search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா"

    பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.



    அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    காஞ்சிபுரத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். #MKStalin

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக காஞ்சிபுரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் சிறுவேடல் செல்வம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர பிரமாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து 95 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றுகிறார். இதேபோல் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே கல்வெட்டினை திறந்து கட்சி கொடியை ஏற்றுகிறார்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. மேற்பார்வையில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் தி.மு.க. கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முக. ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் வண்ண விளக்குகளால் கண்ணை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சி.வி.எம். அ.சேகரன், எழிலரசன் எம்.எல்.ஏ., தசரதன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். #MKStalin

    அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    திருச்சுழி:

    திருச்சுழியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளர் சொக்கர் தலைமையில் ஊராட்சி செயலாளர் பால முருகன், கூட்டுறவு சங்க தலைவர் வீரக்குமார், கூட்டுறவு சங்க இயக்குனர் மடத்துப்பட்டி முத்துராஜா, தலைக்குளம் கருப்பு, புதூர் செல்வராஜ், பாறைகுளம் சுந்தர்ராஜ், புலி மருது, சுப்புராஜ் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதேபோல் கல்லூரணியில் கிளை செயலாளர் முத்துவேல், கனகராஜ், அவைத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோரும், மடத்துப்பட்டியில் கிளை செயலாளர் முத்துராஜா தலைமையில் நிர்வாகிகளும் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டி நிலவள வங்கி அலுவலகத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சித்திக், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் கல்லூரணி முனியாண்டி, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர்கள் அங்கையற்கண்ணி, கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    சாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வாசன், பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் வடக்குரதவீதியில் நகர செயலாளர் குருசாமி, கோசுகுண்டு சீனிவாசன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அசோக், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திருவேங்கடசாமி, கடற்கரை ராஜ், மாவட்ட பிரதிநிதி முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் முருகேசன், சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகரச் செயலாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி, அவைத்தலைவர் மணி, பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமச்சந்திரன், சவுண்டையா, கலுசிவலிங்கம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

    அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் முத்து தலைமையில் அண்ணா சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் மாவட்ட அவை தலைவர் ராமர், ஜெயலிதா பேரவை செயலாளர் வீரகணேசன், அவை தலைவர் கருப்பசாமி, துணை செயலாளர்கள் பரசுராமன், பூப்பாண்டி உள்பட அ.ம.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ் தலைமையில் நகர செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் சாகுல்அமீது முன்னிலையில் நேரு மைதானத்திலிருந்து தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேஷ் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    சென்னை:

    மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்து செல்லும்போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி 17 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும், கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    அண்ணா, எம்.ஜி.ஆருக்குப்பின் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக ரஜினிகாந்த் இருக்கிறார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
    சென்னை:

    புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.

    புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றியும், கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

    அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
    தொண்டருக்கும் தொண்டராக இயங்கி எளிமையின் சின்னமாக திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது. #PerarignarAnna #Anna
    இன்று (செப்டம்பர்15-ந் தேதி)அண்ணா பிறந்தநாள்

    பேரறிஞர் அண்ணா பார்வைக்கு மிக மிகச் சாதாரணமாகவே தெரிவார். ஆனால் அவர் தம்முள் அடக்கி வைத்திருந்த பேரறிவுப் பெட்டகம் மிகமிகப் பெரியது. இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி, மேலே கைத்தறி வெள்ளைச் சட்டை, தோளில் ஒரு துண்டு. இவ்வளவுதான் அண்ணாவின் உடைகள்! கையில் ஒரு கடிகாரமோ விரலில் ஒரு மோதிரமோ கூட அணிந்ததில்லை. சீவிய தலை கலைந்திருந்தாலும் அதைச் சிறிதும் சட்டை செய்யமாட்டார். சட்டையிலே சில பொத்தான்களைக் கூடச் சரிவரப் பொருத்திக் கொள்ள மாட்டார்.

    பாராளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, முதன் முதலில் அவையினுள் நுழைந்தபோது அங்கு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். பாமரர் போலத் தோற்றமளித்த அண்ணாவைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஓர் உறுப்பினர் ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்பதுதான். ஆங்கிலத்தில் கரை கண்ட அண்ணா அடக்கமாக ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதை அவரும் நம்பியிருப்பார். ஆனால், அண்ணா அவையில் தமது கன்னிப் பேச்சாக உரையாற்றியபோது அனைவரும் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நேரு அண்ணா பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவைத் தலைவராக அமர்ந்திருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்ணா பேச்சை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

    அண்ணாவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அண்ணாவின் உரை முடியவில்லை. அண்ணா தொடர்ந்து பேசுவதைத் தடை செய்ய விரும்பாமல் அவையை அரைமணி நேரம் நீடிக்கச் செய்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

    பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்திய அண்ணா தமது வாழ்க்கையின் நடைமுறையில் ஆங்கிலத்தைக் கையாளுவதில்லை. ஒரு தமிழரோடு அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்றாலும் அவரிடம்கூடத் தமிழில்தான் பேசுவார். கடந்த 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரம் அது. எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அண்ணாவைப் பற்றித் தரக் குறைவாகச் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் வந்து அண்ணாவிடம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, அந்தத் தோழர்களிடம்,“அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்துவிடாதீர்கள். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றி அந்தச் சுவர் அருகே வையுங்கள். விளக்கு உபயம் அண்ணாத்துரை என்றும் எழுதி வையுங்கள்” என்றார்.



    திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து வேறு புதுக்கட்சி தொடங்கி விட்ட போதிலும் பெரியாரை அண்ணா எதிர்த்தோ, தாழ்த்தியோ பேசியது கிடையாது. ஆனால் பெரியார் அண்ணாவையும், தி.மு.கழகத்தவரையும் மிகவும் தாக்கிப் பேசுவார். தி.மு.க.வினரைக் “கண்ணீர்த்துளிகள்” என்றே குறிப்பிடுவார். பெரியார் என்ன திட்டினாலும் அண்ணா பொறுமை இழப்பதில்லை. மறுத்தோ வெறுத்தோ பேசியதுமில்லை .தோழர்கள் வந்து அண்ணாவிடம், “பெரியார் உங்களைப்பற்றி மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசுகிறாரே, அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா அண்ணா ?” என்று கேட்கிறார்கள்.

    அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? “காட்டில் யானை இருக்கிறதே அது என்ன செய்யும் தெரியுமா? தனது குட்டியைப் புரட்டிப் போட்டுத் தாக்கும். தும்பிக்கையால் வளைத்து இழுத்து, மரத்தில் மோதும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா? தன்னை மனிதரோ மிருகங்களோ தாக்க வந்தால், திருப்பித் தாக்கவும், தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவும் தனது குட்டியைப் பழக்குவதற்குத்தான் தாய் யானை அப்படிச் செய்யும். அதைப்போல், பெரியாருக்கு நம்மீது கோபம் இல்லை. எதிரிகள் நம்மீது தாக்கினால் தாங்குவதற்கும் எதிர்த்துத் தாக்குவதற்கும் நம்மைப் பழக்குகிறார் என்பதுதான் உண்மை . அதனால் நம்மவர் யாரும் பெரியாருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இது தான் அண்ணாவின் விளக்கம். அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது.

    அவருடைய எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. கவிவேந்தர் கா.வேழவேந்தருக்கு அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளும் வந்தது. மணப்பந்தலில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அண்ணா வந்து சேராததே காரணம். மணப்பந்தலை நோக்கி ஒரு லாரி வந்து நிற்கிறது. அதிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறார் அண்ணா. எல்லோருக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வியப்பு. அண்ணா காஞ்சீபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும்போது வழியில் கார் பழுதாகிவிட்டது. அந்த இடத்தில் உடனடியாகப் பழுதுபார்ப்பதற்கான வசதி கிடையாது. எப்படியும் வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். என்ன செய்வது? என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி காலியாக வந்து கொண்டிருத்து. அது சென்னைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி அண்ணா அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணாவின் நிலை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் செலுத்தியதால் விரைந்து சென்னை வந்தடைந்தது. வேழவேந்தன் திருமணமும் தடையின்றி நடைபெற்றது. இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?

    சா.கணேசன் மேயராக இருந்த போது அவரும் நானும் அண்ணாவைச் சந்திக்கச் சென்றோம். நுங்கம்பாக்கம் வீட்டின் மாடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். எதிரே நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய இருக்கை (பெஞ்சு) ஒன்றிருந்தது. நாங்கள் நின்றுகொண்டே அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தோம். அண்ணா அவர்கள் எங்களைப் பார்த்து “உட்காருங்கள்” என்று சொல்லி எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார். அண்ணாவுக்கு எதிரே சரிக்குச் சமமாக உட்கார நாங்கள் விரும்பவில்லை. “பரவாயில்லை அண்ணா, நின்று கொண்டே பேசிவிட்டுச் செல்கிறோம்” என்று சொன்னோம். பிடிவாதமாக உட்காரச் சொல்லியும் நாங்கள் உட்காரவில்லை. அந்த நேரத்தில் மாடிப்படியில் ஏறி ஒருவர் மாடிக்கு வந்தார். அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் ஆ. தங்கவேலு. அவர் பின்னால் சில தோழர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அண்ணா “குடுகுடு” என்று பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்து ஒரு பெரிய சமக்காளத்தை எடுத்து வந்து விரிக்க முனைந்தார். உடனே நான் “என்னிடம் கொடுங்கள் அண்ணா நான் விரிக்கிறேன்” என்றேன். கொடுக்க மறுத்துவிட்டுத் தாமே விரித்து, “இதில் எல்லாருமா உட்காருங்கள்” என்றார். தொண்டருக்கும் தொண்டராய் இப்படி எந்தத் தலைவராவது இயங்கியது உண்டா?

    - கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
    பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #AIADMK
    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



    இந்த கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், புதிதாக கட்சி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் செயல்பாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது.

    கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த இருக்கும் தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.

    * பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைவருக்கும் இந்த கூட்டம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.

    * புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக முடித்த அனைவருக்கும் நன்றி.

    * சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜனவரி மாதம் நடத்த முயற்சி மேற்கொண்டிருப்பதற்கும், கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.10 கோடி நிவாரண நிதி மற்றும் பல கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கும், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி.

    * ரூ.328 கோடி செலவில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீராதாரத்தை பெருக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

    * குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பல திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டு.

    * இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் புனிதப்பயணம் மேற்கொள்ள நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.

    * பெண்களுக்காக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி.

    * தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு விரைந்து வழங்க இந்த கூட்டம் வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    ×