search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமலூர்"

    ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லா கவுண்டம்பட்டி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. கடும் வெயில் காரணமாக ஆள்துளை கிணற்றிலும் தண்ணீர் குறைந்து விட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இங்கு மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று காலை குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் முள் செடிகளை வெட்டி போட்டும், சிறிய கற்களை குறுக்காக போட்டும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    தான் வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டிய ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததால், மாணவியின் உறவினர்கள் ஆசிரியரை கடுமையாக தாக்கினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் மேட்டூர் சாலையில் உள்ள தனியார் டுடோரியல் கல்லூரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

    இந்நிலையில் இங்கு படித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவி, தனக்கு பாடம் நடத்தும் சுந்தரம் என்ற ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து 4 வாலிபர்கள் அங்கு சென்று ஆசிரியரை அடித்து உதைத்துள்ளனர்.

    தகவலறிந்த அங்கு வந்த போலீசார் ஆசிரியரை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஆசிரியரிடம், மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவி ஒருவரை காதலித்ததும், அது ஆசிரியருக்கு தெரியவரவே வீட்டிற்கு தெரிவித்து விடுவதாக மிரட்டியிருக்கிறார். இதை திசை திருப்புவதற்காக மாணவி ஆசிரியரை உறவினர்களிடம் சிக்க வைத்தது தெரியவந்தது. 

    இதில் காயமடைந்த ஆசிரியர் சுந்தரம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கூறிய சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதி பேரணி நடத்திய பொதுமக்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக காவல்துறையின் இந்த செயலை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் சேலம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும் மக்களை காக்க வேண்டிய அரசுகள் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், உடனடியாக குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தி, இதில், தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார், எதற்காக உத்தரவிட்டனர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சீமான் உள்பட 10 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்து பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பொட்டியபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது எந்த சூழ்நிலையிலும் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு விளை நிலங்களை கொடுக்க மாட்டோம். அரசு அதை எடுக்க முயற்சி செய்தால் எனது தலைமையில் ஆங்காங்கே குடிசை அமைத்து போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலமே குரல்கொடு அமைப்பு தலைவர் பியூஸ் சேத்தியா உட்பட 10 பேர் மீது பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் பியூஸ் சேத்தியா தலைமையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதை கண்டித்து பொது கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்து பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதன் பேரில் சீமான், பியூஸ் சேத்தியா மற்றும் உள்ளூர் கிராமங்களை சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் மீது 143, 188, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்குப்பதிவை தொடர்ந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஓமலூர் போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×