search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104120"

    உமேஷ் யாதவிற்கு தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அதிக அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #TeamIndia
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ் யாதவ். அதிவேக பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியவர். ஆனால் இந்தியா தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து சென்று விளையாடும்போது அவருக்கு போதிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    8 டெஸ்ட் போட்டியில் ஒன்றில் மட்டுமே விளையாடினார். 2018-ல் இந்தியா விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே களம் இறங்கியுள்ளார். சிறப்பாக பந்து வீசும் உமேஷ் யாதவிற்கு அதிர்ஷ்டம் இல்லை என பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.



    உமேஷ் யாதவ் குறித்து பரத் அருண் கூறுகையில் ‘‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் ஏராளமான போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. இதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதுதான்.

    எங்களுடைய திட்டம் பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான். இதில் உமேஷ் யாதவ் ஒரு பகுதி. உமேஷ் யாதவால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.
    கருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.

    கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.



    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

    தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி முடிவுகளை எதிர்த்து சவால் கொடுக்க தேர்வுக்குழுவிற்கு போதுமான அனுபவம் இல்லை என கிர்மானி தெரிவித்துள்ளார். #BCCI
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என இழந்தது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டியில் விளையாடிய முரளி விஜய் 4-வது மற்றும் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். கருண் நாயர் ஐந்து போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. அணியில் சேர்க்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறவில்லை என்று தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

    ஆனால் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இருவரின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரின் முடிவை எதிர்க்க தேர்வுக்குழுவிற்கு போதிய அனுபவம் இல்லை என்று முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பரும், தேர்வுக்குழு தலைவரும் ஆன சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சையத் கிர்மானி கூறுகையில் ‘‘நீங்கள் என்னிடம் கேட்டால், தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, முக்கிய தேர்வாளராக இருக்கிறார் என்பேன். ரவி சாஸ்திரி, விராட் கோலி மற்றும் சீனியர் உறுப்பினர்கள், எதை விரும்புகிறார்களோ, அதை தேர்வுக்குழுவில் வலியுறுத்துகிறார்கள்.

    மரியாதை கொடுக்கக்கூடிய தேர்வுக்குழு ரவி சாஸ்திரி, கோலியை விட அனுபவமற்றவர்களாக இருக்கிறார்கள். ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் அவர்களை விட அதிக அனுபவம் பெற்றவர்களாக இருப்பதால், நிர்வாகம் என்ன விரும்புகிறதோ, அதை செய்கிறார்கள். ஏனென்றல் அவர்களால் எதிர்த்து விவாதம் செய்ய முடியாது’’ என்றார்.
    ஐபிஎல் டி20 லீக்கில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். #IPL #KXIP
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. வளர்ச்சி பெற்ற ஐபிஎல் சூதாட்டம் என்ற வார்த்தையால் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

    ஐபிஎல் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஸ்ரீசந்த் உள்பட சில வீரர்கள் தங்கள் கேரியரை இழந்தனர். இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வம் ஆக்கப்படாததால் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் தவாறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், ஊழல் கண்காணிப்பு பிரிவு ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகிறது.

    லோதா கமிட்டி பரிந்துரையில் கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கூறியிருந்தது. அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

    இந்நிலையில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் ‘‘அரசு சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால், வருமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இரண்டாவது, அப்படி செய்தால் சூதாட்டம் போன்றவற்றை நிறுத்த முடியும்.



    ஏனென்றால், உங்களால் எத்தனை மக்களை நிறுத்த முடியும்?. அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன். இதை பிசிசிஐ ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அற்புதமானது.

    நான் பிடிபட்டு விடுவேன் என்று ரசிகர்கள் பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த அளவிற்கு போலீசால் மக்களை பயமுறுத்த முடியாது’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் தேர்வுக்குழு பற்றி விமர்சனம் செய்த முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க இருக்கிறது. #BCCI #MuraliVijay
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீரர் முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர் ஆகியோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்தில் மோசமான ஆட்டம் காரணமாக முரளி விஜய் கழற்றி விடப்பட்டார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காமலேயே கருண் நாயர் நீக்கப்பட்டார்.

    அணியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் தேர்வு குழுவினர் மீது விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வு குழுவினர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர். தேர்வு கொள்கையையும் விமர்சித்து இருந்தனர். இதற்கு தேர்வு குழு தலைவர் எமஎஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில தேர்வு குழுவை விமர்சனம் செய்ததால் முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கருண் நாயர்

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேர்வு கொள்கைகளை பற்றி பேசியதன் மூலம் முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் வீரர்களின் ஒப்பந்தத்தை மீறி விட்டனர்.

    இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப்படி முடிந்த தொடர்கள் பற்றிய கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கக்கூடாது. ஐதராபாத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெறும் கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து எழுப்பபடும்” என்றார்.
    ஒருநாள் போட்டியில் அசத்தும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஜொலிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #dhawan
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 20.25 ஆகும். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.



    ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

    அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.
    புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ- மதிக்காததால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிசிபி புகாரை விசாரிக்க தொடங்கியது ஐசிசி. #BCCI #PCB #ICC
    மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    2014-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் சஞ்சய் பட்டேல் கையெழுத்திட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.



    இதனால் தங்களுக்கு ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) புகார் அளித்தது.

    பாகிஸ்தானின் புகார் மனு குறித்து ஐசிசி-யின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தீர்ப்பாயம் நேற்று விசாரணையை தொடங்கியது. மைக்கேல் பெலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இந்த விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்தனர்.



    இந்த வழக்கு விசாரணைக்காக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வாதாட நியமித்துள்ளன. அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
    இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து கருண் நாயருக்கு தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார். #INDvWI #KarunNair
    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 303 ரன்கள் குவித்தார். டெஸ்டில் முச்சதம் அடித்த இரண்டு இந்தியர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகு சில போட்டிகளில் சோபிக்காததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

    சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயரும் அங்கம் வகித்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.

    இதனால் வேதனை அடைந்த 26 வயதான கருண் நாயர், ‘‘எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவோ அல்லது இந்திய அணி நிர்வாகமோ யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு விவாதிக்கவில்லை’’ என்று கூறியிருந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது அவர் நேற்று கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு கருண் நாயரை நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அணித் தேர்வு குறித்து விரிவாக விளக்கம் அளித்தேன். மறுபடியும் அணிக்குள் நுழைவதற்கான வழிமுறைகளை எடுத்து சொன்னேன். வீரர்கள் உடனான தகவல் தொடர்பு விஷயத்தை பொறுத்தவரை தேர்வு கமிட்டிக்கு என்று வகுக்கப்பட்ட நடைமுறையில் தெளிவாக இருக்கிறோம்.



    தகவல் தொடர்பு எப்போதும் தேர்வு கமிட்டிக்கு முக்கியமானது. ஆனால் எந்த ஒரு வீரருக்கும் நீங்கள் அணியில் இல்லை என்ற மகிழ்ச்சியற்ற தகவலை சொல்வது கடினமானதாகும். அவ்வாறான சூழலில் நீங்கள் அணிக்கு ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கு உரிய காரணத்தை சொல்ல வேண்டியது அவசியமாகும். ஆனாலும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.

    எங்களது தேர்வாளர்களில் ஒருவரான தேவங் காந்தி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரினபோது கருண் நாயரிடம் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பாக நீண்ட நேரம் பேசினார். அது மட்டுமின்றி அவருக்கு ஊக்கமளித்து வாய்ப்புக்காக காத்திருக்கும்படி ஆலோசனைகளும் வழங்கினார். இந்திய அணிக்கு திரும்புவதற்கு கருண்நாயர், ரஞ்சி மற்றும் இந்திய ‘ஏ’ அணி போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும். நமது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திட்டத்தில் கருண் நாயருக்கும் நிச்சயம் இடம் உண்டு. தற்போது அவர் முதல்தர போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு எம்எஸ்கே பிரசாத் கூறினார்.
    டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய வீரர் கருண்நாயர், டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளார். #KarunNair #BCCI
    பெங்களூர்:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களில் 2 பேர் மட்டுமே டிரிபிள் செஞ்சூரி அடித்துள்ளனர். ஒருவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2 முறை டிரிபிள் செஞ்சூரி (319, 309) அடித்துள்ளார்.

    மற்றொருவர் கருண் நாயர். 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் 303 ரன் குவித்து முத்திரை பதித்தார்.

    முச்சதம் அடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கருண்நாயர் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது. 26 வயதான அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் ஆடினார். அதற்கு பிறகு கடந்த 1½ ஆண்டுகளாக 11 பேர் கொண்ட அணியில் ஆடவில்லை.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடருக்கான அணியில் கருண்நாயர் இடம் பெற்று இருந்தார். ஆனால் ஒரு டெஸ்டில் கூட அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. கடைசி வரை பெஞ்சில் தான் இருந்தார்.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது கருண்நாயர் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் ஆடினேன். இதில் இரண்டு இன்னிங்சில் நான் சரியாக ஆடவில்லை. ஆனால் அதன்பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டமே. வாய்ப்பு கொடுக்காமல் நீக்கப்பட்டது ஏன்? என்று தெரியவில்லை.

    தேர்வு குழுவினரோ அல்லது அணி நிர்வாகமோ என்னிடம் எந்த தகவலையும் பரிமாறியது இல்லை. இது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனாலும் தேர்வு குழு ஒரு முடிவை எடுத்துவிட்டது. அதை நான் மதிக்கிறேன்.

    இவ்வாறு கருண்நாயர் கூறியுள்ளார். #INDvWI #karunnair #TeamIndia #BCCI
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #INDvENG #RaviShastri
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 5 டெஸ்டில் ஆடியது. இதில் 20 ஓவர் தொடரை மட்டும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடியும் பலன் இல்லாமல் போனது.

    இந்திய அணி 3-வது டெஸ்டில் மட்டும் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும், 5-வது டெஸ்டில் 118 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்று இருந்தது.


    இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. குறிப்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். பயிற்சியாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் அணி நிர்வாகம் நேரில் ஆஜராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) நிர்வாகிக்கும் குழு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு அறிக்கை ஒன்றையும் சமர்பித்தார்.

    வினோத்ராய் தலைமையிலான நிர்வாக குழுவை ரவிசாஸ்திரி ஆசிய கோப்பை போட்டிக்கு புறப்படும் முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘டாஸ்’ போடுவதில் விராட் கோலி தவறான முடிவு எடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

    ‘டாசில்’ தோற்றதால் தோல்வி அடைந்தோம் என்று ரவிசாஸ்திரி நிர்வாக குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அவரிடம் நிர்வாக குழு தெரிவித்தது.

    ஆஸ்திரேலிய பயணத்தில் அதிகமான பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி அப்போது கேட்டுக் கொண்டார்.

    அணி நிர்வாகத்தை பலப்படுத்துவது குறித்து நிர்வாக குழு ஆலோசித்தது. இதை தொடர்ந்து இந்திய அணிக்கு விரைவில் சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார். #INDvENG #RaviShastri
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது போட்டி டிக்கெட் பிரச்சனையால் மாற்றப்பட வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. #INDvWI #BCCI
    மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    இதில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 24-ந்தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பிசிசிஐ-யின் புது அரசியலமைப்பு விதிப்படி ஒரு மைதானத்தில் இருக்கும் மொத்த டிக்கெட்டில் 90 சதவீத டிக்கெட்டுக்கள் ரசிகர்களுக்க அளிக்கப்பட வேண்டும். 10 சதவீதம்தாம் கிரிக்கெட் சங்கத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

    இந்த டிக்கெட்டை வைத்துதான் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஸ்பான்சர் மற்றும் உயர்அதிகாரிகள் போன்றவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும். ஹோல்கர் மைதானத்தில் 27 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இதில் 10 சதவீதமான 2700 டிக்கெட்டுக்கள் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஒதுக்கப்படும்.



    இந்நிலையில் பிசிசிஐ முக்கிய பிரமுகர்களுக்கு என 5 சதவீத டிக்கெட்டுக்களை கேட்கிறது. இதற்கு மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் உடன்படவில்லை. பிசிசிஐ தனது முடிவை மாற்றாவிடில் போட்டியை நடத்த முடியாது என்பதில் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் உறுதியாக உள்ளது. இதனால் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
    இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா, அஸ்வின் உடல் தகுதி பரிசோதனைக்கு பின்னர் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தேர்வு பெறுவார்கள். #INDvWI #IshantSharma #Ashwin #BCCI
    புதுடெல்லி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் அக்டோபர் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் நேற்று கூடியது. அவருடன் தேவங் கார்வி மட்டுமே வந்து இருந்தார்.

    மற்ற தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சரண்தீப்சிங் துபாயில் உள்ளார். ஜதின் பரஞ்செ, கதன்கோடா ஆகிய இருவரும் விஜய் ஹசாரே போட்டியை பார்ப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த 3 தேர்வு குழு உறுப்பினர்களும் வராததால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேகப்பந்து வீரர் இஷாந்த்சர்மா, அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர்கள் தேர்வாக உடல் தகுதி பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இருவருக்கும் வருகிற 29-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    அஸ்வின் ஏற்கனவே காயத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமில் புனர்வு பெற்று வருகிறார். அவருடன் இஷாந்த்சர்மா இணைவார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் இயக்க நிபுணர் அளிக்கும் உடல் தகுதி அறிக்கை அடிப்படையில் இருவரது தேர்வு இருக்கும்.

    உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடிய பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அதை மனதில் கொண்டு 15 வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்கிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தவானின் பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்ற நிலை இருக்கிறது. #INDvWI #IshantSharma #Ashwin #BCCI #TeamIndia
    ×