search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குறள்"

    கைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறளை உலக தமிழ்மாநாட்டில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    கரூர்:

    கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் நகரமானது கைத்தறி நகரம் என்கிற சிறப்பு பெற்றதாகும். முன்பு கரூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைத்தறி தொழில் தான் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் அப்போது வீட்டுக்கு ஒரு தறியை வைத்து கொண்டு, ராட்டையில் நூல் நூற்று போர்வை, துண்டு, திரைச்சீலை, மெத்தை விரிப்பு உள்ளிட்டவற்றை நெசவு செய்து பிழைப்பு நடத்தினர்.

    ஆனால் தற்போது கைத்தறி நெசவுக்கு ஆட்கள் பற்றாக்குறை, நூல் உள்பட மூலதன பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் கைத்தறிநெசவில் போதிய வருமானம் கிடைக்காமல் தொழில் நலிவடைந்து விட்டதால் பலரும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு வேலைக்கு சென்று விட்டனர். எனினும் கரூரில் கைத்தொழிலை விட்டு விடக்கூடாது என்கிற வைராக்கியத்தில் தொடர்ச்சியாக சிலர் கைத்தறி நெசவில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.

    இந்தநிலையில் பாரம்பரிய கைத்தறி தொழிலை மீட்டெடுத்து, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர் கே.ஏ.சின்னுசாமி (வயது 73) கைத்தறி நெசவில் பல்வேறு புதுமைகளை புகுத்தினார். அதில் கைத்தறி மூலம் திருக்குறளை நெசவு செய்து துணியில் வடிவமைத்தார். 1,330 குறள்களையும் எழுதும் நோக்கில் செயல்பட்ட அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 13-ல் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு அங்கம்மாள் (68) என்கிற மனைவியும், பாஸ்கர் (52), ரவி (49), சதாசிவம் ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் குடும்ப வறுமை சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக ஒரு மகளுக்கு மட்டும் தான் திருமணமாகியுள்ளது. மற்றவர்கள் சின்னுசாமியின் மறைவுக்கு பிறகு வறுமையில் வாடி வருகின்றனர். எனினும் தந்தை விட்டு சென்ற பணியை விட மனமில்லாமல் தொடர்ந்து வீட்டில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சின்னுசாமியின் மகன் பாஸ்கரிடம் கேட்டபோது கூறுகையில், நான் சிறுவனாக இருந்தபோதே குடும்பத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டம் ஏற்பட்டது. காமராஜர் ஆட்சியில் மதியஉணவு வழங்கியதால் 3-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் எனது தந்தைக்கு உதவியாக கைத்தொழிலில் ஈடுபட்டு அதனை கற்று கொண்டேன். தற்போது அவரது மறைவுக்கு பின்னரும் விடாப்பிடியாக கைத்தறி தொழிலை விட்டு விடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எனது பிறந்த நாளின் போதே, எனது தந்தை மறைந்து விட்டது வேதனை குறியது என கூறினார்.

    எனினும், கைத்தறிக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக துணியில் சின்னுசாமியால் வடிவமைக்கப்பட்ட திருக்குறளை வருகிற ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறவுள்ள 10-வது உலகத் தமிழ் மாநாட்டில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை மீட்கவும் அதன் புத்துணர்ச்சிக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் கைத்தறியில் சாதனை படைத்தும் வறுமையில் வாடும் சின்னுசாமியின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வர வேண்டும். அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி கைத்தறி தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

    அரசு அலுவலகங்களில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட உருவபடங்கள், லட்சினை, விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை வைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் மாணவர்களின் கூடுதல் திறனை வளர்க்கும் பொருட்டு தொலைநோக்கு சிந்தனையுடன் கைத்தறி வகுப்புகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டதை அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது. இந்த கைத்தறி வகுப்புகள் பலரது வாழ்வுக்கு கைகொடுத்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. எனவே மீண்டும் பள்ளிகளில் கைத்தறிநெசவு, கூடை பின்னுதல் உள்ளிட்ட கைத்தொழில் வகுப்புகளை நடத்த வேண்டும் என கரூர் கைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த மாணவிக்கு ஆயுர்வேத கல்லூரியில் இடம் ஒதுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#highcourt

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 16 வயது மாணவி யஸ் ஹேஷ்யதா. இவர் எல்.கே.ஜி.யில் படித்தபோது 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிவித்து சாதனை படைத்தவர்.

    அதற்காக அவருக்கு தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 8-ம் வகுப்பு படித்தபோது உலக தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார்.

    2011-ம் ஆண்டு தலைநகர் தமிழ்ச்சங்கம் சார்பில் ‘திருக்குறள் மாமணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பை முடித்த யஸ் ஹேஷ்யதா 2018-19ம் கல்வியாண்டுக்கான ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பித்தார். அவர் 157.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்று இருந்தார்.

    ரேங்க் பட்டியலில் 1648 முதல் 1666 வரைக்குள் இருந்தார். ஆனால் 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கணக்குப்படி மாணவிக்கு 17 வயது முடிவடையாததால் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    இதையடுத்து மாணவி தனக்கு கல்லூரியில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறும்போது, “மாணவி பல்வேறு விருதுகள் வாங்கிய திறமை வாய்ந்தவராக உள்ளார். சிறு வயதிலேயே மேதையாக திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்து இருக்கிறார்.

    ஆனால் ஆயுர்வேத கல்லூரி படிப்பு கலந்தாய்வில் 17 வயது பூர்த்தியாகாததை காரணம் காட்டி அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர் 157.25 கட்-ஆப் மார்க் பெற்று இருக்கிறார்.

    2016-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி திருத்தப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் விண்ணப்பித்து உள்ளார். இதில் மாணவி கலந்தாய்வில் பங்கேற்க தடை இருப்பதாக இந்த ஐகோர்ட்டுக்கு தெரிய வில்லை.

    கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏ.குமார் அளித்த அறிக்கையில், மாணவி எடுத்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு சித்தா அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தனியார் கல்லூரியில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

    கன்னியாகுமரியில் உள்ள மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இடம் காலியாக உள்ளது. அந்த கல்லூரியை பரிசீலனை செய்யலாம். அவரை கலந்தாய்வில் அனுமதித்து படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருந்தால் கலந்தாய்வில் இடம் ஒதுக்க வேண்டும்” என்றார். #highcourt

    ‘திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு’ திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #Thirukkural #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” எனும் திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிப்பு செய்யும் மாணவ, மாணவியர்கள் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் குறள் பரிசாக ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 2011-2012ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 36 பேருக்கு வழங்கப்பட்டு வந்த குறள் பரிசு, 2015-2016ம் ஆண்டு முதல் 50 பேருக்கு என உயர்த்தப்பட்டது.

    மேலும், 2018-2019ம் ஆண்டு முதல் 50லிருந்து 70 பேருக்கு குறள் பரிசு வழங்க முதல்-அமைச்சரால் உயர்த்தி ஆணையிடப்பட்டது. இதுவரை 329 மாணவ, மாணவியருக்கு குறள் முற்றோதல் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019ம் ஆண்டிற்கு 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு, குறள் முற்றோதல் பரிசு ஒட்டுமொத்தத் தொகையாக ஒவ்வொரு மாணவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) விஜயராகவன் கலந்து கொண்டனர். #Thirukkural #EdappadiPalaniswami

    ×