search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105618"

    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.
    ஊழியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது ‘பிராவிடண்ட் பண்ட்’ (சுருக்கமாக பி.எப்.) எனப்படும் வருங்கால வைப்புநிதித் திட்டம்.

    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

    பல்வேறு காரணங்களுக்காக, இடையில் நாம் பி.எப். பணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ பெற்றுக்கொள்ள முடியும். அவை எவை எவை என்று இங்கே பார்ப்போம்...

    மகன் அல்லது மகளின் கல்விச் செலவுக்காக, வருங்கால வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஊழியரின் பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டும்தான் விடுவிக்கப்படும்.

    திருமணமாகாத ஒருவர், தனது திருமணத் தேவைக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். மகன், மகள், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின் திருமணத்துக்காகவும் பணத்தைப் பெறலாம். ஆனால் தாம் செலுத்திய பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டுமே இந்தக் காரணங்களுக் காகத் திரும்பப் பெற முடியும்.

    தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காமல் இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.

    இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.

    ஓர் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது கோர்ட்டை அணுகும்போதோ, தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருங்கால நிதியில் 50 சதவீத பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத் தொகையை நூறு சதவீதம் வரை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவனம் வழங்காதபோதோ நூறு சதவீத வட்டியுடன் பங்களிப்புத் தொகை முழுவதையும் தொழிலாளர் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.

    காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம் பாதிப்பு மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால் 6 மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகையோ வட்டியுடன் வழங்கப்படும்.

    கலவரம், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் உறுப்பினர்களின் சொத்து சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத் தொகையில் 50 சதவீதமோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதைக் காரணம் காட்டி, பங்களிப்பாளர் ஒருவர் கடன் முதலீடாக வருங்கால வைப்பு நிதி கோர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக முதலாளி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது 6 மாதங்களுக்கான பரிவுத்தொகை அல்லது வட்டியுடன் பங்களிப்புத்தொகை அல்லது உபகரணங்களுக்கான செலவுத்தொகை இதில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.

    உறுப்பினர் ஒருவர் தனது 54-வது வயதில் 90 சதவீதம் வரை வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலும் இந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.

    55 வயதை எட்டிய ஓர் உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி அனுமதிக்கிறது. இதை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ அல்லது வரிஷ்த்த பென்சன் பீமா யோஜனாவிலோ முதலீடு செய்து கொள்ளும்வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

    வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டிடங்களில் முதலீடு செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும். ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ, மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின் பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி விடுவிக்கப்படும். 
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதற்கு போதுமான ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.

    ஏற்கனவே கட்டிய கட்டிடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் வரும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். அதற்கு கட்டிட என்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    ஜன்னல் கண்ணாடிகளின் மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசி படலம் தடுக்கும். அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ண கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும்.

    சுவர்களில் பூசும் பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மை. அழுத்தமான வண்ணங்களை சுவர்களுக்கு பூசினால், அதன் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்புகள் போதுமானது.



    மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தை குறைத்தால், மின்சாரம் குறைவாக செலவாகுமா? என்பதுதான். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மின்விசிறியை சுற்றவிடலாம்.

    எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தை செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

    வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் சி.எப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தை தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தை செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
    உண்மையிலேயே தேவையா இல்லையா என்பதை சற்றும் யோசிக்காமல் கண் மூடித்தனமாக பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிப்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.
    சம்பளம் வாங்கியவுடன் அந்த மாதத்திற்கான தேவைகள் மற்றும் செலவுகள் என்னென்ன என்று பட்டியலிட்டு அளவோடு வாங்கி வளமோடு வாழ்ந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பொருளின் பின்னே அலையும் பொருளற்ற வாழ்க்கையை தேடி போய்க் கொண்டிருக்கிறது இன்றைய சமூகம். உண்மையிலேயே தேவையா இல்லையா என்பதை சற்றும் யோசிக்காமல் கண் மூடித்தனமாக பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிப்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

    உயர் வர்க்கத்தினர் மட்டுமின்றி நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களும் போலி கவுரவத்திற்காக பொருட்களை வாங்கி விட்டு பின்பு பெருங்கடனில் சிக்கிக் கொண்டு நிம்மதியை தொலைக்கின்றனர். நுகர்வோரின் இந்த தீராப் பசிக்கு தீனி போடுவதற்காகவே நகரின் மைய பகுதிகளில் புதிதாக பல பேரங்காடிகள் முளைத்து பண்டத்தை மொய்க்கும் ஈக்களாய் மக்களை மாற்றி இருக்கின்றன. வார இறுதி நாட்களில் இவ்விடங்களுக்கு சென்று பொழுதுபோக்கிற்காக பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கும் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கும் கேடு விளைவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது.

    இதில் என்ன தவறு இருக்கிறது? நன்றாக பொருளட்டுகிறோம், மகிழ்ச்சியாய் செலவு செய்கிறோம் என்பதே பெரும்பாலானோரின் வாதமாய் இருக்கிறது. ஆனால் இப்படி தேவைக்கு அதிகமாய் பொருட்களை வாங்கி குவிப்பது சிகிச்சை எடுக்க வேண்டிய அளவுக்கு பெரிய உளவியல் சிக்கல் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போதை பழக்கத்தை போன்றே அடிமையான பின்னர் மீள்வது கடினம் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

    இப்படி சமீப காலங்களில் அதிகரித்து விட்ட இந்த நுகர்வு கலாசாரத்திற்கு, மக்களை இலக்காகி குறிவைக்கும் வணிக நிறுவனங்களே காரணம். கடைகள், அங்காடிகள் மட்டுமின்றி ஆன்லைன் வர்த்தகத்தின் மீதான மோகமும் மக்களிடேயே அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் நாம் எதை பார்க்கிறோம், எதன் மீது ஆர்வம் காட்டுகிறோம், கூகுளில் எதை தேடுகிறோம் என்று ஒரு தனி நபர் பற்றிய அத்தனை, தகவல்களையும் அறிந்து அது தொடர்பான பொருட்களை அடிக்கடி கண்ணில் படும்படி கவர்ச்சியாக விளம்பரப்படுத்தி நம்மை வாங்க வைத்து விடுகின்றனர்.

    இந்த யுக்திகள் எதையும் அறியாமல் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததாய் எண்ணிக் கொண்டு நாமும் அறியாமையில் பொருள் வாங்குகிறோம். முன்பெல்லாம் வீட்டிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கினால் அவை முற்றிலும் பழுதாகும் வரையில் உபயோகிப்பது வழக்கம். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களுடன் கூடிய நவீன கருவிகளை அடிக்கடி மாற்றுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏற்படும் பொருட்செலவை பற்றியோ நஷ்டத்தைப் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை.

    அதுவும் குறிப்பாக செல்போன் விஷயத்தில் இளைஞர்கள் அவ்வப்போது வெளியாகும் புது மாடல் போன் வைத்து கொள்வதே கவுரவம் என்று நினைக்கின்றனர். மாறி வரும் மக்களின் இந்த மனோபாவத்தை அறிந்த வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை வாரி வழங்குகின்றன. அதை உபயோகித்து செலவு செய்யும் போது இருக்கும் மகிழ்ச்சி, மாதத் தவணை கழுத்தை நெரிக்கும் போது காணாமல் போய் விடுகிறது. தனியார் துறை ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் போது , பணவரத்து நின்று போகும் போது தாராளமாய் செலவு செய்து பழக்கப்பட்டவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

    சேமிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.பணத்தை ஈட்டுதல் எவ்வளவு முக்கியமோ, பாதுகாப்பது அதனினும் இன்றியமையாதது. திடீரென ஏற்படும் மருத்துவ மற்றும் அவசரத் தேவைகளுக்கு அடுத்தவரை எதிர்பார்க்காமல் நாமே சமாளிக்கும் சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடுபட்டு சேர்த்த பணத்தை தேவையற்ற முறையில் விரயமாக்காமல் முதலீடும் காப்பீடும் செய்து வைத்து கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். அனாவசியமாக செலவழிக்காமல் அத்தியாவசியமாக பொருள் வாங்குவதே புத்திசாலித்தனம்.

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னதை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட்டால் அவதி நிச்சயம் என்பதே நிதர்சனமான உண்மை.

    எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    நிதி நெருக்கடியின்போது, திடீர் பொருளாதார நெருக்கடியின்போது நமக்கு உடனே நினைவில் வருபவை, கடன்கள். அதிலும் தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவை உடனடியாகக் கைகொடுப்பவை.

    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

    தனிநபர் கடன், தங்க நகை கடன் இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வட்டி விகிதம்தான். தங்க கடன் பொதுவாக 9.6 முதல் 24 சதவீதம் இடையிலான வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தனிநபர் கடன் 10.99 முதல் அதிகபட்சம் 18 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    தங்க கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில், தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும்போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்க கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயை கடனாகப் பெற வேண்டும்.

    தங்க கடன் வாங்கும்போது அடமானம் வைக்கும் தங்க நகையே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும்போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும்போது கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    மறுபக்கம், தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனைச் செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும்போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால், வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளபோது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவை தொடர்பாக எந்தப் பேரமும் செய்ய முடியாது.

    தங்க நகை கடனுக்கு அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை சமர்ப்பித்தால் போதும். உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாளச் சான்று, வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவைச் சமர்ப்பிக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனிநபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

    தங்க நகை கடனை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக்கூடிய திறனைப் பொறுத்து கடனைப் பெறலாம்.

    தங்க நகை அடமான கடன் பெறும்போது தங்கத்தை நேரடியாக வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பைக் கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். எனவே, நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

    ஆனால் இன்றைக்கு, வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டுக்கு வரவைத்து கடனைப் பெற முடியும்.

    இவையெல்லாம், தனிநபர் கடன், தங்க நகை கடன் குறித்த ஒப்பீட்டு விவரங்கள். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கடனைப் பெற விரும்பு பவர்கள்தான்.

    கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள, தங்கம் வைத்துள்ளவர்கள் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பதுடன், கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
    கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்க்கலாம்.
    அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் அனைத்து இல்லற வாழ்விழும் மந்தம் தட்டும். தாம்பத்திய வாழ்க்கை ஓய்ந்து விடும். ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடும். இது இயல்பு தான். எனினும் 100ல் 10 பேர் 60 70 வரையிலும் அன்பும் பாசமும் வழியும் வாழ்வை பெறுகின்றனர். இவர்கள் வரம் பெற்றவர்களா?

    தாம்பத்திய வாழ்வில் கசப்பு ஏன்? மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி? என பிரபல மனோதத்துவ மருத்துவர்கள் விளக்குகின்றனர். படித்து பயன் பெறுங்கள்.

    தாம்பத்தியத்தில் கசப்பு வந்து விட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?

    * வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் உடல் அலுப்பாக இருக்கிறது என்று தாம்பத்தியத்தை ஒதுக்குகிறீர்களா? இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா? இரண்டாவது ஒன்று தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்தியம் கசப்பை கக்க தொடங்கியுள்ளது என புரிந்துக்கொள்ளுங்கள்.

    * மனைவியை எரிந்து கொட்டி திட்டிவிட்டு பின் மன்னிப்பு கேட்பீர்களா? இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா? இங்கு தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.

    * உணவில் ருசி இருந்தும் நாவில் தென்படவில்லையா?

    * வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைந்து விட்டதா?

    * விடுமுறைகளில் இருவரும் சேர்ந்து செலவிட்ட தருணங்களை இப்போதும் காண முடிகிறதா?

    * வீட்டில் பட்ஜட், குழந்தைகள் பற்றி மட்டும் தான் பேச்சு எழுகிறதா? கேலி கிண்டல் செய்து சிரித்து பேசும் தருணங்கள் இப்போது எல்லாம் கிடைப்பதில்லையா?

    இதுவெல்லாம் தாம்பத்தியம் கசந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள்.

    எப்படி சரி செய்வது?

    * விடுமுறைகளை வீட்டில் கழிக்காமல் கணக்கிட்டு வெளியே சென்று வாருங்கள்.

    * கோபத்தில் திட்டினால் அன்று இரவு உணவு வேலையில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சண்டைக்குப்பின் வரும் கூடல், சாதாரணத்தை விட இனியது.

    * மனைவி தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டால் அனுப்பி வையுங்கள். பிரிவின்போது ஒரு ஏக்கம் வரும். நினைவெல்லாம் உங்களிடம் தான் இருக்கும். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் உங்களிடம் திரும்பி வந்து விடுவார். குட்டி குட்டி பிரிவுகள், சண்டைகள் நன்மைதான்.

    * பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் தனிமையை ரசித்து அனுபவியுங்கள். பாட்டி தாத்தா இல்லை எனில் பள்ளிக்கு சென்று விடும் நேரத்தில் பாச வலையை வீசுங்கள்.

    * காமம் இல்லையெனினும், காதலோடு அவ்வப்போது தொட்டு துணையின் பரிசத்தை உணருங்கள்.

    * மற்றவர்களை பற்றி பேசுவது தவறு என்றாலும், 4 சுவற்றிற்குள் எதுவும் தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையின் தோழர்களை பற்றி கோபமாக குறை சொல்வதை குழந்தையாக பாவித்து ரசித்து கேளுங்கள்.

    * இரண்டாவது ஹனிமூன் தவறில்லை. ஒப்புக்கொள்ளுங்கள்.

    * பணிக்கு செல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். துணையுடன் இனிமையான விசயங்களை பகிர்ந்து பொழுதை போக்குங்கள். தவறில்லை.

    இதுபோன்ற விசயங்களை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே ஈர்ப்பு என்றென்றும் குறையாமல் இருக்கும். வீடும் வசந்தமாக மாறும். 
    முன்பெல்லாம் உறவுகளுக்குள் இருந்த சந்தோஷமும், நெருக்கமும் இன்றைய தலைமுறையிடம் படிப்படியாக மறைந்து வருகிறது. உறவுகளின் தேவையை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
    முன்பெல்லாம் கல்யாணம் என்றதும், வீடு முழுவதும் சொந்தங்களின் வருகை நிரம்பி வழியும். ஆளாளுக்கு ஒரு வேலையைப் பார்ப்பார்கள். பலகாரங்களும், இனிப்புகளும் வீட்டிலேயே செய்யப்படும். கல்யாணம் முடிந்தும், உறவினர்களின் வருகை பந்தலை பிரிக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது.

    மணமகளின் கழுத்தில் மணமகன் தாலிக்கட்டும் நேரத்துக்கு சற்று முன்புதான், உறவினர்களே வரத்தொடங்குகிறார்கள். அதுவும் திருமணம் நடக்கும் வீட்டுக்கல்ல. கல்யாண மண்டபத்துக்கு. அப்படியென்றால், கல்யாண பந்தல் போடப்பட்டு இருக்கும் வீட்டின் நிலைமை? யாரும் இன்றி வெறிச்சோடிக் கிடப்பதுதான், அவ்வீட்டின் இன்றைய நிலைமையாகும்.

    பொதுவாக, இட வசதி இல்லாதவர்களும், ஆள்பலம் இல்லாதவர்களுமே, முன்பெல்லாம் கல்யாணத்தை மண்டபங்களில் வைத்தார்கள். கல்யாணத்துக்கு வந்து செல்பவர்களுக்கும் அது வசதியாக இருந்தது. ஆனால், இன்று எல்லா வசதிகள் இருந்தும், கல்யாணத்தை மண்டபங்களில் தான் வைக்கிறார்கள்.

    பொதுவாக, கல்யாணம் என்றால், வீடுகளில் கலகலப்பு வேண்டும். சொந்தங்களாலும், பந்தங்களாலும் கல்யாண வீடுகளை கட்ட வேண்டும். ரத்த உறவுகளின் வருகையால் மனம் சந்தோஷமடைய வேண்டும். இவையனைத்தும் இன்று கல்யாண வீடுகளில் காணாமல் போய்விட்டன. இதனால் ஏற்பட்ட உறவுகளின் பாதிப்புகளை மனித மனத்தை தனித்தனித் தீவுகளாக மாற்றிவிட்டன.

    எந்த விசேஷமாக இருந்தாலும் செல்போனில் அழைப்பது, மொய்ப்பணம் தவிர்க்கப்பட்டது என அழைப்பிதழ்களில் அச்சிடுவது, வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், உணவுகளை ஓட்டல்களில் வாங்கி வருவது, உடல் நலமில்லாத உறவினர்களை ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மட்டும் விசாரிக்க செல்வது, வாழ்க்கை முறையை முறைப்படுத்த தவறியது என உறவுகளை மதிக்காத மனித செயல்பாடுகளையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறோம்.

    அவ்வாறு நம் செயல்பாடுகள் மாறும்போது, தலைமுறைகளுக்கிடையே இடைவெளிகள் குறையும். மனிதநேயம் முறியாத மரமாக வளரும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது கட்டாயமாக்கப்படும். இல்லையென்றால், உறவுகளின் ஆணிவேர் அற்றுப்போகும். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப்பேசும் நிலையும் மாறிவிடும். இதை மனிதர்களான நாம் சிந்திப்போமாக...!

    எழுத்தாளர் ஜவ்வை இஜெட்
    வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.
    புகார்க் கூடங்களாக ஏன் குடும்பங்கள் மாறிவருகின்றன? என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று எல்லோரும் ஏன் பேசத் தொடங்கிவிட்டோம்? வாழ்வு பாடாய்ப் படுத்துவதாக ஏன் நினைக்கத் தொடங்கியுள்ளோம்?

    சிலருக்கு இருக்கப் பிடிக்காமல் ஏன் வெறுக்கப் பிடிக்கிறது? உப்பு விற்கப்போனால் மழைபெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு உள்ளத்திலும் நூற்றுக்கணக்கான புகார்ப் பட்டியல்கள். என்ன ஆயிற்று நம் இந்தியக் குடும்பங்களுக்கு?

    ‘வீடு சிறையாக மாறிவிட்டது. வறட்டு கவுரவமும் தேவையில்லாப் பிடிவாதமும் எங்களை வெறுப்பில் ஆழ்த்துகின்றன’ என்கிற இளைய சமுதாயத்தின் குரல் ஒருபுறம். பொறுப்பு வெறுப்பாய் மாறி மகனை, மகளை, மனைவியைக், கணவனைத், தந்தையைக் கொலை செய்யும் அளவுகூடக் கொண்டுபோய் விடுகிறது.

    எதையும் விட்டுக் கொடுப்பதற்கு யாரும் தயாரில்லை. ஐவகை நிலமும் அறிந்தவன் பால்கனிச் செடியைப் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானதோ அதைப்போல் நல்ல குடும்ப அமைப்பு நம் கண் முன்சிதைந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

    வீட்டுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்குப் பிரச்சினைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், வீட்டுக்குள் நுழையவே பிடிக்கவில்லை என்று இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்குள் நுழையும் குடும்பத் தலைவர்களைக் குடும்பங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவா?

    இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் தனிமையின் துயர் அறுக்க இணையதளங்களிலும் சமூகஊடகங்களிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பறவைகளை இந்தக் குடும்பங்கள் எப்படி ஆற்றுப்படுத்தப் போகின்றன? உருகத் துடிக்கிற பனியைப் பருகத் துடிக் கிற இளைய உதடுகள் இது குறித்து என்ன சொல்லப் போகின்றன?

    பொறுப்பாயிருக்கிற வரை வெறுப்பாயிருக்காது எதன்மீதும்! அந்தப் பொறுப்பை யார் யாருக்கு உணர்த்துவது? நாம் அசருகிற போதெல்லாம், ‘விடுறா இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். பிரச்சினையைத் தூக்கிப் போட்டுட்டு ஆத்தாளுக்கு பதினோறு ரூபாய் முடிஞ்சி வச்சிட்டு அடுத்தவேலை பாருடா’ என்று சொன்ன அந்த சுமைதாங்கி மனிதர்களை அன்னை இல்லங்களில் கொண்டு விட்டுவந்த இடரை இப்போது அனுபவிக்கிறோம்.

    கால்நூற்றாண்டு உறவுகளை எல்லாம் திருமணம் என்கிற பந்தத்தின் பொருட்டு விட்டுவிலகி வந்து தன்னையே நம்பி வாழும் மனைவிக்கு மனது என்ற ஒன்று இருக்கிறது, அவள் நலன் நாடல் என் கடமை என்று கணவன் ஏன் நினைப்பதில்லை?

    உலகம் செலுத்தும் பேரன்பில் ஓரன்பாவது நமக்குக் கிடைக்கத் தானே செய்யும்! நாம் மட்டும் ஏன் அந்த அன்பை மற்றவர்களுக்குத் தர மறுக்கிறோம்.

    நாடகங்களில் காட்டுமளவு வெகு கொடூரமாக இன்னும் மாறவில்லை குடும்பவாழ்வு. கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொள்கிறவர்கள் வெற்றி வந்தால் அளவுக்கதிகமாய் ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டுபோகாமலும் வெகுஇயல்பாய் இருக்கிறார்கள்.

    என்னதான் நம் வாழ்வின் வினாடிகள் வெளியில் ஆட்டமும் ஓட்டமுமாய் கழிந்தாலும் ஆன்மா ஆனந்தமயமாவதும் அமைதியடைவதும் இல்லத்தில்தான். இல்லத்தில் உள்ளது நம் உள்ளத்தின் நிம்மதி. அந்த இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான்.

    அலுவலகத்தில் மேலாளர் என்ன சொன்னாலும் பொறுமையுடன் யோசித்து அமைதியாய் பேசும் நாம் வீட்டில் எரிந்துவிழுகிறோம். ஒன்றுமில்லாத சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுகிறோம். வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.

    சொற்களால் பிரிந்த குடும்பங்கள் ஆயிரம்! கனத்த சொற்களால் தான் நம் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதில்லை. மென்மையாக ஆனால் அழுத்தமாக நாம் சொல்லவேண்டியதைச் சொல்லலாம்.

    மீட்டித்தான் ஆகவேண்டும் இந்த வாழ்வெனும் வீணையை, வாழ்ந்து காட்டித்தான் ஆகவேண்டும் நம்மை வெறுப்போருக்கு மத்தியிலும். தொட்டிக்குள் வாழ்ந்தாலும் சலிப்பில்லாமல் நீந்துகிற மீன்களைப் போல் நம் இயக்கம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். மூலவருக்கு முன் மனமுருகி பிரார்த்திக்கும்போது யாரேனும் மணியசைத்து அது நடக்கும் என்று குறியீடாக உணர்த்திவிடுகிற மாதிரி சுற்றிநடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றன.

    குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே வாழ்வின் நுட்பங்களைக் கற்றுத்தந்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று எப்படி இயங்குகிறது எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது? எப்படி முடிவெடுப்பது? வெளிஉலகத்தில் எப்படி நாம் நம்மை நிலைப்படுத்திக்கொள்வது? என்று உணர்த்தியிருந்தால் அவர்கள் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும்.

    அப்பா அன்பு அப்போது புரியாது, அம்மா தியாகம் தான் அம்மாவாக மாறும்போதுதான் தெரியும். பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கும் அவள் சொல்லும் ஆயிரமாயிரம் கதைகளுக்கும் எதை நாம் ஒப்பீடாகச் சொல்லமுடியும்? தன் தங்கைக்குத் தலைச்சன் பிள்ளை பிறந்திருக்கிறது என்று ஆசையோடு சேனை வைக்க ஓடிவரும் அன்பு வடிவமான தாய்மாமனுக்கு ஈடாக வேறுயாரைச் சொல்ல முடியும்? உறவுகளை மதிக்கக் கற்றுத் தாருங்கள்.

    உறவுகளின் உன்னதத்தைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். பெரியவர்களின் சொற்படி நடப்பது பாதுகாப்பானது என்று சொல்லி வளருங்கள்.

    வெறுப்பில் இல்லை வாழ்வின் வெற்றி, நிறைவின் இருப்பில்தான் உள்ளது என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்வெனப்படுவது வலியோடும் வலிமையோடும் வாழ்ந்து காட்டுவது என்று புரிய வையுங்கள். குடும்பம் முழுமையான வாழ்தலுக்கான அன்பின் பயிற்சிக்கூடம். அதில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம், ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

    அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் மகாகவி பாரதி. அன்பைத் தவிர குடும்பத்தில் வேறில்லை.

    முனைவர் சவுந்தர மகாதேவன், கல்லூரி பேராசிரியர், நெல்லை
    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

    வீடு விற்பவர் பொறுப்பு

    வீட்டை விற்க விரும்புபவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனைத்து தகவல்களையும் தெரிவித்து, கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றின் நிலுவை, வங்கியில் அளிக்கப்பட்டுள்ள வீட்டுக்கான ஆவணங்கள் குறித்த பட்டியல், நிலுவை கடன் தொகை செலுத்தப்படும் பட்சத்தில் வீட்டுக்கான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களும் கடன் பெற்றவருக்கு அளிக்க வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்ற தகவல்கள் அடங்கிய கடிதத்தை வங்கியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு வாங்குபவர் பொறுப்பு

    அவ்வாறு வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்கள் மற்றும் தன்னிடமுள்ள வீடு தொடர்புடைய அனைத்து பத்திரங்களின் நகல்களையும் வீட்டை வாங்குபவரிடம் வழங்க வேண்டும். வீட்டை வாங்குபவர் மேற்கண்ட ஆவணங்கள் மீது சட்ட ரீதியான ஆலோசனை பெற்று வீட்டின் உரிமையாளருக்கு முன்பணம் கொடுக்கலாம்.

    ஒப்பந்தம் பதிவு

    பின்னர், வீட்டை விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, சார்-பதிவாளர் அலுவலகத்தில் அதை முறைப்படி பதிவு செய்யவேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் வீட்டுக்கான முழு தொகையையும் பெற்று, வங்கிக்கு நிலுவையாக உள்ள தொகையை செலுத்தி விட்டு, கணக்கு முடிக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியிடமிருந்து பெற்று, அவற்றை வீட்டை வாங்குபவருக்கு கொடுத்து, அவரிடம் இருந்து அதற்குரிய ரசீது ஒன்றையும் பெற்றுக்கொள்வது அவசியம். அதன் பின்னர், வீட்டை விற்பவர், வாங்குபவருக்கு கிரயப் பத்திரம் எழுதி கொடுத்து சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    வீடு வாங்குபவரது வங்கி கடன்

    வீடு வாங்குபவரும் வங்கியில் கடன் பெற வேண்டும் என்ற நிலையில், அதே வங்கியில் பெறுவதன் மூலம், நடைமுறை சிக்கல்கள் மற்றும் கால தாமதங்கள் தவிர்க்கப்படும். அவ்வாறு இல்லாமல் வேறு வங்கியில் வீட்டு கடன் பெறும் நிலையில் கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வங்கி நடைமுறைகள்


    வீட்டை வாங்குபவர் அவரிடம் அளிக்கப்பட்ட முந்தைய வங்கியின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், புதியதாக கடன் அளிக்கும் வங்கி கேட்கும் ஆதாரங்கள் மற்றும் அதன் கடன் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    அவற்றின் அடிப்படையில் கடன் தரக்கூடிய வங்கி உரிய பரிசீலனைக்கு பின்னர் கடன் அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கும். சம்பந்தப்பட்ட ஆவணங்களின் மீது முன்பே ஒரு வங்கியால் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், புதிய வங்கியின் நடைமுறைகள் விரைவில் முடிவடைய வாய்ப்பு உண்டு.

    பத்திரம் பதிவு

    அதன் பின்னர், வீட்டு கடன் தொகையை புதிய வங்கி, முந்தைய வங்கிக்கு நேரிடையாக அளிக்கும். அதன் அடிப்படையில், வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் புதிய வங்கிக்கு, முந்தைய வங்கியால் அளிக்கப்பட்டு விடும்.

    பின்னர், வீட்டு கடன் அளிக்கும் வங்கி அசல் மற்றும் வட்டி போக மீதம் தொகை இருக்கும் நிலையில் அதை வீட்டை விற்பவருக்கு கொடுத்துவிடும். நிறைவாக, வீட்டை வாங்குபவர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விற்பனை பத்திரத்தை வழக்கப்படி பதிவு செய்து கொள்ளலாம். 
    ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏ.டி.எம். மையங்களில் மோசடிக்கு உள்ளாகும் நபர்கள் குறித்த தகவல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு நாம் உஷாராக இருந்தால், மோசடிக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம். இது குறித்து வங்கிகளும் அவ்வப்போது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகின்றன.

    ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மின்னஞ்சல் வாயிலாக வங்கிகள் தெரிவித்து வருகின்றன.

    செய்ய வேண்டியவை

    உங்கள் ஏ.டி.எம். பணப் பரிவர்த்தனை முழுவதும் ரகசியமாக இருக்க வேண்டும். நீங்கள் ‘பின்’ எண்ணை உள்ளீடு செய்வதை பிறர் பார்க்க அனுமதிக்கக் கூடாது.

    பரிவர்த்தனைகளைச் செய்து முடித்த பின்னர், ஏ.டி.எம். திரையில், மீண்டும் வரவேற்புத் திரை உள்ளதா என உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

    உங்களின் தற்போதைய செல்போன் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் மூலம், உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் அறிவிக்கை (ஸ்டேட்மென்ட்), குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) பெறமுடியும்.

    ஏ.டி.எம்-.மில் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்துக் கவனமாக இருங்கள். அறிமுகமில்லாத நபர்கள் உரையாட முயற்சிக்கும்போது எச்சரிக்கை அவசியம்.

    சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏ.டி.எம்.-மில் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

    உங்களின் ஏ.டி.எம். கார்டு தொலைந்துபோனாலோ அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்திருப்பதாக அறிந்தாலோ, உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவியுங்கள்.

    வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்திகள், வங்கி அறிவிக்கைகளை தொடர்ந்து சரிபார்க்கவும்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாத நிலையிலும், பணம் இல்லை எனத் திரையில் தெரிவிக்கவில்லை எனில், அங்குள்ள தகவல் பலகையில் உள்ள எண்ணில் தொடர்புகொண்டு வங்கிக்குத் தகவல் தெரிவியுங்கள்.

    பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது எனக் குறுஞ்செய்தியை சரிபாருங்கள்.



    செய்யக்கூடாதவை

    ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை, ஏ.டி.எம். அட்டையின் பின்புறத்திலோ அல்லது மற்றவர் எளிதில் பார்க்கக்கூடிய இடத்திலோ எழுதி வைக்கக்கூடாது. அதை மனதில் பதிய வைத்துக்கொள்வதே நல்லது.

    வங்கியில் இருந்து புதிதாக ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை பெற்றவுடனும், குறிப்பிட்ட கால இடைவெளிகளிலும் அதை மாற்ற வேண்டும்.

    முன்பின் அறிமுகமில்லாதவர்கள் உங்கள் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தவோ, உங்களுக்கு உதவிபுரியவோ அனுமதிக்காதீர்கள்.

    வங்கி ஊழியர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட யாரிடமும், ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை தெரிவிக்கக் கூடாது. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறும் போலியான அழைப்புகளை பொருட்படுத்த வேண்டாம்.

    பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, ஏ.டி.எம். கார்டை மறவாமல் எடுத்துவந்து விடுங்கள்.

    ஏ.டி.எம். மையத்தில் அக்கார்டை பயன்படுத்தும்போது செல்போனில் பேசுவது, பிற கவனத்தை மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதைத் தவிருங்கள்.
    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள்.
    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள். எங்கோ மூலை முடுக்குகளில் இருப்பவர்களை ஒன்றிணைப்பதாக கூறப்படும் சமூக இணைய தளங்கள் ஒரே வீட்டில், ஒரே அறையில் இருக்கும் தம்பதிகளை பிரித்துவிடுகிறது. இளம் பெண்கள், காதலால் கற்பிழப்பது, தற்கொலை செய்வது, மானபங்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வேடிக்கையாய் வெளியிடும் புகைப்படங்களும், விமர்சனங்களும்கூட கணவன்-மனைவி இடையே மனக்கசப்பை வளர்த்து, விவாகரத்து வரை கொண்டுபோய்விடுகிறது.

    அமெரிக்காவில் 20 சதவீத விவாகரத்திற்கு சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது 5 விவாகரத்துகளில் ஒன்று சமூக வலைத்தள பிரச்சினையால் உருவானதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற புள்ளிவிவரங்கள் வெளியாவதில்லை என்றாலும், கணக்கெடுப்பு நடத்தினால் இந்திய விவாகரத்து சதவீதம் இதையும் மிஞ்சும் என்று கூறலாம்.

    ஏனெனில் இங்கு சமூகவலைத்தளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எவை, எவை அச்சுறுத்தலாக மாறும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சகஜமாக, விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். செல்போன் எண்கள், உண்மையான முகவரி முதல் தங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு பதிவிடுகிறவர்களும் உண்டு. எல்லோரும் தொடர்புகொள்ளும் விதத்தில் இணைய பக்கத்தை வைத்திருப்பவர்கள் தங்களை அறியாமலே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் நுழைவார்கள் என்ற விழிப்புணர்வு கொண்ட பெண்கள்கூட, வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நமக்கு அறிமுகமுள்ள, நம்மை அறிந்தவர்கள்தானே நமது வாட்ஸ் ஆப் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சினையை வரவழைத்துக் கொள்கிறார்கள். புகைப்படங்கள் நண்பர் மூலமாகவோ, பகிர்தல் மூலமாகவோ, குழு மூலமாகவோ மற்றவர்களுக்குச் செல்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    சமூக இணையதளங்கள் வந்ததில் இருந்து அறிமுகமில்லாத புதிய நட்பால் கற்பை இழந்தவர்கள், நகை, பணம் இழந்தவர்கள், மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் என உலகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதி காவல் நிலையம் செல்லாமல், வலைத்தள கணக்கை மூடிவிட்டு, செல்போன் எண்களை மாற்றிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.



    விவாகரத்திற்கு வழிவகுத்த தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்த சமூக வலைத்தளங்கள் எவை என்பது பற்றி அமெரிக்காவில் ஒரு புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. அதில் 66 சதவீதம் பேர் பேஸ்புக்கை குறிப்பிட்டுள்ளனர். மை ஸ்பேஸ் தளம் 15 சதவீதமும், டுவிட்டர் 5 சதவீதமும் பாதிப்புக்கு துணையிருந்ததாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தவர்கள் கூறி உள்ளனர்.

    மனைவி படுக்கை அறைக்கு வந்தபிறகு, கணவர் தன்னுடைய நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் சமூகவலைத்தளம் வழியாக உரையாடுவது மனைவிமார்களை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. அதே நேரம் மனைவி தனது நெருங்கிய வட்டத்துடன் சமூகவலைத்தளங்களில் உறவாடும்போது, கணவர் இன்னும் ஆக்ரோஷம் காட்டுவதும், சந்தேகம் அடைவதும் அதிகரித்து பிரச்சினைக்கு வழிவகுத்துவிடுகிறது.

    வாட்ஸ் ஆப் வலைத்தளம் வந்தபிறகு இந்த பிரிவுகளும், உறவு மோதல்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இந்த தளத்தில் ஒருவர் எப்போது செய்தியை பார்த்தார் என்பதை அறிய முடியும் என்பதால் அன்புக்குரியவர், தான் அனுப்பிய தகவலைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பதை கணித்து அதையும் பிரச்சினை யாக்கிவிடுகிறார்கள். ‘ஆன்லைனில் இருந்துகொண்டு தன் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கிறாரே, நீண்ட நேரம் யாருடன் உரையாடிக் கொண்டிருப்பார்?’ என்பது போன்ற கேள்விகளும், சிந்தனைகளும் நிறைய குடும்பங்களில் சந்தேக விதைகளைத் தூவுகின்றன.

    கடைசியாக எப்போது வாட்ஸ் ஆப்பை திறந்தார் என்ற நேரத்தை கணிக்க முடிவதால், இரவு வெகுநேரம் கழித்து இணையத்தை திறக்கும் கணவர் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் சூழலை உருவாக்குகிறது. நாம் தூங்கிய பிறகு யாரிடம் உரையாடினார், என்ன பேசியிருப்பார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், சந்தேகமும் பிரச்சினைக்கு அடித்தளமிடுகிறது.

    நண்பர்கள், தோழிகள், காதலிகளின் புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்தாலோ அல்லது பாராட்டி எழுதினாலோ அதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கும், இவருக்கும் என்ன உறவு? என்ற சந்தேக கண்ணோட்டத்துடன் சிலர் பின்தொடர தொடங்குகிறார்கள். அது மோசமான பின்விளைவுகளை உருவாக்குகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா சென்றது, விழாக்களில் பங்கேற்றது போன்ற மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக வெளியிடுவதை இன்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் அதுவும் பிற்காலத்தில் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.



    விழாவில் தோழியுடன் எடுத்த படத்தைக் காட்டி அவள் யார்? என்று விசாரிக்கும் மனைவிமார்கள் உண்டு. அடுத்து அவளை எப்போதெல்லாம் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் காட்டுவார்கள், அல்லது அதையே சந்தேக நோக்குடன் பார்ப்பார்கள். அடுத்து அலுவலக மீட்டிங் என்றோ, விழா என்றோ கூறினால் அந்த தோழியும் இடம்பெறுவாளா என்று நோட்டமிடுவார்கள். இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.

    கணவரின் பேஸ்புக், டுவிட்டர் பாஸ்வேர்டுகள் தங்களுக்கும் தெரியவேண்டும் என்று விரும்பும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அதிலும் இணையதள பிரச்சினைகளை அறிந்தவர்கள் கணவரின் கணக்கையே தனது கணக்காக பயன்படுத்துவதும் உண்டு. அப்படியிருக்கும்போது நண்பன் என நினைத்து அவருடைய மனைவியிடம் உறவாடும் ஆண் நண்பர்கள், ரகசியங்களை பகிர்ந்து கொண்டு சிக்கலை கிளப்பியிருக்கிறார்கள். மனைவியின் தோழிகளுடன் நட்பு பாராட்டி, அதனால் மனைவியின் கோபத்துக்கு ஆளான ஆண்களும் இருக்கிறார்கள்.

    வலைத்தளங்களில் ஞாபகப்படுத்தும் விதமாக பழைய புகைப்படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து காண்பிக்கும் வசதி உண்டு. அப்போது பழைய தோழிகள், பழைய ஆண் நண்பர்களைப் பற்றிய புகைப்படத்தை கணவரோ, மனைவியோ பார்க்கும் சூழல் ஏற்பட்டதால், சிலரது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. தற்கால விவாகரத்து வழக்குகளின்போது வாட்ஸ் ஆப் மெசேஜ்கள், வலைத்தள புகைப்படங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன. விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கேட்ட பெண்கள், விவாகரத்திற்குப் பிறகு, கணவர் சுற்றுலா சென்றது, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது பற்றிய புகைப்படங்களைக் காட்டி, அதிக சம்பாத்தியம் இருப்பதாக கூறி ஜீவனாம்சத்திற்கும், குழந்தை பராமரிப்பிற்கும் கூடுதல் தொகை கேட்ட முறையீடுகளும் நிகழ்ந்துள்ளன.

    குழந்தைகளை தாங்கள்தான் பராமரிப்போம் என்று கூறி குழந்தையை தன்வசம் வைத்துக் கொண்ட தாய், வேலைக்குச் சென்று தாமதமாக வருவதையும், பார்ட்டிகளில் கலந்து கொண்டதையும், அப்போது மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதையும் வலைத்தளங்களில் அறிந்து கொண்டு, அவற்றை காரணம் காட்டி, குழந்தை மீது அதிக அக்கறை காட்டாதவர் என்று கூறி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டும் மேலைநாடுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    எனவே சாதாரண விஷயங்களும், சமூக வலைத்தளங்களால் பிரச்சினைக்குரியதாக மாறும் அபாயம் நிறைய உண்டு. எனவே திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, விவாகரத்து ஆனாலும் சரி, இணையதளம் என்றால் எச்சரிக்கை அவசியம். இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை மற்றவர் ரசிக்கும் வேடிக்கைக் களமாக மாறிவிடும். 
    இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் சொந்தமாக வீடு வாங்கி ‘செட்டில்’ ஆன பிறகுதான் மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
    இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் சொந்தமாக வீடு வாங்கி ‘செட்டில்’ ஆன பிறகுதான் மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். சொந்தவீடு என்பது சமூக அளவிலான அங்கீகாரமாக பார்க்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    மேலும், அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் எதிர்கால சேமிப்பு என்ற அடிப்படையில் வீட்டு வசதி திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று ரியல் எஸ்டேட் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

    சமீபத்தில் ஹைதராபாத் நகரத்தில் நடந்த கிரெடாய் (Confederation of Real Estate Developers Association of India - CREDAI) அமைப்பின் இளைஞர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் தங்கள் விருப்பப்படி சொந்த வீடு வாங்கும் முடிவுடனும், 20 சதவிகிதம் பேர் ரியல் எஸ்டேட் சந்தையில் வர்த்தக ரீதியாக முதலீடு செய்யும் முடிவுடன் இருப்பது அறியப்பட்டுள்ளது.

    கிரெடாய் மற்றும் சி.பி.ஆர்.இ (புது டில்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தை ஆய்வு நிறுவனம்-சிஙிஸிணி) கூட்டாக வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், 2020 ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் இளைஞர்களாக இருப்பார் கள் என்ற கூடுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகரங்களில் நிலவும் வாழ்க்கைக்கான சூழலை ஆண்டு தோறும் மதிப்பீடு செய்ய மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, நகர அமைப்பு, சமூக நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் இந்த மதிப்பீடு, இந்திய அளவில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேற்கண்ட செயல்பாடுகளுக்கு ஏற்ப மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை (ரூ.40,617 கோடி) விடவும், 2018-19-ம் ஆண்டுக்கான அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி (ரூ.41, 765 கோடி) அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

    மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் மேல் அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளதாகவும் மத்திய வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது. 
    பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது. அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.

    சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?

    ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.

    இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.

    உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...

    முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.



    உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

    ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.

    கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.

    கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

    பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
    ×