என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107458"
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-
நாட்டில் தற்போதுள்ள உயர்கல்வி திட்டம் சிறந்த தரத்திலேயே உள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது.
காஷ்மீர் மீதான பார்வை மாறவேண்டும். ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியும். காஷ்மீர் இளைஞர்களை மற்ற இளைஞர்களோடு இணையச் செய்வதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்த ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது, காஷ்மீரில் 2011 முதல் 2013 வரை உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. தொடர் நடவடிக்கைகள் மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை காங்கிரஸ் அரசு தடுத்து வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துரையாடல் தொடங்கியபோது, ஒரு மாணவி சார் என்று அழைத்தபோது, அவ்வாறு அழைக்க வேண்டாம், ராகுல் என்றே அழைக்கவும் என ராகுல்காந்தி மாணவிகளிடம் கூறினார். பின்னர், ஹாய் ராகுல் என ஒரு கல்லூரி மாணவி கூறியதும் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. கலந்துரையாடல் முடியும் தருவாயிலும் மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது அனைவரும் சமூக வலைத்தளங்களில் தன்னை பின்தொடரும்படி ராகுல் கேட்டுக்கொண்டார். #Congress #RahulGandhi
வாஷிங்டன்:
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷியையும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேயையும் அழைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் பேசினார்.
அப்போது பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கடுமையான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தியாவுடனான பதட்டத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரிடம் குரேஷி உறுதி அளித்தார். இந்த தகவலை ஜான் பால்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பி யோவுடன் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய்கோகலே சந்தித்தார். அப்போது புல்வாமா தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். #Militantsattack
புல்வாம:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம் ஏற்பட்டது.
பாகிஸ்தானிடம் இந்திய வீரர் அபிநந்தன் சிக்க நேரிட்டதால் போர் ஏற்படாமல் சுமூக நிலை உருவானது. இதற்கிடையே புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினார்கள்.
கடந்த 3 வாரங்களில் நடந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியைச் சேர்ந்த அகமது கான் (வயது23) என்று தெரிய வந்தது.
அகமதுகான் கடந்த 2017-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான். எலக்ட்ரிசியனான இவனுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஆதில் அகமதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவரும் நண்பர்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் இருவரும் ஏதோ சதி வேலைகளில் ஈடுபட போகிறார்கள் என்பதை தேசிய புலனாய்வு குழு கண்டறிந்து இருந்தது. பிப்ரவரி 27-ந்தேதி அகமது கான் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
அன்று முதல் அகமதுகான் தலைமறைவாகி விட்டான். அவனை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு இவன்தான் மூளையாக செயல்பட்டவன் என்பதால் அவனை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
நேற்று புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிரால் பகுதியில் உள்ள பிங்கிலீஸ் என்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
இதனால் பயங்கரவாதிகள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.
இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த 3 பயங்கரவாதிகளும் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கான் என்று தெரிய வந்துள்ளது. இவனுக்கு முகமதுபாய் என்ற பெயரும் உண்டு.
கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் உடல்களும் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய பயங்கரவாதியான அகமதுகானை புல்வாமா மாவட்டத்தில் நிறைய பேருக்கு தெரியாது. எனவே செத்தது அவன்தானா? என்பது பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #PulwamaAttack
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஷம்சபாத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் நடிகை விஜயசாந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விஜயசாந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடியை பார்த்து ஒவ்வொரு மக்களும் பயப்படுகிறார்கள். அவர் எந்த நிமிடத்தில் அவர் குண்டு வீசுவார் என்ற அச்சத்துடனேயே உள்ளனர். அவர் பயங்கரவாதி போல இருக்கிறார். மக்கள் மீது அன்பை செலுத்துவதற்கு பதில் மோடி மக்களை பயமுறுத்தி வருகிறார். இது பிரதமருக்கான பண்பு கிடையாது.
மோடி சர்வாதிகாரியை போல் ஆட்சி செய்கிறார். அவர் ஜனநாயகத்தை கொன்று வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் ஜி.எஸ்.டி.வரை மற்றும் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நாட்டு மக்கள் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகிறார். அவரது செயல்பாடுகளால் பயங்கரவாதி போல் தெரிகிறார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் தான் போர். மோடியின் குறிக்கோள் சர்வாதிகாரம், ராகுல் காந்தியின் குறிக்கோள் ஜனநாயகம். அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு இதுபோன்று ஆட்சியை நடத்த மோடி விரும்புகிறார். அதற்கு மக்கள் வாய்ப்பு அளிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் காந்தி முன்னிலையில் பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று விஜயசாந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காசியாபாத்:
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50-வது ஆண்டு தொடக்க விழா உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது புல்வாமா மற்றும் உரியில் நடந்த தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய அவர் பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரும் பகை உணர்வு கொண்ட அண்டை நாட்டை (பாகிஸ்தானை) எதிர் கொள்வதில் மத்திய தொழில் பாதுகாப்பு படைகள் போன்றவைகளின் பங்கு மிக முக்கியமானது. அண்டை நாடு பெரும் பகை உணர்வுடன் இருந்தாலும், அவர்களால் நம்முடன் போரிடும் திறன் இல்லை.
எனவே, எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சதி செயலில் ஈடுபடுகின்றனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போன்ற நிறுவனங்கள் முக்கிய சவால்களை சந்திக்கின்றன.
புல்வாமா மற்றும் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர். இதுபோதும் என கருதுகிறேன். காலம் உள்ளவரை எங்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாடு எப்போதும் கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருக்காது என பயங்கரவாதிகளை கடுமையாக எச்சரிக்கிறேன்.
வி.ஐ.பி. கலாசாரம் சில நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு முறையில் தடையை ஏற்படுத்துகின்றன. எனவே அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒரு தனிப்பட்ட நபரை பாதுகாப்பது எளிது, ஆனால் எந்த ஒரு நிறுவனத்தையும் பாதுகாப்பது மிகவும் கடினம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
காஷ்மீர் மாநிலம், புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய காட்டுமிராண்டித்தனமான கார்குண்டு தாக்குதல், இந்தியாவை உலுக்கியது.
இந்த தாக்குதலில், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழகத்தின் சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்பட மொத்தம் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில், “புலவாமா தாக்குதலை நடத்தியது நாங்கள்தான்” என்று பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. உடனே பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும் என்ற ஆவேசம், நாட்டு மக்கள் அத்தனைபேர் மத்தியிலும் எழுந்தது.
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமை, தனது இயக்க பயங்கரவாதிகளுடன் கடந்த 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதி தொலைபேசியில் கலந்துரையாடியதை உளவுத்துறையினர் இடைமறித்து பதிவு செய்தனர்.
அதில், அவர்கள் புலவாமா தாக்குதலை விட பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.
பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என இனியும் பொறுத்துப் பயனில்லை என்ற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் மீது குண்டு போட்டு ஒழித்துக்கட்டி பழி தீர்க்க இந்திய விமானப்படைக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் பவுண்ட் எடையுடையதுமான லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து கொண்டு பாகிஸ்தானுக்கு பறந்தன.
அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.
அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக இந்திய போர் விமானங்கள், புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கை, இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஏகோபித்த வரவேற்பை யும், நாட்டு மக்களின் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்றது. பரவலாக பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறினர். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு மக்கள் பாராட்டு மழை பொழிந்து பதிவுகளை வெளியிட்டனர்.
புலவாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்நாடக மாநிலம், மண்டியாவை சேர்ந்த வீரர் குருவின் மனைவி கலாவதி நிருபர்களிடம் பேசினார்.
அவர், “புலவாமா தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா இப்போது அமைதி அடையும். இந்திய விமான படையினருக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நடவடிக்கை எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது” என ஆனந்த கண்ணீர் வழிய குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 14-ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் வீரமிக்க 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் இந்த பயங்கரவாத அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பஹவல்பூரை தலைமையிடமாக கொண்டு, இந்த அமைப்பினை மசூத் அசார் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புதான், 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி நடந்த இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்த பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு பொறுப்பு ஆகும்.
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இயங்கி வருகிற அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்துள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிற திறன் வாய்ந்த பயிற்சி முகாம்கள் அங்கு செயல்பட்டு வந்தன என்றால், அது பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது.
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், பாகிஸ்தானுக்குள் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு இருப்பதையும் தடுத்து நிறுத்தும் வகையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர், நாட்டின் பல்வேறு இடங் களில் மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும், அதற்காக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் நம்பத்தகுந்த உளவுத்தகவல் கிடைத்தது.
தவிர்க்க முடியாத ஆபத்தை சந்திக்கும் நிலை உருவானதால், அதைத் தடுக்கிற வகையில் அதிரடியாக தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இன்று (நேற்று) அதிகாலை உளவு தகவல்கள் அடிப்படையில், பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், குழுக்கள் கொல்லப்பட்டனர்.
பாலகோட் பயிற்சி முகாம், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் தலைமையில் இயங்கி வந்தது ஆகும்.
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்திய அரசு உறுதி கொண்டுள்ளது. எனவேதான் ராணுவ நடவடிக்கை இல்லாமல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கிற வகையில், இந்த தாக்குதல் இலக்குகள் முடிவு செய்யப்பட்டன.
2004-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தான் தனது மண்ணை அல்லது கட்டுப்பாட்டில்வரும் பிராந்தியத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக உறுதி அளித்தது. தனது வாக்கினை பாகிஸ்தான் காத்து நடக்கும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் பயிற்சி முகாம் களை அகற்றவும், பயங்கரவாதிகளை பொறுப்பேற்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க வாழ் இந்தியரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் டிரம்ப் அரசின் புதிய கொள்கைகளை பாராட்டி உள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை மற்றும் வளத்தை கருத்தில் கொண்டு புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா வெளிநாடுகளுக்கு நிதி உதவி செய்கிறது. அதே நேரத்தில் அவர்களிடம் இருந்து அதற்கான பிரதி பலன் திரும்ப கிடைக்கிறதா? என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெறும் பாகிஸ்தான் ஐ.நா.சபையில் பல விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவது நீண்ட கால வரலாறு. அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவித்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்க கூடாது. இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அரசு புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளது.
எனவே பயங்கரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது நடவடிக்கையை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நிக்கி ஹாலே தென் கரோலினா மாகாணத்தின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து விலகினார். #NikkiHaley #US #Pakistan
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள டரிகாம் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் என்பவரும் வீரமரணம் அடைந்தார். மேலும் ஒரு ராணுவ உயரதிகாரி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், நேற்றைய தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் உடலுக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக், போலீஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். #Pakistaninationalskilled #Kulgamencounter
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்