search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகழாரம்"

    பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டி உள்ளன.
    இஸ்லாமாபாத்:

    இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது.

    ஓட்டு எண்ணிக்கையின் விவரங்களை விரிவாக வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள் மோடி அரசின் இந்த வெற்றியை தலைப்பு செய்திகளாக்கின.

    இந்தநிலையில், பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டின.

    அந்நாட்டின் பழமைவாய்ந்த பத்திரிகையான டான் நாளிதழ் தனது முதல் பக்கத்தில், “பொதுத்தேர்தலில் மோடி மகத்தான வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தேசத்தின் பாதுகாவலனாக பார்க்கப்படுகிறார்” என செய்தி வெளியிட்டது.

    இதே போல் அந்நாட்டின் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் மோடியை புகழ்ந்து செய்திகள் வெளியிட்டன. அத்துடன் அந்நாட்டின் செய்தி தொலைக்காட்சி சேனல்களில், மோடி மீண்டும் பிரதமராகி இருப்பது இந்திய-பாகிஸ்தான் உறவில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சிறப்பு விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் திறமையும், தகுதியும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் புகழாரம் சூட்டி உள்ளனர். #IAFAttack
    சென்னை:

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய விமானப்படையின் பதிலடி தாக்குதலுக்கு சென்னையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 1962-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை ராணுவத்தில் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆர்.கார்த்திகேயன் கூறியதாவது:-

    காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு பல வாய்ப்புகளை இந்தியா வழங்கியது. ஆனால் அந்நாடு அதனை ஏற்காமல் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவதுடன், புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்துதான் ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் விமானப்படை வான்வழி தாக்குதலை மிக நேர்த்தியாகவும், திறமையாகவும் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை பெரிய அளவில் பார்க்க வேண்டும். தனிமைப்படுத்தி பார்க்கக்கூடாது. பாகிஸ்தானின் மோசமான செயல்களால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எந்த வெளிநாட்டினரும் இதனை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பயங்கரவாத செயலை அழிக்க ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். பொதுமக்களும் சாதி, மத உணர்வுகளை கடந்து அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் அணிவகுக்க வேண்டும். தாக்குதல் நடத்த அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், விமானப்படை மற்றும் ராணுவத்துக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனியாவது பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற லெப்டினட்-கர்னல் என்.தியாகராஜன் கூறியதாவது:-

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட், முசாபராபாத் மற்றும் சாக்கோட்டி ஆகிய இடங்களில் 12 மிரஜ் வகை விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை வேகமாகவும் துல்லியமாகவும் தாக்கி அழிக்கும் செயல் (ரேபிட் ஆக்சன்) என்று கூறுவோம்.

    தாக்குதல் நடத்தப்பட்ட பாலகோட்டில் பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு மிக அருகில் அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் 5½ ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இந்த முகாமில் தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் பதுங்கி இருந்ததுடன், பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுதல், பயிற்சி அளித்தல் போன்றவை நடந்து வந்தது. இதில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    குறிப்பாக தாக்குதல் நடத்திய 3 இடங்களிலும் தலா ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் திறமையும், தகுதியும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இந்த செயலை வரவேற்க வேண்டும்.

    மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் மிகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த தாக்குதலை அரசியல்ரீதியாக கொண்டு சென்று கொச்சைப்படுத்த கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்னல் பி.கணேசன் - லெப்டினட் ஜெனரல் பாபி மாத்யூஸ்

    ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் பாபி மாத்யூஸ் கூறும் போது, ‘மத்திய அரசின் நடவடிக்கை சரியானது, பாராட்டுக்குரியது. இனிமேலாவது பாகிஸ்தான் அரசு இதுபோன்ற நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை யோசனை செய்யும். இந்த தாக்குதலுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார்.

    ஓய்வு பெற்ற லெப்டினெட் கர்னல் ராஜன் ரவீந்திரன் கூறுகையில், ‘புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நல்ல முயற்சி. அரசின் நடவடிக்கையை முழுமையாக வரவேற்கிறேன்’ என்றார்.

    ஓய்வு பெற்ற கர்னல் பி.கணேசன் கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் என்ற நாடே இல்லை. ஆனால் ஜம்மு-காஷ்மீர் நிலப்பகுதி இருந்தது. ஆனால் தற்போது ஜம்மு-காஷ்மீர் எங்கள் பகுதி என்று அந்த நாடு கூறுவதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார். அவர்களின் தேவையில்லாத நடவடிக்கையால் கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடந்தது. அதற்கு பிறகும் தொடர்ந்து மோசமான செயல்களில் அந்நாடு இறங்கி வருகிறது.

    புல்வாமா தாக்குதல் ஏற்புடையது அல்ல. இதுபோன்ற தாக்குதலை அவ்வப்போது நடத்திவிட்டு நாங்கள் செய்யவில்லை என்று பாகிஸ்தான் கூறி வந்தது. சரியான நேரத்தில் சரியான பாடத்தை ராணுவம் புகட்டி உள்ளது. ராணுவ வீரர்களின் திறமை வெளிப்பட்டுள்ளது. இனியும் தேவையில்லாத நடவடிக்கையில் இறங்கினால் பெரிய இழப்பை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியது வரும். நாட்டு மக்கள் அனைவரும் ராணுவத்துக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IAFAttack

    அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டினார். #AmericanHero #IndianOrigin #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கார்பரல் சிங் (வயது 35).

    இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மாதம் 26-ந் தேதி, போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, மெக்சிகோவை சேர்ந்த வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த வாலிபரை கலிபோர்னியா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.



    இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டிரம்ப் அனுதாபம் தெரிவித்தார். மேலும் கடந்த 4-ந் தேதி கார்பரல் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய சக போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவரை காட்டுமிராண்டி தனமாக சுட்டுக்கொலை செய்த மெக்சிகோ வாலிபரை ‘ஏலியன்’ என்றும் சாடினார். 
    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AjitWadekar #SachinTendulkar
    மும்பை:

    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இடக்கை பேட்ஸ்மேனான வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் விளையாடி ஒரு சதம், 14 அரைசதம் உள்பட 2,113 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 16 டெஸ்டுகளில் பங்கேற்று 4-ல் வெற்றியும், 8-ல் டிராவும், 4-ல் தோல்வியும் கண்டது. அவரது தலைமையிலான இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை (இரண்டு தொடரிலும் 1-0 என்ற கணக்கில்) வென்று புதிய வரலாறு படைத்தது. இந்திய ஒரு நாள் போட்டி அணியின் முதல் கேப்டன் என்ற சிறப்புக்குரியவரும் இவர் தான். ஆனால் வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.


    இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் நேற்று பயிற்சியின் போது மறைந்த முன்னாள் கேப்டன் அஜித் வடேகருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.



    1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெறும் 42 ரன்னில் சுருண்டது. இந்த நாள் வரைக்கும் இந்திய அணியின் மோசமான ஸ்கோராக அது தான் இருந்து வருகிறது. இதனால் கேப்டன் பதவியை இழந்தார். அத்துடன் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.

    ஓய்வுக்கு பிறகு வங்கியில் பணியாற்றிய அஜித் வடேகர், அதன் பிறகு அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கு 1992-ம் ஆண்டு மேலாளர்-பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். தேர்வு குழு தலைவராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

    1994-ம் ஆண்டு நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் போது சச்சின் தெண்டுல்கர் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காராக களம் இறங்கினார். அதற்கு அப்போதைய பயிற்சியாளர் அஜித் வடேகரே முக்கிய காரணமாகும். தெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய பிறகே கிரிக்கெட்டில் பல மகத்தான சாதனைகளை படைத்தார்.

    இதே போல் 1990-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 1992-93-ம் ஆண்டில் மீண்டும் அணிக்கு திரும்பிய போது அப்போது பயிற்சியாளராக இருந்தவர் வடேகர். அதன் பிறகு கும்பிளே தொடர்ந்து 16 ஆண்டுகள் விளையாடினார்.

    வடேகரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போல் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைதளம் மூலம் அனுதாபம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சச்சின் தெண்டுல்கர்: வடேகரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 1990-களில் எங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார். அவரது ஆலோசனைகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் நாங்கள் எப்போதும் நன்றிக்குரியவர்களாக இருப்போம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் துயரத்தை தாங்கும் மனவலிமையுடன் இருப்பதற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    சுனில் கவாஸ்கர்: ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக நான் அறிமுகம் ஆன போது எனது முதல் கேப்டனாக வடேகர் இருந்தார். இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் அடியெடுத்த போது கேப்டனாக அவர் தான் இருந்தார். என்னை பொறுத்தவரை அவர் தான் எனக்கு எப்போதும் கேப்டன். உலகை விட்டு மறைந்து விட்டாலும் எனக்குள் அவர் எப்போதும் இருப்பார்.

    அசாருதீன்: வடேகர் ஒரு அடையாள சின்னம். அவர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது மறைவு எனக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    சவுரவ் கங்குலி: அவரை நான் மிகவும் தவற விடுகிறேன். என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். இது எனக்கு சோகமான நாள்.

    கும்பிளே: இந்திய அணிக்கு பயிற்சியாளர் என்பதையும் தாண்டி ஒரு அப்பா போன்று எங்களை வழிநடத்தினார். வியூகங்களை தீட்டுவதில் சாதுர்யமானவர். என் திறமை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    பிஷன்சிங் பெடி: இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர், ஒரு உள்நாட்டு தொடர் என்று தொடர்ந்து மூன்று தொடர்களை வென்றுத்தந்த முதல் இந்திய கேப்டன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் மீது அளப்பரிய மதிப்பு உண்டு.

    ஷேவாக்: கேப்டன், பயிற்சியாளர், தேர்வு குழு தலைவர் என்று மூன்று பணிகளையும் கவனித்த அபூர்வமான ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர். அவரது மறைவுக்கு எனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்.

    ரவிசாஸ்திரி (இந்திய பயிற்சியாளர்): இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனை இழந்து விட்டோம். இந்திய கிரிக்கெட்டுக்கு இது துயரமான தருணமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #AjitWadekar #SachinTendulkar
    ×