search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரன்"

    ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 14-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடித்திருக்கிறார்.

    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

    இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SuttuPidikkaUtharavu
    இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

    இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டைக்கலைஞர்களை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.



    'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `கென்னடி கிளப்' படக்குழுவின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #KennadiClub #Sasikumar
    `ஏஞ்சலினா', `சாம்பியன்' படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிய பிரபல இயக்குனருக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள். #ThalaAjith #Ajith
    பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளை செய்து வருவார். தற்போது நடிகர் அஜித்துக்கு ஒரு கடிதம் எழுதி பதிவு செய்திருக்கிறார்.

    இதில், 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும், பல கோடி மக்களில் நானும் ஒருவன்..,’ என்று பதிவு செய்திருக்கிறார்.

    இதற்கு அஜித் ரசிகர்கள் சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்று அஜித் ரசிகர்கள் பதிவு செய்து ட்விட்டரில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள்.



    அஜித் சில தினங்களுக்கு முன்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இயக்குனர் சுசீந்திரன் இவ்வாறு பதிவு செய்திருப்பது, விளம்பரத்திற்காகவும், அஜித்தின் கால்ஷீட்டிற்காகவும் இப்படி செய்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார். #KennedyClub #Sasikumar
    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'.

    இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.



    இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

    இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி 2 கோடி செலவில் உருவாகி வருகிறது. #Sasikumar #KennedyClub
    சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15 கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

    தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.



    படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்துள்ளார்.

    சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar
    ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

    படம் பற்றி சுசீந்திரன் பேசும் போது, 

    ‘‘பெண்கள் கபடியை மையமாக கொண்ட கதை, இது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடைபெற்றதோ அங்கெல்லாம் சென்று நிஜ போட்டிகளை படமாக்கி இருக்கிறோம். சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.



    பெரும்பாலான காட்சிகளை 4 கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றோம். அங்கிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் நடைபெற இருக்கும் நிஜ போட்டியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    சீன மொழிக்கான டப்பிங் உரிமை (ரூ.2 கோடிக்கு) படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை ஆகியிருக்கிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும்.’’ என்றார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    பிரபல இயக்குனர் சுசீந்திரன் என்னை ஏமாற்றி விட்டார் என்று நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். #Nataraj
    பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ், மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு ஆகிய படங்களில் நடித்து மிகவும் நடிகராக பிரபலமானார். தற்போது ‘சண்டி முனி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையில் ஜீவா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினதுதான் தவறான முயற்சி. இதற்கு காரணம் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரனும், அவரது மேனேஜர் ஆண்டனியும் என்னை ஏமாற்றி விட்டார்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.



    பல வெற்றி படங்களை இயக்கிய சுசீந்திரன் விஷ்ணு விஷாலை வைத்து ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கினார். இதில் ‘ஒரு ரோசா...’ என்ற ஒரு பாடலுக்கு நட்டி நட்ராஜ் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’, சீன மொழி பேச இருக்கிறது. #KennadyClub #Suseenthiran #Sasikumar
    'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

    விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு தான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    பாரதிராஜா- சசிகுமார்- சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்டு உருவாகியுள்ளது 'கென்னடி கிளப்'. சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை டி.இமான் இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
    சுசீந்திரன் இயக்கத்தில் யுவன் இசையில் ரோஷன், பிரியா லால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீனியஸ்’ படத்தின் விமர்சனம். #Genius #GeniusReview
    ஆடுகளம் நரேன்-மீரா கிருஷ்ணன் தம்பதியின் ஒரே மகன் ரோஷன். படிப்பில் படுசுட்டியாக திகழும் ரோஷனின் திறமையை உணர்ந்த தந்தை நரேன், அவனை சிறு வயது முதலே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறார். தொடர்ந்து கோச்சிங் சென்டருக்கு அனுப்பி படிக்க வைத்து, பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மார்க்கும் வாங்க வைக்கிறார். 

    இதனால், ரோஷனின் விளையாட்டு ஆர்வமும், சந்தோஷமும் பறி போகிறது. அதன் பின் ரோஷன் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஐடி கம்பெனியிலும் வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கிறார். இந்நிலையில் ரோஷனின் திறமையை பார்த்து மேலதிகாரி அதிக வேலைகளை கொடுக்கிறார். 

    இரவு பகல் பாராமல் வேலை செய்யும் ரோஷனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரோஷன், குணமடைந்தாலும் மன அழுத்தத்தால் அடிக்கடி கோபப்படும் சூழ்நிலையும் தன்னிலை மறக்கும் நிலையும் உருவாகிறது. ரோஷனை குணப்படுத்த பெற்றோர்கள் பலவிதங்களில் முயற்சி செய்கிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? ரோஷன் குணமடைந்தாரா? என்பதே மீதிக்கதை.



    இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் ரோஷன். தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலால், சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார். 

    பெற்றோர்களாக நடித்திருக்கும் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். டாக்டராக ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், பாலாஜி, திலீபன் ஆகியோர் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.



    குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது கூடவே விளையாட்டும் முக்கியம் என்பதை ஜீனியஸ் படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இந்தக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்? என்பதை காட்சிகளில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர். அத்துடன் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையோடு நல்ல அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்க முடிகிறது. ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘ஜீனியஸ்’ அட்வைஸ்.
    படிப்பு முக்கியம் தான், படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை படத்தில் மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். #Genius #Suseenthiran
    சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் `ஜீனியஸ்'. சுசீந்தரன் இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற 26-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது.

    படத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது, பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார். அப்படி சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது. 

    நல்ல படித்த, பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றிய கதை தான் இந்த படத்தின் கதை. இக்கதையை நான் விஜய், அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.



    இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது, அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது. ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார். 

    இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது, நான் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி தான் கற்றேன். நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்றார் இயக்குனர் சுசீந்திரன். #Genius #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் `ஜீனியஸ்' படம் உண்மை கதையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். #Genius #Suseenthiran #Roshan
    வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா என்று வெற்றிப் படங்களை கொடுத்த சுசீந்தரன் அடுத்து புதுமுகங்களான ரோ‌ஷன், பிரியா லால் நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ். படம் பற்றி கூறும்போது ‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு மனிதரை சந்தித்தேன்.

    நல்லா சரளமாக ஆங்கிலம் பேசிய அவர் பேச்சு, நடவடிக்கைகளில் நிறைய வித்தியாசம் இருந்தது. ‘நான் பேசுறதைப் பார்த்து என்னைப் பைத்தியம்னு நினைச்சிடாதீங்க. நான் கொஞ்சம் கன்ட்ரோல் இல்லாம இருக்கேன் அவ்ளோதான்’னு அவனுக்கு அவனே பேசிக்கிட்டு இருந்தான். அதிகமா படிச்சுப் படிச்சு அதுக்கான வடிகாலே இல்லாம இந்தத் தலைமுறையினர் இருக்காங்க.

    பெத்தவங்களும் படி படினு டார்ச்சர் பண்ணி, ஸ்கூல் முடிச்சா டியூசன், அந்த கிளாஸ் இந்த கிளாஸ்னு குழந்தைகளுக்குள்ள கல்வியைத் திணிக்கிறாங்க. அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பையன் வாழ்க்கையை எப்படி அணுகுறான் என்பதை எமோ‌ஷனோடு ஹியூமர் கலந்து இயக்கி இருக்கும் படம்தான், இந்த ‘ஜீனியஸ்’.



    வெறும் பள்ளி படிப்போடு மட்டுமே நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கை முழுக்க இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கூறி இருக்கிறேன். புதுமுகங்களை வெச்சு ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுக்க ஆசைப்படுறேன். அது மட்டுமல்லாமல், புதுமுகங்கள் சினிமாவுல ஏதாவது சாதிக்கணும்னு ஒரு வெறியோட வருவாங்க. அது நமக்கு ரொம்பவே பயன்படும்’ என்று கூறியுள்ளார். #Genius #Suseenthiran #Roshan

    ×