண்டியிருக்கிறது.

    அதிலும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் எகிறிக்கொண்டே போகும்நிலையில், இன்றே திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும்.

    அந்த வழிகள் குறித்துப் பார்ப்போம்...

    ஒருங்கிணைந்த திட்டம் :

    குழந்தைகளின் கல்விச் செலவுக்குத் தனித் திட்டம் போடுவது சிலரின் வழக்கம். மாறாக, நம் குடும்பத்தின் ஒருங்கிணைந்த நிதித்திட்டத்தில் ஒரு பகுதியாக கல்வித் திட்டம் அமைய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால உயர்படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்று யோசித்து, அதற்கேற்ப இப்போதே திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொண்டு வர வேண்டும். பிக்சட் டெபாசிட் போன்றவை நம் இலக்குகளை எட்ட போதுமானதாக இராது. மியூச்சுவல் பண்ட் போன்றவை நன்கு கைகொடுக்கும். அவற்றுக்கு வரிச்சலுகையும் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    முன்கூட்டித் தொடங்குவது :

    எப்போதுமே முன்கூட்டியே முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கும்போது, கிடைக்கும் ‘ரிட்டர்னும்’ அதிகமாக இருக்கும். அதுதான் கூட்டுப் பலனின் விசேஷம். 15 சதவீத ரிட்டர்ன் அளிக்கும் எஸ்.ஐ.பி. திட்டத்தில் நாம் மாதம் 5 ஆயிரம் முதலீடு செய்துவருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதை நம் 25 வயதில் தொடங்கி 55 வயது வரை தொடர்ந்தால், அந்த 30 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்த தொகை ரூ. 3.51 கோடியாக வளர்ந்திருக்கும். மாறாக, நாம் 45 வயதில் சேமிக்கத் தொடங்கி 55 வயது வரை, அதாவது சுமார் 10 ஆண்டு காலம் சேமித்தால், வெறும் ரூ. 13.93 லட்சம்தான் கிட்டும்.

    நீண்டகாலத் திட்டம் என்றால்...

    குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்கான நீண்டகாலத் திட்டம் என்றால், ஈக்விட்டி பண்ட்களே சிறந்தவை என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. இன்னும் பத்தாண்டில் நம் குழந்தை கல்லூரியில் காலடி எடுத்துவைக்கப் போகிறது என்றால், பத்தாண்டு கால பணவீக்கத்தையும் மனதில் வைத்து நாம் முதலீட்டில் ஈடுபட்டு வரவேண்டும்.



    ஆயுள் காப்பீட்டின் அவசியம் :

    வீட்டில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதிப்பவர்கள் என்றால், அவர்கள் ஆயுள் காப்பீடு பெற்றிருப்பது அவசியம். டெர்ம் இன்சூரன்ஸ் பெற்றிருந்தால், சம்பாதிப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலும் பிள்ளைகளின் படிப்பு பிரச்சினையின்றித் தொடரும்.

    குழந்தைகள் பெயரில் காப்பீடா? :

    குழந்தைகளின் எதிர்கால படிப்புச் செலவைக் கருத்தில்கொண்டு அவர்கள் பெயரில் காப்பீடு பெறுவது சிலரின் வழக்கம். ஆனால் அத்திட்டத்தில் சேமித்து வரும் தொகை, போதுமானதாக இருக்காது.

    சிலரோ தங்களின் ஓய்வுகாலத்துக்கான முதலீட்டுத் தொகையில் சமரசம் செய்து, பிள்ளைகளின் படிப்புக்கு அதிகம் ஒதுக்கீடு செய்வார்கள். அதுவும் ஓய்வு காலத்தில் சொந்தக் காலில் நிற்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    குழந்தைகள் பெயரில் காப்பீடு பெறத் தேவையில்லை, காரணம் அவர்கள் வருவாய் ஈட்டுவோரில்லை. காப்பீடும் முதலீடும் இணைந்த குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள் அதிக பலன் தராதவை என்பதே முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் அறிவுரை. பெற்றோர், தேவையான காப்பீடு பெற்றிருந்தால் போதும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    ஓய்வுகால நிதிக்கான முதலீடு போன்றவற்றைக் குறைத்து கல்விக்காக முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதற்கு என்று முறையாகத் திட்டமிட்டு முன்கூட்டியே நிதியை வளர்த்துவருவதே சரியானது. 
    இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...
    இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலையிலும் உள்ள பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறும் வாய்ப்பை வழங்குகின்றன ஆன்லைன் படிப்புகள். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல, ஏராளமான படிப்புகளை இணையதளம் வழியே வழங்குகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மட்டும் 3 மில்லியன் மாணவர்கள் முழுமையான ஆன்லைன் படிப்புகளையும், 6 மில்லியன் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள துறை சம்பந்தமான ஏதாவது ஒரு சான்றிதழ் படிப்பையும் ஆன்லைன் வழியே படிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 2016 வரையான புள்ளிவிவரத்தின்படி 7.3 சதவீத மாணவர்கள் இணையப்படிப்பிற்கு திரும்பி உள்ளனர். இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...

    1. ஏராளமான படிப்புகள் :

    ஆன்லைனில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலம் படிக்க வேண்டிய படிப்புகளைக்கூட குறுகிய கால படிப்பாக வழங்குகின்றன இணையதள கல்வி. பல புதுமையான படிப்புகளும் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெறும் ‘தியரி’ பாடங்களாக மட்டும் படிக்காமல், தொழில்நுட்பம் முதல் மருத்துவ சான்றிதழ் படிப்புகள் வரை பல படிப்புகளும் இணையதளத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இணைய கல்வி வழங்குவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பல சிரமங்கள் குறைவதால், அவைகளும் ஆன்லைன் படிப்புகளை ஊக்குவிக்கின்றன. எண்ணற்ற படிப்புகளை இணையம் வழியாக அறிமுகப்படுத்தி வருகின்றன. சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நர்சிங் முதல் நியூரோசயின்ஸ் வரை அனைத்து வகை பாடங்களையும் இணையதள கல்வியாக வழங்குகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டும் குறுகிய கால டிப்ளமோ படிப்பாக படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    2. செலவு மிச்சம் :

    ஆன்லைன் படிப்புகள் மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பலவிதமான செலவுகளை கட்டுப்படுத்துவதாக விளங்குகின்றன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்காக இடமாறிச் சென்று வாடகைக்கு குடியேறுவது அல்லது அதிகம் செலவு செய்து சென்று திரும்புவது போன்ற பணவிரயத்தை தவிர்க்கிறது. பயணச் செலவு, எரிபொருள் செலவை மிச்சப்படுத்துகிறது. மேலும் பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கான செலவையும் தவிர்த்து விடுகிறது. இதனால்தான் கல்லூரிகள் இணையப் படிப்பை அறிமுகம் செய்வதை விரும்புகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் இணையப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.

    3. தடைகள் இல்லை :

    விரும்பிய பாடத்தை விரும்பிய சூழலில் இருந்து கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட உடையணிந்து கல்லூரிக்கு வர வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இணையப் படிப்புகளில் இல்லை. இரவு உடையில் தூங்கி எழுந்த உடனேயே பாடத்தை படிக்கத் தொடங்கிவிடலாம். சொந்த வேலைகளை பகலில் முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும் முன்பும் சிறிது நேரம் பாடம் படிக்கலாம். பாடங்களும், விளக்க உரைகளும் இணையத்தில் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடமாக படித்துவிட்டு அடுத்த பாடத்திற்கு நகர்ந்து செல்லலாம். காலையில் பரபரப்பாக எழுந்து கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்ற சிரமங்கள் இல்லை. முக்கியமான வேலைகளால் பாடவகுப்பை தவறவிடுவது, அல்லது பிரியமானவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவது போன்ற சூழல் இல்லை.

    4. வசதிகளும், நெகிழ்வு திறனும் :

    இணைய படிப்புகள் மாணவர்களின் வசதிக்கேற்றதாக வடிவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது மட்டும் படிக்கலாம். பொருளாதார நெருக்கடியால் வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டிய சூழல் கொண்டவர்களுக்கு, ஏற்றது இணைய கல்வி. அப்படி படித்தாலும் இடைவெளி விழுதல், இடைநிறுத்தம் (‘டிஸ்கண்டினியூ’ மற்றும் ‘கேப்’) போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய வகுப்புகள் என்று எதுவும் கிடையாது. நூலகங்களுக்குச் சென்றும், நேரடி பயணம் மேற்கொண்டும் சேகரிக்க வேண்டிய தகவல்கள் எதுவுமில்லை. இதனால் தங்கள் தேவைகள் எதையும் ஒத்திவைத்துவிட்டு படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அன்றைய வேலை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் படிக்க முடியும். இத்தகைய நெகிழ்வுத்தன்மைகளால் இணைய படிப்பை மாணவர்களும் விரும்புகிறார்கள்.



    5. வகுப்பறை அச்சம் குறைகிறது :

    சிறந்த கல்வித்திறன் பெற்ற மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு மற்றவர் மத்தியில் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூச்சம் இருக்கும். ஆசிரியரின் முகம் பார்த்து பதிலளிக்க சங்கடப்படும் அவஸ்தை, இணையதள படிப்பில் இல்லை. மற்ற மாணவர் முன்பு அவமானப்பட வேண்டிய சூழலும் ஏற்படுவதில்லை. சந்தேகங்கள், கேள்விகள் எதுவானாலும் எளிதான உரையாடல்கள் மூலம் முடிந்துவிடுவது மாணவர்களுக்கு திருப்தியைத் தரும்.

    6. இடைவெளியைத் தவிர்க்கும் :

    குடும்பச் சூழல், பொருளாதார சூழல், உடல் ஒத்துழைக்காமை போன்ற பல சூழல்களால் படிப்பை இடை நிறுத்த வேண்டிய அவசியம் இணைய கல்வியில் இல்லை. புயல்மழை, வெள்ளம், போராட்டம் போன்ற காரணங்களால் கல்லூரி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டாலும் இணையதள கல்வி பாதிக்கப்படுவதில்லை. சில பாட வகுப்புகள், கலந்துரையாடல்களை எந்தச் சூழலிலும், எங்கு இருந்தாலும் எதிர்கொண்டுவிட முடியும்.

    7. தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் :

    இணையம் வழியே படிப்பது மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்ப்பதாக அமையும். குறிப்பாக பாடங்கள் தொடர்பான கோப்புகளை தயாரிப்பது, அனுப்புவது, கலந்துரையாடுவது போன்ற பணிகளால் , கணினியின் அடிப்படை அறிவு முதல், நவீன தொழில்நுட்பத் திறனையும் வளர்க்க முடியும். மொழிபெயர்ப்பு திறன் மற்றும் பல வேலைவாய்ப்புத் திறன்களும் அதிகரிக்கும்.

    8. இருப்பிடம் பிரச்சினையில்லை :

    பணி இடமாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் இணையதள கல்வியை பாதிப்பதில்லை. தங்களுக்கோ, பெற்றோருக்கோ இடமாறுதல் பெறும் அவசியம் நேர்ந்தாலும் பாதிப்பின்றி கல்வி கற்க முடியும். கோடைப் பயணம் சென்றாலும், தற்காலிக பணிக்குச் சென்றாலும் இனிதே இணையப் படிப்பை தொடரலாம்!

    இத்தகையை சிறப்புகளால் இணையதள கல்வி ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவருகிறது. ஆன்லைன் படிப்புகளை படிக்கும் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராகவோ, உங்கள் படிப்பு தொடர்புடைய ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்பு படிக்க ஆசைப்பட்டு நேரமின்மை மற்றும் வசதியின்மையால் அவதிப்பட்டாலோ, இணையதளம் மூலம் அந்த படிப்பை படித்து வெற்றி பெறலாம்! 
    சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    இதுகுறித்து அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனலோசினி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறையின்கீழ் சிவகங்கையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு குரலிசை(வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 முதல் 30 வயது வரையுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்துகொள்ளலாம்.

    இதில் சேர விரும்பும் நபர்கள் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பரதநாட்டிய பிரிவில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தவில், நாதசுரம் ஆகிய வகுப்புகளில் சேர கல்வித்தகுதி தேவை இல்லை.

    அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.152 மட்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இலவச பஸ் பயண அட்டை, கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 மற்றும் அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். எனவே இசை கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நேரிடையாக விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×