search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில்"

    நாகர்கோவில் அருகே வீட்டை உடைத்து 11 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52), ஆட்டு பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகவடிவு.

    இவர்களது மகள் ஜெயராமன். இவரை சாத்தான்குளத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது கோடை விடுமுறையையொட்டி ஜெயராமன் தனது 5 வயது மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். ஜெயராமன் தனது நகைகளை வீட்டில் இருந்த பீரோவில் கழற்றி வைத்திருந்தார்.

    நேற்றிரவு சுப்பிரமணியன் ஆட்டு பண்ணைக்கு தூங்கச் சென்றார். வீட்டில் சண்முகவடிவு, ஜெயராமன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தூங்கினர். அதிகாலையில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் பீரோவில் இருந்த பொருட்களை சிதறியடித்த கொள்ளையர்கள் அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.6,500 ரொக்கப்பணத்தை திருடி விட்டு தப்பியோடி விட்டனர். இன்று காலை கண்விழித்து பார்த்த சண்முக வடிவு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்களில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×