search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில்"

    நாகர்கோவில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று பங்கேற்றனர். #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.

    விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.



    விழாவையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.

    நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகள் ஆம்னி பஸ்களில் உயர்த்தப்பட்ட இருமடங்கு கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. #OmniBuses
    நாகர்கோவில்:

    தமிழக அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் ரூ.800-ம் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் இக்கட்டணத்தை உயர்த்தி வாங்குவதாக அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

    குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போதே ஆம்னி பஸ்கள் இது போன்ற கட்டண உயர்வை பயணிகள் மீது திணிக்கும்.

    ஆனால் இம்முறை ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகளும் இந்த கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வார்கள். ஓணப்பண்டிகை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த போது அங்கும் கூடுதல் கட்டணம் குறிப்பிடபட்டிருந்தது.

    இது வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நேற்று வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், ஆம்னி பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.


    ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் பயண நேரத்தில் வழங்கப்பட்ட டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ரூ.800-க்கான டிக்கெட் கட்டணம் ரூ.2000-க்கும், ரூ.1100-க்கான சென்னை செல்லும் டிக்கெட் கட்டணம் ரூ.2500 முதல் ரூ.2800 வரையிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

    அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பஸ்களை தேடிவந்தவர்கள் இக்கட்டண உயர்வை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் நேற்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, அரசுதான் இக்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்நிலையங்களில் முகாமிட்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறுவதைவிட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். அதற்கு அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும், ஆன்லைனில் கூடுதல் கட்டணம் பதிவிட்ட ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு ஆன்லைனில் அவர்கள் பதிவிட்ட கட்டண விபரங்களே போதும், என்றனர். #OmniBuses
    நாகர்கோவிலில் செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த இளைஞரை போலீசார் தட்டிக்கேட்ட நிலையில், போலீசாரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #Nagercoil #Trafficpolice
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    நேற்று மதியம் கலெக்டர் அலுவலக சந்திப்பில் தெற்கு பகுதி நோக்கி வாகனங்கள் சென்றதால் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வழியாக செல்போனில் பேசிக்கொண்டே வேகமாக வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

    முதலில் தன்னை தடுத்து நிறுத்திய போலீசாரை இடிப்பது போல தனது வண்டியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை தட்டிக் கேட்டனர். ஆனால் வாலிபர் திடீரென போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதோடு, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.



    இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் அந்த வாலிபரை தடுக்க முயன்றார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யரையும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அந்த வாலிபர் குமரி காலனியை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் ஸ்ரீநாத் (வயது 32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஸ்ரீநாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். #Nagercoil #Trafficpolice

    நாகர்கோவிலில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அச்சு ஆர்.சந்திரன் (வயது 28). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, தங்கியிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

    வழக்கமாக காலை 8.45 மணிக்கு வீட்டில் இருந்து வங்கிக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் நேற்று காலை 9.30 மணிக்கு மேல் ஆகியும் அவர் வங்கிக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

    இதனால் வங்கி ஊழியர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று அக்கம், பக்கத்தினர் உதவியோடு பார்த்தனர். கதவு அடைக்கப்பட்டு இருந்தது. வெளியில் இருந்து கதவை தட்டிப்பார்த்தும் எந்த பதிலும் உள்ளே இருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அச்சு சந்திரன் பிணமாக தொங்கினார்.

    உடனே போலீசார் அவருடைய உடலை இறக்கி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட அச்சு சந்திரன் கடந்த ஓராண்டாக நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றினார். அதற்கு முன்பாக மேலாளர் பயிற்சியை அவர் நாகர்கோவிலிலேயே மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

    குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? காதல் பிரச்சினை ஏதாவது இருந்ததா? வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர், வங்கி மேலாளர் அச்சு சந்திரன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அவரது உடல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். 
    நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ஊர்வலத்தில் அனுமதியின்றி பேரணி நடத்தியது தொடர்பாக 140 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #PonRadhakrishnan #BJP
    நாகர்கோவில்:

    மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி நேற்று நாகர்கோவிலில் பாரதிய ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் அவரும் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.

    இந்த பேரணி நாகர் கோவில் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் திரளான பாரதிய ஜனதா கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டதாக வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    இதைதொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட இளைஞரணி தலைவர் நீலேஷ்ராம், பாரதிய ஜனதா நகரத்தலைவர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் உள்பட 140 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 143, 188 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #PonRadhakrishnan #BJP
    நாகர்கோவிலில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல் தெருவைச் சேர்ந்தவர் அமீர் சாகாவத் கான் (வயது 27). இவர் திருவிழா கடைகளில் துணி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருக்கு, இரணியல் தலக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசினர். செல்போனிலும் பேசி மகிழ்ந்தனர்.

    அந்த பெண் தான் வேலையில்லாமல் தவிப்பதாகவும், தனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தரும்படி கூறியிருந்தார். அமீரும், அந்த பெண்ணுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

    கடந்த 5-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஒரு வேலை ஏற்பாடு செய்து இருப்பதாகவும், உடனடியாக அங்கு வருமாறும் அந்த பெண்ணிடம் அமீர் கூறினார். அவர் சொன்னபடி அந்த பெண்ணும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அவர் வரும்போது திக்கணங்கோட்டைச் சேர்ந்த தனது தோழியையும் அழைத்து வந்திருந்தார்.

    அவர்கள் 2 பேரையும் வெளியே நிறுத்தி விட்டு அமீர் மட்டும் முதலில் அலுவலகத்துக்குள் சென்றார். பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு அதிகாரி இருப்பார், அவரை போய் பாருங்கள், உங்களுக்கு வேலை போட்டு கொடுப்பார் என சொன்னார். போகும்போது நகை அணிந்து செல்ல வேண்டாம், என்னிடம் கழற்றி கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று அமீர் கூறினார்.

    அதை நம்பி 2 பெண்களும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி அமீரிடம் கொடுத்தனர். அமீர் சொன்னபடி அங்கு அலுவலகத்தில் எந்தவொரு அதிகாரியும் இல்லை. இதனால் 2 பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அப்போது அமீர் மாயமாகி இருந்தார்.

    அமீருடன் பழகிய பெண் கவரிங் நகைகள் மட்டுமே அணிந்திருந்தார். அவரது தோழி 2½ பவுன் நகை அணிந்திருந்தார். அந்த நகையுடன் அமீர் மாயமானது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி அந்த 2 பெண்களும் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீரை தேடி வந்தனர். நேற்று இரவு கோட்டார் பகுதியில் பதுங்கியிருந்த அமீரை போலீசார் கைது செய்தனர்.

    எனக்கு தலக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் அவர் நாகர்கோவிலில் உள்ள பூங்காவுக்கு வருவார். அங்கு பூங்காவில் அமர்ந்து பேசுவோம். நான் அந்த பெண்ணை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன்.

    ஆனால் அந்த பெண்ணோ என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அதற்கு பழி வாங்குவதற்காக அவரிடம் இருந்து நகை பறிக்க முடிவு செய்தேன். அதற்காக வேலை வாங்கி தருவதாக கூறி அவரை நாகர்கோவில் வரவழைத்தேன். ஆனால் அவரோ தனது தோழியையும் வரவழைத்திருந்தார்.

    இருந்தாலும் எனது திட்டப்படி அவர்களிடம் இருந்து நகை பறித்தேன். வடசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நகையை அடகு வைக்கச் சென்றேன். அங்கு நான் பழகிய பெண்ணிடம் இருந்து வாங்கிய நகை கவரிங் என்பதும், அவர் தோழியிடம் இருந்து வாங்கிய 2½ பவுன் நகை மட்டும் ஒரிஜினல் என்பதும் தெரியவந்தது. அதனால் அந்த 2½ பவுன் நகையை மட்டும் அடகு வைத்து அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமீர் அடகு வைத்த நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். #Tamilnews
    தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டது சமூகவிரோதிகள் என்று கருத்து தெரிவித்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவபடத்தை எரித்த பெண் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறுகையில் சமூகவிரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்றும், தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடு காடாகிவிடும் என்றும் கூறினார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதேபோல் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சி சார்பிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென்று நடிகர் ரஜினிகாந்தின் உருவபடத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்தனர்.

    மேலும் வடசேரி போலீசார் நடிகர் ரஜினிகாந்தின் உருவபடத்தை எரித்த மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மணவை கண்ணன், சுசீலா உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது. இதன் காரணமாக குமரி கடலோர கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச் சாவடிகளிலும் இரவு-பகலாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீசாரின் கண்காணிப்பையும் மீறி நேற்று இரவு நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கரியமாணிக்கபுரத்தை கடந்து ஆனைப்பாலம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதுபற்றி பஸ் டிரைவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்றுப்பஸ்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேபோல நள்ளிரவு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கரியமாணிக்கபுரம் பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வீச்சில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பஸ்கள் மீது கல்வீசப்பட்டதன் எதிரொலியாக கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    மேலும் நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
    தமிழக மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க 17 பேர் அடங்கிய குழு தினந்தோறும் திட்டம் வகுக்கிறது என்று நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கிய அவர் கிராமம், கிராமமாகச் சென்று விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசினார்.

    இரவு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து கொண்டு இங்கு வந்துள்ளேன். நான் அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்ததில்லை. ஆனால் சிறு பிள்ளையாக இருக்கும்போது எனது ஆசான் டி.கே. சண்முகம் அண்ணாச்சியுடன் ஒரு மாதம் நாகர்கோவிலில் தங்கி இருக்கிறேன்.

    ஒருவகையில் பார்த்தால் நான் கல்வி கற்ற ஊர்களில் இதுவும் ஒன்று. நான் கற்ற கல்வி கலை தான். அதை எனக்கு கற்று தந்த ஆசான் இந்த ஊர்க்காரர் தான். அவ்வை சண்முகம் என்று நாடு போற்றும் அந்த அறிஞரின் கடைநிலை மாணவன் நான்.

    இன்று இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் நடுவில் நின்று பேசுவீர்களா? என்று 10, 15 வருடங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் பேசுவேன் சினிமாக்காரன் தானே கூட்டத்தை பார்த்து பேசுவேன் என்று சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது நான் வந்திருப்பது சினிமாக்காரனாக அல்ல. உங்களில் ஒருவனாக, உங்களின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன். இது தமிழகம் ஒரு புது மாற்றத்தை நோக்கி நகரும் வேளை. அதை நகர்த்தப்போகும் கரம் உங்களின் கரங்கள். இந்த கரங்களின் உதவியுடன் தான் நாளை நமதாகப் போகிறது.

    எனக்கு சிலர் அறிவுரை சொன்னார்கள். எதற்கு மெனக்கிட்டு இவ்வளவு தூரம் போக வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் சனி, ஞாயிறு அன்று பேசினால் கிட்டத்தட்ட 4.5 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமே. உடம்பு வலியில்லாமல் சென்னையில் இருந்தே செய்யலாமே என்று அறிவுரை வந்தது.

    ஒரு பக்கம் பார்த்தால் அறிவுப்பூர்வமாக அது சரியாக இருக்கலாம். ஆனால் உணர்வுப்பூர்வமாக உங்களை சந்திப்பதற்கு நிகரானது எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்காக அந்த 4.5 கோடி பேரை நான் மதிக்கவில்லை என்றில்லை. அவர்களை நான் உணர்கிறேன். இங்கே நான் உங்களை பார்க்கிறேன், உணர்கிறேன். நீங்களும் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் கண்களை பார்க்க முடிகிறது. அந்த அன்பை பார்க்க முடிகிறது.

    மக்கள் நீதி மய்யம் என்ன செய்யும் என்று பட்டியல் போடும் வேளை இதுவல்ல. ஆனால் யாருக்காக செய்யும் என்பதை சுட்டிக்காட்டலாம் உங்களுக்காக. இங்கே நாங்கள் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. முடிந்தவரை செய்து கொண்டு இருக்கிறோம்.


    நான் இப்போது மேற்கொண்டுள்ள இந்த யாத்திரை, பயணம் உங்களை பற்றி நான் கற்றுக் கொள்வதற்காக. உங்களுக்கு செவி சாய்ப்பதற்காக. இப்பொழுதே உங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து விடுவேன் என்று மார்தட்டி கொள்ள முடியாது. என்னை போலவே உங்கள் பால் அன்பு கொண்டவர்கள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் உங்களுக்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக எப்படியெல்லாம் நாம் குறைகளை தீர்க்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்திற்காக பிரத்யேகமாக 17 பேர் அடங்கிய அந்த ஹார்வேர்ட் குழு தினந்தோறும் இதற்காக யோசித்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் செய்திகள் சேகரித்துக் கொடுத்து கொண்டிருக்கிறேன்.

    உங்கள் குறைகளை அறிந்து கொஞ்சம், கொஞ்சமாகஅவர்களிடம் அதை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறேன். எனது பேச்சு இதை செய்யப் போகிறேன், அதை செய்யப் போகிறேன் என்று மார்தட்டும் வீண் பேச்சாக இருக்காது.

    என் மவுனத்தை கலைக்க சொல்கிறீர்கள். என்னுடைய மவுனம் எப்போதோ கலைந்து விட்டது. நீங்கள் மவுனமாக இருந்ததால் இதுவரை நானும் மவுனமாக இருந்தேன். இன்று நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்கும் நேரமிது.

    நான் உங்களிடம் பேச வந்தது, உங்களிடம் கேட்க வந்தது அனைத்தையும் நீங்கள் பட்டியல் போட்டு கொடுங்கள். எங்கள் கட்சியினர் உங்கள் ஊருக்கு வருவார்கள். கிராம சபை கூட்டங்களில் அனைவரும் பங்கேற்று குறைகளை கூறுங்கள். இதனை நான் பல இடங்களில் தெளிவாக வலியுறுத்தி உள்ளேன்.

    குளச்சலில் மீனவ நண்பர்களை சந்தித்தேன். அவர்களின் குறைகளை கேட்டேன். நாகர்கோவிலிலும் எனக்கு பல புகார்கள் வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராகி விட்டவர்கள், தயவு செய்து மய்யம் விசில் என்ற செயலியை உங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேச நினைத்ததை எல்லாம் அதில் சொல்லலாம். அதை என்னால் கேட்க முடியும். உங்கள் குறைகளை கேட்க வேண்டியது என் கடமை. அதை நான் கேட்டே தீருவேன். மீண்டும் வருவேன், வரவேண்டி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடையில் ஏற முயன்ற வாலிபர்களால் கமல்ஹாசன் பேச்சை பாதியில் நிறுத்தியதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

    கிராமம் கிராமமாக சென்று மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்ட கமல்ஹாசன், நேற்று மாலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதில், கமல்ஹாசன் ரசிகர்கள், மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். கமல்ஹாசனை அருகில் சென்று பார்க்க மேடையின் அருகே கூட்டம் முண்டியடித்தது.

    கமல்ஹாசன் மேடைக்கு வந்ததும், பொதுக்கூட்டம் தொடங்கியது. அவர், பேச ஆரம்பித்ததும், மேடையின் முன்பு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்து கோ‌ஷமிட்டது. அவர்களை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அமைதிப்படுத்த முயன்றனர்.

    கமல்ஹாசனை பேச விடுங்கள், அமைதியாக இருங்கள் என்று நிர்வாகிகள் குரல் கொடுத்தப்படி இருந்தனர். ஆனால் மேடையின் முன்பு நின்றிருந்த 2 வாலிபர்கள் கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை கேட்க மறுத்து மேடையில் ஏற முயன்றனர்.

    வாலிபர்களின் செயல் கமல்ஹாசனின் பேச்சுக்கு இடையூறாக இருந்தது. அவரும் வாலிபர்களை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் இருவரும் அதை கேட்க மறுத்து ‘மவுனத்தை கலையுங்கள் தலைவா’ என்று கத்தினர்.

    இதற்கு கமல்ஹாசன், ‘நான்தான் மவுனத்தை கலைத்து விட்டேனே. இப்போது என் கருத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன். என்னை பேச விடுங்கள். நான் பேசிய பின்பு மைக்கை உங்களிடம் தருகிறேன். அப்போது உங்கள் கருத்தை கூறுங்கள். அதை நான் கேட்கிறேன்,’ என்றார். ஆனால் வாலிபர்கள் அதை கேட்க மறுத்து மீண்டும் மேடையில் ஏறினர். இதனால் கமல்ஹாசன் பேச்சை பாதியில் நிறுத்தினார்.

    கமல்ஹாசன் பேச்சை பாதியில் முடித்துக் கொண்டது கூடி நின்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கமல்ஹாசனை நோக்கி பேசுங்கள், பேசுங்கள் என்று கூச்சலிட்டனர்.

    ஆனால் கமல்ஹாசன் அதை கேட்காமல் மேடையில் இருந்து திரும்பிச் சென்றார். இது மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    கமல்ஹாசன் பேச்சை பாதியிலேயே நிறுத்த வைத்த வாலிபர்கள் யார்? எதற்காக கூட்டத்தில் குழப்பம் விளைவித்தனர் என்பது பற்றி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாற்று கட்சியினரின் சதியா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வேலையா? என்றும் அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே அந்த வாலிபர்களை கண்டு பிடிக்க அவர்கள், முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கமல்ஹாசன் பொதுக்கூட்டம் நடைபெற்ற வடசேரி பகுதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால் அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில் பகுதியில் ஏற்கனவே மேம்பால பணிகள் நடந்து வருவதால் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கடி இருந்து வந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்டத்தால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
    தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது என்று குமரி மாவட்ட சுற்றுப்பயணத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    கிராமம், கிராமமாக செல்லும் அவர் மணக்குடி, தென்தாமரைகுளம் பகுதிகளில் பேசியதாவது:-

    என் மக்களை, குடும்பங்களை சந்தித்து பேச வந்துள்ளேன். உங்கள் நிறைகுறைகளை கேட்டறியவும், மக்களை புரிந்து கொள்ளவும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். சிறிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பெரிய மனம் இருக்கிறது.

    இளைஞர்கள் அன்பையும், ஆதரவையும் கொட்டி தருகிறார்கள். தமிழகம் உங்களை எதிர்பார்க்கிறது. உங்கள் எண்ணத்தை நிகழ்த்தி காட்ட நான் இங்கு வந்துள்ளேன்.

    மக்களை அறிந்து கொள்வதை தவிர இந்த பயணத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை. வேறு பேச்சு பேசவும் விரும்பவில்லை.

    அரசியலில் என்ன நடக்கிறது? என்பது உங்களுக்கு தெரியும். அது பற்றிய விமர்சனங்களை இங்கு வைக்க வரவில்லை. நாளை நமதாக இருக்க வேண்டும். உங்கள் அன்புதான் எனது நம்பிக்கை. எனது நம்பிக்கை உங்கள் நம்பிக்கையாக மாற வேண்டும்.

    தென்தாமரைகுளத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 94 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்துவது தமிழனாகிய எனது கடமை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    தமிழக மாணவர்களுக்கு எத்தனை தடைகளை வைத்தாலும் அவர்கள் அதை தாண்டி வருவார்கள். கேள்வி தாளை மாற்றி கொடுத்தாலும் கூட அவர்கள் சரியான விடையை கண்டு பிடித்து எழுதுவார்கள். தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது.

    கல்வி, சுகாதாரம், நேர்மை ஆகியவை தமிழகத்தை நல்ல நிலைக்கு எடுத்துச்செல்லும். இந்த நற்குணங்கள் உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்.

    நீங்கள் நேர்மையாக, வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள். உங்களை பார்த்து ஓட்டு போடுங்கள் என்று கேட்பது பின்னர் நடக்கும். இப்போது உங்களுக்கு எது பெரிய தாக்கமாக, தேக்கமாக உள்ளது என்பதை அறிய வந்திருக்கிறேன்.

    பாட்டுப்பாடி, ஆட்டமாடி உங்களை ஈர்த்தது நான் முன்பு செய்த வேலை. இப்போது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பும், நாம் ஒருவருக்கொருவர் பேசுவதும், இனி அடிக்கடி நடக்கும். அதற்கு இந்த கூட்டங்கள் இன்னும் பெருக வேண்டும்.

    என்னை காணவும், என் பேச்சை கேட்கவும் வெயிலில் காத்திருக்கும் உங்களுக்கு என் அன்பை தவிர வேறு எதை தர முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மீனவ கிராமங்கள் வழியாக சென்ற அவர் விவசாய நிலங்கள் வழியாகவும் பயணத்தை தொடர்ந்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    கோட்டார் போலீஸ் நிலையம் அருகே வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ளது வடிவீஸ்வரம் மேற்கு தெரு.

    இந்த பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் குமாஸ்தா ஆறுமுகம் பிள்ளை என்ற ரமேஷ் (வயது 49). இவரது மனைவி தங்கம் (38). இவர், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த தம்பதிக்கு முத்துகுமார் (17), மீனா (14) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

    ஆறுமுகம் பிள்ளையுடன் அவரது தந்தை ராமசாமி, தாய் மீனாட்சி ஆகியோரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் ராமசாமி எழுந்து குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மீனாட்சி பால் வாங்குவதற்காக வெளியில் சென்று இருந்தார்.

    ஆறுமுகம் பிள்ளை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலை 6 மணியளவில் எழுந்த தங்கம் குளியல் அறைக்கு சென்றார். அப்போது அருகில் உள்ள அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அவர், அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்மநபர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் விசாரணையின்போது அவர்களிடம் தங்கம் கூறியதாவது:-

    நான், இன்று அதிகாலை 5 மணிக்கு முதலில் எழுந்தபோது, பீரோ பூட்டி இருந்தது. மீண்டும் காலை 6 மணிக்கு எழுந்து குளியல் அறைக்கு சென்றபோது தான் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றி எனது மாமனாரிடம் கேட்டபோது, அவர், குளியல் அறைக்கு சென்றிருந்ததும், மாமியார் பால் வாங்க வெளியில் சென்றிருந்ததும் தெரிய வந்தது. இதை நோட்டமிட்டவர்கள் நகை, பணத்தை திருடி உள்ளனர்.

    நான், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல் செய்து பீரோவில் வைத்திருந்தேன். அந்த பணமும் கொள்ளை போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட பீரோ இருந்த அறையில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. போலீசார் மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தினால் கொள்ளை பற்றி துப்பு துலங்க கூடாது என்பதற்காக மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளை நடந்த வீடு உள்ள இடம் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியாகும். எனவே தெரிந்த நபர்கள் யாரோ இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    போலீஸ் நிலையம் அருகே உள்ள வீட்டில் நடந்துள்ள துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Tamilnews
    ×